சனி, 28 ஜூலை, 2018

வெறுமையான / நிறைவான பாத்திரம்.


வெறுமையான / நிறைவான பாத்திரம்.




விருப்பங்களை  நிறைவேற்ற முற்படும் போது அதற்கான விடையை மனமானது தனது சிந்தனைத் தொகுப்புகளில் இருந்தே தேடத் துவங்குகிறது. "இதயத்தின் நிறைவே வாய் பேசும்".

இதயத்தை ஒரு பாத்திரமாக உருவகப்படுத்தினால்; அது சிந்தனை மற்றும் அனுபவங்கள் கற்றுக் கொடுத்த இன்ப மற்றும் துன்ப உணர்வுகளால் நிறைந்து காணப்படுகிறது.

நாம் பேசும் வார்த்தைகள் இந்தச் சிந்தனை தொகுப்புகளில் இருந்தே வெளி வருகின்றன. நமது செயல்களை இந்த அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்களும், நம்பிக்கைகளும் தான் தீர்மானிக்கிறது.

நமது பாத்திரங்கள் நிறைவை நோக்கி நகர்கிறதா அல்லது வெறுமையாக உள்ளதா?

அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைக்கு மனதை நல்ல எண்ணங்களால் தொடர்ந்து நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இஃது ஓர் இடைவிடாத தொடர் பணி. 


நற்சிந்தனை:


நல்ல எண்ணங்கள் என்பது அன்பை முதன்மைப் படுத்தும். பிறரைக் குற்றப்படுத்தாது. விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாக இருக்க விரும்பும். துன்ப சூழலில் பொறுமையுடன் அமைதி காக்கும். எதிரிடையாகச் செயல்படுபவரை  மன்னிக்கவும் அவரிடமிருந்து விலகி வாழவும் கற்றுக் கொடுக்கும்.

நல்ல மனிதர்களின் கூட்டுறவை விரும்பும். நல் நம்பிக்கையை ஏற்படுத்தும். தீய நடத்தைகள் அளிக்கும் தற்காலிக இன்பத்தை வெறுத்து இச்சை அடக்கத்துடன் வாழ உதவும்.

நல்ல எண்ணங்கள் சாந்தமும் தயவும் உடையது. பொறாமை, கசப்பு, வெறுப்பு இவற்றுக்கு எதிரானது. கர்வம், சுய தம்பட்டம், பெருமை இவற்றை மனதில் இருந்து அகற்றும்.

பிறருக்குத் தீங்கோ, கெடுதலோ நினைக்காது. நல்லவர்கள் வெற்றி பெறும் போது மகிழும்.

நெருக்கடிகள் மற்றும் வெற்றிகள்:


வாழ்வின் நெருக்கடியில் தவறான பாதையில் செல்லத் தூண்டப்படுவோம். நல்ல எண்ணங்கள் மேல் உள்ள வலிமையான நம்பிக்கை மட்டுமே துயரமான தருணங்களில் தவறான பாதையில் செல்ல விடாது நம்மைக் காப்பாற்றும்.

வாழ்வில் அடையும் சிறு வெற்றிகள் கவனச் சிதறலை ஏற்படுத்தும். வெற்றிகரமான பாதையில் பயணிக்கும் போது உடன் பயணிப்பவர்களைத் திருப்தி படுத்த தவறான பாதையில் செல்லும் படி தூண்டப்படுவோம். இதைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

நல்ல எண்ணங்கள் நல் மனிதர்களின் கூட்டுறவால் மேம்படும்.

இன்றைய கடினமான காலத்தில் நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புதல் என்பது சவாலானது. ஒரு தோட்டத்தைப் பராமரிப்பது போன்று தொடர்ந்து கவனமாக உழைக்க வேண்டும். கவனமற்று அலட்சியமாக இருந்தால் களைகள் பரவி புதர் மண்டி விடும்.

வாசிப்பு, தேடல், நட்பு, தனிமையில் இருக்கும் போது ஏற்படும் விருப்பங்கள், நேரத்தைச் செலவிடும் விதம் இவை தான் நமதுப் பாத்திரத்தை எதைக் கொண்டு நாம் நிரப்ப விரும்புகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது.