இயேசு கிறிஸ்துவின் உபதேசங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயேசு கிறிஸ்துவின் உபதேசங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஜூன், 2020

பண்பட்ட மனம்.

விதை - நிலம்.

(Christ's Parables - 3)


வாழ்வியல் உண்மையைக் கதை வடிவில் கேட்பது சுவாரஸ்யம். நாம் இயல்பாகப் பார்க்கும் காட்சிகள் வழியாகக் கதை சொல்லப்படும் போது மனம் இன்னும்  நெருக்கமான உணர்வை அனுபவிக்கிறது.

உவமை என்பது விளக்குவதற்குச் சிரமம் நிறைந்த ஒரு கருத்தைத் தெரிந்த உதாரணத்தின் மூலமாக விளக்கிக் கற்றுத் தருவது. கதை உவமை வழியாகச் சொல்லப்படும்போது விடுகதையாகிறது. "எதைக் குறித்து இந்தக் கதை மறைமுகமாக விளக்க முயல்கிறது?" என மனம் ஆர்வமுடன் சிந்திக்கிறது. புதிரின் முடிச்சை அவிழ்க்க உள்ளத்தில் தீவிர அலசல் நடைபெறுகிறது.

உவமை சுட்டும் பொருள் வெளிப்படும்போது உண்மை எளிதாகப் புரிகிறது. மனம் மகிழ்ச்சி அடைகிறது. அவ்விதம் கற்பது ஆழமாகப் பதிகிறது. அக்கருத்துக்கள் நினைவில் நிலைத்து நிற்கிறது.


இது ஓர் எளிய உவமை கதை :



ஒரு மனிதன் விதைப்பதற்காக வயலிற்குச் செல்கிறான். அவனிடம் நல்ல தரமான விதைகள் இருக்கின்றன. அவன் நிலத்தில் விதைகளைத் தூவினான்.

அதில் சில விதைகள் வழிப் பாதையோரத்தில் விழுந்தன. அதைப் பறவைகள் வந்து கொத்தித் தின்றன.

சில விதைகள் மண் அதிகமில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை முளைத்தது. துளிர் விட்டது. மேல் நோக்கிச் செழிப்புடன் வளர்ந்தது. ஆனால் நிலம் கடினமான பாறை நிறைந்த தரிசாக இருந்ததால் வேர் ஆழமாக ஊடுருவ முடியவில்லை. சிறிது காலத்தில் கோடைக்காலம் வந்தது. வெய்யில் உக்கிரமாகக் கொளுத்தியது. அந்தச் செடியின் வேர் ஆழமாக இல்லாததால் வாடி வதங்கிக் காய்ந்து அழிந்தது.

இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த இடத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைத்தது. நன்கு வளர்ந்தது. எனினும் முட் செடிகளும் உடன் பெரிதாக வளர்ந்து செடியை நெருக்கியதால் அதன் வளர்ச்சி தடைப்பட்டது. முடிவில் செடி விளைச்சலின்றி பலனளிக்காது போயிற்று.

மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தது. விளைச்சல் சிறப்பாக இருந்தது. அவற்றுள் சில முப்பது மடங்கு பலனளித்தது. வேறு சில அறுபது மடங்கு பலனளித்தது. இன்னும் சில நூறு மடங்கு பலனளித்தது..

உவமை சுட்டும் பொருள் :




இந்த உவமை நான்கு விதமான மனநிலை கொண்ட மனிதர்களைக் குறித்து கற்றுத் தருகிறது.

வாழ்வியல் உண்மைகள் மாறாதது. ஆனால் மனிதரின் மனப்பான்மை மாறுபட்டது.

ஒவ்வொருவர் மனதின் விருப்பங்களும் தேடல்களும் வித்தியாசமானது. எது நல்லது? எது கெட்டது? எனச் சிந்தித்துப் புரிந்து கொள்ளும் திறன் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது.

கூர்ந்து நோக்கினால் ஆழ் மனதின் விருப்பங்கள் குணமாகும். அந்த குணம் மனப்பான்மையைத் தீர்மானிக்கும். அவரவர்கள் மனப்பாங்கிற்குத் தக்க அறத்தைக் கடைப்பிடிப்பார்கள். அதற்குத்தக்க வாழ்வில் மாற்றம் நிகழும்.

இந்த உவமையில் "விதை" என்பது "வாழ்வியல் சார்ந்த அறத்தை - இறை வார்த்தைகளை" குறிக்கிறது.

மற்றும் "நிலம்" என்பது "மனம்". "பறவை" என்பது "தீயசக்தி". "சூரிய வெப்பம்" என்பது "துன்பம்". "முட்செடிகள்"  என்பது "பேராசை மற்றும் உலக மதிப்பைத் தேடுதல்".

இந்த கதையில் நான்கு வித மனப்பான்மை உடைய மனிதர்களைப் பார்ப்போம். இதில் நமது மனநிலை எங்குப் பொருந்துகிறது எனப் புரிந்து கொள்ள அது உதவியாக இருக்கும்.

1. உணர்வற்ற மனம்.




"சில விதை பாதையருகில் விழுகிறது. பறவைகள் வந்து அதைக் கொத்தித் தின்கிறது".

உணர்வற்ற மனதில் விழுந்த நல்ல கருத்துக்களால் எவ்வித பயனும் இல்லை என்பது இதன் பொருள்.

சில மனிதர்கள் நல்லக்  கருத்துக்களைக் கேட்பார்கள். வாசிப்பார்கள். விவாதிப்பார்கள். ஆனால் வாழ்வில் கடைப்பிடிக்க மாட்டார்கள். அதில்  உண்மையான விருப்பம் கிடையாது. பொழுது போக்கக் கேட்பார்கள். நேரப்  போக்கிற்காக வாசிப்பார்கள். புதிது புதிதாக வாசிக்க ஆர்வம் காட்டுவார்கள். வாசித்து முடிந்தவுடன் மறந்து விடுவார்கள். மனதில் எதுவும் பதியாது.

பறவை வந்து கொத்தித் தின்னும் என்பது நல்ல சிந்தனைகள் இவர்கள் மனதில் பதியாதவாறு தீயசக்தி செயல்படுவதைக் குறிக்கிறது. உணர்வற்ற தன்மையால் தீமை இவர்களை எளிதில் மேற்கொள்ளும். இருள் சூழ்ந்த உணர்வற்ற உள்ளத்தில் எந்த நல்ல எண்ணமும் தங்காது.

என் தலைக்கு மேல் பறவைகள் பறப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் என் தலையில் அவை கூடு கட்டாமல் பாதுகாக்க முடியும்.

2. உறுதியற்ற மனம்.




"சில விதைகள் மண் அதிகமில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை உடனே முளைத்துத் துளிர் விட்டது. ஆனால் நிலம் கடினமான பாறையாக இருந்ததால் வேர் ஆழமாக ஊடுருவ முடியவில்லை. வெய்யில் உக்கிரமாகக் கொளுத்தியபோது செடியின் வேர் ஆழமாக இல்லாததால் வாடி வதங்கிக் காய்ந்து அழிந்தது".

உறுதியற்ற மனதையுடையவர்கள் ஆவலுடன் நல்லக் கருத்துக்களைக் கேட்பார்கள். அதை ஏற்றுக் கொள்வார்கள். சில காலம் கருத்தாகக் கைக்கொள்வார்கள். நல்லவராக வாழ்ந்தால் துன்பம் வரும். அதை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாமல் சமரசம் செய்து கொள்வார்கள்.

வேர் ஆழமாக ஊடுருவினால்தான் செடி எந்தச் சூழலையும் எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியும். அதுபோல நல்ல சிந்தனையின் மேல் உறுதியான நம்பிக்கை இருந்தால்தான் எவ்வளவு துயரங்கள் வந்தாலும் அதைக் கடைப்பிடித்து நிலை நிற்க முடியும்.

வேர் பற்றாது விரைவாக வளரும் செடி சூரியனின் வெப்பத்தைத் தாங்காது கருகுவது போல எதிர்ப்புகள் மற்றும் துன்பத்தைத் தாக்குப் பிடிக்காத உறுதியற்ற மனமுடையவர் நல்லதைச் செய்வதில் நிலைத்திருக்க மாட்டார்கள்.

உறுதியற்ற மனமுடையவரின் நல்ல தீர்மானங்கள் விரைவில் முடிவுக்கு வரும்.

3. ஆசையில் சிக்குண்ட மனம்.



"இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த இடத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைத்தது. நன்கு வளர்ந்தது. எனினும் முட் செடிகளும் உடன் பெரிதாக வளர்ந்து செடியை நெருக்கியதால் அதன் வளர்ச்சி தடைப்பட்டது. முடிவில் செடி விளைச்சலின்றி பலனளிக்காது போயிற்று". 

முட்செடிகள் என்பது உலக ஆசையைக் குறிக்கின்றன. மூன்று ஆசைகள் மனதை மயக்குகின்றன. அவை பணத்தாசை, பாலுறவு மோகம், பதவி அதிகார வெறி. இந்த உலகப்பற்று மனதை வீழ்த்திவிடும்.

i. பண ஆசை ஒரு முள். 

இவ்வுலகத்தில் வாழப்  பணம் அவசியமானது. ஆனால் பணத்தின் மேல் ஏற்படும் மிதமிஞ்சிய ஆசை தவறான குறுக்கு வழியில் நடக்கத் தூண்டுகிறது. இலஞ்சம் வாங்க வைக்கிறது. பிறர் சொத்தை அபகரிக்கத் தூண்டுகிறது.

மித மிஞ்சிய பண ஆசை உறவுகளில் விரிசல் ஏற்படுத்துகிறது. தேவைக்கு அதிகமான பணம் முறையற்ற வாழ்க்கை வாழும்படி தூண்டி விடுகிறது.

நாம் பயன்படுத்தாத எத்தனைப் பொருட்களால் வீடு நிறைந்துள்ளது?

தவறான முறையில் சம்பாதித்து சொத்துக்களைச் சேர்த்து வைப்பதை விடக் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி, உயர்ந்த பண்புகள் அளிப்பது முக்கியம்.

தீய வழியில் சேரும் சொத்து முடிவில் குடும்பத்தை அழிக்கும்.

பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேர். அது  நல் வாழ்வு வாழத் தடை.

ii. முறையற்ற உறவுகள்  ஓர் முள்.

முறையற்ற பாலியல் தொடர்பு வாழ்வைக் கறைப்படுத்தும். அது புத்தியீனமாக நடக்கத் தூண்டும். சுற்றியிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் வெட்க உணர்வு மறையும். செய்யும் செயலின் விளைவைப் பற்றிய அச்சவுணர்வு அகலும். கூச்சம் விலகும். நீதி நியாய உணர்வுகள் அழியும். மனசாட்சி செத்து விடும். நன்மதிப்பு கெட்டுக் குடும்பம் சிதையும்.

முறைதவறிய பாலியல் உறவு மதிகேடு. அது நல் வாழ்வு வாழ விடாது.

iii. பதவி அதிகார வெறி ஓர் முள்.


பதவி அதிகாரம் ஓர் போதை. அது மெத்தப் படித்த மேதையையும் வீழ்த்திவிடுகிறது. தனது வாரிசை அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் எனும் ஒரே ஆசையால் எத்தனை நாடுகள் சிக்கிச் சீரழிகிறது.

குறுக்கு வழியில் தகுதியற்ற பிள்ளையை  உயர்ந்த பதவியில் அமர்த்த துடிக்கும் பெற்றோரின் பேராசையால் எவ்வளவு அழிவு ஏற்படுகிறது.

அதிகாரத்தைக் கைப்பற்றச் சண்டையிடும் சமயத்  தலைவர்களால் தெய்வ சபைகளும், அறமும் கேலிப் பொருளாகி மான்பிழந்து நிற்கிறது.

அகந்தையால் அழிந்த தலைவர்களின் கதைகளாலே உலக வரலாற்றின் பக்கங்கள் நிரம்பியுள்ளன.

தன் எஞ்சிய வாழ்க்கை இன்னும் சில வருடங்கள் தான் எனத் தெரிந்தும் ஒற்றை ஆளாக உலகையே மாற்றத் துடிக்கும் தலைவர்களின் அதிகார வெறி மக்களைத் தத்தளிக்கச் செய்கிறது. 

அதிகாரம் வீண் பெருமையை அளிக்கிறது. அதிகார போதையில் சிக்கியவரைச் சுற்றி வெற்றுத் துதிபாடும் வீணர் சேர்கிறார்கள். புகழில் சிக்கியவர் கண்கள்  உண்மையை உணர்வதில்லை.

அழிவுக்கு முன் அகந்தை. அதிகார ஆசை நல் வாழ்வு வாழப் பெருந்தடை.

இந்தக் கொடிய முட்கள் மூன்றும்  வாழ்க்கையிலிருந்து வெட்டி அகற்றப்பட வேண்டும்.

4. பண்பட்ட மனம். 


(வினோபாவேஜி அவர்கள்)

"மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தது. விளைச்சல் சிறப்பாக இருந்தது. அவற்றுள் சில முப்பது மடங்கு பலனளித்தது. வேறு சில அறுபது மடங்கு பலனளித்தது. இன்னும் சில நூறு மடங்கு பலனளித்தது."

பண்பட்ட மனம் நல்ல நிலம். அது இறைமை வாழும் உள்ளம். அது உண்மையை விரும்புகிறது. அதன் உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கிறது. அது அன்பால் நிறைந்திருக்கிறது. அதில் பெருமை இருப்பதில்லை. அது தீய வழிகளை வெறுக்கிறது. நற்செயல்கள் இறைவனது அருளால் தான்  செய்யப்படுகிறது எனும் தெளிவு இருக்கிறது.

மனதில் தந்திர உணர்வுகள் இருப்பதில்லை. நீதி உணர்வுகள் ஆளுகை செய்கிறது. வார்த்தைகளைக் கவனமாகப் பேசுகிறது. ஒரு செயலை செய்யும்முன் விளைவுகளை யோசிக்கிறது. ஆதாயத்தைவிட விளையும் பலன்மேல் கருத்தாக இருக்கிறது.

ஒரு நல்ல நிலத்தைப் பாருங்கள். அது வேலியடைத்துப் பாதுகாப்பாக இருக்கிறது. நன்கு பராமரிக்கப்படுகிறது. ஓர் பசுமையான செழிப்பு நிறைந்த தோட்டத்திற்குப் பின்புலமாக மிகச் சிறந்த உழைப்பாளி மறைந்திருக்கிறார்.

ஓர் நல்ல மனதிற்குள் அந்தராத்மாவாக குரு செயல்படுகிறார்.

இறை வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல் மூன்று விதமான அளவுகளில் (30%, 60%, 100%.) பலனளிக்கிறது. இறை வார்த்தைகளுக்கு வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதற்கேற்ப பலனும் அமைகிறது. 

சரணடைதல் அறுவடையின் அளவை நிர்ணயம் செய்கிறது.

ஓர் எளிய உவமை. எத்தனை ஆழ்ந்த பொருள்.

சான்றோர்களால் சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் அருளப்படுகிறது. அதில் மறைந்திருக்கும் மறைபொருளின் உண்மைத்தன்மையால் அது காலத்தைக் கடந்தும் பேசப்படுகிறது.

நம்பிக்கை  ஒவ்வொரு வார்த்தையின் பொருளை உணர்த்துகிறது. அகக் கண் திறக்கிறது. அதை ஏற்றுக் கீழ்ப்படிந்து கடைப்பிடிக்கும்போது வாழ்க்கை மாறுகிறது.

"வாசிப்பவர் சிந்திக்ககடவர்".

*******   *******   ******* 

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.



வெள்ளி, 15 மே, 2020

புத்திசாலி

கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு 

(Christ's Parables   - 2)


ஒரு மனிதர் வீடு கட்டுவதற்கு மேடானதொரு நிலத்தைத் தெரிவு செய்தார். அந்த நிலம் ஒழுங்கற்று கரடு முரடாக இருந்தது. இடம் முழுவதும்  பெரிய  கற்பாறைகள். செல்வதற்கு நேர்த்தியான பாதை இல்லை. ஒற்றையடிப்பாதை தான் வழி. அதுவும் நெடுக முட்கள். இப்படிப்பட்டதொரு இடத்தை வாங்கியதற்காக அவரைச் சிலர் கேலி செய்தனர்.

"இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்தில் ஓர் வீட்டைக் கட்டுவது தேவையா?" என விமர்சித்தனர். அவரோ காது கேளாதவர் போல் நடந்து கொண்டார். பெரிய பாறைகளை உடைத்து சீர் செய்வது கடினமான வேலையாக இருந்தது. அவர் பயப்படவில்லை. கலங்கவில்லை. நல் நம்பிக்கையுடன் மனம் தளராது பொறுமையாக உழைத்தார். வேலை அதிக காலம் எடுத்தது. நிலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சமனானது. வீடும் மெதுவாக வளரத் துவங்கியது.

அவர் கிணறு ஒன்றை வெட்டத் தொடங்கினார்.  "இந்த பகுதியில் பொதுவாக நீர் கிடைக்காது; கிடைத்தாலும் அது வெகு ஆழத்தில் தான் இருக்கும்; அதுவும் சுவையாக இருக்காது" எனச் சிலர் அவநம்பிக்கையாகப் பேசினர்.

ஆனாலும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. கடும் பிரயாசத்துடன் கிணறு தோண்டப்பட்டது. ஆச்சரியமாகச் சிறிது ஆழத்திலேயே கிணற்றின் ஊற்றிலொன்றிலிருந்து தித்திப்பான நீர் சுரந்தது. வீட்டிற்கும், பாதைக்கும் தேவையான கற்களும் அதிலிருந்து கிடைத்தது. வெட்டி எடுக்கப்பட்ட கற்களால் பாதை அமைத்தார். இருபுறமும் மரங்கள் நட்டார். ஒவ்வொரு சமயத்திற்கு எதைச் செய்ய வேண்டும் எனும் புத்தியும், சரியான வழி நடத்துதலும் அவருக்குக் கிடைத்தது.

நம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி, தைரியம், கடின உழைப்பின் பலனாக அவரது அழகிய கனவு நிறைவேறியது. நீண்ட காலம் காத்திருந்தது நல்லதொரு முடிவைத் தந்தது. ஒரு பயனற்ற நிலம் அழகிய இல்லமாக மாறியது.

மற்றுமொரு மனிதரும் வீட்டைக் கட்ட. தொடங்கினார். அவர் ஆற்றின் கரையோரம் சமமாக இருந்த மணற்பாங்கான நிலத்தைத் தெரிவு செய்தார். அந்த இடத்தைச் சுற்றிலும் பச்சைப்பசேலென செழுமையாக இருந்தது. பார்ப்பதற்கு அழகாகச் சோலை போல இருந்தது. மிக அருகில் நீர் ஓடியது.

வீட்டின் அஸ்திபாரம் தோண்டுவதற்கும் இலகுவாக இருந்தது. வேலைகள் துரிதமாக நடந்தது . மிகக் குறுகிய காலத்தில் அதிக உழைப்பின்றி குறைந்த செலவில் வீடு கட்டி முடிக்கப்பட்டது.  முதல் மனிதரைப் போல அதிகம் சிரமப்படாமல் சுலபமாக வீட்டைக் கட்டி முடித்ததற்காக அநேகர் இவரைப் பாராட்டினர்.

சில வருடங்கள் உருண்டோடியது. மாரிக்காலம் வந்தது. ஓர் கோரப்புயல் அந்தப் பகுதியைத் தாக்கியது. சூறைக்காற்று வீசியது. பெருவெள்ளம் வீடுகளைச் சூழ்ந்தது.

மேடான கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீடு புயலை எதிர்த்து நின்றது. காற்றால் அசைக்கப்பட முடியவில்லை.  வெள்ளம் நெருங்க இயலவில்லை. புயல், காற்று, பெருவெள்ளத்திலிருந்து அந்த வீடு  பாதுகாக்கப்பட்டது.

ஆற்றின் கரையோரம் கட்டப்பட்ட வீட்டின் மீதும் கடும் சூறைக் காற்று வீசியது. பெரு வெள்ளம் மோதியது.  அதற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் சுவர்கள் இடிந்தன. அது இருந்த இடம் தெரியாதபடி மூழ்கி முற்றிலுமாக அழிந்தது.





அறம் சார்ந்த கருத்துக்களைப் பலர் ஆர்வமாகக் கேட்பார்கள். ஆனால் வெகு சிலர் மட்டுமே கைக்கொள்வர்.

உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் உள்ளத்தில் அறத்தின் பலன் எழுதப்பட்டிருக்கும். அவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வர். அதை வாழ்வில் நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பர்.

அறத்தைக் கடைப்பிடித்தால் துன்பம் வரும். ஆனால் அந்தத் துயரைப் பொறுத்துக் கொள்வர்.

பொறுமையோடு நல் நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக் கொள்வர். துயரங்கள் சீர் படுத்துகிறது என உணர்வர். குற்றங்கள் ஏற்படுத்தும் வலி புரியும். நல்ல தீர்மானத்தில் உறுதியாக நிலைத்திருந்து வாழ்வில் முன்னேறிச் செல்வர்.

சுலபமாக இருக்கும் என்பதற்காகக் குறுக்கு வழியாக முன்னேற விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்விளைவு உண்டு என்பது நன்கு அறிவர். எனவே தீமை செய்ய அஞ்சுவர்.

தவறுதலாகத் தீமையில் விழ நேரிட்டால் மனம் பதறுவர். திரும்பவும் நேர்மையின் பாதைக்கு வரும்வரை பதைபதைப்பு நீங்காது.

அவர்கள் வாழ்வில் புயல் வந்தாலும் நிலைகுலைய மாட்டார்கள். சூறைக் காற்று வீசினாலும் அசைந்து கொடுக்கமாட்டார்கள். வெள்ளம் சூழ்ந்தாலும் கரையேறிவிடுவார்.

இறை வார்த்தைகளைக் கேட்பவராக மட்டுமல்ல, அதன்படி செய்கிறவர்களே புத்தியுள்ள மனிதர். அவர் தனது வீட்டைக் கற்பாறையின்மேல் கட்டுகிற புத்தியுள்ள மனிதருக்கு ஒப்பாவர்.

புத்தியில்லாத மனிதரோ அதைக் கேட்டும் அதன்படி நடக்காதவர்கள். அவர்கள் தங்கள் வீட்டை மணலின் மீது கட்டுகிறார்கள்.

*******   *******   ******* 

Ref : 
St. Mathew :- 7:24 - 27 &  
St. Luke :- 6:47 - 49.

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.


திங்கள், 27 ஏப்ரல், 2020

வெளிச்சம் நல்லது.

உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! 


வெளிச்சம் பாதுகாப்பான உணர்வைத் தருகிறது. இருள் திகிலையும் பயத்தையும் ஏற்படுத்துகின்றன.

வெளிச்சம் நம்பிக்கையை அளிக்கிறது. இருள் தவிப்பையும், தடுமாற்றத்தையும், தத்தளிப்பையும் தருகிறது.

வெளிச்சம் உற்சாகத்தைத் தருகிறது. இருள் மனச் சோர்வை உண்டாக்குகிறது.

வெளிச்சம் மகிழ்ச்சி. இருள் துயரம்.

வெளிச்சம் புத்துணர்ச்சி.  இருள் முடக்கம்.

இருள் அகல வேண்டுமெனில் ஒளி உதிக்க வேண்டும். அதுவே ஒரே வழி.

நமது உடல் ஆலயம். உள்ளம் அதில் ஓர் விளக்கு. இறைமையின் ஊற்றில் மூழ்குபவர்க்கு எண்ணெய் நற்சிந்தனைகளாகச் சுரக்கிறது. வாழ்க்கை என்னும் திரி எண்ணெய்யில் தோயும்போது நற்செயல்கள் தீபமாக எரிந்து பிரகாசிக்கிறது.

இரவு கவிழ்ந்த சாலையில் தனியாக  நடக்கிறோம். மனம் பதற்றமடைகிறது. தெருமுனை முடிந்து வீட்டின் வெளிச்சம் கண்டவுடன் மனதில் நிம்மதி பிறக்கின்றது. பாதுகாப்பாக உணர்கிறோம்.

நள்ளிரவில் மீனவர்கள் படகில் திரும்புகிறார்கள்.  கலங்கரை விளக்கின் வெளிச்சம் தென்படுகிறது.  நம்பிக்கையும் உற்சாகமும் தொற்றிக் கொள்கின்றன.

காரிருளின் மின்னி மின்னி கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் உற்சாகத்தை, புத்துணர்வைத் தருகிறது.

நீல வானில் உலா வரும் நிலா கவிஞன் மனதின் கற்பனை சிறகை விரிக்க வைக்கிறது.

மலைகளின் மீது அமைந்த நகரம் அழகாகக் காட்சியளிக்கிறது. பனிபடர்ந்த பின்னிரவின் பொன்னிற ஒளியில் அது மனதை மகிழ்விக்கிறது.

வெளிச்சம் எத்தனை அழகு!

சிந்தனைக்கு இரு கேள்விகள் :

எவை  பாதுகாப்பு, நம்பிக்கை, உற்சாகம், புத்துணர்வு, மகிழ்ச்சியை  நமக்கு எப்போதும் தருகின்றது?

நாம் பாதுகாப்பு, நம்பிக்கை, உற்சாகம், புத்துணர்வு, மகிழ்ச்சியை  நம்மைச் சுற்றி வாழ்பவர்க்குத் தருகிறோமா?

சிறந்த வாழ்க்கை என்பது எரிந்து பிரகாசிப்பது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். 

*******   *******   *******

Thoughts from Bible Sources [St. Mathew 5:14-16, St. Mark 4:21-22, St. Luke : 8:16, 11:33]

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

புனித வெள்ளி

இயேசுவின் சிலுவைப் பாதை.



இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாள் வெள்ளிக்கிழமை. இந்த தினம் கிறிஸ்தவர்களால்  "புனித வெள்ளி" என்று அனுசரிக்கப்படுகிறது. 

அவர் சிலுவையில் அறையப்பட்டது காலை 9 மணி (St.Mark 15:25) ஆகும். அவர் உயிர் பிரிந்தது மாலை 3 மணி ( St. Mark 15:34). இயேசு சிலுவையில் தொங்கியபோது ஏழு வாசகங்கள் பேசினார். கிறிஸ்தவ ஆலயங்களில், "புனிதவெள்ளி" ஆராதனையில் இந்த ஏழு வாக்கியங்களும் தியானிக்கப்படும்.

இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? 


இயேசு தம் வாழ்நாள் முழுமையும் கடவுளுக்கு முழுவதுமாக அர்ப்பணித்து வாழ்ந்தவர். அவர் தமது உபதேசங்களில், "கடவுளை" தம்முடைய தந்தையென்றே எப்போதும் குறிப்பிட்டார். இயேசு தாம் தந்தையை விட்டு ஒருபோதும் பிரிந்திருப்பதே இல்லை என்றார். இவ்விதம் இறைவனை தமது சொந்தத் தந்தை போல அவர் பாவித்தது யூத சமயத் தலைவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 


இயேசு போலித்தனமாகக் கடைப்பிடிக்கப்படும் யூத சமய சடங்குகளை வன்மையாகக் கண்டித்தார். ஊருக்காக வெளிவேஷம் போடும் அற்பத்தனமான சமயத் தலைவர்களின் பாசாங்கு நிறைந்த வாழ்க்கையைக் கேள்வி கேட்டார். 

அத்துடன் அவர் பல அற்புதங்களை எல்லோரும் பார்க்கும்படி செய்ததால் வெகு திரள் மக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. இதனால் இயேசுவுக்கு மக்களிடம் செல்வாக்கும், ஆதரவும்  அதிகரித்தது. 

இதைக் கண்டு பயந்த யூத சமயத் தலைவர்கள், "ரோமப் பேரரசில் தங்களுக்கிருக்கும் அதிகாரம்  இவரது வளர்ச்சியால் பறி போய்விடுமோ" எனும் அச்சம் அடைந்தனர்.

அத்துடன் அவருக்கு மக்களிடமிருந்த புகழும் செல்வாக்கும் அவர்களுக்குள் பொறாமைத் தீயை வளர்த்தது. எனவே இயேசுவைக் கொல்வதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். அவர் யூத மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைக்கு விரோதமாகச்  செயல்படுவதாகவும், கடவுளை அவமதிப்பு செய்வதாகவும் வீண் பழி சுமத்தி மக்களிடம் அவருக்கு எதிர்ப்பு ஏற்படுத்த வஞ்சகமாகச் சூழ்ச்சி செய்தனர். 


மதத் தலைவர்களின் சூழ்ச்சி :


யூதர்களுக்கு முக்கியமான பண்டிகை பஸ்கா. அந்த பண்டிகை முதல் நாள் இரவில் இயேசுவைக் கைது செய்தனர். ஒரே நாளில் தீவிர விசாரணைக்கு வழிதராமல் அவரைக் கொன்றுவிடுவது எனச் சதித் திட்டம் தீட்டினர். பண்டிகைக்கு முன்பாக இதை முடித்துவிட வேண்டும் எனத் தீவிரமாகச் செயல் பட்டனர்.

இயேசுவின் மீது அவர்கள் வைத்த முக்கிய குற்றச்சாட்டு, பிறப்பால் இவன் ஒரு "தச்சனின் மகன்" ஆவான். ஆனால் தற்போது தன்னை "கடவுளின் மகன்" என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறான் என்பதாகும். 

இரண்டாவதாக, "யூத சமயத்தின் முன்னோர்கள் ஏற்படுத்திய பல உபதேசங்களிற்கும், சடங்குகளுக்கும் வேறுவிதமாக விளக்கங்கூறி மக்களை வஞ்சித்து சமய நம்பிக்கைகளுக்கு எதிராகக் கலகம் ஏற்படுத்துகிறான்" என்பதாகும். 

அத்துடன், "எதிர்காலத்தில் அமைய இருக்கும் இறையரசுக்கு தன்னை அரசன் எனச் சொல்லி" ரோமப் பேரரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகிறான் எனவும் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.

ரோம நீதிமன்றம் இயேசுவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்கவில்லை. யூத சமயத் தலைவர்களின் தந்திரங்களை உணர்ந்தனர். அவர்கள் இயேசுவை விடுவித்துவிடவும் முயன்றனர். 

ஆனால் யூத சமயத் தலைவர்களோ "இயேசுவைச் சிலுவையிலறைய வேண்டும்" என மக்களைக் கூக்குரலிடும்படித் தூண்டினர்.  அவருக்கு எதிராகப் பலர் சாட்சி சொன்னார்கள். ஆனால் அது பொருத்தமாக இல்லை.

கடைசியாக ரோம நீதிமன்றம் "ஏன் இவரைச் சிலுவையிலறைய வேண்டும்?" எனக் கேட்டபோது, இவன் தன்னை "கடவுளின் மகன்" எனக் கூறி இறைவனை இழிவு படுத்துகிறான். எனவே இப்படிப்பட்ட பொல்லாத வஞ்சகன் சாகவே வேண்டும் எனக் கூக்குரலிட்டனர்.

அப்போது ரோம நீதிபதி அவரைப் பார்த்து "நீ கடவுளின் குமாரனா?" எனக் கேட்டார்.

இயேசு ஆம் என்றார்.

உடனே யூத மக்கள் கூட்டம் கொதித்தெழுந்தது. கூக்குரல் அதிகமாகி கலவரச் சூழல் ஏற்பட்டதால், ரோம நீதிமன்றம் தங்கள் கைகளைத் தண்ணீரில் கழுவி யூத சமயத் தலைவர்கள் வசம் இயேசுவை ஒப்படைத்தனர்.



சிலுவைப் பாதை :

ரோமப் பேரரசில் சிலுவை மரணம் என்பது கொடூரமான குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனை ஆகும். அப்படி ஒருவருக்கு மரணம் சம்பவிப்பது இகழ்ச்சியும் அவமானம் நிறைந்ததாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவரது வலது புறத்திலும் இடது புறத்திலும் இரண்டு கொடூரமான குற்றவாளிகளும் உடன்  சிலுவையில் அறையப்பட்டனர். 

அவரது சீடர்களில் ஒருவரைத் தவிர மற்றெல்லாரும் உயிருக்குப் பயந்து அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவர் மிகவும் பரிதாபகரமான கைவிடப்பட்ட நிலையில் சிலுவையில் தொங்கினார். 

அவரைச் சுற்றி இருந்த மக்கள் கேலி செய்தனர். பரியாசமாகப் பேசி நிந்தித்தனர். "நீ இறைவனது மகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா பார்ப்போம் " எனப் பகடி பேசினர். 

அவர் முகத்தைத் துணியால் மூடி அடித்து, "நீ தீர்க்கதரிசி என்றால், உன்னை அடித்தது யார்? எனச் சொல் பார்ப்போம்" எனப் பரிகசித்தனர்.

"பிறரது வாழ்வில் எவ்வளவோ அற்புதங்களைச் செய்தான், ஆனால் இப்போது அவன் தன்னைதான் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் சிலுவையில் தொங்குகிறான். இவன் கடவுளின் மைந்தன் என்பது உண்மையெனில், இப்போது அவன் சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும், அப்போது அவனை நாம் கடவுளின் மைந்தன் என நம்புவோம்" என இகழ்ந்து அசட்டையாகப் பேசினர்.

ஏழு வாசகங்கள் :


அந்தச் சூழலில் சிலுவையில் தொங்கியபடி இயேசு சொன்ன முதல் வார்த்தை :

1. "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்கள் உணராமல்  இப்படிச் செய்கின்றனர்"  (St. Luke 23:34) என்றார்.


இரண்டு குற்றவாளிகளுக்கு மத்தியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்தார். அதில் ஒருவன் அவரை கேலி செய்து அவமதிப்பாகப் பேசினான். "நீ கடவுளின் பிள்ளை என்றால் உன்னையும் காப்பாற்றிக் கொள். எங்களையும் விடுதலையாக்கு பார்ப்போம்" என இகழ்ந்தான்.

மற்றொருவன் அவனைப் பார்த்து, "நாம் குற்றம் செய்ததால் தண்டிக்கப்படுகிறோம். இவர் குற்றவாளியல்ல. இந்த மரண நேரத்தில்கூட உணக்கு உணர்வு இல்லையா?" என வேதனையோடு அவனைப் பார்த்துப் பேசினான்.

பின்பு இயேசுவைப் பார்த்து "இறைவனின் மைந்தனே, உமது இறையரசு ஒருநாள் நிச்சயம் அமையும். அப்போது என்னை மறக்காமல் சேர்த்துக் கொள்ளும்" என்று வேண்டினான்.

அப்போது இயேசு சொன்ன இரண்டாவது வார்த்தை :

2. "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என்பதை உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"  (St. Luke 23:43) என்றார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவருடைய சீடர்களில் புனித யோவான் (St. John) மட்டுமே அருகிலிருந்தார். அவருடைய தாயாரும் அவருடன் பணிசெய்த சில பெண்களும் உடனிருந்தனர். அந்த துயர நேரத்திலும் இயேசு தமது தாயாரின் எதிர்கால பராமரிப்பைக் குறித்து கரிசனையுடையவராய் இருந்தார். 




அப்போது இயேசு கூறிய மூன்றாவது வார்த்தை :

அவர் தமது அன்பான சீடனைப் பார்த்து, தனது அம்மாவைச் சுட்டிக்காட்டி 

3. "இவரே  உன் தாய்" என்றார். பின்பு தனது தாயிடம்  "அதோ உன் மகன்" (St.John 19: 26 & 27) என்றார்.

நான்காவது அவர் சொன்ன வார்த்தை மிக முக்கியமானது; அவர் சொன்னது 

4. "என் தந்தையே, என் தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர்?" (St.Mathew 27:46)

இது ஒரு பரிதாபகரமான கைவிடப்பட்டதொரு ஏமாற்றம் நிறைந்த கதறுதலைப் போலத் தோன்றும்.  ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அது நடக்காததால் ஏற்பட்ட அவலக்குரல் போலவும் இருக்கிறது. 

ஆனால் இதற்குப் பின்பு அவர் கூறிய இறுதி வார்த்தைகள் அவர் முடிவுவரை இறைவன் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பறை சாற்றுகிறது.

பாவம் செய்தால் கடவுளின் பிரசன்னம் தங்களை விட்டு நீங்கி விடும் என்பது யூதர்களின் வரலாற்று அனுபவம். அது யூத சமயத்தின் நம்பிக்கை. எனவே அவர்கள் பாவம் செய்ததாக உணர்ந்து வேதனைப்படும்போது கடவுளின் தண்டனையிலிருந்து  தப்பிக்க மிருகங்களைப் பலியிடுவது வழக்கம். 

அவ்விதம் குற்றமற்ற இயேசு மக்களின் பாவங்களுக்குப் பலியானார். அவ்வித பலி நேரத்தில் இறைவனின் பிரசன்னத்துக்கும் இயேசுவுக்கும் இடைவெளி ஏற்பட்டது. தந்தையின் பிரசன்னத்தை இழந்த அந்த இருள் சூழ்ந்த நேரத்தில் இயேசுவிடமிருந்து வெளிப்பட்ட கதறலே இந்த வாசகம் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

ஐந்தாவதாக அவர் சொன்ன வார்த்தை :

5. "தாகமாயிருக்கிறேன்"( St. John 19:28) என்பதாகும்.

முன்னிரவு தொடங்கி ஏறக்குறைய காலை 9 மணிக்குச் சிலுவையில் அறையப்படும் வரை விசாரணைக்காக அங்கும் இங்கும் அவர் அலைக்கழிக்கப்பட்டார். அதின் பின்பு கசையடி, தலையில் முள் முடி சூட்டப்படுதல், சிலுவையைச் சுமந்து ஊர்வலம், பரியாசம், கேலி, அவமானம் என உடலாலும், மனதாலும் சிறுமைப் படுத்தப்பட்டார். 

அந்த கோரச் சூழலில் அவர் தாகத்தால் தவிப்பதைக் கண்டு  சிலுவையில் அறையப்படுபவர்கள் வலி தெரியாமலிருக்கக் கொடுக்கப்படும் மயக்கம் தரும் காடிநீரைப் பஞ்சில் தோய்த்து ஒரு கோலில் வைத்து அவரிடம் நீட்டினர். ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசு ஆறாவதாகச் சொன்ன வார்த்தை :

6. "நிறைவேறியது" என்றார். (St.John 19:30). 

சாதாரண மனிதர்களுக்கு வாழ்க்கையின் நோக்கம், எதற்காக வாழ்கிறோம் என்பது தெளிவாகத் தெரியாது. ஆனால் இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் தனது வாழ்வின் நோக்கம் இதுதான் எனப் பலமுறை தெளிவாகக் கூறினார். அவர் இப்படித்தான் மரணமடைவேன் எனக் கூறிய போது அவருக்கு நெருக்கமான சீடர்கள் அதைக் கோபத்துடன் எதிர்த்தனர். ஆனால் இயேசு அவர்கள் எதிர்ப்பை கண்டித்தார். 

தமது மரணம் இவ்விதம் தான் நிகழும் என அவர் கூறியது போலவே நிறைவேறியது. 




இறுதியாக ஏழாவது வார்த்தையாக மாலை மூன்று மணியளவில் சொன்னது :

7. " தந்தையே, உமது கரங்களில் எனது உயிரை ஒப்படைக்கிறேன்"  
(St. Luke 23:46) என்று உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.

படங்கள் இணையத்திலிருந்து