நாலடியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாலடியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஆகஸ்ட், 2022

நட்பு

நாலடியார் - நான்கு பாடல்கள் 




1.தீயவருடன் பழகாதே:

பாடல்:

சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன் 

சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் - 

சார்ந்தோய் கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் 

பாம்பு கண்டன்ன துடைத்து. 

பொருள்: 

நண்பனே! 

ஒருவரை நல்லவர் என நினைத்து, நம்பிக்கையுடன் பழகினாய். 

ஆனால், நீ உயர்வாகக் கருதிய அவரிடமோ உண்மை இல்லை. 

இப்போது நீ என்ன செய்ய வேண்டும்? 

கேள்! சொல்கிறேன். 

உடலில் பூசிக் கொள்ளும் நறுமணத் தைலம் இருக்கிறது என்று நினைத்து ஒருவன் பெட்டியைத் திறந்தான். ஆனால் அந்த பெட்டியிலோ ஒரு பாம்பு இருந்தது. 

அதைக் கண்டவுடன் அவன் என்ன செய்வான்? 

தலை தெறிக்க அந்த இடத்தை விட்டு விட்டு ஓடிவிடுவான் அல்லவா?.

நீயும் அந்தப்படியே செய்.

2. காரியவாத நட்பு:

பாடல்:

உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்

கள்ளத்தால் நட்டார் கழிகேண்மை - 

தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட

மனத்துக்கண் மாசாய் விடும். 

பொருள்:

அழகிய மலைகளிலிருந்து பாய்ந்து இறங்கி வரும் அருவி நீரானது சேற்றினால் கலங்காமல் தெளிவாக மாசற்றதாக வழிந்தோடுகிறது. 

ஆனால் சிலர் உள்ளம் இது போன்று மாசற்றதாக இருக்காது. தாங்கள் விரும்பும் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு வஞ்சகமாக  நட்பு பாராட்டிப் பழகுவார்கள். 

அது ஏமாற்றும் கள்ளத்தனமாக நட்பு. அந்த நட்பு மனம் ஒன்றி பழகாததால் நிலைத்து நிற்காமல் கழிந்து போகும். இத்தகைய அன்பு மனத்தில் தோன்றிய மாசாகக் கருதப்படும்.

3. சிரத்தையுடன் கற்றுக் கொள்:

பாடல்:

கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல - 

தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே 

நீர் ஒழியப் பாலுண் குருகின் தெரிந்து

பொருள்:

கடலுக்கும் கரை உண்டு. ஆனால் கல்விக்குக் கரை இல்லை. 

ஆகவே மெதுவாக கற்றுக் கொள்வோம் எனச் சிரத்தை இல்லாமல் இருக்காதீர்கள். சில சமயம் நோயினால் நலிவுற்று கற்க முடியாமலும் போகலாம். 

நமக்குக் கொடுக்கப்பட்ட காலம் சொற்பமே என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். 

ஆகவே வாழ்க்கைக்கு மேன்மை தரும் கல்வியை ஆராய்ந்து, தெளிவாகப் புரிந்து கற்க வேண்டும். 

நீரும் பாலும் கலந்திருக்கும்போது நீரை ஒதுக்கிவிட்டுப் பாலை மட்டும் பருகும் குருகுப் பறவை போல நல்லனவற்றை மட்டும் கற்க வேண்டும். 

4. குடிப்பிறப்பு :

பாடல்: 

நல்லவை செய்யின் இயல்பாகும்

தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் - 

எல்லாம் உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் 

என்னோ புணரும் ஒருவர்க்கு எனின் 

பொருள்:

நல்ல செயல்கள் செய்யும்போது  அதை யாரும் பொருட் படுத்த  மாட்டார்கள். அது இயல்பான செயல் எனக் கண்டு கொள்ள மாட்டார்கள். 

ஆனால் ஒரு தீய செயல் செய்து விட்டால், அதைக் குறித்து பலரும் இழிவாகப் பேசுவார்கள்.

இதுதான் நல்ல செயல்கள், தீய செயல்கள் செய்வதால் கிடைக்கும் பலன். 

இதைப் புரிந்து, உணர்ந்து வாழ்பவர் இல்லம் நல்ல குடும்பமாக அமைகிறது. அந்த குடும்பத்தில் பிறப்பவர்கள் நல்ல செயல்கள் செய்யக் கவனமாக இருப்பார்கள். 


வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

நிழலாக தொடரும்

நாலடியார் : நான்கு பாடல்கள் 


1. கண்ணியம் 

பாடல்:

வேற்றுமை  இன்றிக் கலந்திருவர் நட்டக்கால்

தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்

ஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின்

தூற்றாதே தூர விடல்

பொருள்:

ஒரே மனதுடன் இரு விதமான சிந்தனை இல்லாத பிரியமான நட்பு ஏற்பட்டாலும்,

அதில் ஒருவர் தவறான தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டால், பொறுத்துக் கொள்ள முடிந்த அளவிற்கு அமைதி காத்து, அந்த நட்பைத் தொடர வேண்டும். 

அவை எல்லை மீறிய  நிலைமைக்கு வந்தால், அவரது தீய நடத்தைகளைப் பிறர் அறியும் படியாகத் தூற்றிப் பேசாமல், அவரை விட்டுத் தூரமாக விலகிவிட வேண்டும். 

2. வினைப் பயன்.

பாடல்:

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலை - தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு. 

பொருள்:

பல பசுக்கள் இருக்கும் மாட்டுக் கொட்டடியில் சின்னஞ்சிறு கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டால் அது தன் தாயை நாடிச் சென்று பால் குடிக்கும். 

அதுபோல, பழைய வினையின் பயனும் அந்தச் செயலுக்கு உரியவனை நாடிச் சென்று பற்றிக்கொள்ளும்.

3. எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். 

பாடல்:

வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை 

அளந்தன போகம் அவரவர் ஆற்றான் 

விளங்காய் திரட்டினார் இல்லை 

களங்கனியைக்காரெனச் செய்தாரும் இல். 

பொருள்: 

இவ்வுலகில் அனைவரு‌ம் உடல் நலம், புத்திக் கூர்மை, செல்வ வளம் நிறைந்த வாழ்க்கை வாழவே விரும்புகின்றனர். 

ஆனால் அது அவரவர் செய்த நல்ல செயல்கள், தீய செயல்கள் ஆகியவற்றின் பயனுக்கேற்ப அமையும். 

நாமாக விளாம்பழம் திரட்டி உருண்டையாக இருக்கும் படி உருவாக்க முடியாது. 

களாப் பழத்தைக் கறுப்பு நிறத்தில்  படைக்கவும் முடியாது. 

அவரவர் செய்த செயலுக்கு ஏற்ப அனுபவிக்க வேண்டிய அளவும்  அது போல சரியாக அளந்து வைக்கப்பட்டிருக்கிறது. 

4. அறத்தின் பயன்: 

பாடல் :

ஆ வேறு உருவின ஆயினும் 

ஆ பயந்த பால் வேறு  உருவின அல்லவாம் 

பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி 

ஆ போல் உருவு பல கொளல் ஈங்கு.  

பொருள்:

பசுக்கள் பலவகையான நிறமும், உருவங்களையும் கொண்டிருந்தாலும், அவைகள் தரும் பாலின் நிறம் பல்வேறாக இருப்பதில்லை. 

அதுபோல மானிடர் பல வகையான நிறமும், உருவமும் கொண்டிருந்தாலும், உள்ளத்தில் அறநெறியைக் கைக் கொண்டு வாழ்ந்தால், அவர்கள் வாழ்வின் தன்மையும் ஒரேவிதமாகப் பயனுடையதாக இருக்கும்.



ஞாயிறு, 16 ஜனவரி, 2022

நிலைத்திருப்பவை

நாலடியார் : நான்கு பாடல்கள் 



1 . செல்வம் நிலையற்றது. 

 பாடல்:

தகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக்கால் தொட்டு

பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க

அகடு உற யார் மாட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்.                             

பொருள்:

ஏரில் எருதைப் பூட்டி நிலத்தை உழுது விவசாயம் செய்கிறார். அதில் குற்றமற்ற செல்வம் விளைகிறது. 

அச் செல்வத்தையும், பலரோடும் கூடிப் பகிர்ந்து மகிழ்வாக உண்டு வாழ வேண்டும்.

ஏனெனில், செல்வமானது யாரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருப்பது இல்லை. 

அது அகலமாகக் கால் பரப்பிக்கொண்டு ஓடும் வண்டிச் சக்கரம் போல இடம் மாறிக் கொண்டே இருக்கும்.

2.  தொடர்வது 

பாடல்:

'நின்றன நின்றன நில்லா' என உணர்ந்து,

ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க

சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, 

உடன் வந்தது வந்தது, கூற்று.

பொருள்:

உறவுகள், பொருட்கள், செல்வம், அதிகாரம், புகழ் இவை எதுவும் நம்முடன் என்றும் இருக்கப் போவதில்லை. இதனை  நன்கு உணர்ந்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். 

அப்படியெனில், எது நம்முடன் என்றும் நிலைத்துத் தொடர்ந்து வரும்? 

நாம் செய்யும் செயல்களின் பயன்கள் மட்டுமே. அவை நம்மை விட்டுப் பிரியாமல் நிலையாகத் தொடர்ந்து வருபவை. 

கூற்றுவன் வேலை உடலையும், உயிரையும் பிரிப்பது ஆகும். 

அவர் ஒவ்வொரு நாளையும்  அழித்துக்கொண்டு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். 

ஆகவே நம்முடன் நிலைத்து நிற்கும் அறச் செயல்களை விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

3. விட்டுவிடுதல் 

பாடல்:

என்னானும் ஒன்று தம் கையுறப் பெற்றக்கால்,

பின் ஆவது என்று பிடித்து இரார், 

முன்னேகொடுத்தார் உயப் போவர் கோடு இல் தீக் கூற்றும். 

தொடுத்து ஆறு செல்லும் சுரம். 

பொருள்:

நல்லவர்கள் கையில் எவ்வளவு மிகச் சிறந்த ஒன்று கிடைத்தாலும் கூட, அது தனக்குப் பின்னர் பயன்படும் என்று, தங்களது கைவசம் அதைப் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். 

மாறாக, அவர்கள் வாழும் காலத்திலேயே அதைத் தேவையுள்ளவர்களுக்குப் பயன்படும்படி கொடுத்து விடுவார்கள். 

இதன் மூலம் தாம் மறைந்த பிறகும் வாழும்படியான புகழை நிலைநாட்டி விட்டு, நேர்மையாக நடந்து கொள்ளும் கூற்றுவன் அழைத்துச் செல்லும் வழியில் செல்வர்.

4. அறிவுடைமை 

பாடல்:

வெறி அயர் வெங் களத்து வேல்மகன் பாணி 

முறி ஆர் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க, 

மறி குளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி 

அறிவுடையார் கண் இல்.

பொருள்:

இறைவனுக்குப் படைத்துக் கொண்டாடும் விழா அங்கு நடக்கிறது.  

ஓர் ஆட்டுக் குட்டி பலி கொடுக்க கட்டப்பட்டுள்ளது. 

அதைப் பலியிடும் பூசாரி உடுக்கு அடித்துக் கொண்டு பாட்டுப் பாடுகிறார். அந்த ஆட்டுக் குட்டியின் கழுத்தில் இலை தழையால் கட்டிய மாலை தொங்கவிடப் பட்டிருக்கிறது.

ஆட்டுக்குட்டி தனக்கு நிகழ்வது குறித்து எதுவும் அறியாமல், மாலையில் உள்ள அந்தத் தழையை மகிழ்ச்சியுடன் உண்கிறது. 

அது போன்ற பேதைமையில் அடையும் மகிழ்ச்சி அறிவுடையவர்களிடம் இல்லை.