திங்கள், 20 செப்டம்பர், 2021

நான் மறைந்து நாமாக வேண்டும்.

 இரு பறவைகள். 




தன்னைத்தான் மோகித்துச் சேவிக்க விழைகிறது ஆணவம். 

பிறருக்குப் பணிவிடை செய்யத் துடிக்கிறது ஆன்மா. 


அங்கீகாரம் நாடி, அதைப் புறத்தில் தேடி ஆணவம் ஓடுகிறது.

உள்ளான நம்பிக்கை ஆன்மாவிற்கு உசிதம். 


ஆணவம் வாழ்க்கையைப் போட்டிகள் நிறைந்த களமாகக் காண்கிறது. 

ஆன்மாவிற்கு வாழ்க்கை கையளிக்கப்பட்ட ஓர் வெகுமதி. 


நான் எனும் இறுமாப்பு ஆணவத்தின் அஸ்திவாரம். 

அன்பில்  நிலை நிற்கிறது ஆன்மா . 


வெளியே நடப்பதை வேடிக்கை பார்ப்பது ஆணவத்தின் வாடிக்கை. 

உள்ளத்தை உற்றுப் பார்த்து உண்மையில் உவகை அடைவது ஆன்மா. 


ஆணவம் பற்றாக்குறையைப் பறைசாற்றுகின்றன. 

ஆன்மா பொங்கி வழியும் மிகுதியைச் சுட்டிக் காட்டுகிறது. 


ஆணவம் காமத்தில் கட்டுண்டு இழுத்த இழுப்பில் அலைந்து திரிகிறது. 

ஆன்மா அன்பில் பிணைக்கப்பட்டு அடங்கிய இறைப் பறவை. 


வாழ்க்கையில் பெறப்படும் கொடைகள் கண்டு ஆணவம் குதுகலிக்கிறது. 

அதன் பயணத்தை இரசிப்பதில் திருப்தியுடன் ஆன்மா உவகை அடைகிறது. 


வாழ்வில் அடையும் வலிகளின் ஊற்றுக்கண் ஆணவம். 

ஆன்மா ஔஷதமான மருந்து. 


ஆணவம் அறிவைத் தேடுகிறது. 

ஆன்மா ஞானத்தின் உறைவிடம். 


ஆணவம் இறைமையை மறுதலிக்கிறது. 

ஆன்மா இறைவனை ஆரத் தழுவிப் பணிகிறது. 


ஆணவம் மரணத்தில் மறைகிறது. 

ஆன்மா அழிவதில்லை. 


ஆணவம் என்பது நான். 

ஆன்மா என்பது நாம். 


*******     *******     *******     *******    


 

Author: Unknown.

படம் இணையத்திலிருந்து நன்றியுடன். 

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

பேசுவது மகிழ்ச்சியை உருவாக்கட்டும்

மனம் மகிழப் பேசுங்கள்.

 


உரையாடல் நம்பிக்கையை அளிக்க வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த சூழலை உருவாக்க வேண்டும். உறவுகளை மேம்படுத்த வேண்டும். 

உள்ளம் உணர்ந்து கவனமாகப் பேசுவதன் வழியாக இதைச் சாதிக்க முடியும். 

நாம் பேசும் (எழுதும்) வார்த்தைகள் நமது குணத்தை வெளிப்படுத்துகிறது. ஆசையைச் சொல்கின்றன. விருப்பங்களைக் கோடிட்டுக் காண்பிக்கிறது. தகுதியைப் பிரதிபலிக்கிறது. 

ஆகப் பேச்சு என்பது சுபாவத்தின் வெளிப்பாடு. தொடர்ந்து கவனமாகப் பயிற்சி செய்வதன் மூலமாக உறவுகள் மேம்படுத்தும் வகையில் பேச முடியும். 

ஒருவர் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிந்தால் பேச்சும் தரமானதாக இருக்கும். தேவையில்லாமல் பேசிவிட்டோமே எனப் பின்னர் வருந்த நேரிடாது. 

சொற்கள் குறைவாகவும், செறிவாகவும் இருப்பது மேன்மை. 

எப்படிப் பேச வேண்டும் எனப் பல மதிப்பு மிக்க நூல்கள் கற்றுத் தருகிறது. 

அவற்றில் சிலவற்றைத் தொகுத்து அளித்துள்ளேன். முயற்சி செய்து பார்க்கலாம். 

  • தாய், தந்தையுடன் குரலைத் தாழ்த்தி மதிப்புடன் பேச வேண்டும். சப்தம் உயர்த்திப் பேசக்கூடாது. பொறுமையுடன் கேட்பது முக்கியம். பதில் வார்த்தைகள் அன்பு நிறைந்ததாக இருக்க வேண்டும். 
  • வாழ்க்கைத்துணையுடன் உண்மையை மட்டும் பேச வேண்டும். அப்பொழுது உறவு உறுதிப்படும். பொய் பேசக் கூடாது. வாழ்க்கை நாடகமாக மாறி விடும். 

  • உடன் பிறந்த சகோதரரிடம்  உள்ளார்ந்த மனதுடன் உரையாடுதல் அவசியம். 
  • உடன் பிறந்த சகோதரியுடன் நேசத்துடன் பேச வேண்டும். இனிய வார்த்தைகளில் ஆதரவு வெளிப்படட்டும். அது மன அழுத்தத்தைக் குறைக்கும். 
  • குழந்தைகள் பேசும் போது அதைக் கவனமுடன் கேட்க வேண்டும். இடை மறித்துப் பேசக்கூடாது. அவர்களது விருப்பங்கள், எண்ணங்கள், நோக்கங்களைப் புரிந்து கொள்வது மிக முக்கியமானது. அவை அவர்களைச்  சரியான பாதையில் வழி நடத்த உதவும். 
  • உறவினர்களிடம் கரிசனையுடன் பேச வேண்டும். உதவியை எதிர்பார்த்து வருபவர்களிடம் எந்தளவு உதவ முடியும் என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கக் கூடாது. முடியாத வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. 
  • நண்பர்களுடன் இயல்பாகப் பேச வேண்டும். முகமூடி தேவையில்லை.
  • உயரதிகாரிகளிடம் பேசும்போது கவனமும், கண்ணியமும் தேவை. அவர்கள் நகைச்சுவை ததும்பப் பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசக் கூடாது. கேட்கப்படும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்வது போதும். 
  • வியாபாரங்களில் கண்டிப்புடன் பேச வேண்டும். வெளிப்படையாகத் தேவைகளைச் சொல்ல வேண்டும். உரையாடலில் நேர்மை முக்கியமானது. தெளிவான புரிதல் மிக முக்கியம். எச் சூழ்நிலைகளிலும் சொன்ன சொல்லை மாற்றிப் பேசக்கூடாது. 
  • கீழ் பணிபுரிபவர்களிடம் பரிவுடன் பேச வேண்டும். அவர்கள் தவறிழைக்கும் போது தனித்து அழைத்துக் கண்டித்து  உணர்த்தவும். மதிப்புடனும், மரியாதையுடன் நடத்த வேண்டும்.
  • எந்த உறவாக இருப்பினும் போலித்தனமான உணர்வு, மிகைப்படுத்திப் பேசுவது நீண்ட காலம் செல்லுபடியாகாது. அவை எப்படியும் வெளிப்பட்டு விடும். அது அவநம்பிக்கை ஏற்படுத்தும். உறவை, நட்பைக் கொன்று விடும். 

இன்றைக்கு நாம் உறவுகள் சிதைவுப்பட்ட காலத்தில் வாழ்கிறோம். எங்கும் சுயநலம் மிகுதியாக உள்ளது. உறவுகள் பெரும்பாலும் பயன் கருதியே நீடிக்கின்றன. 

பலர் தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளவே பழகுகிறார்கள்.  

இத்தகைய சூழலில் எச்சரிக்கையுடன் பழகவும், கவனமாகப் பேசவும் வேண்டும்.  

உணர்வு நிலை தவறிப் பேசும் மதியீனமான பேச்சுகள் இறுதியில் மனதிற்கு கடும் துயரத்தையே தரும்.

இறுதியாகக் குறைவாகப் பேசுவது நல்லது. எப்போதும் உள்ளம் உணர்ந்து கவனமாக உண்மையுடன் பேசுவது வாழ்வை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கும். 

படம் இணையத்திலிருந்து நன்றியுடன் 


ஞாயிறு, 13 ஜூன், 2021

தகவல் சுமை

தலையில் ஏற்றப்படும் தகவல் சுமைகள்.

இன்றைய உலகம் ஓர் தகவல் தொடர்புலகம். Instagram, Facebook, Linked in, What's app, blogs, vlogs, videos,  messengers, podcasts, online news, OTT தளங்கள் , Radio, TV,  email and now clubhouse.. என இணையம் சூழ் உலகில் வாழ்கிறோம். 

ஒவ்வொரு நாளின் மணித்துளிகளிலும் இணையத்தின் வழியாகப் பல ஆயிரம் தகவல்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. 

'"இவ்விதமாக் கொட்டப்படும் தகவல் சுமைகள்" நமது சிந்தனைத் திறனில் எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகின்றன என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

நமது மூளை ஒரே நாளில் இத்தனை ஆயிரமாயிரம் தகவல்களைப் பிரித்துச் செயல்பட இயலாது.  இந்த துரித பரிணாம வளர்ச்சி வடிவமைப்பு நமக்கு கிடையாது. 

நியோன்தர் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தம் வாழ்நாள் முழுமையாக அறிந்த விஷயங்களை விட, நாம் ஒரு மணித்துளியில் வாசிக்கும், பார்க்கும், கேட்கும் தகவல்கள் மிக மிக அதிகம்.

ஒரு துறவி பத்தாண்டுகளில் தேடித் தேடி வாசிப்பதன் மூலம் பெறும் தகவல்களை விட ஒரு மணி நேரத்தில் நம்மை வந்தடையும் தகவல்கள் அதிகம்.

இப்படி நம் மீது திணிக்கப்படும் தகவற் சுமை ஓர் தீவிரமான மன பாதிப்பை நம்மையறியாமல் நமக்குள் உருவாக்குகிறது. 

ஆனால் துரதிர்ஷ்டவசமாகப் பலர் இதைச் சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்துகின்றனர். 

தகவற் சுமை தீவிரமான உணர்வுகள் சார்ந்த மனச்சிக்கல்களை உருவாக்குகின்றது. 

அதீத எதிர்பார்ப்புகள், கவலை, படபடப்பு, மனக்கிலேசம், பிடிப்பற்றத் தன்மை, மனச் சோர்வு, கையறு நிலை, ஏமாற்றம், விரக்தி  இத்தகைய மன உணர்வுகளை இவைத் தூண்டுகிறன.

அத்துடன் இயல்பாகச் சிந்திக்கும் திறனையும் மழுங்கடிக்கின்றன. 

உதாரணமாக வெகு திரள் மக்களின் அபிப்பிராயத்தின்படி நம்மை அவசரமாக முடிவெடுக்கும்படி இவை தூண்டுகின்றன. 

அத்துடன் நமது இயல்பாகச் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை மட்டுப்படுத்துகின்றன.

இந்த ஏராளமான தகவல் குப்பைகள் எங்கிருந்து எப்படி உருவாகின்றது என்பதைக் கட்டுப்படுத்துவது நம் கையில் இல்லை. ஆனால் அவைகள் நம் மீது திணிக்கப்படுவதை  நம்மால் மட்டுப்படுத்த முடியும். கட்டுப்படுத்தவும் கூடும்.

1. புறக்கணிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

நம் மீது வீசப்படும் எல்லா தகவல்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது எனும் அவசியமில்லை. தேவையற்ற, அர்த்தமற்ற தகவல்களை உதாசீனப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காகக் குற்றவுணர்வு படத் தேவையில்லை. இது தவறுமல்ல. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள நாம் கடவுள் அல்ல.

2. தெரிவு முக்கியம்

வாழ்க்கையை மதிப்பு மிக்கதாக மாற்றும் பொருள் பொதிந்த தகவல்களைத் தேடித் தெரிவு செய்து வாசிக்கவும். நம் மீது வீசப்படும் தகவல்களில் 65% குப்பைகள் என ஆய்வுகள் சொல்கிறது. நாம் ஒன்றும் குப்பைக் கிடங்கல்ல.

3. நேர நிர்வாகம்

இணையத்தைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து  தங்களை மறந்து அதில் மூழ்கி இருக்கும்படியாக தளங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாய வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். 

ஒரு நாளில் இரண்டு மணி நேரம் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக இணைய தளங்களில் செலவிடுவது  போதுமானது. அதிக பயன்பாடு நேர விரயம். 

எச்சரிக்கையுடன் இணையத்தைப் பயன்படுத்துவது மன.  ஆரோக்கியத்திற்கு மிக உசிதம்.

4. தடைசெய்ய கற்றுக் கொள்ளவும்.

ஒவ்வொரு சமூக வலைத்தளத்திலும் செயல்படாமல் ஒதுங்கி இருக்க சில  வடிவமைப்புகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துங்கள். சில காலம் ஓய்வாக ஒதுங்கி அமைதியாகத் தளங்கள் செயல்படுவதைக் கவனியுங்கள். 

அதனால் இணையதளங்களில் நமது இருப்பு அத்தனை முக்கியமானது இல்லை எனும்  தெளிவை அதுக் கற்றுத் தரும். நாம் இல்லையென்றாலும் அவை வழமையாக இயங்கும். 

5.  இணையத்தளம்  உங்கள் அடையாளம் அல்ல.

இணைய தளங்களில் நமது செயல்பாடுகளை நிறுத்தி விட்டால் நம்முடைய  இருப்பை இழந்து விடுவோமோ எனும் அச்சம் நம்மையறியாது ஆட்டிப் படைக்கிறது. அது உண்மை கிடையாது. 

உண்மையில் தகவல்களை, தொடர்புகளை நாம் தவற விட்டு விடுவோமோ எனும் பயத்தை  இணையம் நம்மையறியாது  நமக்குள் விதைக்கிறது. 

Updated ஆக இருக்க மாட்டீர்கள் எனும் அச்சத்தையும் அது ஊக்குவிக்கிறது. இந்தப் போலி அச்சம் வீழ்த்தப் பட வேண்டும்.

சில நாட்கள் சமூக ஊடகங்களினின்றும் விலகியிருந்து குடும்பம், நட்பு, பணி என நிஜ உலகுடன் அதிகமான சமயம் செலவிடுவது நன்மை தரும். அது தவறல்ல. அது இயல்பானது. சாதாரணமானது. அவை புத்துணர்ச்சி அளிக்கும். இதனால் நாம் எதையும் இழந்து போகவும் மாட்டோம். மாறாக அவை நம் மனதை மேம்படுத்தும்.

இணையம் ஒரு காட்டாறு. வரும் காலத்தில் மேலும் பல பல புதிய தளங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். பல பழையத் தளங்கள் அழிந்து மறைந்தும் போகும். 

புதிய புதிய பதிவுகளும், தகவல்களும் புற்றீசலாக உருவாகி வந்து கொண்டே இருக்கும். 

எனினும் அவற்றிற்கும்  நமது இருப்பின் அடையாளத்திற்கும், அறிவின் வளர்ச்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 

மனவளம், சிந்திக்கும் திறன் இவை இரண்டும் உயர்த்த உதவும் வகையில் இணையத்தைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவோம். அது மிகவும் அத்தியாவசியமானது.

Translated Message with thanks from Ritam Bhatnagar, (linktr.ee/ritambhatnagar) email: (ritam@indiafilmproject.co)