சனி, 27 ஆகஸ்ட், 2022

43. கௌவை அகற்று

 பழிச்சொல் பேசி துன்பம் செய்யாதே.

(ஆத்திசூடி - ககரவர்க்கம்) 

கௌவை என்பது ஊரார் வம்புப் பேசி பழித்து தூற்றிப் பேசுவதைக் குறிக்கும். 

பொதுவாக, இது இளம் காதலரது களவு ஒழுக்கம் பற்றி ஊர்மக்கள் கழ்ச்சியுடன் பேசுவதைக் குறிப்பதாகும்.

காதலனும் காதலியும் ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டு அதில் மூழ்கி இருக்கும் போது அவர்களது நாணம் அகன்று விடும்.  தங்களை மற்றவர்கள் பார்க்கிறார்களே எனும் கூச்ச உணர்வும் விலகிவிடும். தாங்கள் செய்வது பிறருக்குத் தெரியாது எனும் மன மயக்கத்திற்கு ஆளாவார்கள்.

அப்படி வெட்கம் துறந்தவர்களாக தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாது மதி மயங்கிச் செய்யும் செயல்களைப் பற்றி ஊரார் வம்பு பேசுவது கௌவை. 

உதாரணமாக "கௌவை" எனும் சொல் பயன்படுத்தப்பட்ட ஒரு சில திருக்குறள் பாடல்கள்:

குறள்:

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

பொருள்:

ஊரார் வம்பு பேசி தூற்றுவதால் தான் எங்கள் காதல் வளர்கிறது; இல்லையேல் இக் காதல் கொடி வளம் இழந்து வாடிப்போய் விடும்.

குறள்:

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

பொருள்:

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த இந்த காதல் நோய், ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும், அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.

குறள்:

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

பொருள்:

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.

குறள்:

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.

பொருள்:

நான் விரும்பியபடி ஊரார் எங்கள் காதலைப் பற்றி அவதூறாகப் பேசி தூற்றுகின்றனர். ஆதலால் இனி என் காதலரும் நான் விரும்பியவாறு என்னைத் திருமணம் செய்வார்.  

கௌவை அகற்று:

கௌவை அகற்று எனும் ஔவையார்  வரிகளை,  பழிச்சொல் பேசி துன்பம் செய்யாதே. அதை வாழ்விலிருந்து நீக்கிவிடு என்று புரிந்து கொள்ளலாம்.

பழிச்சொல் பேசப்படுகிற விதமாகக் காதல் வயப்பட்டு மதி மயங்கி துன்பப் படாதே என்பது எனக்கு மிக நெருக்கமாக உள்ளது.

எனினும் இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.

வீண் வம்பு பேசாதே:

பொது வெளியில் ஒருவரது மதிப்பைக் களங்கப்படுத்தும் விதமாக ஒருபோதும் பேசக் கூடாது. எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அனுமானித்துப் பேசுவதும் குற்றம்.  உண்மையை அறியாது அவசரப்பட்டுப் பேசுவது முடிவில் நமக்கே வெட்கத்தை ஏற்படுத்தும்

பலர் ஆர்வமுடன் கேட்பதால் தான் புறணி பேசும் வழக்கம் வளருகிறது.  

தாங்கள் தனிப்பட்ட வாழ்வில் அதே தவற்றைச்  செய்பவர்கள் தான் பெரும்பாலும் புறணி பேசுகிறார்கள். வீண் பேச்சுப் பேசுபவர்களின்  பேச்சை விருப்பமுடன் கேட்டால், நாம் இல்லாத போது நம்மைப் பற்றியும் அவர்கள் கட்டாயம் பழி பேசுவார்கள்.

ஒருவரில்லாத சமயம், அவரைப்பற்றிக் குறை சொல்லி பேச்சு வந்தால், உடனடியாக அவரில்லாத போது அவரைப்பற்றிப் பேசுவது முறையாகாது எனப் பேச்சைத் திசை மாற்றம் செய்வது நல்லது.

தொடர்பான சில சிந்தைகள்:

திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன் திருடனைப் போல் மோசமானவன்.  அவதூறுகளைக் காது கொடுத்துக் கேட்பவனும் அப்படித்தான். (செஸ்டர் பீல்டு)

மற்றவர்களைப் பற்றிய அவதூறுகளுக்கு நான் சிறிது கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவைகள் பொய்யாக இருந்தால் மற்றவர்களால் நான் சுலபமாக ஏமாற்றப்பட்டவனாக ஆகி விடுவேன். அவைகள் மெய்யாக இருந்தால் உபயோகமற்றவர்களை வெறுக்க ஆரம்பித்து என் வாழ்க்கையை நரகமாக மாற்றிக் கொள்ள வேண்டியதிருக்கும் (மான்டெஸ்கியூ).

அவதூறு, கடல்களையும், மலைகளையும்,
பாலைவனங்களையும் எளிதில் தாண்டிச் செல்லும் (கோல்டன்).

மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் அவதூறு பேசுவதற்காக வாயைத் திறந்தால், உடனே உன் காதை அடைத்துக் கொள் (குவாரல்ஸ்).

என்னைப்பற்றி தவறாக எண்ணும்படி செய்ய முயன்றதற்காக அவதூ
ற்றுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அது என்னை அதிக எச்சரிக்கையாய் இருக்கும்படி செய்தது. அத்துடன் அது என் செயல்களிலும் அதிக கவனமாய் இருக்கும்படி செய்துள்ளது (ஜான்ஸன்).


Picture Courtesy: 

Hudson Christie - The New York Times

https://www.google.com/amp/s/www.nytimes.com/2015/12/20/books/review/the-novels-evil-tongue.amp.html

சனி, 20 ஆகஸ்ட், 2022

நீங்கள் மகிழ்ச்சிக்கு தகுதியானவர்,

சுய தண்டனை 

(Self Punishment)

சுய தண்டனை (Self Punishment) அல்லது சுய-தீங்கு (Self Harming) என்பது தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல்.

இது மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும் ஓர் உளவியல் சிக்கல்.

வாழ்வில் ஏற்படும் இயலாமை, ஏமாற்றம், கையறுநிலை, விரக்தி இவற்றின் விளைவாக ஒருவர் தனக்கு தானே துன்பம் விளைவித்துக் கொள்ளும் செயல் என இதை வரையறுக்கலாம். 

இதைக் கட்டுப்படுத்தாது விட்டு விட்டால்  மன ஆரோக்கியத்திற்கு கடும் தீங்கை விளைவிக்கும்.

சுய தண்டனை (Self Punishment) - அது எங்கிருந்து வருகிறது?

அதற்கு முதலில் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

மனம் இடைவிடாமல் தனக்குள் உரையாடிக் கொண்டே இருக்கிறது. அது எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தொடர் வினை.

மகிழ்ச்சி நிறைந்த கடந்த கால தருணங்கள், எதிர்கால திட்டங்கள், மற்றும் நம்பிக்கை தரும் கனவுகள்..,  இது போன்ற குதுகலம் நிறைந்த எண்ணங்களால் நிறைந்து இருக்கும் போது, மனதின் உரையாடல் உற்சாகமாக இருக்கும்.

ஆனால், கடந்த கால தவறுகள், குற்ற உணர்வு, எதிர்மறையான சூழல்கள், இழப்பு, அவமானம்.., இவை போன்ற சம்பவங்களால் மனம் ஆக்கிரமிக்கப் படும் போது; அதில் நிகழும் சுய உரையாடுதல் குற்றவுணர்வைத் தூண்டுகிறது. 

இத்தகைய குற்ற மன நிலையில் பீடிக்கப்படுபவர், தமக்குத் தாமே தண்டனையை விதித்து அதன் வழியாக அமைதி அடைய முயற்சி செய்கிறார்கள்.

பெரும்பாலும் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ளும் நபர்களின் அறிகுறிகள்:

1. அவர்கள் என்ன செய்தாலும் திருப்தி இருக்காது (No matter what they do, it's never enough).

2. அவர்கள் தொடர்ந்து தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள் (Put themselves down constantly).

3. அவர்கள் எப்பொழுதும் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் குறைவாக மதிப்பிடுகின்றனர் (always comparing themselves to others and coming up short).

4. அவர்கள் பரிபூரண வாதிகள். செய்யும் எதிலும் திருப்தியடைய மாட்டார்கள் (Perfectionists who are never satisfied with anything they do).

5. அவர்கள் எப்பொழுதும் தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்றை நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள் (Always trying to prove something to themselves or others).

6. கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கான மோசமான தண்டனை தான், இப்போது தங்களுக்கு நிகழும் துன்பத்திற்கான காரணம் என்று நம்புகிறார்கள் (Think that the bad things that happen to them are a punishment for their bad behavior in the past).

7. சுயமரியாதை இருப்பது இல்லை. ஆகவே தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளுதல் அல்லது போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற சுய அழிவு நடத்தைகளில் ஈடுபட அது அவர்களை வழிவகுக்கிறது. (Low self-esteem leads them to engage in self-destructive behaviors like self-injury or substance abuse.).

கோடு எங்கே வரைய வேண்டும்:

சுய மதிப்பிற்கும், சுய-தண்டனைக்கும் இடையில் எங்கே கோட்டை வரைய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 

நமது கடந்த காலத்தில் நிகழ்ந்த அனுபவங்கள் மற்றும்  மன ஆரோக்கியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் தாக்கத்தை அறிந்து கொள்வது மிக முக்கியமானது.

நாம் நடந்து கொள்ளும் விதம் (behaviour patterns) ஆழ் மன உணர்வுகளின் (deep emotional experiences) வெளிப்பாடு ஆகும்.

நமது சுய மதிப்பற்ற நடத்தைக்குக் காரணமான உணர்வுகளுக்கான உந்துதல் எங்கிருந்து  வெளிப்படுகிறது?  

இதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

அதற்குப் பங்களிக்கக்கூடிய காரணம் எது என்பதைக் கண்டுபிடிக்கக் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாகக் குழந்தைப் பருவ கசப்பான அனுபவங்கள், பாலியல் துஷ்பிரயோகம், வன்முறை, இழிவு படுத்தப் பட்ட நிகழ்வுகள், அடக்குமுறை, வார்த்தை மோதல்கள், தனிமைப் படுத்த படுதல் போன்றவை குற்ற உணர்விற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆக 

நமக்கு நிகழ்ந்த அனுபவங்கள் எண்ணங்களைத் தேர்ந்து எடுக்க முனைகிறது. 

அந்த எண்ணங்கள் செயல்களை உருவாக்குகின்றது. 

அவை நடத்தையாக வெளிப்படுகிறது.

ஆக ஆழ் மனதின் உணர்வுகள் நடத்தையை கட்டுப்படுத்துகிறுது.

இப்போது நம்மையே நாம் மதிப்பு குறைவாக நினைக்க வைக்கும் நடத்தைக்கு எது உந்துதல்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

மனதை ஈர்க்கும் ஒவ்வொரு சிந்தனையும் ஆராய்ந்து கவனமாகப் பார்ப்பது முக்கியம்.

இது ஆக்கப்பூர்வமானதா? 

இது நம்மை நேர்மறையான வழியில் ஊக்குவிக்கிறதா? 

அல்லது 

இது ஒட்டுமொத்தமாக நம்மைப் பற்றி மோசமாக உணர வைக்கிறதா? 

இது நம் சுய மதிப்பை இழக்க வைக்குமா?

மனதை ஊக்குவிக்கவும் நமது செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் வழிகள்:

குற்றவுணர்வு, அவமானம் இவற்றுக்கு நம் வாழ்வில் இடம் தரக் கூடாது. ஏனென்றால் அவை நம் வாழ்வில் அடையக் கூடிய அனைத்து விதமான வளர்ச்சிகளையும்  தடுக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வில்லை என்றால் நாம் எப்படி முன்னேற முடியும்? 

சுய குற்ற உணர்வையும், தேவைப்படும்போது அவமானத்தையும் தூக்கி எறிய வேண்டும்! 

மேலும் நேர்மறையான சிந்தனை முறைகளை ஊக்குவிக்கும் விஷயங்களை மனதில் பதிய வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

அது நமக்குத் துன்பத்தைத் தாங்கும் திறன் மற்றும் தனிப்பட்ட செயல்திறன் திறன்களை மேம்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது.

1. உங்களை நீங்களே தண்டிப்பதை நிறுத்துங்கள்:

நம்மை நாமே தண்டிப்பதை நிறுத்துவதே முதல் படி. 

நம்மை நாமே தண்டித்துக் கொள்ளும்போது, ​​எதிர்மறை உணர்ச்சிகளையும், பலவீனமான எண்ணங்களையும் அதிகப்படுத்துகிறோம். அது நம்மைத் தகுதியற்றவர்களாக உணர வைக்கிறது. 

சுய-தண்டனை என்பது வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களின் காரணமாகக் காலப்போக்கில்  உருவாக்கப்பட்ட இயல்பான நடத்தை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு அல்லது குணமடைய வழிவகுக்காது. இது அதிக வலியையும் வேதனையையும் மட்டுமே உருவாக்குகிறது.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முதலில் நம்மை நாமே நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அறியாமல் நிகழ்ந்த தவறுகளை மன்னித்துக் குற்ற உணர்விலிருந்து விடுபட வேண்டும் (self-love and forgiveness). 

தவறு இழைத்தவருக்குப் பரிகாரம் செய்வதன் மூலமும் சுய அன்பைப் பயிற்சி செய்ய முடியும்.

2. உங்கள் சுய பேச்சு பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

இரண்டாவதாக, நம்மைப் பற்றி நாம் பேசுவது குறித்து அறிந்து கொள்ளத் தொடங்க வேண்டும். 

தன்னை தானே தாழ்த்தி பேசும் பழக்கம், சுய மரியாதை குறித்த விழிப்புணர்வற்ற நிலையிலிருந்து உருவாகிறது.

சிறுமைப் படுத்திப் பேசப்படுவது அவமானம் மற்றும் விரக்தி போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அத்துடன் கவலை மற்றும் மனச்சோர்வையும் ஏற்படுத்தும். நாம் மதிப்பற்றவர்கள் எனும் மனப்பான்மை வளரும்.

அவமானப் படுத்திப் பேசப்படும் ஒவ்வொரு உரையாடலும் மனதைப் பெரிதும் பாதிக்கிறது. 

ஆகவே நம்மை நாமே மதிப்புடன் பேசப் பயிற்சி செய்வதன் மூலம் தாழ்த்தி பேசும் பழக்கச் சுழற்சியை நிறுத்த வேண்டும். 

3. ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துங்கள்:

மூன்றாவதாக உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். உயிருள்ளவரை உடலும் உள்ளமும் பிரிக்க முடியாது.

மன ஆரோக்கியத்துக்கு நல்ல உடல் நலம் இன்றியமையாதது. சரியான முறையில் சரிவிகித உணவை உண்பது நல்லது. 

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். 

4. நல்ல தூக்கம்:

நான்காவது, ஒவ்வொரு இரவும் போதுமான அளவு தூங்குங்கள், அதனால் பகலில் நாம் அனுபவிக்கும் அனைத்து அழுத்தங்களிலிருந்தும்  மூளை விடுபட்டு மீண்டும் புத்துணர்ச்சி பெறும்.

5. நேர்மறை உறவுகளை உருவாக்குங்கள்:

இறுதியாக, உங்களை நேசிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நபர்களுடன் நேர்மறையான உறவுகளை உருவாக்குங்கள். 

நம்மை ஊக்குவிக்கும் நண்பர்கள் நமக்குத் தேவை. நீங்கள் நம்பும் மற்றும் மனம் திறந்து பேசுவதற்கு வசதியாக இருக்கும் ஒரு நண்பரைக் கண்டுபிடிப்பது முக்கியம்!

சுருக்கமாக 

சுய தண்டனை உங்கள் மன ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். நீங்கள் மகிழ்ச்சிக்குத் தகுதியானவர், உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்கு உங்களை நீங்களே தண்டிப்பதை நிறுத்த வேண்டும்.

உங்களை நீங்களே தண்டிக்கும் நடத்தைகளில் மனம் ஈடுபடுவதைக் கண்டால், தொழில்முறை உதவியை நாட வேண்டியது அவசியம். 

இது கடினமாக இருந்தாலும், சிகிச்சையை நாடுபவர்கள் நீண்ட காலத்திற்குச் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 


Influenced by:

https://www.thewellnesscorner.com/blog/self-punishment-effects-on-mental-health

புதன், 10 ஆகஸ்ட், 2022

42 கோதாட் டொழி

 கபட நாடகம் ஆடுவதை நிறுத்து. 

(ஆத்திசூடி - ககரவர்க்கம்) 



'கோதாட்  டொழி ' என்கிறது ஔவையாரின் ஆத்திசூடி. 

இதன் வேர்ச்சொல் ' கோதல்'. அதன் பொருள் கேடு விளைவித்தல் அல்லது ஏமாற்றுதல்.

கோது என்பது "பிறரைத் துன்பப் படுத்தும் பேச்சு" என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். 

கோதாட் டொழி என்பதை "Cease to play a sinful play"- கபட நாடகம் ஆடுவதை நிறுத்து என்கிறது அகராதி. (A Dictionary of The Tamil And English Languages, Volume-1 By Johann Peter Rottler)

ஆக "தந்திரமாகப் பேசி பிறரை ஏமாற்றும் கபட ஆட்டத்தை ஆடாதே" என இதனைப் பொருள் கொள்ள முடியும். 

'கோதாட்டம்' என்பதை "பித்தலாட்டம்" எனவும் விளக்கக் கூடும். 

பித்தல் என்பது முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ஏமாற்றுவது. ஒன்றை  வேறொன்றாகக் காண்பித்து ஏமாற்றுவது பித்தலாட்டம். 

இச்சொல் பித்தலாடகம் என்பதின் திரிபாகும். பித்தலை + ஆடகம் = பித்தலாடகம். 

"ஆடகம்" என்பது "ஹாடகம்" எனும் சமஸ்கிருத மொழியின் திரிபு; இதன் பொருள் பொன் என்பதாகும். ஆகவே "பித்தலாடகம்" என்பதற்கு "பித்தளையைப் பொன் என ஏமாற்றுதல்" என்றாகி பிறகு அது, எல்லாவித ஏமாற்றுதலுக்கும் குறிப்பிடப்படும் ஓர் சொல்லாக மாறிப் போனது. 

"ஏமாற்றிவிட்டுப் போதல்" என்பதைச் சென்னையில் "கோதா கொடுத்தல்" எனக் கூறுவார்.

கோத்துவிடுதல், கோத்துவாங்குதல், கோத்தல் என்பவை இதன் தொடர்புடைய பிற சொற்கள். 

கோதாட்டு ஒழி: கபட நாடகம் ஆடுவதை நிறுத்து.


பின் குறிப்பு:

நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என ஆத்திசூடி கற்றுத் தருவதை நமது நினைவூட்டலுக்காகத் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது. 

1. ஔவியம் பேசேல்: ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.

2. கண்டொன்று சொல்லேல்: பார்க்காததைத் பார்த்தது போலப் பேசாதே. (பொய்ச் சாட்சி சொல்லாதே).

3. ஞயம்பட உரை: கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

4. வஞ்சகம் பேசேல்: உண்மைக்குப் புறம்பான கவர்ச்சிகரமான சொற்களைப் பேசி ஏமாற்றாதே.

5. கோதாட்டு ஒழி: கபட நாடகம் ஆடுவதை நிறுத்து.

6. சித்திரம் பேசேல்: பொய்யான வார்த்தைகளை உண்மை போலப் பேசாதே.

7. சுளிக்கச் சொல்லேல்: கேட்பவருக்குக் கோபமும் அருவெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.

8. சையெனத் திரியேல்: பெரியோர்கள் "ச்சீ" என வெறுக்கும் படி வீணாய் பேசித் திரியாதே.

9. சொற்சோர்வு படேல்: பிறருடன் பேசும் பொழுது நம்பிக்கை இழக்கச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே.

10. தெய்வம் இகழேல்: இறைவனை இகழ்ந்து பேசாதே.

11. நொய்ய உரையேல்: அற்பமான வார்த்தைகளைப் பேசாதே.

12. பழிப்பன பகரேல்: பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களைப் பேசாதே.

13. பிழைபடச் சொல்லேல்: குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.

14. மிகைபடச் சொல்லேல்: சாதாரணமான விஷயத்தை உயர்ந்த வார்த்தைகளால் மிகைப் படுத்திப் பேசாதே.

15. மேன்மக்கள் சொற்கேள்: நல்லொழுக்கம் உடைய சான்றோர்கள் சொல்வதைக் கேட்டு நட.

16. மொழிவது அறமொழி: சொல்லுவதைச் சந்தேகமின்றி தெளிவாகத் திருத்தமுடன் பேசு.

17. வல்லமை பேசேல்: உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பெருமையாகப் பேசாதே.

18. வாதுமுற் கூறேல்: பெரியோர்கள் முன்பாக முரண் பட்டு வாதிடாதே.

19. வெட்டெனப் பேசேல்: யாருடனும் கத்தி வெட்டு போலக் கடினமாகப் பேசாதே.

20. ஓரஞ் சொல்லேல்: ஒரு சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.

இவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பேசும் போது நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். கவனமாகப் பேசுவது மிகவும் நல்லது.

 


வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

கவனச்சிதறல்


அலை பாயும் மனதை ஒரு முகப் படுத்துவது எப்படி?


கவனச் சிதறலைக் களைவதற்கு உதவும் சில வழி முறைகளைப் பார்க்கலாம். 

ஆய்வுகள் அடிப்படையில் சில ஆலோசனைகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றுவதன் வழியாக மனம் அலை பாயும் நேரத்தைக் குறைத்திடலாம். கவனத்தையும் கூர்மையாக்க முடியும்.

மனம் ஏன் அலை பாய்கிறது?

மனம் எப்போதும் ஒரே நிலையில் இயங்காது. அது அதன் இயல்பு. அதன் கவனம் எளிதாகத் திசை திருப்பப்படும். அதில் உதிக்கும் எண்ணங்கள் நொடிக்கு நொடி தாவிச் செல்லும். 

இவ்விதம் எண்ணங்கள் மாறி மாறிப் பயணிக்கப் பல காரணங்கள் உள்ளன. 

ஒரே விதமான வேலையினால் ஏற்படும் சலிப்பு (Monotony), அல்லது அதீத ஆர்வம் (Over active), அல்லது மன அழுத்தம் (Stress), அல்லது சோர்வு (Tired)  அல்லது குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, 

அத்துடன் எதிர் காலத்தில் என்ன நிகழும் எனத் தொடர்ந்து சிந்திப்பது, கடந்த காலத்தில் நடந்த கசப்பான நிகழ்வுகளை அசை போடுவது, சமூக உறவுகள் குறித்து கவலை..,

இப்படிப் பல காரணங்கள் இருக்க முடியும்.

பல சமயங்களில், எவ்வித நோக்கமும் இல்லாது மனம்  சுற்றிச் சுற்றித் திரியும். அவை நாம் உணராமலேயே இயல்பாக நிகழும்.

மன அமைதி: 

சிறந்த முடிவுகளைக் கண்டுணர மனம் அமைதியாக இருக்க வேண்டும். ஆழ்ந்த அமைதியில் எண்ணங்களின் சலனம் குறைவாக இருக்கும். அப்போது உள்ளத்தின் ஆழத்திலிருந்து தெளிவான முடிவுகள் எடுக்க முடியும். 

பொதுவாகத் தியானம், மூச்சுப் பயிற்சிகள், மனதுடன் செய்யும் உறுதி மொழிகள் எண்ணங்களைக் கூர்மையாக்கும். கவனச் சிதறலை அகற்றும்.

அத்துடன் இந்த 7 வகை பயிற்சிகளை முறையாகக் கடைப் பிடிப்பது மனதை ஒரு நிலைப்படுத்த உதவும்.

1. ஒரு சமயத்தில் ஒரு பணி: 

தற்போது எந்த பணியைச் செய்கிறோமோ, அவற்றில் மட்டும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது கூடாது. அது கவனச் சிதறலை ஏற்படுத்தும்.

ஒரு பணியை முழுமையாகச் செய்து முடிக்க, அந்த வேலையை மட்டும் கூர்ந்து கவனித்துச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளிலும் திட்டமிட்டுப் பணி செய்ய வேண்டும். அந்த நாளில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு பட்டியல் தயாரிப்பது மிக முக்கியமானது. அவற்றில் எவை முக்கியம், எதை முதலாவதாகச் செய்ய வேண்டும் என வரிசைப் படுத்த வேண்டும். 

எந்த அளவுக்குச் செய்யப்பட வேண்டிய வேலையில் கவனம் குவிகின்றதோ, அந்த அளவிற்கு அது சிறப்பாக அமையும்.

அதற்குத் தேவைப்படும் நேரத்தை ஒதுக்கி வைத்து செயல் புரிந்தால் பணி சிறப்பாக அமையும்.

2. சிறு ஓய்வு நல்லது:

கடினமான பணி இடையில் சிறு ஓய்வு எடுப்பது நல்லது. அது மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

பணி இடத்திலிருந்து எழுந்து ஓர் சிறிய நடை உலாவல், உடலைத் தளர்த்துவது, எளிய சிற்றுண்டி இவை மனதின் களைப்பை நீக்கும்.

இவை உற்சாகத்தையும் கவன குவிப்பையும் அதிகரிக்கும்.

சிறு ஓய்வு எடுத்துத் திரும்பி வரும்போது, ​​மனதில் புதிய  எண்ணங்கள், வழி முறைகள் உதிக்கும்.

சில நிமிடங்களே இருந்தாலும், அவ்வப்போது ஓய்வு கொடுத்து உங்களைக் கவனித்துக் கொள்ள மறக்காதீர்கள்.

3. சிறியவை பெரியது: 

பொதுவாகப் பெரிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அத்தகைய பணியில் சிக்கிக் கொள்வது இயல்பாக இருக்கும்.

ஆனால், நமது அன்றாட வாழ்வில் பெரும்பாலும் சிறிய விஷயங்கள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மகிழ்ச்சியைத் தருகிறது.

எனவே நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும் சிறிய விஷயங்களைக் கவனித்து, அவற்றைப் பத்திரமாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் நாம் திரும்பத் திரும்ப,  ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு விரைந்து கவனம் செலுத்துவதில் மிகவும் பரபரப்பாக இருக்கிறோம்.

நாம் என்ன செய்கிறோம்? அல்லது 

எதை அனுபவிக்கிறோம்? 

என்பதை ரசித்துப் பார்ப்பது கூட  கிடையாது.

சிறிய மகிழ்ச்சி தரும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குவது மற்றும் பரபரப்பின்றி ரசிப்பது மிகவும் மதிப்புக்குரியது. ஏனெனில் அவை மனதுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

நமக்கு மகிழ்ச்சியைத் தரும் சிறிய விஷயங்களைக் கவனிக்க மறந்து விடக் கூடாது. 

4.  உணர்ச்சிகளை அடையாளம் காணல்:

சலிப்பு, பதட்டம், அமைதியின்மை, ஏமாற்றம், விரக்தி, பயம்.., இவை போன்ற பல உணர்ச்சிகள் மனதின் கவனத்தைத் திசை திருப்பும்:

இந்த உணர்வுகள் ஒருமுகமாகப் பணி செய்வதில் கவனம் செலுத்துவதைக் கடினமாக்கும்.

உணர்வு அலையில் சிக்காமல் மனதைப் பாதுகாக்கச் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.

அதில் மிக முக்கியமானது, மனதை அலைக்கழிக்கும் உணர்ச்சிகளை அடையாளம் காண்பது.

ஏன் அந்த குறிப்பிட்ட உணர்ச்சி  ஒருமுகத் தன்மையைப் பாதிக்கிறது? என்பதைக் கண்டுபிடிக்க முயலவும்.

அதில் தான் அந்த உணர்வின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடையும் வழி மறைந்து உள்ளது.

5. தியானம்:

மனதிற்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியங்களில் ஒன்று தியானம் செய்வது.

தியானம் செய்யும்போது, மனம் ​​ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தப் பயிற்றுவிக்கப் படுகிறது. தலையில் சுழலும் மற்ற எண்ணங்களின் ஆதிக்கம் விலகுகிறது.  

ஒரு குறிப்பிட்ட வேலையைச் கூர்ந்து செய்ய முயலும்போது, இது நம்பமுடியாத அளவிற்குக் கவனச் சிதறலைத் தவிர்க்க உதவும்.

மேலும், தியானம் மன அழுத்தத்தைக் குறைத்துத் தூக்கத்தை மேம்படுத்தும். 

6.  கனிவுடன் இருங்கள்:

பணியில் தவறு நேர்ந்தால், அல்லது கவனம் செலுத்த முடியாவிட்டால், குற்ற உணர்வு அடைய வேண்டாம். 

மனதைக் குற்றப்படுத்தி கடினமாகத் தண்டனை அளிக்கக் கூடாது. 

அதற்குப் பதிலாக, இது ஏன் நடக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ள முயலவும். 

எதிர்காலத்தில் அதே தவறு மீண்டும் நிகழாதவாறு உதவ ஏதாவது படிப்பினை இருக்கிறதா? என்பதைப் பார்க்கவும்.

உங்களைச் சுற்றி யாராவது இடையூறு விளைவித்தால், அவர்களுடன் கோபப்படுவதற்கு முன்பு அவர்கள் அதை ஏன் செய்கிறார்கள்? என்பதைப் புரிந்துகொள்ள முயலவும்.

மனது கனிவுடன் இருப்பது மிக முக்கியம். மற்றவர்களிடமும் கருணை காட்டுவதும் முக்கியம்.

7. எண்ணங்கள் எங்குச் செல்கிறது?

எண்ணங்கள் எப்போதும் நம்மை எங்கோ அழைத்துச் செல்கின்றன. நாம் கவனமாகக் கடிவாளம் போட விட்டால், அவை நம்மை எல்லாவிதமான எதிர்மறையான சிந்தனைகளுக்கும் கூட வழிநடத்தும்.

ஆனால் நம் எண்ணங்கள் எங்குச் செல்ல வேண்டும் என்பதைக் கற்பனை செய்யக் கற்றுக்கொண்டால், அலைந்து திரியும் மனதைக் கட்டுப்படுத்தி, நேர்மறையான சிந்தனைக்கான பாதையில் பயணிக்க வைக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, இன்று வேலையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் கோபமாக உணரும்போது, ​​ஒரு கணம் நிறுத்தி, இந்த சிந்தனைத் தொடரின் எதிர்கால தாக்கங்களைப் பார்க்க முயலவும்.

உங்கள் நேரத்தையும் சக்தியையும் இதற்காகச் செலவிடுவது மதிப்புள்ளதா?

எந்த வழிகளில் இது உங்கள் வாழ்க்கையைச் சிறப்பாக அல்லது மோசமாக்கும்?

உங்கள் இலக்குகளை நோக்கி உங்களை நகர்த்துவதில் இது ஏதேனும் நோக்கத்திற்கு உதவுமா?

மறுபுறம், இது உங்கள் கனவுகளைத் தொடருவதிலிருந்து உங்களைத் திசை திருப்புமா?

இந்த சம்பவம் வேறு யாருடனும் விவாதிக்கப்பட வேண்டும்

இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம், பல அழிவைத் தரும் எண்ணங்கள் மனதில் வேர்விடும் முன் அவற்றைத் தவிர்க்க உதவும்.

இந்த 7 வழி முறைகள் கவனமுடன் பயிற்சி செய்வது சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.

புதன், 3 ஆகஸ்ட், 2022

நட்பு

நாலடியார் - நான்கு பாடல்கள் 




1.தீயவருடன் பழகாதே:

பாடல்:

சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன் 

சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் - 

சார்ந்தோய் கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் 

பாம்பு கண்டன்ன துடைத்து. 

பொருள்: 

நண்பனே! 

ஒருவரை நல்லவர் என நினைத்து, நம்பிக்கையுடன் பழகினாய். 

ஆனால், நீ உயர்வாகக் கருதிய அவரிடமோ உண்மை இல்லை. 

இப்போது நீ என்ன செய்ய வேண்டும்? 

கேள்! சொல்கிறேன். 

உடலில் பூசிக் கொள்ளும் நறுமணத் தைலம் இருக்கிறது என்று நினைத்து ஒருவன் பெட்டியைத் திறந்தான். ஆனால் அந்த பெட்டியிலோ ஒரு பாம்பு இருந்தது. 

அதைக் கண்டவுடன் அவன் என்ன செய்வான்? 

தலை தெறிக்க அந்த இடத்தை விட்டு விட்டு ஓடிவிடுவான் அல்லவா?.

நீயும் அந்தப்படியே செய்.

2. காரியவாத நட்பு:

பாடல்:

உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்

கள்ளத்தால் நட்டார் கழிகேண்மை - 

தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட

மனத்துக்கண் மாசாய் விடும். 

பொருள்:

அழகிய மலைகளிலிருந்து பாய்ந்து இறங்கி வரும் அருவி நீரானது சேற்றினால் கலங்காமல் தெளிவாக மாசற்றதாக வழிந்தோடுகிறது. 

ஆனால் சிலர் உள்ளம் இது போன்று மாசற்றதாக இருக்காது. தாங்கள் விரும்பும் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு வஞ்சகமாக  நட்பு பாராட்டிப் பழகுவார்கள். 

அது ஏமாற்றும் கள்ளத்தனமாக நட்பு. அந்த நட்பு மனம் ஒன்றி பழகாததால் நிலைத்து நிற்காமல் கழிந்து போகும். இத்தகைய அன்பு மனத்தில் தோன்றிய மாசாகக் கருதப்படும்.

3. சிரத்தையுடன் கற்றுக் கொள்:

பாடல்:

கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல - 

தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே 

நீர் ஒழியப் பாலுண் குருகின் தெரிந்து

பொருள்:

கடலுக்கும் கரை உண்டு. ஆனால் கல்விக்குக் கரை இல்லை. 

ஆகவே மெதுவாக கற்றுக் கொள்வோம் எனச் சிரத்தை இல்லாமல் இருக்காதீர்கள். சில சமயம் நோயினால் நலிவுற்று கற்க முடியாமலும் போகலாம். 

நமக்குக் கொடுக்கப்பட்ட காலம் சொற்பமே என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். 

ஆகவே வாழ்க்கைக்கு மேன்மை தரும் கல்வியை ஆராய்ந்து, தெளிவாகப் புரிந்து கற்க வேண்டும். 

நீரும் பாலும் கலந்திருக்கும்போது நீரை ஒதுக்கிவிட்டுப் பாலை மட்டும் பருகும் குருகுப் பறவை போல நல்லனவற்றை மட்டும் கற்க வேண்டும். 

4. குடிப்பிறப்பு :

பாடல்: 

நல்லவை செய்யின் இயல்பாகும்

தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் - 

எல்லாம் உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் 

என்னோ புணரும் ஒருவர்க்கு எனின் 

பொருள்:

நல்ல செயல்கள் செய்யும்போது  அதை யாரும் பொருட் படுத்த  மாட்டார்கள். அது இயல்பான செயல் எனக் கண்டு கொள்ள மாட்டார்கள். 

ஆனால் ஒரு தீய செயல் செய்து விட்டால், அதைக் குறித்து பலரும் இழிவாகப் பேசுவார்கள்.

இதுதான் நல்ல செயல்கள், தீய செயல்கள் செய்வதால் கிடைக்கும் பலன். 

இதைப் புரிந்து, உணர்ந்து வாழ்பவர் இல்லம் நல்ல குடும்பமாக அமைகிறது. அந்த குடும்பத்தில் பிறப்பவர்கள் நல்ல செயல்கள் செய்யக் கவனமாக இருப்பார்கள். 


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

41. கொள்ளை விரும்பேல்

கொள்ளை விரும்பேல்: 

 (ஆத்திசூடி - ககரவர்க்கம்) 


பிறர் பொருளை அபகரிக்க ஆசைப்படாதே என்பது இதற்கான பொதுவான விளக்கம்.

பொதுவாக ஒரு குழுவாக இணைந்து ஈடுபடுவது கொள்ளை. ஆகத் தீய வழியில் பொருள் ஈட்ட விரும்பும் மனிதர்களுடன் சேர்ந்து தவறான வழியில் பொருள் சேர்க்க ஆசைப்படாதே எனவும் இதைப்  புரிந்து கொள்ளலாம்.

திருமறையில் அரசர் சாலமன்  எழுதிய நீதி மொழிகள் புத்தகத்திலிருந்து சில வரிகள்:

என் மகனே, தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் போக இணங்காதே. 

அவர்கள் உன்னைப் பார்த்து, 

“எங்களோடு வா; பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்; யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்; பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; 

படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழுமையாக விழுங்குவோம். 

எல்லா வகையான விலையுயர்ந்த அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்; கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம். நீ எங்களோடு சேர்ந்துகொள்; எங்களோடே பங்காளியாயிரு;  நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும்" 

என்று அவர்கள் சொல்வார்களாகின்;

என் மகனே, அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே; பாவிகள் உனக்கு  நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.

அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன; இரத்தம் சிந்த விரைகின்றன. அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.

எவ்வகையான பறவையானாலும் சரி, அதைப் பிடிக்க, அதன் கண்முன்னே வலையை விரிப்பது வீண். மறைவாகவே கண்ணி வைப்பார்கள்.

ஆனால் அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே  ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்; அவர்கள் ஒளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும். 

தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே; அந்தப் பணம் அதை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.