சனி, 19 பிப்ரவரி, 2022

40. கைவினை கரவேல்.

சிந்தித்துச் செயல்படு

(ஆத்திசூடி - ககரவர்க்கம்) 



கைவினை கரவேல் :  உனக்குத் தெரிந்த கைத் தொழிலை மறைக்காமல் செய் என்து  இதற்குத் தரப்படும் பொதுவான  விளக்கம். 

"கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள். கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்ற கவிமணியின் வாக்கியமும் நினைவுக்கு வருகிறது. 

"கரவேல்" என்றால் மறைக்காதே அல்லது ஒளிக்காதே எனப் பொருள் படும்.  
(கரவேல் = கரவு+ஏல்).
கரவு - என்றால் ஒளிவு / மறைவு.

"ஏல்" என ஒரு சொல் முடியும் போது அது எதிர்மறைப் பொருள் தரும். அவை கட்டளை வாக்கியமாக இருக்கும். கீழ்ப்படிந்து செய்ய வேண்டும். (ஏவல் வினை முற்று) 

உதாரணமாக 

விலக்கேல் = விலக்காதே. 

இகழேல் = இகழாதே. 

பேசேல் = பேசாதே. 

கரவேல் = மறைக்காதே  அல்லது யாரும் அறியாமல் செய்யாதே.

எனினும், நமது கையால் செய்யப்படும் செயல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் இந்த வாக்கியம் சிந்திக்க வைத்தது. 

  • உள்ளத்தில் எழும் தீய எண்ணங்களை மறைத்து வெளியே இனிமையாகப் பேசுவதும் ஒரு வகையில் கரவு தான். (வஞ்சகம்).   
  • சுய நன்மைக்காக உண்மையை மறைத்து பிறரை ஏமாற்றிப் பேசுவதும் ஒரு வகையில் கரவு தான். (பொய்). 
  • பிறர் பொருளை அவர் அறியாமல் அபகரிப்பதும் ஒரு வகையில் கரவு தான். (திருடுதல்). 
  • மோக இச்சைக்கு ஆட்பட்டு பிறரது குடும்ப உறவுகளைச் சிதைப்பதும் ஒரு வகைகரவு தான். (தீய நடத்தை). 
இப்படி பிறருக்குத் தெரிந்து விடக் கூடாது எனப் பயந்து ஒளித்து, பிறர் அறியாமல் மறைவாகச் செய்யப்படும் தீய செயல்களைச் செய்யாதே என்றும். இதனைப் புரிந்து கொள்ள முடியும். 

கைவினை கரவேல்: பிறர் பார்த்து விடக் கூடாது என மறைவாகச் செய்யப்படும் எந்த விதமான செயலையும் அந்தரங்கமாக ஒளித்துச் செய்யாதே.


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

மகிழ் நிறை வாழ்க்கை

வாழ்க்கையை வளமை செய்யும் ஐந்து குணநலன்கள்.



இந்த ஐந்து குணங்களும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு உதவுவதாக மனித வள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

1. துணிச்சல்:

பய உணர்வு என்பது மகிழ்ச்சிக்கு எதிரான ஒரு மனநிலை. 

பய உணர்வு வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி மூடிய அறைக்குள் முடக்கி உட்கார வைத்து விடும். 

அது சவால்களை எதிர் கொள்ளும் மன உறுதியைக் குலைத்து விடுகிறது. அத்துடன் அர்ப்பணிப்பு மற்றும் செயல் புரியும் திறனையும் மழுங்கடித்து விடுகிறது. 

அதற்கு மாறாக "தைரியம்" என்பது பயத்திற்கு நேரிடையான ஓர் மாற்று எதிர் சக்தி. 

அது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு வெளியேறி, சவாலான சூழ்நிலையை எதிர் கொள்ளும் ஆற்றலை அளிக்கிறது. 

அத்துடன் சிக்கல் தரும் மனிதர்களுடனும் இணைந்து வாழவும் உதவுகிறது. 

வாழ்வில் வலி என்பது தவிர்க்க முடியாதது. இதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தைத் தைரியம் நமக்கு கற்றுத் தருகிறது. 

மனதில் உறுதி இல்லை என்றால் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது வெறும் கனவு மட்டுமே.

2. பொறுமை:

மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு, பொறுமையில்லாமல் நடந்து கொள்வது முக்கிய தடை. அது சந்தோஷமான சூழலை விரட்டி அடிக்கும். 

அதற்குப் பதிலாகப் பொறுமை, வாழ்வின் ஏமாற்றங்களை எதிர் கொள்ளக் கற்றுத் தருகிறது. 

வாழ்வில் நிகழக் கூடும் சில எதிர்பாராத இழப்புகள் கண்டு துவளாமல், தொடர்ந்து வாழ்க்கை ஓட்டத்தில் பயணம் செய்வதற்குப் பொறுமை உதவி செய்கிறது.  

வாழ்வில் நடைபெறும் நூறு சதவீத நிகழ்வுகளும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அது எப்போதும் சவாலான மற்றும் எதிர்பாராத வழிகளில் குறுக்கிடுகிறது. 

ஆனால் நாம் காத்திருக்க முடியாமல் பொறுமை இழந்து உணர்ச்சி வசப்படுவதால் நிதானத்தை இழக்கிறோம். 

நம்மைச் சுற்றிக் கொதித்து எழும் நிகழ்வுகளின் விளைவுகளை எந்த அளவுக்கு முனைப்புடன் கட்டுப்படுத்த முயல்கிறோமோ, அவ்வளவு விரக்தியையும் உணர்வோம். 

எனவே கணிக்க முடியாத  நிச்சயமற்ற தன்மையை ஏற்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.  

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு, சில சமயங்களில் சற்று இளைப்பாறி ஓய்வெடுப்பதும் அவசியம். கடினமான சூழ்நிலைகளில் அமைதியாகச் சுவாசிப்போம். ஓய்வெடுப்போம். வாழ்க்கை அதன் போக்கில் நடக்கட்டும். 

நாம் விலகி அதைக் கவனிக்கும் போது வாழ்க்கை மிகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். 

3. நன்றியுணர்வு:

சிறந்த மனிதராக இருப்பது என்பது, கெட்டவற்றின் மத்தியில் நல்லதைக் கவனிப்பதாகும். 

இருள் சூழ்ந்த பின்னணிக்கு எதிராக வண்ணங்களைப் பார்ப்பது. அசிங்கத்தால் சூழப்பட்டிருந்தாலும் அழகானதை இரசிப்பது. 

சில சமயங்களில் நாம் திட்டமிட்டபடி காரியங்கள் நடக்காது. அப்போதும் கூட, நமக்கு அருளப்பட்ட ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்த்து, "வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கிறது" எனும் நன்றி நிறைந்த உள்ளத்துடன் வாழ வேண்டும். 

சிறந்த வாழ்க்கை என்பது  எப்போதும் மேலோட்டமாக நுனிப்புல் மேயாமல், "வாழ்வில்  மறைந்திருக்கும் நுட்பமான அழகைக் காண"கற்றுக் கொள்வதில் அடங்கி உள்ளது  

வாழ்க்கையின் அழகிய கனவுகளைப் பற்றி மீண்டும், மீண்டும் சிந்திப்பதற்கு மனதைப் பயிற்றுவிக்க வேண்டும். 

நமது மனம் இயங்கும் விதம், அது  வாழ்க்கையை அனுபவிக்கும் முறை, இவற்றை ஊடுருவப் பார்த்து மன நிறைவு அடையப் பழக வேண்டும். 

நாம் விழிப்புணர்வுடன் இருப்பதால், பிரச்சினைகள் மறைந்துவிடாது. உண்மை தான். ஆனால் அதே வேளை, அவை நம் மனதிலும், வாழ்க்கையிலும் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்க முடியும். 

4. அன்பு:

அன்பின் அவசியத்தை உணர்ந்து கொள்ள, அது இல்லாமல் வாழும் வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். வெறுக்கத்தக்க, அன்பற்ற சூழலில், மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க முடியாது. 

அன்பின்றி மகிழ்ச்சி என்பது சாத்தியமற்றது தானே!!! 

நமது இதயத்தில் எவ்வளவு அன்பு துடிக்கிறதோ, அந்த அளவுக்கு இதயம் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கும். 

அன்பு பிறரது பலவீனத்தைக் கவனிக்காது. அவரது குறைகளைக் கண்டும் காணாது கண்களை மூடுகிறது. மற்றவர்களிடம் காணப்படும் சிறந்ததை ஏற்றுக்கொள்கிறது. நல்லவற்றைத் தேடுகிறது. பிறரை மதிப்புடன் நடத்துகிறது.

அன்பு பெருகிய இடத்தில் மகிழ்ச்சி வற்றாத நீரூற்று  

5. மன்னிப்பு:

பிறர் செய்த தீமையை, அதன் வலியை இதயத்தில் வைத்துச் சுமக்கும் மக்கள் தங்களை தாங்களே மேன்மேலும் காயப்படுத்திக் கொள்கின்றனர். 

தங்கள் மன காயங்களை எண்ணிப் பார்த்து உருகுகிறவர்கள் சுய பச்சாதாபத்தில் சிக்கிக் கொள்வர். மன்னிக்க மறுப்பது நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் சிறைத் தண்டனை. 

சிலர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகப் போராடுகின்றனர். ஒருவேளை அந்தப் போரில் அவர்கள் வெற்றியும் பெறலாம். ஆனால் மன்னிப்பதில் அடையும்  மகிழ்ச்சி அதில் கிடைக்காது. 

பழைய வலியை இருளில் கலைத்து விடுவதன் மூலம் புதிய வாய்ப்புகள் நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். 

பழி வாங்க வேண்டும் எனும் உணர்விலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!!! 

நமது உறவுகளின் குறைகளை மன்னிக்க முடிகிறதா? 

விளையாட்டாக அலட்சியப் படுத்துபவர்கள், பணிபுரியும் இடத்தில் அவமரியாதை செய்பவர்களை மன்னிப்பது சுலபமாக இருக்கிறதா? 

சிறு உதவி கூடச் செய்ய மறுக்கும் அண்டை வீட்டாரை மன்னிக்க முடிகிறதா?

நாம் மன்னிக்க வில்லை என்றால் நமது காயங்களை நாமே ஆழப்படுத்துகிறோம். அவை எரிச்சலை மட்டுமே தருகிறது மன அழுத்தம் ஏற்பட்டு அமைதி சீர் குலைகிறது  

மாறாக, மன்னிப்பதற்கு நமது இதயத்தைத் திறந்தால் நிறைவான மகிழ்ச்சியினால் உள்ளம் பூரித்துப் பொங்கி மகிழ்ந்து களி கூறும்.


Translation of the Article with thanks:

"5 Character TRAITS That Make You Happy" from the book of "1000+ Little Things Happy, Successful People Do Differently" by Mark & ANGEL CHERNOFF.

Picture Courtesy: From Internet.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

நிழலாக தொடரும்

நாலடியார் : நான்கு பாடல்கள் 


1. கண்ணியம் 

பாடல்:

வேற்றுமை  இன்றிக் கலந்திருவர் நட்டக்கால்

தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்

ஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின்

தூற்றாதே தூர விடல்

பொருள்:

ஒரே மனதுடன் இரு விதமான சிந்தனை இல்லாத பிரியமான நட்பு ஏற்பட்டாலும்,

அதில் ஒருவர் தவறான தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டால், பொறுத்துக் கொள்ள முடிந்த அளவிற்கு அமைதி காத்து, அந்த நட்பைத் தொடர வேண்டும். 

அவை எல்லை மீறிய  நிலைமைக்கு வந்தால், அவரது தீய நடத்தைகளைப் பிறர் அறியும் படியாகத் தூற்றிப் பேசாமல், அவரை விட்டுத் தூரமாக விலகிவிட வேண்டும். 

2. வினைப் பயன்.

பாடல்:

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலை - தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு. 

பொருள்:

பல பசுக்கள் இருக்கும் மாட்டுக் கொட்டடியில் சின்னஞ்சிறு கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டால் அது தன் தாயை நாடிச் சென்று பால் குடிக்கும். 

அதுபோல, பழைய வினையின் பயனும் அந்தச் செயலுக்கு உரியவனை நாடிச் சென்று பற்றிக்கொள்ளும்.

3. எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். 

பாடல்:

வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை 

அளந்தன போகம் அவரவர் ஆற்றான் 

விளங்காய் திரட்டினார் இல்லை 

களங்கனியைக்காரெனச் செய்தாரும் இல். 

பொருள்: 

இவ்வுலகில் அனைவரு‌ம் உடல் நலம், புத்திக் கூர்மை, செல்வ வளம் நிறைந்த வாழ்க்கை வாழவே விரும்புகின்றனர். 

ஆனால் அது அவரவர் செய்த நல்ல செயல்கள், தீய செயல்கள் ஆகியவற்றின் பயனுக்கேற்ப அமையும். 

நாமாக விளாம்பழம் திரட்டி உருண்டையாக இருக்கும் படி உருவாக்க முடியாது. 

களாப் பழத்தைக் கறுப்பு நிறத்தில்  படைக்கவும் முடியாது. 

அவரவர் செய்த செயலுக்கு ஏற்ப அனுபவிக்க வேண்டிய அளவும்  அது போல சரியாக அளந்து வைக்கப்பட்டிருக்கிறது. 

4. அறத்தின் பயன்: 

பாடல் :

ஆ வேறு உருவின ஆயினும் 

ஆ பயந்த பால் வேறு  உருவின அல்லவாம் 

பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி 

ஆ போல் உருவு பல கொளல் ஈங்கு.  

பொருள்:

பசுக்கள் பலவகையான நிறமும், உருவங்களையும் கொண்டிருந்தாலும், அவைகள் தரும் பாலின் நிறம் பல்வேறாக இருப்பதில்லை. 

அதுபோல மானிடர் பல வகையான நிறமும், உருவமும் கொண்டிருந்தாலும், உள்ளத்தில் அறநெறியைக் கைக் கொண்டு வாழ்ந்தால், அவர்கள் வாழ்வின் தன்மையும் ஒரேவிதமாகப் பயனுடையதாக இருக்கும்.



சனி, 5 பிப்ரவரி, 2022

39. கேள்வி முயல்

கற்றல் ஒரு தொடர் நிகழ்வு

(ஆத்திசூடி - ககரவர்க்கம்)



கேள்வி முயல்: கற்றவர் சொல்லும் உயர்ந்த  சிந்தனைகளைக் கேட்பதற்கும், புரிந்து கொள்ளவும் தொடர்ந்து முறையாக முயற்சி செய்ய வேண்டும். 

பள்ளிப் பருவங்களில் இலக்கிய மன்றம் நடத்திய பல நிகழ்ச்சிகள் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது. 

தில் பகிர்ந்த பல நூல் அறிமுகங்கள், நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட பல உயர்ந்த கருத்துக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. 

பல உயர்ந்த மனிதர்களையும், அவர்களது செழுமையான கருத்துக்களையும் நூலகங்கள் அறிமுகம் செய்தது. 

ஒரு சிந்தனையை நம்பி ஏற்றுக் கொள்ளும் போது அவை மனதில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அவை விருப்பங்களை மாற்றுகிறதுஎண்ணங்கள், செயல்கள், நடத்தையில் மாற்றம் நிகழ்த்துகிறது

ஆக நல்ல பழக்கங்கள் உருவாக நல்ல  எண்ணங்கள் தேவை. நல்ல எண்ணங்கள் உருவாக, அவற்றை வளர்த்துக் கொள்ளச் சிறந்த நூல்கள், கற்றறிந்தோர் சொற்பொழிவுகள் உதவுகிறது. 

மிகச் சிறந்த இலக்கிய நூல்கள் சிந்தனையை மேம்படுத்தும்.  அவற்றைத் தொடர்ந்து வாசித்தால், நமது முதிர்ச்சிக்கு ஏற்ப பல வித புதிய புரிதல் களை கற்றுக் கொள்ள முடியும்.  

சிறந்த இலக்கிய நூல் வெவ்வேறான பருவங்களில் நமக்கு புது புது பரிமாணத்தை அளிக்கும். இருபது வயதில் வாசித்துப் புரிந்து கொண்டதிற்கும், அதே நூல் நாற்பது வயதில் மறு வாசிப்பில் கற்றுத் தருவதும் மாறுபட்டதாக இருக்கும். 

இணையத்தில் மிகச் சிறந்த நூல்களும் அது தொடர்பான பல்வேறு விளக்கங்களும் கை விரல் அசைவில் கிடைக்கின்றன. ஒலி வடிவிலும்  கேட்டு பயன் பெறலாம். அதற்குத் தேவை விருப்பமும், தொடர் முயற்சியும் மட்டுமே. 

கற்றுத் தேர்ந்தவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் பொருள் பொதிந்தவை. அதைப் புரிந்து கொள்ள முயல்வதும், அதன் உண்மைப் பொருளை உணரும் போது அடையும் மகிழ்ச்சியை விட மேன்மையான மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை. 

ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக் கொள்ள, நமக்காக ஒன்று  காத்திருக்கிறது. திறந்த மனதுடன் நம்மை தற்பரிசோதித்து ஏற்றுக் கொண்டால், பழைய தவறான நம்பிக்கைகளைத்  திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

சான்றோர்கள் வார்த்தைகளைப்  புரிந்து, அவை அனுபவமாக மாறும் போது மட்டுமே மேன்மையான  வளம் நிறைந்த வாழ்க்கை அமையும். அதற்கு இடைவிடாது முயல வேண்டும். 

கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு.