சனி, 30 டிசம்பர், 2017

தந்தை தாய்ப் பேண்.

🌸 தந்தை தாய்ப் பேண்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)

20. தந்தை தாய்ப் பேண்.

உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றி காப்பாற்று .

இந்த உடல், உயிர் அனைத்தும் வெளிப்பட பெற்றோர் தான்  மூலாதாரம்.

நாம் இந்த உலகில் அவர்கள் வழியாகவே தோன்றினோம்.

உயிரைப் போன்றே, அவர்களையும் நாம் இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாது.

நம் வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களும் அங்கிருந்தே துவங்குகின்றன.

ஒவ்வொரு சமயமும் தாய், தந்தையை தெய்வத்துக்கு இணையாகவே போற்றுகின்றன.

மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசை பெற்றோரின் மகத்துவத்தை விளக்கும்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், அம்மையே அப்பா ஒப்பிலா மணியே போன்ற சிறப்பான சொற்றோடர்கள் பெற்றோரின் பெருமையை பேசுபவை.


"உன் வாழ்நாள் நீடித்திருக்கும்படி,  உன் தாயையும், தகப்பனையும் கண்ணியத்துடன், மதிப்புடனும் நடத்து" என்பது யூதர்கள் சமயத்தில் கடவுளிடமிருந்து பெற்ற பத்து கட்டளைகளில் ஒரு கட்டளை.

இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய நிலையில் ஏழு வார்த்தைகள் பேசினார். அவற்றுள் ஒரு வார்த்தை தனது தாயின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக தனது சீடனிடம் பேசியதாகும்.

சிலுவையில் தொங்கி உயிர் பிரியும் வேதனையான அந்த கொடுரமான கோரச் சூழலிலும், இயேசு தனது தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்து கருத்தாய் இருந்தார்.

இஸ்ஸாத்தில் இறைவன் தமக்கு அடுத்த அந்தஸ்தில் பெற்றோரை நிறுத்தி, அவர்களுக்கு உபகாரம் செய்வதை, பணிவிடை செய்வதை, பணிந்து நடப்பதைக் கடமையாக ஆக்கியுள்ளார்.

இது குறித்து திருக்குரான் இவ்விதம் சொல்கிறது :

‘‘என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள், பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள், என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக.

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா, இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக’ என்று கேட்பீராக’’ (திருக்குர்ஆன் 17: 23,24)

முகமது நபி அவர்களிடம் இறையடியவர் ஒருவர் கேட்டார் :

‘செயலில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது எது?’ 

அதற்கு நபி அவர்கள்

‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ எனப் பதில் கூறினார்கள்.

‘அதற்கு அடுத்தது எது?’ என்று கேட்டேன்.

‘பெற்றோருக்கு நன்மை புரிவது’ ன்றார்கள்.

இறைவனுக்கு அடுத்தபடியாக உலகில் பெற்றோருக்கு இணை வேறு எவரும் இல்லை. 

பெற்றோரை மதித்து நடப்பது, பேணிக் காப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் பொது நிகழ்வுகளுக்கு வரும்போது, நாம் நமது இடத்திலிருந்து எழுந்து, மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்பது, குடும்ப நிகழ்வுகளில் அவர்களை அவர்களுக்குரியத் தகுதியான ஆசனத்தில் அமரவைப்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் சுணக்கம் இன்றி செய்வது நமது கடமை.

ஒருபோதும் அவர்களிடம்  கோபமூட்டும் வகையில், எரிச்சலூட்டும் விதங்களில் சத்தத்தை உயர்த்திப் பேசுவது,  பரிகாசம் செய்வது கூடாது.

அவர்களின் பேச்சை புத்திக் கூர்மையுடன், செவி தாழ்த்தி, மன ஓர்மையுடன் கேட்கவேண்டும். பெற்றோர்களிடம் தேவையில்லாமல் அதிக கேள்வி கேட்கக் கூடாது.

அவர்களுடன் பேசும் போது பணிவுடன் பேச வேண்டும். பேசும்போது பேச்சை முறித்து, முதுகைத் திருப்பக்கூடாது. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பெற்றோர்களின் ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனையை மனமுவந்து ஏற்க வேண்டும்.

பாவமான காரியங்களைத் தவிர்த்து மற்ற வி‌ஷயங்களில் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.

இரு உலக நற்பேறுகள் கிடைத்திட ஈடில்லாத ஒரே வழி பெற்றோரை கண்ணியத்துடனும் மதிப்புடனும் நடத்துவது மட்டுமே.

பெற்றோரைப் பேணுவோம், நற்பேறுகளை பெறுவோம்.

வெள்ளி, 29 டிசம்பர், 2017

இணக்கம் அறிந்து இணங்கு.

🌸 இணக்கம் அறிந்து இணங்கு.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)


19. இணக்கம் அறிந்து இணங்கு :

நற்குணமும், நற்செய்கையும் உடையவர் என்பதை உறுதியாகப் புரிந்து கொண்டு ஒருவரோடு நட்பு செய்.

ஒருவருடன் நட்பு கொள்ளும் முன்பாக கவனமாக ஆராய்ந்து, பின்பு பழக வேண்டும்.

தொடர்பில் (Contact List) இருப்பவர்கள் எல்லாம் நண்பர்கள் கிடையாது.

வாழ்வின் கடினமான நேரங்களில்  தனது நேரத்தை, தனது பொருளை, தனது சக்தியை நம்முடன் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருப்பவர்களே உயிர் நண்பர்கள்.

இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள, நாம் சுகவீனமாகி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அந்த நடைபாதையில் நமக்காகக் காத்திருக்கும் அன்பர்களே நம்முடைய உண்மையான நண்பர்கள்.

ஒரு மனிதனது மிகச் சிறந்த நட்பு அவரது வாழ்க்கைத் துணையாகவே இருக்க வேண்டும். தனது குடும்ப உறவுகளில்  உண்மையாக நட்பு பாராட்டுபவரே நம்பத்தகுந்தவர்.

எந்தச் சூழலிலும் தவறான வழிகளில் துணிந்து வாழ்பவருடன் இணக்கமாக நட்பு பாராட்டி  நடக்கத் தேவையில்லை.  தான் செய்யும் தவற்றை உணர்ந்து மனம் திருந்தும்வரை அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.

தவறு செய்பவரோடு உள்ள தொடர்பு அக்கினி கங்கை துணியில் சுற்றி மடியில் வைப்பதற்குச் சமம்.

அனைவரையும் நேசித்து அன்பு பாராட்டுதல் வேண்டும். மனதாலும் பிறர்க்கு தீங்கு நினைக்கக் கூடாது.

எனினும் பழகுபவர் தீயவர் என உணர்ந்தால் அஃது எத்தகைய உறவாக இருப்பினும் அத் தீயவருடன் நட்பு பாராட்டக்கூடாது.

தவறாகக் குறுக்கு வழியில் பணம் சேர்ப்பவர், பிறரை ஏமாற்றி அவர் உடைமைகளை கொள்ளையிடுபவர்,  உழைக்காது சோம்பித் திரிபவர், தற்பெருமை மிக்கவர், இரகசியங்களைத் தூற்றித் திரிபவர், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்,  வீண் பிடிவாதக்காரர், சுயநலமிக்கவர், ஒழுக்க நெறியற்றவர், தனது காரியத்திற்காக பழகுபவர், முன் கோபக்காரர் இது போன்ற குணமுடையவர்களிடம், தாமரை இலைத் தண்ணீராக விலகி வாழ்தல் சமர்த்தானது.

ஒத்த கருத்துடைய சமூகவலைத்தள நட்புகள் கருத்துப் பரிமாற்றத்துக்கு மட்டுமே உதவும். வாழ்வில் எதிர்ப்படும் சிக்கல்களுக்குத் தீர்வாக பலவிதமான ஆலோசனைகள் இவ்வகை நட்புகள் மூலம் கிடைக்கும்.

எனினும் முகமறியா நட்புகளிடம் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வது நல்லதல்ல. ஒருவரது பேச்சு, எழுத்தின் மூலமாக அவரது தனிப்பட்ட குணத்தை ஒருபோதும் நம்மால் தீர்மானிக்க முடியாது.

ஒருவர் நல்ல குணமுடையவர் என்பதை அவரது செயல்களே வெளிப்படுத்தும்.

மாறுபட்ட சிந்தனை இருப்பினும் ஒத்த நோக்கமுடையோரே எளிதில் நட்பாக இருக்க முடியும்.

நட்பின் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக உள்ளதோ அந்த அளவு அது வலிமையுடையதாகவும் இருக்கும்.

நம்மால் பகிர்ந்து அளிக்கக் கூடிய நேரம் மற்றும் பொருள் வளம்,  பண விவகாரங்களில் நேர்மையாக இருப்பது நீடித்த நட்பிற்கு மிக முக்கியம்.

எனவே ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

வியாழன், 28 டிசம்பர், 2017

இடம்பட வீடு எடேல்.

🌸 இடம்பட வீடு எடேல்.



18. இடம்பட வீடு எடேல் :


உன் தேவைக்கு மேல் வீட்டைப் பெரிதாக கட்டாதே .

''சிறுகக் கட்டிப் பெருக வாழ்''

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பவை பழமொழிகள்.

அவை நம் வீட்டுக்கும் பொருந்தும்.

ஒரு தலைமுறை முன்பு அடையாளமாகப் பேசப்பட்ட பல அரண்மனை போன்ற பிரமாண்டமான வீடுகள் இன்று விளக்குகூட ஏற்ற வழியின்றி இருளில் அடைந்துள்ளதை ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் காணலாம்.

தேவைக்கு மேல் ஆடம்பர ஆசைகளுக்கு இடம் தந்து வீணாய்க் கிடக்கும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டி பின்பு அதைப் பராமரிக்க வழியின்றி தவிக்கும் பலர் உண்டு.

கை மீறி பிறர் மெச்சுவதற்காகக் கடன் பட்டுத் தேவையற்ற ஆடம்பர அலங்காரப் பொருட்களால் வீட்டை நிறைத்து, அதன் பொருட்டு அல்லல்படுபவர் ஏராளம்.

வீட்டை கட்டுவது என்பது எத்தனை செலவும், சிரமமும் நிறைந்ததொரு செயலோ, அதே போன்று அதைப் பராமரிப்பதற்கும் பணம்  தேவைப்படும்.

இன்று வீடு என்பது வசிப்பதற்கான இடம் என்பதைக் கடந்து, சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்டது.

செல்வம், அதிகாரம், செல்வாக்கு இவற்றின்பொருட்டு மதிப்பளிக்கும் உறவுகள் மற்றும் நண்பர்களால் உண்மையில் பயன் எதுவும் இல்லை. 

அவர்களது அங்கிகாரத்துக்காக வீண் செலவு செய்தல் முட்டாள்தனம்.

பிறரால் மதிக்கப்படுதல் என்பது குணநலன் மற்றும் பண்புகள் சார்ந்து இருத்தல் நலம். நமது குணத்தின் பொருட்டு மதிப்பளிக்கும் உறவினர், நட்பு வட்டத்தை மட்டும் கவனமாக பேணுதல் நல்லது. அந்த எண்ணிக்கை சொற்பமாக இருந்தாலும் இறுதிவரை உடன் இருக்கும்.

தேவைகளைச் சுருக்கி எளிமையாக, தூய்மையுடன், பகட்டின்றி  வாழ்தலே சிறப்பானது.

ஆடம்பர ஆசைகளுக்கு ஒரு போதும் இடம் தரக்கூடாது.

எந்தவொரு பொருளையும் தெரிவு செய்யும்போது அதன் பயன்பாட்டுத் தன்மையின் அடிப்படையையே முன்னிறுத்தித் தெரிவு செய்தல் வேண்டும்.

வீடு என்பது வெறும் பகட்டான ஆடம்பரமான பொருட்களால் அல்ல அன்பால் கட்டப்பட வேண்டும். எளிமையே என்றும் அழகு. எளிமை என்பது இயல்பாக இருத்தல். 

புதன், 27 டிசம்பர், 2017

ஞயம்பட உரை.

🌸 ஞயம்பட உரை.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)

17. ஞயம்பட உரை :

கேட்பவர் மகிழும்படி இனிமையாகப் பேசு .

மனதால் எளிதில் கட்டுப்படுத்த இயலாத உடலின் அவயம் நாக்கு!

மிகப் பெரிய கப்பல் செல்லும் திசையை ஒரு சிறிய சுக்கான் வழி நடத்துகிறது. அதுபோல் நாவின் சொற்களே வாழ்வின் திசையைத் தீர்மானிக்கிறது.

ஒரு சிறிய நெருப்புப் பொறி பெரிய காட்டையே தீக்கிரையாக்கிவிடுவது போல கோபம் நிறைந்த மனதில் இருந்து பிறக்கும் சொல் உறவுகளை அழித்துவிடும்.

நாக்கின் நுனியில்தான் இலட்சுமி வசிப்பதாக ஐதீகம். வாழ்வின் செழிப்பு நாவின் அதிகாரத்தில் அமைந்துள்ளது.

பொய் பேசுபவர்கள், பொய்ச் சாட்சி சொல்பவர்கள், புரட்டு வார்த்தைகளைப் பேசுபவர்கள், கோள் சொல்லி விரோதத்தை உண்டு பண்ணுபவர்களை கடவுள் வெறுத்து அருவருப்பாக எண்ணுகிறார் என பைபிள் கூறுகிறது.

சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது. தன் உதடுகளை அடக்குகிறவன் புத்தியுள்ளவன். பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் எனப்படுவான்.

திருக்குறளின் நான்கு அதிகாரங்கள் : நாற்பது குறள்கள் பேசும் வழி வகைகளை விளக்குகிறது.

1. இனியவை கூறல் :


அன்போடு வஞ்சனையின்றி நியாயமாகக் கூறப்படுவதே இனிய சொல். இன்முகம் காட்டுவது, முகம் மலர வரவேற்பது, இனிய மொழி பேசுவது, தம்மைவிடத் தாழ்ந்தவரிடமும் பணிவு உடையவராக இருப்பது இவை அறச்செயல்கள்.

பிறர்க்கு நன்மை அளிக்கும் சொற்களை நயம்பட பேசுபவரை மக்கள் விரும்புவர். தர்மத்தையும், நீதியையும் உணர்த்தும் சொற்களே பண்பு நிறைந்த சொற்களாகும்.

2. புறங்கூறாமை :


ஒருவர் முன்பாக சிரித்துப் பேசி, பின்னால் பழித்துப் பேசுவது மிகவும் தீய செயலாகும்.

3. பயனில் சொல்லாமை :


பயனற்ற சொற்களை பேசுதல் இகழ்ச்சி.
பயனற்ற சொற்களை பேசுதல் தீமை.
பயனற்ற உரையாடல் பயனற்றவரின் பண்பு.
பயனற்ற சொற்களைப் பேசுதல் சிறப்பையும் மதிப்பையும் கெடுக்கும்.
பயனற்ற சொற்களை பேசுபவன் பதர்.

4. சொல்வன்மை :


அவரவர் சொல் திறத்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுதல் வேண்டும்.

எவரிடம் பேசுகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேசுதல் வேண்டும். அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.


தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், 
சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், 
கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் ; 
இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.


மனுஸ்மிருதி :

இறுதியாக மனுதர்மம் சொல்வதாவது :

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம்

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாதேஷ தர்ம சநாதன: — மனுஸ்ம்ருதி 4-138

உண்மையைப் பேசுங்கள்.

இனிமையாகப் பேசுங்கள்.

இனிமையற்றதை, உண்மையாகவே இருந்தாலும் பேசாதிருங்கள்.

கேட்பவர் மனம் விரும்பி இனியதாகக் கருதவேண்டும்  என்பதற்காக இட்டுக்கட்டி பொய் பேசாதிருங்கள்.



செவ்வாய், 26 டிசம்பர், 2017

சனி நீராடு.

சனி நீராடு.

16. சனி நீராடு.

இவ் வாக்கியத்திற்குப் பலவிதமான விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அனைத்து விளக்கங்களும் நம் உடல் நலத்தை, மன நலத்தை முன்னிறுத்தியே விவரிக்க முற்படுகிறது.

1. குளிர்ந்த நீரில் குளிக்கவும் :


“சனி” என்றால் “குளிர்ந்த” என்று ஒரு பொருள் கொள்கின்றனர். குளிர்ந்த நீரில் குளிப்பது புத்துணர்ச்சி தரும். அருவிகளில், ஆறுகளில் குளிப்பது மனதுக்கு அளிக்கும் உற்சாகம் நாம் அனைவரும் அறிந்ததே.

எனினும் இக்காலத்தில் குளிர்ந்த நீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது என்பது அவரவர் உடல்நலம் சார்ந்து தீர்மானிக்க வேண்டியுள்ளது.

அனுதினம் குளிர்ந்த நீரீல் குளித்தல் நல்லது என்பதே பொருள்.

2. வைகறையில் நீராடு :


பரிமேலழகர் 'சனி' என்ற சொல்லுக்கு 'காரி' என்று பொருள் கூறுகிறார். காரி என்றால் இருள் நீங்காத அதிகாலை நேரம்.

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு ஒரு முகூர்த்த காலத்திற்கு முன்பதாக குளிப்பது சிறந்தது.

ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை. அதாவது நாற்பத்தெட்டு நிமிடம்.

அதிகாலைப் பொழுதில் குளித்தல் நன்று என்பதே இதன் பொருள்.

3. நதிகளில் நீராடு :


சனி என்றால் மந்தம் என்ற பொருளும் உண்டு. ஆறு மெதுவாகச் செல்லும் இடத்தில் நீராடுதல் நல்லது.

ஆற்றில் குளித்தல் என்பது வாழ்வில் புனிதமாக கருதப்படும் நதிகளில் நீராடுவதற்குத் கவனமாகத் திட்டமிட்டு கருத்தாகத் தேடு என்றும் பொருள் கொள்ளலாம்.

புனித இடங்களுக்குச் செல்வது சுற்றுலா செல்வதுபோல் செல்லக்கூடாது. சுற்றுலாவின் ஒரு பகுதியாக கோவில் தரிசனம் வைப்பது உகந்ததல்ல.

குடும்பமாகக் கோவிலுக்கு செல்வதைப் பழக்கமாக கைக்கொள்ள வேண்டும்.

கோவிலுக்குச் செல்வது என்பது மனதை உலக நாட்டங்களிலும், கேளிக்கையிலிமிருந்தும் விடுவிக்க வேண்டும்.

புனிதமான நதிகளில் நீராடுவது என்பது ஒரு கொடுப்பினை. அதற்காகப் பிரயாசப்பட வேண்டும்.

4. சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு :


'சனி' என்பதற்கு "சனிக்கிழமை" என்னும் கருத்தில் கூறப்படும் இந்த விளக்கமே பெருவாரியாக எல்லோரும் நம்புகின்றனர்.

"எண்ணெய் குளியல்" என்பது உடல் நலம் கருதி கூறப்படுகிறது.

மூல வாக்கியத்தில் "எண்ணெய்" என்கிற சொல்லாடல் இல்லை.

எனினும் தினசரி எண்ணெய் தேய்த்து குளிக்க இயலாவிடினும் வாரத்துக்கு ஒருநாளாகிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு நல்லது என்னும் நல்லெண்ண அடிப்படையில் இக்கருத்து எழுந்தது.

ஆக, நம் முன்னோர் உடல் ஆரோக்கியம் பேணுவதற்காக கண்டுபிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய்க்குளியலும் ஒன்றாகி விட்டது.

வாரம் ஒருநாள் தவறாமல் எண்ணெய்க்குளியல் செய்து வந்தால் மூட்டு வலி வராது.

மசாஜ் செய்வதற்கும், மூட்டு வலி போக்குவதற்கும் பெரும்பாலும் எண்ணெய்களே மூலாதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தலைமுடி உதிராமல் தடுப்பதோடு நரை விழாமல் காத்துக்கொள்ளும். ஒரு முழுமையான எண்ணெய்க்குளியல் உடம்பை சர்வீஸ் செய்தது போலாகிவிடும்.

சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் எண்ணெய்க்குளியல் செய்வது நல்லது.

கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை. தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் அல்லது கரிசலாங்கண்ணித் தைலம் போன்றவற்றைக்கொண்டு எண்ணெய்க்குளியல் செய்யலாம்.

இப்போது உடல் குளிர்ச்சி அடைந்திருப்பதை உணர முடியும்.

போதுமான சூட்டில் வெந்நீர் வைத்து மனைப்பலகையில் உட்கார்ந்து குளிக்க வேண்டும். இப்படி உட்கார்ந்து குளிக்கும்போது முதலில் சிறுநீர் தாராளமாகப் பிரியும். இதன்மூலம் சிறுநீரக கோளாறுகள் வராமல் காக்கப்படும்.

இப்போது சீயக்காய் அல்லது பயத்தமாவு தேய்த்துக் குளிக்க வேண்டும்.

குளித்து முடித்தபிறகு காலை உணவாக வெந்தயக்களி சாப்பிடலாம்.

சாப்பிட்டு முடிந்த சிறிது நேரத்தில் கண்கள் குளிர்ந்து கண்ணைக் கட்டிக்கொண்டு சுகமான தூக்கம் வரும். உடனே படுத்து தூங்கிவிடக்கூடாது. ஏதாவது சிறு சிறு வேலைகளைச் செய்வது நலம்.

மதிய உணவு மற்றும் இரவு உணவு மிக எளிய உணவாக இருக்கட்டும். இறைச்சி உணவுகளை எடுக்காதீர்கள். இதுதவிர இளநீர் குடிப்பது, உடல் உறவு போன்றவை அன்றைய தினம் வேண்டாம்.

கருத்துக்களில் எது சரி எது தவறு என்பதல்ல முக்கியம். 

இதை முறையாகக் கடைப்பிடித்தால் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

உடல்நலம், மனநலம் நிச்சயம் மேம்படும்.

துணை நின்றவை :

எம்.மரிய பெல்சின்
(https://www.vikatan.com/news/spirituality/62771-the-benefits-of-oil-bath.html)

http://thiruththam.blogspot.in/2009/10/blog-post.html

சனி, 23 டிசம்பர், 2017

ஙப் போல் வளை

🌸 ஙப் போல் வளை 

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)


15 - ஙப் போல் வளை : 


பெரியோர் சொல்படி பணிந்து வளைந்து கொடுத்து வாழ்தல் நலம். 

தமிழ் மொழிக்கென உள்ள சிறப்பெழுத்துக்கள் "ழ”  மற்றும் “ங”. 

"ங" - இந்த எழுத்தின் வடிவத்தைக் கூர்ந்து கவனித்தால் அது ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல இருப்பதைக் காணலாம்.

இந்த எழுத்தின் மற்றுமொருச் சிறப்பு : மழலை எழுப்பும் முதல் ஒலி சப்தம் ”ங்கா..,”.

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு புரளும்போது, கரையோரத்தில் இருக்கும் வலிமைமிகும் காட்டு மரங்களைக்கூட பெயர்த்து எடுத்துவிடும்.

ஆனால் காட்டாற்று வெள்ளம் வடிந்த பின்பு பார்த்தால், கரையோர நாணல்கள் அழியாது நிலைத்து நிற்கும்.

அது போல நமது வாழ்வில் எதிர்ப்படும் எதிர்ப்புகள், இடையூறு, துன்பங்களில் சில சமயங்களில் இதயத்தை கடினப்படுத்தகூடாது. அத்தகைய நிலைப்பாடு அழிவையேத்தரும்.

வாழ்வின் கடினமான சூழல் ஏற்படுத்தும் துன்பத்தால் உடைந்து போகாது, நெளிவு சுளிவோடு வளைந்து கொடுத்து அத்துன்பைச்சூழலில் இருந்து முதலில் கடக்க முயற்சிக்க வேண்டும். 

"ங" இந்த எழுத்து வடிவமும் சிறப்பானது.

இந்த எழுத்தை எழுதும்போது முதல் கோடு கற்றுத் தருவது வாழ்வில் நிமிர்ந்து மேல் நோக்கி எழும்பு.

எதிர்ப்பு எதிர்படும்போது சற்று வளைந்து சாய்ந்து கொடு.

தொடர்ந்து வாழ்வில் எதிர்ப்பான கடினமான சூழலா?

அந்தச் சூழலோடு மல்லுக்கட்டாது கீழ் நோக்கி வா!

ஆனால் சோர்ந்து போகாது மறுபடியும் தலை எடுத்து வளைந்து பார்,

பின்பு ஆசுவாசப்படுத்தக் கிட.

இறுதியில் முழுபெலத்துடன் நிமிர்ந்து நில்.

மற்றுமொருப் பொருள் :


'ங' என்னும் எழுத்தானது வாக்கியத்தின் முதலில் வராது.

ஆனால் அஃது தான் பயனுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துக்களை தழுவும்.

அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களைக் காக்க வேண்டும். 

வெப்பம் மிகும் கோடைக்காலத்தில் தன்னை அடைந்தார்க்கு எல்லாம் மரம்  நிழலைத்தரும். தனது கனியை உண்ணத் தரும்

அது போல தன்னைச் சார்ந்த சுற்றத்தாரையெல்லாம் நேசித்து, வளைந்து நெளிந்துக் கொடுத்து ஒரே தன்மையாகக் காத்து  பழுத்த மரம் போலப் பலரும் பயன் நுகர வாழ்வதே சிறப்பானது.

வெள்ளி, 22 டிசம்பர், 2017

கண்டொன்று சொல்லேல்.

🌸 கண்டொன்று சொல்லேல்.

(ஆத்திசூடி -  உயிர்மெய் வருக்கம்)


14. கண்டொன்று சொல்லேல் :

கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே!  


பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளின் உண்மையானதொரு பொருளை ; அஃதாவது  உள்ளது உள்ளபடியே நாம் புரிந்து கொள்வதில்லை.

நமது அனுபவங்கள், அனுமானங்கள் மற்றும் நம்பிக்கையின் புரிதல்கள்  அடிப்படையிலேயே நாம் அதைப் பிறருக்கு  வியாக்கியானம் செய்கிறோம்.

ஒரு மாலைப் பொழுதில் அழகியதொரு பூங்காவில்  அநேக மக்கள் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது  அங்கு ஒரு தந்தையும் அவரது சிறு மகனும் வந்து உட்கார்ந்தனர்.

அந்தச் சிறு பையன் மிகுந்த மகிழ்ச்சியோடு உரத்த சத்தமிட்டு ஓடியாடி விளையாடுகின்றான்.

அஃது அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது. எரிச்சல் அடைகின்றனர்.

அந்தச் சிறுவனை அவனது தந்தை கண்டித்து அமைதிப்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால் அவரோ சூழ்நிலைகளை மறந்து, தனது கண்களை மூடி ஏதோ ஒரு  தீவிரச் சிந்தனையில் இலயித்திருக்கிறார்.

அந்தத் தருணத்தில் குழந்தையின் விஷமங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாத வாலிபன் ஒருவன் ; அந்தத் தந்தையை உலுக்கி, தயவு செய்து உங்களுடைய குழந்தையை கண்டித்து வையுங்கள் ; அனைவருக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது எனக் கோபமாக கூறினான்.

திடுக்கிட்ட தந்தையின் கண்களின் கண்ணீர்.

அவர் அந்த வாலிபனை  அன்புடன் நோக்கி, மன்னித்துக் கொள்ளுங்கள் ;  இவன் எங்களது ஒரே மகன்.

எனது மனைவி, அஃதாவது இவனது தாயார் சற்று முன்பாகதான் அந்த மருத்துவமனையில் மரித்துப்போனார்.

இந்த அதிர்ச்சியான சூழலில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி குழந்தையை அன்புடன் அனைத்துக் கொண்டார்.

அந்த௯ஷிணம்  இடையூறாக கருதப்பட்டதொரு சூழல் ; துயரம் மிகுந்ததொரு சூழலாக பரிணமித்தது.

எரிச்சலும் இடையூறாகவும் கருதியவர்கள்,  நண்பரே உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என அன்புடனும்  ஆதரவுடன் கேட்டனர்.

ஒரு நிகழ்வைப்  புரிந்து கொள்ளுதல் என்பது நமது பார்வையில்  எவ்வளவு குறைவுடையது இல்லையா? 

சுயநலம் மிகுந்த இன்றைய உலகில் பிறருடைய வாழ்வில் நடக்காத ஒன்றை ; உடன் இருந்து, அது நடந்ததைப் பார்த்தது போலக் கூறி நட்பில், உறவுகளில் பகை ஏற்படுத்துபவரும் உண்டு.

ஒருவர் மீது உள்ள பகைமை, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் நிமித்தம் அவதூறு செய்பவர்களும் உண்டு .

அத்தகைய தவறான செய்திகளை நேரிடையாகப் பார்த்ததுபோல் நாம் பரப்புதல் கூடாது. அது பாவம். இத்தகைய மனப்பாங்கு மிக மோசமானது.

நம் கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் முழுமையானது அல்ல. 
தீர ஆராய்ந்து உணர்வதே உண்மையைத் தெளிவிக்கும்.

ஒன்றைக் குறித்த முழுமையான புரிதல் இல்லாது அதைப் பிறரிடம் பகிரும்போது, அது சம்பந்தப்பட்ட மனிதரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்.

ஒவ்வொரு மனிதரின் சூழல்களைப் புரிந்து கொள்ளாது, அவரது செயல்களை விமரிசிக்க கூடாது. பிறரிடம் பகிர்வதும் தவறு.

அது பொய் சாட்சி சொல்லுதலுக்கு சமம். மிகப் பெரும் பாவமுமாகும்.

உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்லுதல் நலம். 

ஒன்றைக் குறித்து முழுமையாகத் தெரியவில்லை என்றால், அதைக் குறித்து எதுவும் பேசாமல் இருப்பது உத்தமம்.

வியாழன், 21 டிசம்பர், 2017

அஃகஞ் சுருக்கேல்

🌸 அஃகஞ் சுருக்கேல்

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


13 . அஃகஞ் சுருக்கேல் :

தட்டுப்பாடு நிறைந்த தானியங்களை பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்று பணம் சம்பாதிப்பது கூடாது. 

அஃகம் என்றால் தானியம் என்று பொருள்.

தானியத்தை அளந்து விற்கும்பொழுது அளவிற் குறைக்காது சீராக அளந்து கொடுத்தல் வேண்டும்.

பணம் நடைமுறையில் இல்லாத அந்த காலத்தில் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது.

விவசாய விளை பொருட்களே பெரும்பாலும் எளியவர்களுக்கு, அவர்கள் செய்யும் வேலைக்குக் கூலியாக வழங்கப்பட்டது.

அதனை மரக்கால், படி ஆகியவற்றால் அளந்து வணிகம் செய்தனர்.

இந்த வாக்கியத்தின் மையக்கருத்து பிறரை ஏமாற்றி ஆதாயம் தேடாதே.

வணிகம் என்பது நெறிமுறை பிசகாது செம்மையாக நடைபெற வேண்டும்

வர்த்தகம் பெருகியுள்ள இந்நாட்களில்  இந்த நெறிமுறையைப் பின்பற்றுவது, சமூகம் நன்னெறியிற் செல்லுதற்குப் பெரிதும் உதவும்.

இயேசு கிறிஸ்து சொன்னதொரு கதை இங்கு நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஒரு மிகப்பெரிய விவசாயி இருந்தான். அவனுக்கு ஏராளமான நிலங்கள் இருந்தது. அது நன்றாய் விளைந்தது.

அப்பொழுது அவன் : நான் என்ன செய்வேன்? என் தானியங்களை சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே? எனக் கவலைப்பட்டான்.

இந்த விளைச்சலை யாருடனும் நியாயமாகப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

அதைப் பதுக்கிவைத்து அதனால் கிடைக்கும் கொள்ளை இலாபத்துக்கு பேராசைப்பட்டான்.

அவன் தனது களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி விளைந்த தானியங்களை சேர்த்து வைத்து அதன் மூலம் மிகப் பெரும் செல்வத்தை ஈட்டத் திட்டமிட்டான்.

இந்தக் கொள்ளை வருமானம் மூலம் அநேக வருஷங்கள் உல்லாசமாகச் சுகித்து வாழலாம் என மனதில் சிந்தித்தான்.

இயேசு அந்த மனிதனை பெரும் முட்டாள், மதிகேடன் என்றார்.

அந்த மனிதனுக்குத் தான் எத்தனை வருடம் உயிரோடு இருப்போம் எனத் தெரியாது.

ஒருவேளை அவன் அந்த இரவிலேயே மரணமடைந்தால் அவனது கொள்ளை இலாபத்தால் சேர்த்த இந்தச் சொத்துக்களால் என்ன இலாபம் இருக்கக் கூடும்.?

மகிழ்ச்சி என்பது செல்வத்தை அநீதியான வழிகளில் சேர்ப்பதினால் அடைவதல்ல.

நியாயமாகப் பொருளீட்டுவதும், அதைப் பகிர்ந்து வாழ்வதிலும் அடங்கியுள்ளது.


திங்கள், 18 டிசம்பர், 2017

ஔவியம் பேசேல்

🌸 ஔவியம் பேசேல்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


ஔவியம் பேசேல் :

பொறாமைப்பட்டுப்  பேசாதே என்பது இதன் பொருள்.

ஔவியம் பேசேல் என்பதற்கு வீண் பெருமை பேசக்கூடாது என்றும் பொருள் கூறுவோரும் உண்டு.

தன்னையே அளவுகடந்து நேசிப்பதுதான் பொறாமையின் ஊற்று.

பொறாமை ஓர் எலும்புருக்கி நோய் போன்றது. உடன் இருந்து கொல்லும்.

இந்த உலகில் பொறாமையால் அழிந்த உயிர்கள் ஏராளம்.

அரசு அரியணையில் இருந்த பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களை வஞ்சகமாக அழைத்து மாயச்சூதாடி நாடு நகரம் முதலியவற்றைக் கவர்ந்தான் துரியோதனன். 

ஆனால் பொறாமையால் அறமற்று கவர்ந்தவை எவையும் நிரந்தரமில்லை. 

துரியோதனன் பாண்டவர்களுடனான மகாபாரத யுத்தத்தில் தோல்வியுற்று அனைத்தையும் அவர்களிடமே இழந்தான்.

இன்றைய உலகிலும் பொறாமைத் தீயால்  தங்கள் வாழ்வை இழந்து, வீடிழந்து, நாடிழந்து அகதிகளாக அலைந்து திரிபவர்கள் ஏராளம்.


பொறாமை உடையவரின் இயல்புகள் :


தன்னைக் குறித்து வீண்பெருமை பேசுதல்,

சுயமோகியாக இருத்தல்,

பிறரிடம்  உள்ள உயர்ந்த குணம், கல்வி, செல்வம்.., இவை கண்டு வெறுப்படைதல்,

பிறரது முன்னேற்றத்தைக் கண்டு கோபப்படுதல்,

எளியவரிடமும் கடுஞ்சொல் பேசுதல்,

தவறுகளைச் சுட்டி காட்டுபவரை அற்பமாக விமரிசித்தல்,

மாற்றுக் கருத்துடையோரை சகிக்காது தாக்குதல்

எனக் கூறிக் கொண்டே செல்லலாம்.

வாழ்வில் வெற்றி பெற விரும்புபவர் மனதில் பொறாமையின்றி இருப்பதை ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.

உலகின் நிலையாமை உணர்ந்து, எப்போதும் அடக்கத்துடன், பொறுமையுடன் வாழ்வதே சிறப்பு.

இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு தூசியாகத் தன்னை எப்போதும் உணர்ந்து மனதில் நிலைநிறுத்துவது நல்லது.

பிறரது திறமைகளை மதிப்பது, சிறப்பாகச் செயல்படுபவர்களை மனம் திறந்து பாராட்டுவது, அன்புடன் சக உயிர்களை நேசிப்பது  போன்ற  நல்ல பண்புகள் மனதை செழுமையாக்கும்.

போதுமென்ற மனதுடன் கூடிய தேவபக்தி நிறைந்த வாழ்வே மிகச் சிறந்தது.

பொறாமையை மனதில் இருந்து வேரோடு அகற்றச் சிந்தையை , இருதயத்தை மாசற்ற  அன்பினால் நிரப்புவதே ஒரே வழி.


ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஓதுவது ஒழியேல்

🌸 ஓதுவது ஒழியேல்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


ஓதுவது ஒழியேல் : 

ஒருபோதும் படிக்கும் பழக்கத்தை கை விடாதே. எக்காலத்தும் அறிவினை வளர்க்கும் நூல்களைப் படிப்பதில் இருந்து விலகாதே என்பது இதன் பொருள்.

வாழ்வில் வெற்றியடைந்த முன்மாதிரியாக (Role Models)  சுட்டிக் காட்டப்படும் அனைவரிடமும் காணப்படும் பொதுவானதொரு குணம் ; அவர்கள் சிறந்த வாசிப்பாளர்களாக நிச்சயம் இருப்பார்கள்.

வாழ்வை முன்னேற்றப் பாதையில் நடத்தும், அன்பை மனதில் விதைக்கும், நேர்மையான பாதையில் வழிநடத்தும் நூல்களைத் தெரிந்தேடுத்து வாசிக்க கவனமாக இருத்தல் வேண்டும்.

கடுமையான உடல் உழைப்பு அல்ல, தீவிரமான சிந்தனையே வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும்.

புத்தகம் மூலம் கற்றுக் கொள்ளாதவர், தவறுகள் செய்து அதனால் ஏற்படும் கஷ்டத்திலிருந்தே கற்றுக்கொள்வர்.

அதனால்தான் படிப்பறிவற்ற சமூகத்தில் வயதும், அனுபவமுமே உடையவரே தலைவராக இருப்பர்.

ஒரு சிறந்த மனிதரது வரலாற்றை வாசித்து உணர்ந்தால், அவர் தம் வாழ்வில் பட்ட கடினங்களை நாம் அனுபவிக்காது, வெற்றிகரமான வாழ்க்கைக்கு எதைச் செய்ய வேண்டும்  என்கிற அறிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

கல்விபோல் மன உறுதியைத்தருவது வேறொன்றும் இல்லை.

ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறப்பும் தொடர்ந்து உதவும் என்று திருக்குறள் சொல்கிறது.

அறம் போதிக்கும் கல்வியால் அறிவு வளர்தல் நிச்சயம், ஆதலால் ஓதுவது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.

கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு.

வாழ்வின் இறுதிவரை நாம் கல்விக்கு எல்லை போடாமல் தொடர்ந்து படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.

சனி, 16 டிசம்பர், 2017

ஒப்புர வொழுகு :

🌸 ஒப்புரவு ஒழுகு.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்.)


ஒப்புர வொழுகு :

ஒருவருக்கொருவர்  உதவியாக ஒத்தாசை செய்து வாழ். 

சமூக வாழ்வில் இன்பமாக வாழ ஒவ்வொரு மனிதரும் மற்றவருடைய உதவியின்றி வாழ முடியாது.

வாழ்வு சிறக்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் பிறருக்குத் தன்னால் இயன்ற உதவி செய்து வாழ வேண்டும்.

இவ்வாறு ஒருவர்க்கொருவர் உதவும் பண்புதான் ஒப்புரவு என்று பொருள்படும்.

ஒப்புரவு என்னுஞ் சொல்லின் பொருளைக் கூர்ந்து கவனித்தால்
"தன்னைப் போலப் பிறரையும் நேசி" என்ற உயர்ந்த தத்துவத்தை
அது தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது.

வாழ்வு, செல்வம், இன்பம் முதலிய நலங்களைத் தான் எவ்வாறு நுகர எண்ணுகிறாரோ அவ்வாறே பிறரும் அவற்றை நுகர வேண்டும் என்று
ஒப்ப நோக்கி வாழ்வது தான் ஒப்புரவு.

விட்டுக் கொடுத்தல், அமைதி காத்தல், பெரியோர் சொல் மதித்தல்,
தீய செயல்கள் என அறுதியிட்டு குற்றமாக வரையறுக்கப்பட்ட செயல்களை விலக்குதல் ஆகிய குணமுடையோரை அனைவரும் நேசிப்பர்.

சுயநலவாதி, தன் காரியம் முடிந்தவுடன் கண்டும் காணாது செல்பவர், முன்கோபி, பொய் சொல்லி ஏமாற்றுபவர், கோள் சொல்லுபவர், பரிகாசப் பேச்சு பேசுபவர், தீய நடத்தை உடையவர், குடிப் பழக்கம் உடையவர், பிறரை நடித்து வஞ்சகம் செய்பவர் போன்ற அற்ப குணமுடையவர் வாழ்வின் இறுதியில் இகழ்ச்சி அடைவதோடு இல்லாமல் எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகுவர்.

கடைசிக் காலத்தில் அவரைச் சுற்றி தீய மனிதர்களே உடன் இருப்பர்.

உண்மையாக வாழ்பவரை, மாசற்ற அன்புடையவரை இந்த உலகம் நேசிக்கும். அவர் குலம் தழைக்கும்.

இந்த உண்மையை மனதில் பதியவைத்து, துன்பம் நீக்கவல்ல பெரியோர் துணையைப் பெறுதல் ஒருவருக்கு சிறந்தச் செல்வமும் வலிமையாகும்.

இவ்வுலக வாழ்வில் அமைதியாக வாழ்ந்து கடமைகளை சரியாக நிறைவேற்ற அத்தகைய சான்றோர் உடன் ஒப்புரவாகி வாழ்வதே நற்பேறு.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

ஐயம் இட்டு உண்

🌸 ஐயமிட்டு உண்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


9. ஐயம் இட்டு உண் : 

ஐயம்’ என்ற சொல்லுக்கு ‘ஈதல்’ (கொடுத்தல்) என்று பொருள்.

இல்லை என்று வந்த ஏழைகளுக்கு உணவைப் பகிர்ந்து அளித்துவிட்டு பின்பு தானும் உண்ண வேண்டும் என்பது இதன் பொருள். 

இல்லாதவர்களின் பசிப்பிணி நீக்குவது தருமங்களுள் சிறந்தது.

இல்வாழ்க்கையின் தலையான கடமை ஏழையர், அனாதைகள், உறவினரால் கைவிடப்பட்டவர்கள், பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர்கள், துறவிகள், வானப்பிரஸ்தயோகிகள் இவர்களுக்கு உதவும் அறமுமே ஆகும்.

மரணத்திலிருந்து மீட்கும் அமுதமே ஆயினும் வந்த விருந்தினருக்கு அளிக்காமல் தான் மட்டும் சாப்பிடுதல் விரும்பத்தக்கதல்ல.

விருந்தினரை வரவேற்று உபசரித்து வாழ்பவனை வறுமை வருத்தாது.

பொருள் சம்பாதித்து வாழ்வது விருந்தினரை, ஏழைகளை உபசரிப்பதற்காகவே ஆகும்.

விருந்தினருக்கு உணவளித்து, மீதியிருப்பதை உண்பவனுக்கு நிலவளம் கூடும். விளைச்சல் பெருகும்.

வந்து செல்லும் விருந்தினருக்குப் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி, புதிதாக வரும் விருந்தினரையும் உவகையுடன் வரவேற்று உபசரிப்பவன், மறுபிறப்பில் தேவனாகி வானில் தேவரால் மதிப்புடன் வரவேற்கப்படுவான்.

பாடுபட்டுப் பணம் தேடி, விருந்தினரை உபசரிக்காதவர்களுக்கு இறுதியில் இந்த உலகத்திலும், பின் மேல் உலகத்திலும் உதவுவதற்கு எவரும் இருக்க மாட்டார்கள்.

பணம் இருந்து உபசரிக்க மனமற்றவன் ஏழையே.

விருந்தளித்தலும் யாகம் போன்றது. பெருமைக்காக, சுய கவுரத்துக்காக செய்யப்படும் மகத்தான விருந்தைவிட, உண்மையான மனதோடு செய்யப்படும் சிறு உபசரிப்பு பற்பல கோடி மடங்கு உயர்வானது.

இதை விளக்கும் சிறு கதை மகாபாரதத்திலிருந்து :



மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர் பிறரால் எளிதாகச் செய்ய இயலாத அசுவமேதமென்கிற யாகம் ஒன்று செய்தார்.

பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில் மேன்மை அடைந்த வேதியர்களும், தவ சிரேஷ்டர்களும், முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.

அந்தச் சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு தங்கம் போலப் பிரகாசிக்க அங்கு வந்து வெள்ளமாய் ஓடும் தானம் செய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது.

அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!

தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து :

"கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?
இங்கு வந்து ஏன் இப்படிப் புரளுகிறாய்" என்று கேட்டார்.

இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

“ஐயா அரசரில் சிறந்தவரே! நான் வசித்துவரும் காட்டில் ஓர் ஏழை முனிவர் 
தமது மனைவி, மகன், மருமகளோடு வாழ்ந்து வந்தார்.

காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவையே அவர்களுக்கு உணவு.

ஒரு தடவை மழையே இல்லாமல் இவையும் கூடக் கிடைப்பது அரிதாகி விட்டது.

அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை சிறிது சிறிதாகச் சேகரித்து அதனை மாவாக அரைத்து சாப்பிட்டார்கள்.

சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.

ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது தானியங்களைச் சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்போகும் சமயத்தில்,

எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து ”ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி விட்டது, பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது அளிக்கவேண்டும்” என்று மிகவும் கெஞ்சி பிச்சைக் கேட்டு நின்றார்.

கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக் கூட முடியவில்லை.

அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து உபசரித்தார்.

அஃது அந்த முதியவருக்கு போதவில்லை,  அதை அறிந்த மற்ற மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.

முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை மனதார வாழ்த்திச் சென்றார். அவர் அந்த இடத்தை விட்டுச் சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம் ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.

அன்ன ஆகாரமின்றி பற்பல இடங்களிலும் அலைந்து திரிந்து பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு நடந்த அதிசயங்களைக் கண்டேன்.

பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த மாவை உண்ணும்போது அஃது என் மேலெல்லாம் ஒட்டிக்கொண்டது.

அந்த மாவு ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம் மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!

அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன். 

பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்தத் தருமத்தின் சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே” என்று கூறிய கீரி மேலும்..

”எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்.

ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள் மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது, ஆதாலால் நீங்கள் செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி பூஜையே மிகவும் சிறந்தது!” 

என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச் சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்சென்றது கீரிப்பிள்ளை.

நீதிக்கதை நன்றியுடன்http://athichudi.blogspot.com

வியாழன், 14 டிசம்பர், 2017

ஏற்பது இகழ்ச்சி

🌸 ஏற்பது இகழ்ச்சி.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


8 - ஏற்பது இகழ்ச்சி : 

பிச்சை எடுத்தல் அவமானம்.

பிறரிடம் யாசித்து பொருள் பெறுவது இரத்தல் எனப்படும்.

இல்லாதவன், இருப்பவனிடம் ஒன்றை வேண்டி நிற்பதைப் பார்த்தால் மனம் வேதனைப்படும்.

அந்த நேரத்தில் பிச்சை கேட்கிறவன் உடல், மனம் கூசி குன்றிப் போய் விடுகிறான். அதைப் பார்க்கும்போது உள்ளம் உருகுகின்றது.

அப்படி பிச்சைக் கேட்பவனுக்கு,  வசதியிருந்தும் கொடுக்க மறுத்து, அவர்களை அவமதிக்கும் கொடுமையானவர்களைப் பார்க்கும்போது, உள்ளம் உடைந்து அக் கொடூரர்களை மனம் சபிக்கிறது.

எனவே பிறரிடம் சென்று பிச்சை எடுத்து இரக்காமல், தன் சொந்த முயற்சியால் கிடைக்கும்  கஞ்சியைக் குடிப்பது அமுதத்தைவிடச் சிறந்தது.

வாழ்க்கை கடலை கடக்க, யாசித்தல் என்னும் பாதுகாப்பற்ற படகில் பயணம் செய்தால், கொடுக்க மனமற்ற செல்வந்தர் என்ற பாறையை அடையும்போது படகு சின்னாபின்னமாகும்.

கடன் வாங்காது இருப்பதை வைத்து, எளிமையாக வாழ்வது நிறைவான, உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.

உடல் நலம் குன்றியோர், மன நலமற்றவர், முதியோர், உழைக்க வழியற்றோருக்கு அவர்கள் கேட்காமல் நம்மால் முடிந்த  உதவிகளைச்செய்வது மாபெரும் நற்பேறு.

சிறு குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போரை ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது.

சொகுசான வாழ்க்கைக்காகப் பிறரை ஏமாற்றி, வஞ்சனையான வழியில் பொருள் ஈட்டுவது, பிறரை ஏய்த்துப் பிழைப்பது ; இவை பிச்சை எடுப்பதிலும் மிகக் கேவலமானது.

வியர்வை, உழைப்பு, கண்ணீர், விடா முயற்சி மூலமாக ஈட்டப்படும் செல்வம் மட்டுமே குடும்பம் தழைக்க உதவும். உழைக்காது மற்ற வழியில் வரும் பொருள்கள்  முதலில் குதுகலத்தை அளிப்பது போல இருந்தாலும் முடிவில் அழ அழ வைத்து விட்டுச் செல்லும்.

எச் சூழலிலும் பிறரிடம் கையேந்தி வாழாமல் இருப்பது மேன்மை.

எண் எழுத்து இகழேல்

🌸 எண் எழுத்து இகழேல்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


எண் எழுத்து இகழேல் : 

பொருளும், அருளும் கற்பதை அலட்சியப்படுத்தாதே.

எண் என்பது கணித மொழி. கணிதம் கற்பது அறிவை வளர்க்கும்.
கணித அறிவு பொருள் ஈட்டல், பெருக்குதல், காத்தல் மற்றும் வரவு, செலவை நிதானித்தல் எனவும் புரிந்து கொள்ளலாம்.

எழுத்து என்பது  இலக்கியம். இலக்கியத்தைக் கற்பது பண்பாட்டை வளர்க்கும்.
ஒரு மனிதனை உயர்வடையச் செய்வது நல் சிந்தனைகளே.

குற்றமற்ற நீதியைப் போதிக்கும் இலக்கியங்களே மனித மனதை பண்படுத்துகின்றது. மனித மாண்பை செழுமையாக்குகின்றது. வாழ்வின் பொருளை கற்றுத் தருகின்றது.

ஆக இவை இரண்டும் ஓர் உயிருக்கு இரண்டு கண்கள் போன்றது.
ஆக இவ்விரு துறைகளையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்
என்பதே இவ் வாக்கியத்தின் பொருள்.

பொருளும், அருளும் கற்பதை அலட்சியப்படுத்தாதே.

கல்வியே உலகில் குறைவற்ற மேலான செல்வம்.

தேடல் நிறைந்த கல்வி சிந்தனையைத் தெளிவிக்கும்.

ஞானம் தீமையை விட்டு விலகும் புத்தியை கற்றுத் தரும்.

மன கண்களை திறக்கும்.
மனம் போனபடி போகவிடாமல் மனதை நல்ல வழியில்
செலுத்த வல்லது அறிவு.

நுட்பமான அறிவுடையவர் நாவடக்கம் காப்பர்.

கற்றோர் தமக்கு வரக்கூடிய நன்மை, தீமைகளை முன்கூடியே யூகித்து அறிய முடியும்.

பகிர்ந்து அளிக்கும்போது அறிவு விசாலமடைகிறது.

ஆற்றுப்படுகையின் மணல் வெளியில் தோண்டத் தோண்ட, நீர் சுரக்கும் ;
அது போல படிக்க படிக்க சிந்தனை கூர்மையாகும்.

நல்லறிவு, நற்பண்புடையோர் செல்லுமிடமெங்கும் சிறப்படைவர்.

நீதியைக் கற்று, உணர்ந்து கடை பிடிப்பவர் நன்மையும், புகழையும் அடைவர்.

கற்றது கையளவு.

செவ்வாய், 12 டிசம்பர், 2017

ஊக்கமது கைவிடேல்

🌸 ஊக்கமது கைவிடேல்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


ஊக்கமது கைவிடேல் :   

விடாமுயற்சி கை விடாதே.

அல்லது

தன்னம்பிக்கை  இழக்காது  விடாமுயற்சியுடன் 
எடுத்த செயலை செய்து முடியுங்கள்.

உள்ள உறுதியே உண்மையான சக்தி.

உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் விடாமுயற்சி.

உறுதியான மனமே எத்தனைத் துன்பங்கள்
எதிர் கொண்டு வந்தாலும் விடாமுயற்சியுடன்
எடுத்த காரியத்தை செய்து முடிக்கும்
வல்லமை கொண்டது.

இடர்களைக் கண்டு கலங்காது
மன உறுதியுடன் எடுத்துக் கொண்ட
செயலைச் செய்து முடிப்பவரை
பொருளும்,  புகழும் தேடி விசாரித்துக்
கொண்டு வந்து சேரும்.

மனிதர்களின் முன்னேற்றம் என்பது வாழ்க்கையில்
உயர்ந்த இலட்சியத்தை இலக்காகத் தீர்மானிப்பது.
பின்பு அந்த இலக்கை அடையத் தன்னம்பிக்கையுடன்
விடாது முயற்சி செய்வதே ஆகும்.

உதாரணம்: 


ஒரு பிரபல தொழில் அதிபரைப் பார்த்து ஓர் இளைஞர்,
உங்களது வெற்றியின் ரகசியம் என்ன என்று சொல்ல முடியுமா ?
என்று கேட்டார் .

தொழிலதிபர் சொன்னார்: இரகசியம் என்று எதுவுமில்லை.
வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர்பார்த்து
கதவைத் தட்டிக் கொண்டேதான் இருக்க வேண்டும் .

இளைஞன் கேட்டான்: வாய்ப்புக் எப்போது கிடைக்கும்?
கதவு எப்போது திறக்கும் என்று எப்படிக் கண்டுபிடிப்பது ?

தொழில் அதிபர் சொன்னார்: “கண்டுபிடிக்க வழியில்லை;
திறக்கும் வரையில் தட்டிக் கொண்டு இருப்பதுதான் வழி.”

முயற்சி திருவினையாக்கும்.


நன்றி : உதாரணம்  http://www.aramseyavirumbu.com இலிருந்து எடுக்கப்பட்டது.

உடையது விளம்பேல்.

🌸 உடையது விளம்பேல்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


உடையது விளம்பேல் : 

தன்வசம் அருமையாக உள்ளதை வெளிப்படையாக அனைவரிடமும் சொல்லித் திரியாதே.

அல்லது

தன்னிடம் உள்ளதை (சிறப்புகளை) தற்பெருமை பேசாதே

எந்த பிற நலங்களுக்கும் அடங்காத சிறப்பு சொல்வன்மைக்கு உண்டு.
நல்லவையும், தீயவையும் நமது பேச்சால் வரும். எனவே பேசும் பேச்சின் பின் விளைவுகளை உணர்ந்து பேசுதல் நல்லது.

நுட்பமான அறிவுடையவர்கள் மறந்தும் அறிவற்ற சொற்களைப் பேசமாட்டார்கள்.

நமது வலிமையை தற்பெருமை பேச்சால் வெளிப்படுத்தினால் நாம் செய்ய இருக்கும் செயலுக்கு கேடு வரும்.

அத்துடன் அருமையான அந்தப் பொருளின் மதிப்பும், தன்மையும் குறைந்துவிடும்.

இதை விளக்க இராமயணத்திலிருந்து ஒரு சிறு கதை : 


இராவணன் சீதையை தூக்கிச் செல்லும் பொழுது துக்கம் தாளாமல் சீதை வாய்விட்டுக் கதறி அழுதாள். சீதையின் அழுகுரலைக்கேட்ட ஜடாயு என்னும் கழுகரசன் அதி வேகமாகப் பறந்து வந்து இராவணனை எதிர்த்து போர் செய்தார்.

வெகு நேரம் அவர்கள் இருவரும் வெற்றி தோல்வி இல்லாமல் சண்டையிட்டார்கள்.

இராவணன் ஜடாயுவை வஞ்சனையாகக் கொல்ல நினைத்து ஜடாயுவிடம்
"உன் உயிர்நிலை எங்கே இருக்கிறது?" என்று கேட்டான்.

ஜடாயு சத்தியவான். ஆதலால் பொய் சொல்லக் கூடாது என்று இராவணன் கேட்டதும் தன் உயிர் நிலை தன்னுடைய இறகில் இருப்பதாக உண்மையைச் சொன்னார்.

பிறகு இராவணனுடைய உயிர் நிலை எங்கே இருக்கிறது எனக்கேட்ட ஜடாயுவிடம் இராவணன் தன் உயிர் நிலை தன் கால் கட்டை விரலில் இருக்கிறது என்று பொய்யை சொன்னான்.

உடனே ஜடாயு இராவணனின் கால் கட்டை விரலை வெட்டினார். அதே சமயத்தில் ராவணன் ஜடாயுவின் இறகுகளை வெட்டி எறிந்தான்.

தன் உயிர் நிலை வெட்டப்பட்டதால் ஜடாயு துடி துடித்து கீழே விழுந்து மாண்டார். இராவணனோ ஒரு தீங்கும் இல்லாமல் வெற்றி பெற்று சீதையைத் தூக்கிச்சென்று விட்டான்.

தன் அருமையான உயிர் நிலையை எதிரியான இராவணனிடம் வெளிப்படுத்தியதால் நல்லவர் ஜடாயு தன் உயிரை இழக்கும்படி நேர்ந்தது.

இந்தக் காரணங்களினால்தான் நமது பெரியோர்கள் உயர்ந்த சிந்தனைகளை பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதி வைத்துள்ளனர். 

அந்த உயர்ந்த நெறிகளை கடைப்பிடிப்பவர் அன்றி  மற்றவர்கள் அதை வாசித்தாலும் அதன் பொருள் புரியாது.

நீதிக்கதை : http://athichudi.blogspot.com இல்  இருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டுள்ளது.

திங்கள், 11 டிசம்பர், 2017

ஈவது விலக்கேல்

🌸 ஈவது விலக்கேல். 

(ஆத்திசூடி - உயிர் வருக்கம் )


இதன் எளிமையான பொருள் : 
ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பதை தடுக்காதே. 

ஒருவர் பிறர்க்கு தருமம் வழங்க முற்படும்போது, அந்த கொடை எதுவாக 
இருப்பினும் இடையில் நுழைந்து அந்த உதவியைத் தடுத்து நிறுத்திவிடாதீர்கள்
என்பது இதன் விளக்கம். 


ஒரு சிலர் தர்ம உபகாரம் செய்வதை  ஏன் தடுக்கின்றார்கள்?


முதலாவது உதவி பெறுபவர் ஆதாயத்துக்காக நடித்து 
ஏமாற்றுகிறாரோ எனும் சந்தேகம்  காரணமாக இருக்கலாம். 

மற்றது உதவி பெறுபவர் மேல் உள்ள பகையுணர்வு, வெறுப்பின் 
காரணமாக உதவியைத் தடுக்க முற்படலாம். 

பொறாமையினிமித்தம் கூட, ஒருவர் உதவியைப் பெற இயலாத 
வண்ணம் செயல்படுபவர்கள் உண்டு. 

ஆனால் இங்குச் சொல்லப்படும் அறம் சார்ந்த கருத்து : 
ஒருவர் மற்றொருவருக்குக் செய்ய விரும்பும் உதவி அது பொருளாகவோ அல்லது பணமாகவோ எதுவாக இருந்தாலும் அதை ஒரு போதும் தடுக்காதே. 


இருவித பாவங்கள் :


தர்மச்செயலை தடுத்து இடையூறு செய்வது இரண்டுவித பாவங்களைப் 
பிறப்பிக்கிறது.

முதலாவது தர்மம் அளிப்பவர் அந்தக் கொடையினிமித்தம் பெற வேண்டிய 
புண்ணியங்களைத் தடை செய்கிறது.

இரண்டாவது உதவி பெறுபவர் அடைய வேண்டிய நன்மைகள் அவருக்குக் 
கிடைக்காமல் போகிறது.

எந்தச் சூழலிலும் மறந்தும் இந்தத் தீங்கு செய்யக்கூடாது. 

ஒருவன் எவ்வளவு முயன்றாலும் தன் நிழல் தன்னைத் தொடர்வதைத் 
தடுக்க முடியாது. அதுபோல இந்த  தீச் செயல் விடாமல் அவனைப் 
பின்தொடர்ந்து வரும். 

ஏழையர்க்கு உதவி செய்து, அதனால் புகழ் அடைவதே உயிர் வாழ்தலின் 
பயனாகும். 

சனி, 9 டிசம்பர், 2017

இயல்வது கரவேல்

🌸 இயல்வது கரவேல்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


இச் செய்யுளின் எளிமையான பொருள் :

கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.’

ஒரு பொருளும் இல்லாதவர்க்கு எந்த பிரதிபலனும் எதிர்பாரது,  அவர் வேண்டுபவற்றை தம்மால் இயன்ற அளவில் செய்யப்படும் உதவியே கொடையாகும்.

எளியவர், ஆதரவற்றோர் இவர்கள் பசி நீக்குவது மிகச் சிறந்தது. அது உபவாசம் இருத்தலினும் மேலானது. இவ்விதம் பசியாற்றுபவருக்கு என்றும் பசிப்பிணி இல்லை.

நமது அருகில் வாழும் எழை எளிய குழந்தைகள், முதிர் வயதில் கைவிடப்பட்டவர்கள், நோயுற்றோர் இவர்களுக்கு உதவுவது, ஆதரிப்பது, பராமரிப்பது இறைவனுக்கு செய்யும் பணிவிடையாகும்.

இவ்விதம் உதவி செய்பவர்கள் அறத்தை தன் எதிர்கால சேமிப்பாக பெறுவார்கள்.

மழை தரும் மேகம் நன்றியை எதிர்பார்பதில்லை. சூரியன் நல்லவர், தீயவர் எனப் பேதம் பார்த்து ஒளியை வீசுவதில்லை.

அதுபோல நல்ல பண்புடையவர்களிடம் உள்ள செல்வம் ஊருக்கு மத்தியில் அமைந்த கனிதரும் மரமாக, தாகம் தீர்க்கும் நீருற்றாக யாவருக்கும் பயன்படும்.

இந்த கதை இவ்வாக்கியத்தின் பொருளை எளிமையாக புரிந்துகொள்ள உதவும்.

ஸர் ஃபிலிப் ஸிட்னி என்ற பெயருடைய ஆங்கிலப் போர்வீரர் ஒருவர் இருந்தார். அவர் எதிரிகளுடன் யுத்தம் செய்த காலத்தில் குண்டு பட்டு அதனால் பலத்த காயமுற்று கீழே விழுந்து விட்டார்.

அந்த வேளையில் அதிக களைப்பினால் அவருக்கு தாங்க முடியா அளவு தண்ணி தாகமெடுத்தது. அதனால் அவரின் படைவீரர்கள் சிலர் அவரின் அந்த தாகத்தை தணிக்கவென்று பல இடங்களிலும் தண்ணீரைத்தேடி கடைசியில் வெகு தூரத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை ஒரு சிறு கிண்ணத்தில் கொண்டு வந்தனர்.

அவர் அந்த நீரை அருந்தப்போகும் சமயத்தில் அவரின் அருகே படுகாயமடைந்து கிடக்கும் படைவீரன் ஒருவன் அந்த தண்ணீர் உள்ள கிண்ணத்தையே மிகவும் ஆவலோடு பார்ப்பதை கண்ட ஸர் ஃபிலிப் ஸிட்னி உடனே தன்னுடைய தாகத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு கொண்டு வந்த தண்ணீரை அந்த வீரனுக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

அந்த மரண அவஸ்தையிலும் தன்னால் இயன்றதை ஒளிக்காமல் உதவின இவரைப் போன்றோருடைய பெருமை எக்காலத்திலும் இவ்வுலகில் நிலைபெற்று நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.

இத்தகைய குணமுடையவர் நீடித்த புகழையும், இன்பத்தையும் அனுபவிப்பர்.

பிறர்க்கு உதவி செய்யும் குணத்தைவிட மேலானது எதுவும் இல்லை.

உலகில் கொடைப்புகழ் ஒன்றே என்றும் நிலைத்து நிற்கக்கூடியது.

கதை http://athichudi.blogspot.com இலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. நன்றி.

ஆறுவது சினம்.

🌸 ஆறுவது சினம்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்).


கோபம் நெருப்பைப் போன்றது. அதைக் கட்டுப்படுத்த தவறினால் சினமுற்றவரையே அழித்துவிடும்.

அது மனதின் மகிழ்ச்சியையும், முகத்தின் அருளையும் கெடுத்துவிடும்.

எளியவர் அல்லது வலியவர் எவரிடம் கோபம் கொண்டாலும் தீமையே பிறப்பிக்கும்.

எளியவர்மீது காட்டும் சினம் பாவத்தை தரும். வலியார் மீது கொள்ளும் கோபம் தீமை தரும்.

தன்னைவிடப் பிறரை உயர்வாக போற்றிப் புகழும்போது மனம் கொதித்து சினம் ஏற்பட்டால் அது பொறாமையின் அறிகுறி.

தனக்குக் கிடைக்காத ஒன்று பிறர்க்கு கிடைத்து விட்டதை எண்ணி மனம் புழுங்கி அமைதி இழந்தால் அதுவும் பொறாமையால் ஏற்படும் சினம்.

பிறர்க்கு உரிமையானதொரு பொருளை அபகரிக்க முற்படுவதும், அதை அவர் தர மறுக்கும்போது எழும் ஆத்திரம் பேராசையின் விளைவு.

சரியோ, தவறோ தான் விரும்பும்படிதான் செயல்கள் நடக்க வேண்டும் என எண்ணுவதும், அவ்விதம் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லையெனில் ஏற்படும் கோபம் தற்பெருமை, சுயநலம் மற்றும் அகந்தையால் நிகழ்வதாகும்.

ஆக கோபம் என்பது பொறாமை, பேராசை, கர்வம், அகந்தை, தற்பெருமை இவற்றின் பக்கவிளைவுகளாகவும் நிகழ்கிறது.

இவ்வித உணர்வுகள் நமக்குள் இருந்தால் தவறையுணர்ந்து சரி செய்வது நல்லது. இல்லையெனில் அத்தகைய கோபம் நம்மை அழித்துவிடும்.

இத்தகைய அநீதி, பாவம் போன்றவற்றிற்கெதிரான நியாயமாக கோபமடைவது நல்லதுதான்.

ஆனால் அற்பமானவற்றிற்காகவும், நம்மை அவதூறு பேசுகிறவர்களுகெதிராகவும் கோபப்படுதல் நல்லதல்ல.

அத்தகைய சூழலில் கோபமாய் இருக்கும்போது சண்டை போடாதீர்கள்.

நலமானவற்றையும் பேசாதிருங்கள்.

கோபம் ஏற்படுத்தும் இடத்தைவிட்டு அகலுங்கள்.

அமைதியும் பொறுமையையும் கடைப்பிடியுங்கள்.

கோபத்தைத் தவிர்க்க சிறந்த வழி அன்பு செலுத்துதல். எளியவர்க்கு உதவி செய்தல், பொறுமையோடு காத்திருத்தல்.

நமக்குத் தீங்கு செய்பவரை மன்னிக்கும்போது நமக்கு நாமே நன்மை செய்து கொள்கிறோம்.

தீமை புரிபவர், சுயநலமிக்கவர், ஏமாற்றுபவர், பொய் பேசுபவர், மாய்மாலமாக நடிப்பவர் இவர்களை விட்டு தூரமாக விலகி வாழ்வது நல்லது.

மணி, நாள், மாதம் ஏன் சில வருடங்களில் பொறுமையுடன் நன்மை செய்து காத்திருந்தால் கோபம் ஆறும்.

ஆறுவது சினம்.

வெள்ளி, 8 டிசம்பர், 2017

அறம் செய விரும்பு

1. அறம் செய விரும்பு


“அறம் செய விரும்பு” என்றால் “தனி மனித ஒழுக்கம்”* கடைப்பிடிக்க விரும்பு.

ஆழ்ந்த சிந்தனையும், நிலைத்த தேடலும் அவசியம் என்பதை உணர்த்தும் சொல் “அறம்”.

கடவுளை இப்படித்தான் என்று வரையறுக்க முடியாது.

இறைவனை இப்படிக் கூறுவது சரி, இப்படிக் கூறுவது தவறு என்ற விவாதத்தைத் தவிர்த்தபின்

"சூக்கும வடிவத்தில் கடவுள் என்றால் செயல் வடிவத்தில் அறம்"*.

எது அறம்?


மனதை தூய்மையாக வைத்திருப்பதே அறம்.

ஆசையில்லாமல் இருப்பதே மனத்தூய்மையாகும்.

உண்மையாக நடந்தால் ஆசை வராது.

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாத செயல்களே அறச்செயல்கள்.

ஏழையர், அனாதைகள், உறவினரால் கைவிடப்பட்டவர்களை ஆதரிப்பதுடன் இறந்தவர்களுக்கான நீத்தார் கடனையும் செய்யவேண்டியது இல்லறத்தானின் அறம்

ஒருவரைக் கண்டவுடன் முகம் மலர வரவேற்று மனதார இனிய மொழிகள் பேசுவதே அறம்.

பகை, நட்பு பாராமல் நடுநிலைமையில் நின்று முடிவு சொல்வது என்பதும் சிறந்த அறமாகும்.

ஒருவனுடைய நிலைமாறாத அடக்கம் அறமாகும்.

செருக்கினால் பிறர் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்ளுதல் சிறந்த அறமாகும்.

அறங்களுள் மிகச் சிறந்த அறம் கொல்லாமை. அடுத்த அறம் பொய்யாமை.

இதன் பொருள் அன்பும், உண்மையையும் கடைப்பிடிப்பதை மிஞ்சி வேறு ஒரு சிறந்த தர்மம் எதுவுமில்லை.

திங்கள், 4 டிசம்பர், 2017

புதிய பாதை - அழகிய பயணம் .

புதிய பாதை - அழகிய பயணம் .





ஒரு புதிய வருடத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டோம். மறுபடியும் நீள்வட்டப் பாதையில் ஒரு புதியப் பயணம் துவங்க இருக்கிறது.

தேடலின் பாதையில் பயணிப்பவர்க்கு வாழ்க்கை என்பது தொடர்ந்து கற்றுக்கொண்டே முன்னேறுவதுதான்.  கடந்து சென்ற வருடத்தின் அனுபவங்கள் நிச்சயம் பல புதியப் படிப்பினைகளை நமக்குக் கற்றுக்கொடுத்து இருக்கும்.

வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி இடைவிடாது நிகழ்ந்து மனதில் பல புதிய அனுபவங்களைப் பதிவு செய்கிறது. 

நம்முடைய நம்பிக்கைகளின் அடிப்படையில் மனம்  அதை நன்மை, தீமையென இனம் பிரித்து, தரம் பிரித்து ஆழ்மனதில் சேமித்து வைக்கிறது.

இயல்பாகவே மனம் மகிழ்ச்சிதரும் பாதையில் செல்லவேத் துடிக்கிறது.

ஆனால் துன்ப அனுபவங்களும், ஏமாற்றங்களும், தோல்விகளுமே நம்மை முதிர்ச்சியான மனநிலைக்கு நேராக வழிநடத்துகின்றன.

குறிப்பாக நன்மை செய்து, நேர்மையாக வாழ்பவர்கள் வாழ்வில் இடைப்படும் துன்ப நிகழ்வுகள், அவர்களைப் பொன்னை புடமிடுவதுபோலப் புடமிட்டு மாசு மருவற்றவர்களாக மாற்றி ஒளிவீசச் செய்கிறது.

நேர்மையானவர்களை துன்பப்படுத்துபவர்கள் உண்மையில் அவர்களுக்கு நன்மையையே செய்கின்றனர். அவர்கள் நல்லவர்களை மேலும் தூய்மையாக வாழும்படி தூண்டுகின்றனர். அவர்கள் மனதில் திட சங்கல்பத்தை உருவாக்குகின்றனர்.

ஒவ்வொரு வெற்றிக்குப் பின்பாகவும் ஒரு வலியும், அவமானமும், நிராகரிப்பும் நிச்சயம் மறைந்திருக்கும்.

அடிப்படை சத்தியம் 


இந்தப் பிரபஞ்சம் ஒரு நேர்த்தியான ஒழுங்குமுறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பிரபஞ்ச சக்தியோடு மனித மனம் தொடர்பு கொள்ள மூன்று அறநெறிகள் முக்கியம்.  

அன்பு, உண்மை, ஒழுக்கம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு செயல்களுக்கான எதிர் விளைவுகளில் மாறத்தன்மையுடைய ஒர் ஆதாரமான  அடிப்படை விதி உள்ளது. 

நன்மை செய்பவர் எவ்வளவு துன்பத்தையும், அவமானத்தையும் சந்தித்தாலும் இறுதியில் புகழையும் மேன்மையும் அடைவர்.

தீமையின் வழியில் செல்பவர் எவ்வளவு இன்பத்தில் மூழ்கித் திளைத்தாலும் இறுதியில் அவமானத்தையும், பரிகசிப்பையும் தீராப் பழியையும் அடைவர்.

இஃது எந்த யுகத்திலும் மாற்றவே முடியாத சத்தியம்.

நல்லது.

இந்தப் புரிதலின்அடிப்படையில் வருகின்றப் புதிய வருடத்தின் சில நல்லத் தீர்மானங்களை எடுத்து அதை நம்  வாழ்க்கையில் கைக்கொள்ள முயற்சிக்கலாமே.

🔸 இயற்கையைப் போற்றுவோம்.


இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் உரிமையானது. ஒவ்வொரு உயிரினமும் மற்றொன்றைச் சார்ந்தே ஜீவிக்கின்றன. இயற்கையின் படைப்புகள் போற்றப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும். 

இதற்கு நம்மால் எவ்விதம்  ஒத்தாசையாக உதவ முடியும் எனச் சிந்திப்போம். 
நம் முன்பாக ஆயிரம் வாய்ப்புகள் உள்ளது. 
ஒரு சிலவற்றை கடைப்பிடிக்க பிரதிக்ஞை எடுப்போம்.

🔹 மனநலம் மேம்பாடு


உயர்ந்த எண்ணங்களே மேன்மையான வாழ்வுக்கு அச்சாரம். 

ஆனால் மனதின் ஆசைகளும் விருப்பங்களுமே நமது சிந்தனையின் போக்கைத் தீர்மானிக்கிறது. 

நமது ஆழ்மன விருப்பங்கள், தேடல்களே நமது  குணங்கள் மற்றும்  பண்புகளாக பரிமளிக்கிறது.

ஆகையால் நாம் எதை விரும்புவது நல்லது என்பதை உணர்ந்துகொள்ளப் புத்தி அவசியமாகிறது. 

பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி.

இறை நம்பிக்கை மற்றும் சிறந்த நூல்கள் புத்தியை தெளிவிக்க உதவுகின்றன.

கடவுளுக்குப் பயப்படுதலும், அவருக்குப் பிரியமாக வாழத் துவங்குவதுமே ஞானத்தின் துவக்கம். 

மனதை மேம்படுத்தும் பலவித உபாயங்களைப் பிரியமுடன் தேடி அவற்றுள் சிலவற்றை அனுதினம் பின்பற்றத் தீர்மானியுங்கள்.

🔸 உடல்நலம் மேம்பாடு.


சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். 

நல்ல தேக ஆரோக்கியமே மகிழ்ச்சியான வாழ்வின் அடிப்படை. 

உடல் நலம் பிரதானமாக மூன்று காரியங்களை உள்ளடக்கியது.
  • உணவு
  • உடற்பயிற்சி
  • ஓய்வு.
  • உணவு குறித்து விழிப்புணர்வு ஊட்டும் ஏராளமான கட்டுரைகள் உண்டு. சிறந்த உணவுப் பழக்கத்தை பின்பற்றத் தீர்மானியுங்கள்.
  • நடைப்பயிற்சி, விளையாட்டு, தியானப் பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி, மலையேற்றம், நீச்சல் என எதாவது ஒன்றைக் கிரமமாக செய்யத் துவங்குங்கள். நேரம் இல்லை என உதாசினம் செய்தால் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்பட வேண்டியதாக இருக்கும்.
  • ஓய்வு என்பது பொழுதை போக்குவது அல்ல. சும்மா முடங்கிக் கிடப்பதும் அல்ல.  பொழுதைப் பயனுள்ளதாக்குவது. 
எந்த ஒரு செயல் உங்களுடைய மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறதோ அதுதான் பரிபூரண ஓய்வு.

இயற்கையின் அமைதியில் நீண்ட நெடியதொரு நடை, புண்ணியத்தலப் பயணங்கள், கடற்கரையின் காற்று, உறவினர், நண்பர்கள் கூடுகை, எளிய மனிதர்களுக்கான சேவையில் பங்கெடுத்தல், சமுக மேம்பாடு குழுவில் அங்கம் வகித்தல், கலை சார்ந்த படைப்புகள் படைத்தல் என நல்ல பயனுள்ள முறையில் ஓய்வுநேரத்தைச் செலவிடும் செயல்களில் ஈடுபடத் தீர்மானிக்கலாம்.

நல்ல தீர்மானங்களை எடுத்து வாழ்வு பயனுற அமையட்டும்.

வாழ்க வளமுடன்.

சனி, 11 நவம்பர், 2017

நினைவுகளே வாழ்க்கை

நினைவுகளே வாழ்க்கை




நல்ல நினைவுகளே வாழ்க்கையை இனிமையாக்குகிறது.

மகிழ்ச்சி  என்பது ஒரு செயலில் ஈடுபடும் பொழுது அந்தத் தருணத்தில் உணர்வுகளில் ஏற்படுத்தும் இனிமையான அனுபவம் மாத்திரம் அல்ல.

மாறாக நாம் அனுபவித்த சம்பவங்கள் ஏற்படுத்திய உணர்வலைகளை மீண்டும் மனத்திரையில்  நினைவு கூறும்போது அஃது ஏற்படுத்தும் மனநிறைவே உண்மையான நீங்காத ஆனந்தம்.

இளமையில் கற்றல் :


வாழ்க்கை கல்வி அனுபவங்கள் வழியாகவே நிகழ்கிறது. அனுபவங்கள் கற்றுத் தரும் சுகம், துக்கம், எச்சரிக்கை, விழிப்புணர்வு மனதில் உணரும்போது மட்டுமே வாழ்க்கையில் சரியான திசையில் பயணிக்கிறோம்.

சிறு வயதில் அடைந்த சில அனுபவங்களை இன்று நாம் நினைத்தாலும்கூட அவை மனதுக்குத் தரும் ஆனந்தத்தை அளவிட முடியாது.

அந்தப் பருவத்தில் மகிழ்ச்சி அடைவதற்கு மிகப் பெரிய மெனக்கெடுதல் தேவையில்லை. எளிய நிகழ்வுகளே போதுமானது.

இன்றும்கூட அவற்றை நினைவு கூர்ந்தால், உதட்டோரம் அரும்பும் புன்னகை மனதை இலேசாக்குகிறது.

அனுபவங்களே கற்பிக்கின்றன..,


அப்போது  கிராமப் பின்னணியில் வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கை பல இனிமையான அனுபவங்களை வாரி வழங்கியது. பெரும்பாலும் ஊரைச் சுற்றி குளம், ஏரி, வாய்க்கால், வயல் என இயற்கை வளம் சூழ்ந்திருக்கும். ஆகையால்  விடுமுறைகள் அநேகமாகத் தண்ணீருக்குள் நீச்சல் தான்.

சமூகத்தில் தன் குழந்தை மட்டும்தான் சிறந்து இருக்க வேண்டும் என்கிற இன்றைய பொதுப்புத்தி அன்று இல்லை. படிப்புதான் வாழ்க்கை என்பதும் கிடையாது.

குழுவாக, நண்பர்களாக அலைந்து, திரிந்த இனிமையான வருடங்கள் அவை.
நண்பர்கள் படைசூழ விளையாடியது, சுள்ளி பொறுக்கி மரவள்ளிக்கிழங்கு சுட்டு தின்றது, மாங்காய், புளி மரத்தில் அடித்துத் தின்றது, வாடகைக்குச் சின்ன சைக்கிள் எடுத்து ஊர் சுற்றியது, ஐயனார் கோவில் தோப்பில் மரத்தில் ஏறி, இறங்கி விளையாடியது என இனிய நினைவுகளுக்குப் பஞ்சமில்லை.

பொதுவாக மாணவப் பருவம்  சுவாரஸ்யமான வெட்டிக் கதைகள், ஆர்வமாய் படித்த கதைகள், எதிர்காலத்தில் என்னவாகப் போகிறோம் எனும் கனவுகள், கவிதை எழுதும் ஆர்வம், எதிர் பால் நட்புகள் மீது இருந்த அதீத ஆர்வம் எனச் சொற்களுக்குள் சொல்ல இயலாத வாழ்வாகத் திரிந்த பருவம்.

வீட்டில் நிகழ்ந்த விசேஷங்கள், உறவினர்களின் பட்டாளத்தோடு செலவழித்த குதுகலமான நேரங்கள்,   சிறு சிறு சண்டைகள், பிரிவுகள் என வாழ்க்கையில் எத்தனை எத்தனைச் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பாடமாக நமக்குப் போதிக்கப்பட்டது...,

நம்மையறியாது வாழ்க்கையின் மனித உறவுகளைப் பற்றிய பல மதிப்பீடுகள்  இத்தகைய அனுபவங்கள் வழியாகவே மனதில் ஆழமாக ஊடுருவிப்  பதிந்துள்ளது. 

வாழ்க்கை கல்வி :


கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நிகழ்வது. அது முடிவற்றது.

வாழ்க்கையில்  தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்கும்போதுதான் கற்றல் துவங்குகிறது.

முதிர்ச்சி என்பது  வயது கூடுவதால் வருவதல்ல. தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்தாலும் நேர்மை பிறழாது வாழ்வைத் தொடர்ந்தால் மட்டுமே நிகழ்வது.

வாழ்க்கையின் யதார்த்தம் நமக்குப் பிடிபடும்போது அவை நம்மைக் கனவுகளில் இருந்து விடுதலையாக்குகின்றன.

இளம் வயதுக்கான அந்த Innocence, ignorance, எதையும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற பேதமைத்தன்மை மறைகிறது. வாழ்க்கையின் இன்பத்திற்கான புரிதல் தொடங்குகிறது.

இங்குதான் நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்புமைப்படுத்தி வெற்றி , தோல்வி எனப் பகுத்து நிதானிக்கின்ற  தன்மை மேலோங்குகிறது. கற்றல் புதுப்பிக்கப்படுகிறது. 

அத்துடன் சமுக அங்கீகாரத்திற்கானப் புதிய அளவுகோல்கள் நமக்கு புலனாகின்றன. பேச்சு மட்டுப்படுத்தப்படுகின்றது. 

உரையாடல்களில்  எந்த ஒரு செயலுக்கும் உள்ள எதிர்வினை உணர்ந்து, நம் வார்த்தைகள் இதயத்தில் இருந்து பிறக்கின்றன.

இப்போது நாம் எந்த ஒருச் செயலைச் செய்தாலும்,  மனதின் ஒரு மூலையில்  எதிர்வினையாக நிகழப்போகும் காரியங்கள் தோன்றி நம்மை எச்சரித்துக் கட்டுப்படுத்துகிறது. பொறுப்புணர்வின் அளவு இங்கு தீர்மானிக்கப்படுகிறது.

இதுவே கீர்த்தியையும் அவமானத்தையும் நிர்ணயிக்கிறது.

மகிழ்ச்சியின் பாதை : 


வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி என்பதை அடைய எந்தக் குறுக்கு வழிகளும் இல்லை.

மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை விரும்பினால் நல்ல அனுபவங்களை அளிக்கும் செயல்களை மட்டும் செய்தல் வேண்டும்.

எவை நல்ல அனுபவங்களை அளிக்கும் செயல்கள்?

நமது இலக்குகளை அடைய எடுக்கும் முயற்சிகள், 
எளியவர்க்கு ஆற்றும் சேவை, 
தன்னலமற்ற உதவி, 
தேடுதல் நிறைந்த பயணங்கள், 
கலை சார்ந்த இரசனை, 
படைப்புகளை நேசிக்கத் தூண்டும் வாசிப்பு, 
ஆன்மீக தேடல்கள், 
பொறுப்புக்களை நிறைவேற்றுதல்,  
நல்ல  உறவுகள், 
சிறந்த நட்புவட்டம்..., 

இவை கற்றுத்தரும் அனுபவங்களே,  நினைவுகளே வாழ்க்கையை இனிமையாக்குகிறது.

தீமையின் பாதை :

தீமையின் பாதையில் நடப்பவர் இந்தக்  குணங்களை வெளிப்படுத்துவர்.
பிறரை ஏய்த்தல், அவர் உழைப்பைச் சுரண்டுதல், பொய்பேசுதல், பிறர் பொருள் இச்சித்தல், திருடுதல், குற்றத்தை நியாயப்படுத்துதல், கேளிக்கை, ஆடம்பரம், வீண் பெருமை, பிறரை இகழ்தல்..,

இப்படி வாழ்பவர்கள் தீராப் பழியும், அவமானமும், கடும் துயரத்தையும் வாழ்வின் இறுதியில் அடைவர்.

நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் :


நமது தூய்மையான இலக்குகளை அடைவதற்காகப் பயணிக்கும்  பாதையில் எதிர்ப்படும் கடினமான  தடைகள், வடிக்கும்  கண்ணீர், உழைப்பில் வெளிப்படும் வியர்வை, தோல்விக்கு அஞ்சாது செய்யும்  இடைவிடா முயற்சி இவை தரும் அனுபவங்கள் மிக மிக இனிமையானது.

ஆனால் நாம் பிறரை ஏமாற்றும்போது என்றாவது ஒரு நாள் அதின் பிரதி வினையாகத் துக்கத்தை அடைவோம்.

பிறர்க்குத் தீங்கு விளைவிக்காது நல் முயற்சியோடு வாழும்போது மிகச் சிறந்த அனுபவங்கள், நட்புகள் கிடைக்கும்.

அப்போது வாழ்க்கையில்  நமது விருப்பம், சிந்தனைக்கு இசைந்த  ஒத்த அலைவரிசையில் உள்ள நபர்கள் மட்டுமே நம்மை வந்தடைவர். 

அவர்களோடு மட்டுமே நம்மால் உண்மையான மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.

தூய்மையான வாழ்வின் முடிவில் இணையற்ற வெற்றியையும், ஆழ்ந்த அறிவையும், நிகரில்லா தன்னடக்கத்தையும், ஒழுக்கத்தின்மீது தீராத பற்றையும், எல்லையில்லா ஆனந்தமும் உறுதியாக அளிக்கும்.


இந்த உண்மையைப் புரிந்து உணர்ந்து செயலாற்றுவதே மகிழ்ச்சியும் அமைதியும்.


வாழ்க்கை என்னும் வட்டப் பாதை முடிவுக்கு வரும்போது நல் நினைவுகளின் மீட்சியே மனநிறைவையும்,  மகிழ்ச்சியையும் அளிக்கும்.