வெள்ளி, 15 டிசம்பர், 2017

ஐயம் இட்டு உண்

🌸 ஐயமிட்டு உண்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


9. ஐயம் இட்டு உண் : 

ஐயம்’ என்ற சொல்லுக்கு ‘ஈதல்’ (கொடுத்தல்) என்று பொருள்.

இல்லை என்று வந்த ஏழைகளுக்கு உணவைப் பகிர்ந்து அளித்துவிட்டு பின்பு தானும் உண்ண வேண்டும் என்பது இதன் பொருள். 

இல்லாதவர்களின் பசிப்பிணி நீக்குவது தருமங்களுள் சிறந்தது.

இல்வாழ்க்கையின் தலையான கடமை ஏழையர், அனாதைகள், உறவினரால் கைவிடப்பட்டவர்கள், பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர்கள், துறவிகள், வானப்பிரஸ்தயோகிகள் இவர்களுக்கு உதவும் அறமுமே ஆகும்.

மரணத்திலிருந்து மீட்கும் அமுதமே ஆயினும் வந்த விருந்தினருக்கு அளிக்காமல் தான் மட்டும் சாப்பிடுதல் விரும்பத்தக்கதல்ல.

விருந்தினரை வரவேற்று உபசரித்து வாழ்பவனை வறுமை வருத்தாது.

பொருள் சம்பாதித்து வாழ்வது விருந்தினரை, ஏழைகளை உபசரிப்பதற்காகவே ஆகும்.

விருந்தினருக்கு உணவளித்து, மீதியிருப்பதை உண்பவனுக்கு நிலவளம் கூடும். விளைச்சல் பெருகும்.

வந்து செல்லும் விருந்தினருக்குப் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி, புதிதாக வரும் விருந்தினரையும் உவகையுடன் வரவேற்று உபசரிப்பவன், மறுபிறப்பில் தேவனாகி வானில் தேவரால் மதிப்புடன் வரவேற்கப்படுவான்.

பாடுபட்டுப் பணம் தேடி, விருந்தினரை உபசரிக்காதவர்களுக்கு இறுதியில் இந்த உலகத்திலும், பின் மேல் உலகத்திலும் உதவுவதற்கு எவரும் இருக்க மாட்டார்கள்.

பணம் இருந்து உபசரிக்க மனமற்றவன் ஏழையே.

விருந்தளித்தலும் யாகம் போன்றது. பெருமைக்காக, சுய கவுரத்துக்காக செய்யப்படும் மகத்தான விருந்தைவிட, உண்மையான மனதோடு செய்யப்படும் சிறு உபசரிப்பு பற்பல கோடி மடங்கு உயர்வானது.

இதை விளக்கும் சிறு கதை மகாபாரதத்திலிருந்து :



மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர் பிறரால் எளிதாகச் செய்ய இயலாத அசுவமேதமென்கிற யாகம் ஒன்று செய்தார்.

பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில் மேன்மை அடைந்த வேதியர்களும், தவ சிரேஷ்டர்களும், முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.

அந்தச் சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு தங்கம் போலப் பிரகாசிக்க அங்கு வந்து வெள்ளமாய் ஓடும் தானம் செய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது.

அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!

தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து :

"கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?
இங்கு வந்து ஏன் இப்படிப் புரளுகிறாய்" என்று கேட்டார்.

இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

“ஐயா அரசரில் சிறந்தவரே! நான் வசித்துவரும் காட்டில் ஓர் ஏழை முனிவர் 
தமது மனைவி, மகன், மருமகளோடு வாழ்ந்து வந்தார்.

காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவையே அவர்களுக்கு உணவு.

ஒரு தடவை மழையே இல்லாமல் இவையும் கூடக் கிடைப்பது அரிதாகி விட்டது.

அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை சிறிது சிறிதாகச் சேகரித்து அதனை மாவாக அரைத்து சாப்பிட்டார்கள்.

சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.

ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது தானியங்களைச் சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்போகும் சமயத்தில்,

எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து ”ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி விட்டது, பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது அளிக்கவேண்டும்” என்று மிகவும் கெஞ்சி பிச்சைக் கேட்டு நின்றார்.

கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக் கூட முடியவில்லை.

அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து உபசரித்தார்.

அஃது அந்த முதியவருக்கு போதவில்லை,  அதை அறிந்த மற்ற மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.

முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை மனதார வாழ்த்திச் சென்றார். அவர் அந்த இடத்தை விட்டுச் சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம் ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.

அன்ன ஆகாரமின்றி பற்பல இடங்களிலும் அலைந்து திரிந்து பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு நடந்த அதிசயங்களைக் கண்டேன்.

பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த மாவை உண்ணும்போது அஃது என் மேலெல்லாம் ஒட்டிக்கொண்டது.

அந்த மாவு ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம் மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!

அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன். 

பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்தத் தருமத்தின் சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே” என்று கூறிய கீரி மேலும்..

”எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்.

ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள் மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது, ஆதாலால் நீங்கள் செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி பூஜையே மிகவும் சிறந்தது!” 

என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச் சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்சென்றது கீரிப்பிள்ளை.

நீதிக்கதை நன்றியுடன்http://athichudi.blogspot.com

12 கருத்துகள்:

  1. அருமை அன்பரே....அங்கனமே செய்வோம்

    பதிலளிநீக்கு
  2. ஆத்திசூடி தொடரட்டும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. தானத்தில் சிறந்தது அன்னதானம்.போதும் என்று சொல்வது வயிறு நிரம்பியவுடன் பிற தர்மம் எவ்வளவு செய்தாலும் இன்னும் கிடைக்குமா எனப்பார்க்க வெக்கும்‌.கீரியின் உவமையுடன் நல்ல விளக்கம்.அருமை. ஔவைக்கு அதியமான் வழங்கிய நெல்லிக்கனியும் நல்ல எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். பசித்தவர்க்கு, எளியவர்க்கு அன்னதானமிடுவது சிறந்த தானம். அது கடவுளுக்குச் செய்வதற்குச் சமம். விரிவான கருத்துக்கு நன்றி நுஸ்ரத்.

      நீக்கு
  4. நம் வருங்கால குழந்தைகள் இதைப் படிக்கும் பாக்கியம் வேண்டுமே. ஆத்திச்சூடி படித்துப் நயன் பெற சாயி அருளட்டும்

    பதிலளிநீக்கு