திங்கள், 1 ஜனவரி, 2018

நன்றி மறவேல்

🌸 நன்றி மறவேல். 

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)


21. நன்றி மறவேல் :

ஒருவர் நமக்குச் செய்த உதவியை ஒருபோதும் மறக்கக்கூடாது.

ஒருவர் பிறர்க்கு செய்யும் நல்ல செயல்கள் என்றும் நன்மை பயக்கும்.

இத்தகைய நல்ல செயல்களே நன்று என்பதாகும்.

நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது.

இவ்விதம் நாம் பிறர் வழியாகப் பெற்ற உதவிகளை, அதன் மூலம் அடைந்த நன்மைகளை மறக்கக்கூடாது.

அவர்களுக்குத் திரும்ப பதில் நன்றி செய்வதற்கு எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும்.

இவ்விதம் திரும்ப செய்யவேண்டும் என்று எண்ணுவதுதான் மறவாமை.

அதற்குப் பெற்றுக்கொண்ட உதவியின் மதிப்பை உணர்வதே  முதல் படி.

அப்படி உணர்ந்தோமேயானால் உதவி செய்தவருக்கு நன்றி பாராட்டுவதும், வேறோருவருக்கு இப்படியான சந்தர்ப்பத்தில் நாமே முன்வந்து தேவையான உதவியை செய்வதாகவும் அமையும்.

இதுவே அறம்.

நன்றி என்ற அறம் போற்றும் மற்றுமோரு ஒளவையார் அருளிய செய்யுள் ’மூதுரை’யிலிருந்து

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

நிலைபெற்றுத் சோர்வடையாது வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் பருகிய தண்ணீரைத் தன் மர உச்சியில் சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், ஒருவரின் உதவியை நாம் மறவாமல் நன்றி பாராட்டவேண்டும்.

'நன்றி' பற்றி பகவத்கீதை கூறுவது:


‘கர்மத்தை செய், பலனை என்னிடம் விட்டு விடு’.

அஃதாவது 'உன்னுடைய செயல்கள் நன்மை செய்வதானால்' அதை யாருக்கு வேண்டுமானாலும் செய்.

‘எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்து கொண்டே இரு’.

அதுவே சுதர்மம்.

நன்மை செய்வது என்று தீர்மானித்து விட்டால் நன்றி கெட்டவனுக்குக்கூட செய். 

காரணம், நீ செய்யும் நன்மை ஏதோ ஒரு வடிவத்தில் மிக்க பலனோடு உனக்கு திரும்பி வருகிறது.

அவன் செய்கிற தீமை வட்டியோடு அவனுக்கு போய்ச் சேருகிறது.

நன்றி பற்றிய கதை ஒன்று :

தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது.

அதன் மீது பரிதாபப்பட்ட ஒரு சந்நியாசி, அதை எடுத்து வெளியில் விட முயன்றார்.

அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது.

மீண்டும் அவன் எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று.

'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று ஒருவர் கேட்டார்.

சந்நியாசி சொன்னார்:

'கடைசி வரை அது தன் சுபாவத்தை விட வில்லை'.

அது போல 'நானும் நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை'

இதுவே சுதர்மம்.

'நன்றி' பற்றி திருக்குறள் :


'ஏதோ, உதவி செய்ய வேண்டும் என்று  எல்லோருக்கும் செய்யாதே.

யாருக்குச் செய்கிறோம் என்று அறிந்து செய்.

அதாவது நன்றியுள்ள ஒருவனுக்கு, உண்மையாகவே தேவைப்படுகிறவனுக்குச் செய்யப்பட வேண்டும்.

ஒருவர் நமக்குச் செய்த நன்மையைய் மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டுமே அக்கணமே மறந்து விடுவது நல்லது!!!


அனைவருக்கும் இனிய அன்பின்  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..,

2 கருத்துகள்:

  1. நன்றியை நாயிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்....நல்லது நண்பரே

    பதிலளிநீக்கு
  2. உண்மை.அதனாலேயே பலர் குழந்தையைப்போல் நேசித்து வளர்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு