திங்கள், 27 ஏப்ரல், 2020

வெளிச்சம் நல்லது.

உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! 


வெளிச்சம் பாதுகாப்பான உணர்வைத் தருகிறது. இருள் திகிலையும் பயத்தையும் ஏற்படுத்துகின்றன.

வெளிச்சம் நம்பிக்கையை அளிக்கிறது. இருள் தவிப்பையும், தடுமாற்றத்தையும், தத்தளிப்பையும் தருகிறது.

வெளிச்சம் உற்சாகத்தைத் தருகிறது. இருள் மனச் சோர்வை உண்டாக்குகிறது.

வெளிச்சம் மகிழ்ச்சி. இருள் துயரம்.

வெளிச்சம் புத்துணர்ச்சி.  இருள் முடக்கம்.

இருள் அகல வேண்டுமெனில் ஒளி உதிக்க வேண்டும். அதுவே ஒரே வழி.

நமது உடல் ஆலயம். உள்ளம் அதில் ஓர் விளக்கு. இறைமையின் ஊற்றில் மூழ்குபவர்க்கு எண்ணெய் நற்சிந்தனைகளாகச் சுரக்கிறது. வாழ்க்கை என்னும் திரி எண்ணெய்யில் தோயும்போது நற்செயல்கள் தீபமாக எரிந்து பிரகாசிக்கிறது.

இரவு கவிழ்ந்த சாலையில் தனியாக  நடக்கிறோம். மனம் பதற்றமடைகிறது. தெருமுனை முடிந்து வீட்டின் வெளிச்சம் கண்டவுடன் மனதில் நிம்மதி பிறக்கின்றது. பாதுகாப்பாக உணர்கிறோம்.

நள்ளிரவில் மீனவர்கள் படகில் திரும்புகிறார்கள்.  கலங்கரை விளக்கின் வெளிச்சம் தென்படுகிறது.  நம்பிக்கையும் உற்சாகமும் தொற்றிக் கொள்கின்றன.

காரிருளின் மின்னி மின்னி கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் உற்சாகத்தை, புத்துணர்வைத் தருகிறது.

நீல வானில் உலா வரும் நிலா கவிஞன் மனதின் கற்பனை சிறகை விரிக்க வைக்கிறது.

மலைகளின் மீது அமைந்த நகரம் அழகாகக் காட்சியளிக்கிறது. பனிபடர்ந்த பின்னிரவின் பொன்னிற ஒளியில் அது மனதை மகிழ்விக்கிறது.

வெளிச்சம் எத்தனை அழகு!

சிந்தனைக்கு இரு கேள்விகள் :

எவை  பாதுகாப்பு, நம்பிக்கை, உற்சாகம், புத்துணர்வு, மகிழ்ச்சியை  நமக்கு எப்போதும் தருகின்றது?

நாம் பாதுகாப்பு, நம்பிக்கை, உற்சாகம், புத்துணர்வு, மகிழ்ச்சியை  நம்மைச் சுற்றி வாழ்பவர்க்குத் தருகிறோமா?

சிறந்த வாழ்க்கை என்பது எரிந்து பிரகாசிப்பது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். 

*******   *******   *******

Thoughts from Bible Sources [St. Mathew 5:14-16, St. Mark 4:21-22, St. Luke : 8:16, 11:33]

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

வியாழன், 23 ஏப்ரல், 2020

உன்னோடு நீ பேசு.

காலமும் கதைகளும்



எங்கே அது புறப்பட்டதோ,
அங்கே அது திரும்ப வேண்டும்.

செயல்களின் விளைவுகளால்
ஓர் உரு மாற்றத்தைத் தேடி
அது பயணிக்கிறது.

அறிந்தோ, அறியாமலோ,
விரும்பியோ, விரும்பாமலோ
நாம் எழுதிய கதைகளில்
இருந்தே நாடகத்தின்
காட்சிகள் விரிகின்றன.

காலவெளியில்
பயணிக்கும் செயல்கள்
குறித்த நேரத்தில்
திசை திரும்பி
வளைய வருகிறது.
வளைக்க வருகிறது.

தாமதமும் அல்ல,
விரைவாகவும் அல்ல,
அது அதன் நேரத்தில்
சரியாகவே வருகிறது.
அவை எதிரொலிகள்.

எதிர்வினை சங்கடங்கள்
சந்திக்க நேரிடும் போது
மனதை அமைதியாக்கு.

வலி  மிகும் நேரங்களில்
வருத்தத்தை ஏற்றுக்கொள்.
உண்மை உணர விரும்பினால்
உள் நோக்கி உற்றுப் பார்.

அறியாமை இருளில்,
மதி மயக்கத்தில்,
வலி உணராது வலி தந்ததும்,
வலி அறிந்தும் அலட்சியமாகப்
பயணித்த மூட வருடங்கள்
சட்டென நினைவு திரைகளில்
காலம் அல்லவோ
மறு ஒளிபரப்பு செய்கிறது.

தேவை அது செய்யவில்லை,
செய்தவை பல தேவையற்றது.

அன்று காலம் பொறுமையுடன்
அமைதி காத்தது.

இன்று,
கற்றுக் கொள்வாயா?
கடந்து செல்வாயா?
எதைத் தெரிவு செய்வாய்?
தெரிந்து கொள்ளக்
காலமும் ஆவலுடன்
காத்திருக்கிறது.

மனித மன மாற்றங்களை
உருவாக்குவதும்,
நகைப்பதும்,
இரசிப்பதும்,
தாழ்த்தி உணர்த்துவதும்,
உயர்த்தி மகிழ்வதும்
காலத்தின் திருவிளையாடல்.

அது சுழன்று சுழன்று
ஓயாமல் படிப்பிக்கிறது.
மாற மனமிருந்தால்
அனுபவங்களும் ஆசான்.

அதுவே விழிப்பு.
அதுவே சாட்சி.
அதுவே சப்தம்.
அதுவே உள் ஒளி.

தனிமைச் சிறையில்
கர்ம சங்கிலி அறுபடுகிறது.
புதிய கதைகள் எழுத
வாசல்கள் திறக்கப்படுகிறது

மீண்டும் நடிக்கத் துவங்கும்முன்
புரிந்து கொள், 
அவைதான் எதிர்காலத்தின் நீ.

சிறந்த கதைகள்
வசீகர எழுத்துக்களால்
கோர்க்கப்படுவதில்லை.
வலிகளினால்
செதுக்கப்படுகின்றன.

மதிப்புமிகு வேடம்
அணிய விரும்பினால் :

புத்தி தெளிந்து,
தவற்றை உணர்ந்து,
மனம் வருந்தி,
பற்கள் கடிக்காது,
பொங்கி எழாது,
நியாயப்படுத்தாது,
வலியைப் பொறுத்து,
உண்மை உணர்ந்து,
பொறுமையுடனும்,
பொறுப்புடனும்,
சரியான பாதையைத்
தெரிவு செய்.

இடுக்கமான வாசல் வழிப் 
பயணம்தனை தொடர்.
அழிவின் வாசல் விசாலம்,
அதில் பயணிப்பவர் அநேகர்.

கரடு முரடான பாதைகளில்
பயணிக்க விழிப்புணர்வு தேவை.
நீரின் போக்கில் நீந்துவது எளிது.

விட்டு விட வேண்டியது எது?,
தொட்டுத் தொடர வேண்டியது எது?
என அறிவதை விட
வாழ்வின் மேன்மை தான் என்ன?

வந்த வண்ணமே செல்வதற்கு 
எதற்கு இங்கு வர வேண்டும்?

இச்சைக் குதிரைகள்
ஐந்தின் கடிவாளத்தை
மனதிலிருந்து வேரறுத்து
புத்தியின் வசம் ஒப்படை

ஒழுங்கு படுத்து.
கற்றுக் கொள்.
கடைப்பிடி.
நிலைத்திரு.

இன்று நீ
தனித்திருந்து சீர் செய்வது
நாளைய சிறப்புப் பக்கங்கள் .

நீ விரும்பும்
உனது கனவுகளை
உறங்காது சிந்தையில் எழுது.

எழுதத் தவறியவர்களும்,
இயலாத சோம்பேறிகளும்
பிறரது கதையின்
துணை கதாபாத்திரங்களாக
மட்டுமே வலம் வர முடியும்.

துயரத்தில் உதித்த
கண்ணீர் நதியின்
நினைவுத் தடங்கள்
வறண்டு வற்றி
தழும்புகளாக உருமாறட்டும்.

கொஞ்சம் பொறு
காலம் உருமாறும்!
காரிருள் கடந்து
வெளிச்சக் கீற்றுகள்
உதிக்கும்.

பனிபடர்ந்த
பச்சை புல்வெளியில்
பாதம் பதிய
வண்ணக் கனவுகளுடன்
உலாவரும்
சுகானுபவம்
மீண்டும் மலரும்.

அந்தத் தருணத்தில்
தழும்புகளைத் தடவிப்
பார்க்க மட்டும்
ஒருபோதும்
மறந்து விடாதே.

ஏனெனில் தோல்விகளை விட
வெற்றிகளே வெறி கொள்ள
வைத்து வீழ்த்திவிடும்.

எச்சரிக்கையுடன்
விழித்திரு.

புத்தி எழுது முயற்சிக்கும்
கதைகளை விட
மனது விரும்பும் கதைகள்
அவ்வளவு எளிதாக
அழிவதில்லை.

அழுது எழுது,
அழியாதவாறு
அழுத்தமாக எழுது.



Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations towards spread the knowledge.

சனி, 18 ஏப்ரல், 2020

பார்வையின் மறு பக்கம்

விஷயங்களை உணரும் திறன்.

(The abilty to see the things as they are)


(The Young woman and Old woman - illusion)
(William Ely Hill 1887 - 1962)
First published in the Magazine Path in 1915


அந்த பார்வையற்ற வயதான மனிதன் சிறந்த பாடகன். அவன் மாலைப் பொழுதுகளில் நகரத்து வீதிகள் தோறும் சுற்றித் திரிந்து பாடுவது வழக்கம். அவனது கைத்தடியொசை முன்னே கேட்கப் பாடல் பின் தொடரும். பாட்டைக் கேட்கக் கூடும் மக்கள் அவன் விற்கும் சிறு பொருட்களையும் மனமுவந்து வாங்கிச் செல்வர். அதில் வரும் சிறு வருவாயில் அவன் மகிழ்ச்சியாக  வாழ்ந்தான்.

செல்வந்தரானதொரு வணிகர் அந்தப் பார்வையற்ற மனிதன் மேல் இரக்கம் கொண்டார். அவனைப் பார்த்து "இந்த வயதான காலத்தில் சிரமப்படாதே. எனது வீட்டில் ஓய்வாக இரு.  உனது தேவைகளை நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். அங்கு நீ ஒரு பகுதியில் வசதியாகத் தங்கிக் கொள்ளலாம்" என்றார்.

அவனுக்கு அந்த யோசனை மகிழ்ச்சியாக இருந்தது. அவன் குடி  பெயர்ந்தான். ஆனால் சில வாரங்களுக்குள் அவன் மிகவும் சோர்வடைந்து போனான். எந்த வேலையும் செய்யாது உணவை உண்பதும் உறங்குவதும் சலிப்புத் தட்டியது. கையும் காலும் நன்றாகச் செயல்படும்போது முடங்கிக் கிடப்பது சரியெனப் படவில்லை.

அவன் அந்த வணிகரிடம், "ஐயா! உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. என்னால் சும்மா உட்கார்ந்து உண்பதற்கு மனமில்லை. எனவே நான் மீண்டும் என் பழைய வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்" என்றான்.

அந்த முடிவு அவரது மனதுக்கு வருத்தமாக இருந்தாலும், அவனது முடிவை மதித்தார். அப்போது மாலை நேரம் முடிந்து இரவாயிற்று. எனவே இருட்டில் அவனை அனுப்ப மனதில்லாது, "நாளை காலை நீ போகலாம்" என்றார்.

அதற்கு அவன் சிரித்துக் கொண்டே, "ஐயா உங்களுக்குத்தான் இருட்டும் வெளிச்சமும், எனக்கு எல்லாம் ஒன்றுதான்" என்றான்.

அப்போதுதான் செல்வந்தருக்கும் சிறு பொறி தட்டியது. "எந்தவொரு பிரச்சினைகளுக்கானத் தீர்வையும் நமது நிலையிலிருந்து மட்டும் பார்ப்பது தவறு" எனப் புரிந்தது.

நமக்கு வருத்தமாகத் தோற்றமளிக்கும் பிறரது வாழ்க்கைப் பிரச்சினை அவர்களுக்கு இயல்பானதும் மகிழ்ச்சியானதாகவும்கூட  இருக்கக்கூடும். ஒவ்வொருவருக்கான தேவைகளும், துயரங்களும் வேறுபட்டவை.

அதை உணர்ந்தவாறு அவனிடம், சரிப்பா! "நீ போகலாம். ஆனால் இதுவோ இரவு நேரம். இந்த விளக்கையாவது வழித் துணைக்குக் கொண்டு செல்" என்றார்.

அவன் மறுபடியும் புன்னகைத்து, "இந்த விளக்கின் வெளிச்சத்தால் எனக்குப் பயனில்லை" என்றான்.

அவர் மறுமொழியாக, ஆமாம்! உண்மைதான். "உனக்கு இதனால் எவ்வித பயனுமில்லை தான், ஆனால் எதிரில் வருபவர் உன்மேல் மோதாமல் இருக்கும்படி இது உன்னைக் காக்குமல்லவா?" என்றார்.

அது அவனுக்குச் சரியெனப்பட்டது.

அவன் விளக்கோடு தனது இருப்பிடம் நோக்கி நகர்ந்தான். சற்று நேரத்தில் சாலையில் எதிர்ப்பட்ட மனிதன் இவன்மேல் மோதினான்.

பார்வையற்றவன் கோபமாக "எனக்குத்தான் பார்வையில்லை. உனக்கென்ன? என்னைத்தான் தெரியவில்லை, இந்த விளக்கின் வெளிச்சம்கூட உன் கண்ணில் படவில்லையா? " எனக் கடுமையாகக் கேட்டான்.

அவனோ பொறுமையுடன் மறுமொழியாக "விளக்கா? அது எரியவில்லையே. அது அணைந்து வெகு நேரமாகி விட்டது போலத் தெரிகிறது" என்றான்.

தெளிவடைந்த பார்வையற்றவன் அந்த விளக்கைத் தூர எறிந்து விட்டு தனக்கு ஒத்தாசை தரும் ஒரு கைத்தடியை எடுத்துக் கொண்டான்.

ஒவ்வொருவர் கை ரேகையும் தனித்துவமானது. ஒவ்வொருவர் வாழ்வும் ஒரே வழிப் பாதையில் செல்வதுபோலத் தோன்றினாலும் ஒவ்வொருவர் பயணமும் வித்தியாசமானது. இங்கு எல்லாருடைய வாழ்வியல் சிக்கல்களுக்கும் ஒற்றைத் தீர்வு பதிலாக முடியாது.

எல்லோருக்கும் உணவு தேவையாக இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே சுவை விருப்பமாக இருக்க வாய்ப்பில்லை.

அவரவர் அனுபவங்கள் வழியாகத் தீர்வை உணர்வது ஒரு நிலை. பிறரது முடிவுகளிலும் மறைந்திருக்கும் உண்மையை உணர்வதோ முழு நிலை.


Notes:

The Original story from "zen thoughts". The theme : Perception. 

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations towards spread the knowledge.


புதன், 15 ஏப்ரல், 2020

36. குணமது கைவிடேல்

நற்பண்புகள் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே

(ஆத்திசூடி - ககரவர்க்கம்)



நன்மை தரக்கூடிய நல்ல செயல்களை இனி கிரமமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என "விசேஷ தினங்களில்" வெகு சாதாரணமாக நாம் தீர்மானிப்போம்.

"புது வருடம்" அல்லது "பிறந்த நாள்" என்பது தீர்மானங்களின் காலம்.

எனினும் அந்தத் தீர்மானம் சிறிது நாட்கள் அல்லது சில வாரங்களில்  கரைந்து காணாமல் போய்விடும்.

வாழ்வில் தான் எத்தனை தீர்மானங்கள்!
எவ்வளவு  பிரதிக்கினைகள்!!
எத்தனை சங்கல்பங்கள்!!!

சில உதாரணங்கள்!!!!

"உடற்பயிற்சி ", "உணவுக் கட்டுப்பாடு", "நேர நிர்வாகம்" ...,
என உடல் நலம் அல்லது தொழில் முன்னேற்றம் சார்ந்தவை

அல்லது

"கவனமாகப் பேசுதல்", "கோபத்தைத் தவிர்த்தல்", "சிற்றினம் சேராமை"...,
எனும் மன நலம் சார்ந்தவை.

இவை நிச்சயமாகவே "நற்செயல்கள்" தான் என்பதும் மிக நன்றாகவே புரிகிறது.

பின் ஏன் அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதில்லை?

எங்குத் தோற்றுப் போகிறோம்?

இதற்கான பதில் மிகவும் எளிமையானது.

"எந்தவொரு பண்பு, நம் ஆழ்மனதின் அசைக்க முடியாத விருப்பமாக உருவாகிறதோ, அவை பிறப்பிக்கும் செயல்கள் மட்டுமே நம்மால் இயல்பாகத் தொடர்ந்து செய்ய முடியும்."

அப்படியென்றால், ஒரு செயல் எவ்விதம் ஆழ்மனதின் விருப்பமாக உருவாகும்?

விருப்பங்கள்  அறிவுப்பூர்வமாக அறிவதால் மட்டும் தோன்றுவதில்லை.  அவை நம் மனதில்  ஒரு உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சி தரும் அனுபவமாகப் பதிவதால் ஏற்படுகிறது.

மனதில் அந்த அனுபவத்திற்கானதொரு ஏக்கம் தொடர வேண்டும்.

மகிழ்ச்சி தரும் அனுபவங்களே ஆழ்மன விருப்பமாக மலரும். 

அதுமட்டுமல்ல ; "புத்தி தெளிந்து" செய்த தவற்றை உணர்வதால் ஏற்படுத்தும் வலி மிகு துயர அனுபவமும் நற்பண்புகளை உருவாக்கும்.



ஒரு விதை விதைத்தவுடன் கனி தராது. அதற்கு உரமிடப் பட வேண்டும். நீர் பாய்ச்ச வேண்டும். வேலியடைத்துப் பாதுகாக்கப் பட வேண்டும். ஏற்ற சமயத்தில் தேவையற்ற பகுதிகள் நீக்கப் பட வேண்டும். அது தொடர்ந்து பராமரிக்கப் படவேண்டும்.

தீய செயல்கள் தரும் மகிழ்ச்சி உடனடியாக கிடைக்கும். முடிவில் அழிவைத் தரும்.

நற்கனி வேண்டுமெனில் பொறுமை, காத்திருப்பு, விடாமுயற்சி வேண்டும்.

நற்செயல்களைத் தொடர்ந்து செய்வதால் வாழ்வில் மகிழ்ச்சி, மேன்மை, உயர்வு, சிறப்பை, அது நமக்கு அளிக்கும் எனும் "விசுவாசம்" இருக்க வேண்டும்.

விசுவாசம் என்பது நம்பிக்கையிலும் மேன்மையானது.

அகக் கண்களால் பார்க்காமல், மனக் கண்களால் நம்பிக்கையுடன் பற்றித் தொடர்வது விசுவாசம்.



புறக் கட்டுப்பாடுகளினால் நற்பண்புகளை உருவாக்குவது கடினம். கட்டுப்பாடுகள் தளரும்போது மனதின் இயல்பான குணம் வெளிப்பட்டுவிடும்.

நமது வாழ்விலும் கூட "ஒரு தேவைக்காக" நல்லவர்கள் போல நடிப்பவர்கள் எத்தனை பேரைச் சந்தித்திருப்போம்! "காரியம் முடிந்தவுடன்" அவர்கள் உண்மை சுபாவம் வெளிப்பட்டுவிடும். முகமூடி விலகி சுயரூபம் தெரியும்.

நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஏமாற்றுபவரால் நிரம்பியிருக்கலாம். எத்தர்கள் தான் வாழ்ந்து சுகிப்பதுபோல் தோற்றமளிக்கலாம்.

பொறாமை நிறைந்த மனிதர்கள் நம்மைக் காயப்படுத்தலாம்.

சுயநல மிக்கவர்கள் நமது உரிமைகளை அபகரித்துக் கொள்ளக் கூடும்.

எனினும் ஆத்திசூடி சொல்கிறது :"குணமது கைவிடேல்"

அதன் பொருள் : "மேன்மை தரக்கூடிய நல்ல பண்புகளைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே"

ஆழ்மனதின் விருப்பங்களே சிந்தனையாக, சொற்களாக, செயல்களாக, குணமாகப் பரிணமிக்கின்றன.

நமது நம்பிக்கைகளே ஆழ்மன விருப்பங்களை உருவாக்குகின்றன.

நல்ல நீதி நூல்கள் மனதில் நல்ல நம்பிக்கையை விதைக்கிறது.

நல்ல மனிதர்களின் கூட்டுறவு நல் நம்பிக்கையை வளர்க்கிறது.

நல்ல செயல்கள் மன நிறைவை அளிக்கின்றன. அவை மகிழ் நிறை அனுபவங்களாகின்றன.

அந்த தொடர் அனுபவங்களே நம்பிக்கைகளைத் தீர்மானிக்கிறது.

இறுதியாக எது நல்லது? எது கெட்டது என்பதை வாழ்க்கையும் 
அனுபவங்கள் வழியாக நமக்குக் கற்றுக் கொடுக்கும்.

எனவே நற்செயல்கள் செய்வதில் தோல்வியடைந்தாலும் "குணமது கைவிடேல்"

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.



வெள்ளி, 10 ஏப்ரல், 2020

புனித வெள்ளி

இயேசுவின் சிலுவைப் பாதை.



இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாள் வெள்ளிக்கிழமை. இந்த தினம் கிறிஸ்தவர்களால்  "புனித வெள்ளி" என்று அனுசரிக்கப்படுகிறது. 

அவர் சிலுவையில் அறையப்பட்டது காலை 9 மணி (St.Mark 15:25) ஆகும். அவர் உயிர் பிரிந்தது மாலை 3 மணி ( St. Mark 15:34). இயேசு சிலுவையில் தொங்கியபோது ஏழு வாசகங்கள் பேசினார். கிறிஸ்தவ ஆலயங்களில், "புனிதவெள்ளி" ஆராதனையில் இந்த ஏழு வாக்கியங்களும் தியானிக்கப்படும்.

இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? 


இயேசு தம் வாழ்நாள் முழுமையும் கடவுளுக்கு முழுவதுமாக அர்ப்பணித்து வாழ்ந்தவர். அவர் தமது உபதேசங்களில், "கடவுளை" தம்முடைய தந்தையென்றே எப்போதும் குறிப்பிட்டார். இயேசு தாம் தந்தையை விட்டு ஒருபோதும் பிரிந்திருப்பதே இல்லை என்றார். இவ்விதம் இறைவனை தமது சொந்தத் தந்தை போல அவர் பாவித்தது யூத சமயத் தலைவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 


இயேசு போலித்தனமாகக் கடைப்பிடிக்கப்படும் யூத சமய சடங்குகளை வன்மையாகக் கண்டித்தார். ஊருக்காக வெளிவேஷம் போடும் அற்பத்தனமான சமயத் தலைவர்களின் பாசாங்கு நிறைந்த வாழ்க்கையைக் கேள்வி கேட்டார். 

அத்துடன் அவர் பல அற்புதங்களை எல்லோரும் பார்க்கும்படி செய்ததால் வெகு திரள் மக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. இதனால் இயேசுவுக்கு மக்களிடம் செல்வாக்கும், ஆதரவும்  அதிகரித்தது. 

இதைக் கண்டு பயந்த யூத சமயத் தலைவர்கள், "ரோமப் பேரரசில் தங்களுக்கிருக்கும் அதிகாரம்  இவரது வளர்ச்சியால் பறி போய்விடுமோ" எனும் அச்சம் அடைந்தனர்.

அத்துடன் அவருக்கு மக்களிடமிருந்த புகழும் செல்வாக்கும் அவர்களுக்குள் பொறாமைத் தீயை வளர்த்தது. எனவே இயேசுவைக் கொல்வதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். அவர் யூத மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைக்கு விரோதமாகச்  செயல்படுவதாகவும், கடவுளை அவமதிப்பு செய்வதாகவும் வீண் பழி சுமத்தி மக்களிடம் அவருக்கு எதிர்ப்பு ஏற்படுத்த வஞ்சகமாகச் சூழ்ச்சி செய்தனர். 


மதத் தலைவர்களின் சூழ்ச்சி :


யூதர்களுக்கு முக்கியமான பண்டிகை பஸ்கா. அந்த பண்டிகை முதல் நாள் இரவில் இயேசுவைக் கைது செய்தனர். ஒரே நாளில் தீவிர விசாரணைக்கு வழிதராமல் அவரைக் கொன்றுவிடுவது எனச் சதித் திட்டம் தீட்டினர். பண்டிகைக்கு முன்பாக இதை முடித்துவிட வேண்டும் எனத் தீவிரமாகச் செயல் பட்டனர்.

இயேசுவின் மீது அவர்கள் வைத்த முக்கிய குற்றச்சாட்டு, பிறப்பால் இவன் ஒரு "தச்சனின் மகன்" ஆவான். ஆனால் தற்போது தன்னை "கடவுளின் மகன்" என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறான் என்பதாகும். 

இரண்டாவதாக, "யூத சமயத்தின் முன்னோர்கள் ஏற்படுத்திய பல உபதேசங்களிற்கும், சடங்குகளுக்கும் வேறுவிதமாக விளக்கங்கூறி மக்களை வஞ்சித்து சமய நம்பிக்கைகளுக்கு எதிராகக் கலகம் ஏற்படுத்துகிறான்" என்பதாகும். 

அத்துடன், "எதிர்காலத்தில் அமைய இருக்கும் இறையரசுக்கு தன்னை அரசன் எனச் சொல்லி" ரோமப் பேரரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகிறான் எனவும் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.

ரோம நீதிமன்றம் இயேசுவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்கவில்லை. யூத சமயத் தலைவர்களின் தந்திரங்களை உணர்ந்தனர். அவர்கள் இயேசுவை விடுவித்துவிடவும் முயன்றனர். 

ஆனால் யூத சமயத் தலைவர்களோ "இயேசுவைச் சிலுவையிலறைய வேண்டும்" என மக்களைக் கூக்குரலிடும்படித் தூண்டினர்.  அவருக்கு எதிராகப் பலர் சாட்சி சொன்னார்கள். ஆனால் அது பொருத்தமாக இல்லை.

கடைசியாக ரோம நீதிமன்றம் "ஏன் இவரைச் சிலுவையிலறைய வேண்டும்?" எனக் கேட்டபோது, இவன் தன்னை "கடவுளின் மகன்" எனக் கூறி இறைவனை இழிவு படுத்துகிறான். எனவே இப்படிப்பட்ட பொல்லாத வஞ்சகன் சாகவே வேண்டும் எனக் கூக்குரலிட்டனர்.

அப்போது ரோம நீதிபதி அவரைப் பார்த்து "நீ கடவுளின் குமாரனா?" எனக் கேட்டார்.

இயேசு ஆம் என்றார்.

உடனே யூத மக்கள் கூட்டம் கொதித்தெழுந்தது. கூக்குரல் அதிகமாகி கலவரச் சூழல் ஏற்பட்டதால், ரோம நீதிமன்றம் தங்கள் கைகளைத் தண்ணீரில் கழுவி யூத சமயத் தலைவர்கள் வசம் இயேசுவை ஒப்படைத்தனர்.



சிலுவைப் பாதை :

ரோமப் பேரரசில் சிலுவை மரணம் என்பது கொடூரமான குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனை ஆகும். அப்படி ஒருவருக்கு மரணம் சம்பவிப்பது இகழ்ச்சியும் அவமானம் நிறைந்ததாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவரது வலது புறத்திலும் இடது புறத்திலும் இரண்டு கொடூரமான குற்றவாளிகளும் உடன்  சிலுவையில் அறையப்பட்டனர். 

அவரது சீடர்களில் ஒருவரைத் தவிர மற்றெல்லாரும் உயிருக்குப் பயந்து அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவர் மிகவும் பரிதாபகரமான கைவிடப்பட்ட நிலையில் சிலுவையில் தொங்கினார். 

அவரைச் சுற்றி இருந்த மக்கள் கேலி செய்தனர். பரியாசமாகப் பேசி நிந்தித்தனர். "நீ இறைவனது மகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா பார்ப்போம் " எனப் பகடி பேசினர். 

அவர் முகத்தைத் துணியால் மூடி அடித்து, "நீ தீர்க்கதரிசி என்றால், உன்னை அடித்தது யார்? எனச் சொல் பார்ப்போம்" எனப் பரிகசித்தனர்.

"பிறரது வாழ்வில் எவ்வளவோ அற்புதங்களைச் செய்தான், ஆனால் இப்போது அவன் தன்னைதான் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் சிலுவையில் தொங்குகிறான். இவன் கடவுளின் மைந்தன் என்பது உண்மையெனில், இப்போது அவன் சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும், அப்போது அவனை நாம் கடவுளின் மைந்தன் என நம்புவோம்" என இகழ்ந்து அசட்டையாகப் பேசினர்.

ஏழு வாசகங்கள் :


அந்தச் சூழலில் சிலுவையில் தொங்கியபடி இயேசு சொன்ன முதல் வார்த்தை :

1. "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்கள் உணராமல்  இப்படிச் செய்கின்றனர்"  (St. Luke 23:34) என்றார்.


இரண்டு குற்றவாளிகளுக்கு மத்தியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்தார். அதில் ஒருவன் அவரை கேலி செய்து அவமதிப்பாகப் பேசினான். "நீ கடவுளின் பிள்ளை என்றால் உன்னையும் காப்பாற்றிக் கொள். எங்களையும் விடுதலையாக்கு பார்ப்போம்" என இகழ்ந்தான்.

மற்றொருவன் அவனைப் பார்த்து, "நாம் குற்றம் செய்ததால் தண்டிக்கப்படுகிறோம். இவர் குற்றவாளியல்ல. இந்த மரண நேரத்தில்கூட உணக்கு உணர்வு இல்லையா?" என வேதனையோடு அவனைப் பார்த்துப் பேசினான்.

பின்பு இயேசுவைப் பார்த்து "இறைவனின் மைந்தனே, உமது இறையரசு ஒருநாள் நிச்சயம் அமையும். அப்போது என்னை மறக்காமல் சேர்த்துக் கொள்ளும்" என்று வேண்டினான்.

அப்போது இயேசு சொன்ன இரண்டாவது வார்த்தை :

2. "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என்பதை உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"  (St. Luke 23:43) என்றார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவருடைய சீடர்களில் புனித யோவான் (St. John) மட்டுமே அருகிலிருந்தார். அவருடைய தாயாரும் அவருடன் பணிசெய்த சில பெண்களும் உடனிருந்தனர். அந்த துயர நேரத்திலும் இயேசு தமது தாயாரின் எதிர்கால பராமரிப்பைக் குறித்து கரிசனையுடையவராய் இருந்தார். 




அப்போது இயேசு கூறிய மூன்றாவது வார்த்தை :

அவர் தமது அன்பான சீடனைப் பார்த்து, தனது அம்மாவைச் சுட்டிக்காட்டி 

3. "இவரே  உன் தாய்" என்றார். பின்பு தனது தாயிடம்  "அதோ உன் மகன்" (St.John 19: 26 & 27) என்றார்.

நான்காவது அவர் சொன்ன வார்த்தை மிக முக்கியமானது; அவர் சொன்னது 

4. "என் தந்தையே, என் தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர்?" (St.Mathew 27:46)

இது ஒரு பரிதாபகரமான கைவிடப்பட்டதொரு ஏமாற்றம் நிறைந்த கதறுதலைப் போலத் தோன்றும்.  ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அது நடக்காததால் ஏற்பட்ட அவலக்குரல் போலவும் இருக்கிறது. 

ஆனால் இதற்குப் பின்பு அவர் கூறிய இறுதி வார்த்தைகள் அவர் முடிவுவரை இறைவன் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பறை சாற்றுகிறது.

பாவம் செய்தால் கடவுளின் பிரசன்னம் தங்களை விட்டு நீங்கி விடும் என்பது யூதர்களின் வரலாற்று அனுபவம். அது யூத சமயத்தின் நம்பிக்கை. எனவே அவர்கள் பாவம் செய்ததாக உணர்ந்து வேதனைப்படும்போது கடவுளின் தண்டனையிலிருந்து  தப்பிக்க மிருகங்களைப் பலியிடுவது வழக்கம். 

அவ்விதம் குற்றமற்ற இயேசு மக்களின் பாவங்களுக்குப் பலியானார். அவ்வித பலி நேரத்தில் இறைவனின் பிரசன்னத்துக்கும் இயேசுவுக்கும் இடைவெளி ஏற்பட்டது. தந்தையின் பிரசன்னத்தை இழந்த அந்த இருள் சூழ்ந்த நேரத்தில் இயேசுவிடமிருந்து வெளிப்பட்ட கதறலே இந்த வாசகம் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

ஐந்தாவதாக அவர் சொன்ன வார்த்தை :

5. "தாகமாயிருக்கிறேன்"( St. John 19:28) என்பதாகும்.

முன்னிரவு தொடங்கி ஏறக்குறைய காலை 9 மணிக்குச் சிலுவையில் அறையப்படும் வரை விசாரணைக்காக அங்கும் இங்கும் அவர் அலைக்கழிக்கப்பட்டார். அதின் பின்பு கசையடி, தலையில் முள் முடி சூட்டப்படுதல், சிலுவையைச் சுமந்து ஊர்வலம், பரியாசம், கேலி, அவமானம் என உடலாலும், மனதாலும் சிறுமைப் படுத்தப்பட்டார். 

அந்த கோரச் சூழலில் அவர் தாகத்தால் தவிப்பதைக் கண்டு  சிலுவையில் அறையப்படுபவர்கள் வலி தெரியாமலிருக்கக் கொடுக்கப்படும் மயக்கம் தரும் காடிநீரைப் பஞ்சில் தோய்த்து ஒரு கோலில் வைத்து அவரிடம் நீட்டினர். ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசு ஆறாவதாகச் சொன்ன வார்த்தை :

6. "நிறைவேறியது" என்றார். (St.John 19:30). 

சாதாரண மனிதர்களுக்கு வாழ்க்கையின் நோக்கம், எதற்காக வாழ்கிறோம் என்பது தெளிவாகத் தெரியாது. ஆனால் இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் தனது வாழ்வின் நோக்கம் இதுதான் எனப் பலமுறை தெளிவாகக் கூறினார். அவர் இப்படித்தான் மரணமடைவேன் எனக் கூறிய போது அவருக்கு நெருக்கமான சீடர்கள் அதைக் கோபத்துடன் எதிர்த்தனர். ஆனால் இயேசு அவர்கள் எதிர்ப்பை கண்டித்தார். 

தமது மரணம் இவ்விதம் தான் நிகழும் என அவர் கூறியது போலவே நிறைவேறியது. 




இறுதியாக ஏழாவது வார்த்தையாக மாலை மூன்று மணியளவில் சொன்னது :

7. " தந்தையே, உமது கரங்களில் எனது உயிரை ஒப்படைக்கிறேன்"  
(St. Luke 23:46) என்று உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.

படங்கள் இணையத்திலிருந்து

சனி, 4 ஏப்ரல், 2020

புதுப்பித்தல்

கவனித்துப் பார்ப்போம்




Khasab இல் நான் பணிபுரிந்த சாலைத் திட்டப்பணிகள் December மாதத்துடன் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்காக முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. Feburaury வரை திட்டப் பணிகளின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து ஒப்படைத்தேன்.

இங்குப் பணி புரிந்த 21 மாதங்கள் பல மறக்க முடியாத அனுபவங்களை உள்ளடக்கியது. நான் பொறுப்பேற்கும்போது திட்டப்பணி நெருக்கடியும் சிக்கலுமான நிலையிலிருந்தது. தொடர்ந்து பல கூடுகைகள், பேச்சு வார்த்தைகள் நிகழ்த்தினோம். அதின் பலனாக அனைவர் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டப் பணியை  வெற்றிகரமாக முடிப்பதற்குக் கடவுள் உதவினார்.



இந்தக் காலகட்டத்தில்  மிக அருமையான பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பல உணர்வுப்பூர்வமான பிரிவுபச்சார நிகழ்வுகள்!

நாம் நெருங்கிப் பழகும் ஒவ்வொருவருடனும் ஏதோ ஒரு வகையில் ஒரு உணர்வுப்பூர்வமான பந்தம் நிகழ்ந்து விடுகிறது.




Khasab இல் என்னை அன்புடன் நேசித்துக் கவனித்துக் கொண்டவர்கள் அதிகம்.  Khasab Prayer fellowship பல மாநில மக்கள் ஒன்று கூடி பங்கு பெறும் ஐக்கியம். அது ஒரு Extended family போல இருந்தது. ஒரு நாட்டின் எல்லைகளைக் கடக்கும் போது அதன் மாநிலங்களின் எல்லைகள் மறைந்து போகின்றது.



வளைகுடா நாடுகளில் ஒமான் பெரிய நிலப்பரப்பு உடையது. Khasab Oman ன் வடக்கு எல்லை. (UAE border) என்றால் Salalah தெற்கு எல்லை. (ஏமன் Border). இப்போது எனது புதிய திட்டப்பணி Salalah க்கு அருகில் உள்ளது. Khasab to Salalah ஏறக்குறைய 1600 Km தூரம். Khasab இல் இருந்து விமானம் மூலம் Muscat வந்து, பின்பு Muscat இல் இருந்து Car இல் Salalah வந்து சேர்ந்தேன்.



Muscat to Salalah  Car இல் பயணிப்பது இது இரண்டாவது முறை. ஏறக்குறைய 1000 km தூரம். அவாந்திரமான பாலைவனம் வழியாகப் பயணிப்பது வித்தியாசமான அனுபவம்.

இன்றைய இக்கட்டான வாழ்க்கைச் சூழலில் புதிய பணியின் பொறுப்பை Salalah வில் March மாத இறுதியில் ஏற்றுக் கொண்டேன்.

தற்போது அரசாங்கத்தின் அமைப்புகளிடமிருந்து Carona குறித்து  விழிப்புணர்வு அறிவிப்புகள் குறுஞ்செய்திகளாகத் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

சாலைகளில் வாகன நெருக்கடி முற்றிலுமாக இல்லை. அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மட்டும் வழமையாக இயங்குகின்றன. எந்த உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை. பொருட்களின் விலையிலும் ஏற்றமில்லை.

உணவு விடுதிகள் இயங்குகின்றன. ஆனால் "Take away" முறைமை. மிக மிக அவசியமான அலுவலகங்கள் மட்டும் இயங்குகின்றன. 30% ஊழியர்கள் மட்டும் "Rotation" முறையில் பணிக்கு வருகின்றனர். பெரும்பாலான பணிகள் "On line" வழியாகத் தொடர்கின்றது.

மசூதி, ஆலயம், கோவில் வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தால் அலைமோதும் கடற்கரை மணல் வெளி வெறுமையாக இருக்கின்றது.

நள்ளிரவு வரை மூச்சுத் திணறும் கூட்டத்துடன் உறங்காது விழித்திருக்கும் வணிக வளாகங்கள் அடைபட்டு மூர்ச்சையாகிக் கிடக்கின்றன.

வளைகுடா நாட்டில் வசிக்கும் பிறநாட்டினரில் பெரும்பான்மையினர் குறைந்த வருவாய் ஈட்டும் தொழிற்பிரிவினரே.

தற்போதைய இக்கட்டான சூழலும், தொடர்ந்து  குறைந்து வரும் எண்ணெய் விலையும் பொருளாதார மந்தநிலை நோக்கியே உலகத்தை நகர்த்துகிறது போலத் தோன்றுகிறது. இதன் தொடர் விளைவாக உலகளவில் எங்கும் பெருமளவில் வேலையிழப்பு மற்றும் ஊதிய குறைப்பும் நிகழும் என மதிப்பிடப்படுகிறது.

நோயின் அச்சத்தைவிட எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமற்றத் தன்மையே அதிக கவலையைத் தருகிறது. உலகம் செயல்படும் முறைமையில் பல மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இப்போது அலுவலக வேலைப் பணி நேரம் குறைக்கப்பட்டதால் ஓய்வு நேரம் அதிகமாக கிடைக்கிறது. TV பார்க்கும் நேரம் சொற்பமே. Internet, Social media வும் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. Online இல்  News Paper மட்டும் கொஞ்ச நேரம் வாசிப்பதுண்டு.

புத்தகங்கள் வாசிப்பு. உணவு சமைத்தல், துணி துவைத்து Ironing, கொஞ்சம் இசை, குடும்பத்துடன் Video Chat, நண்பர்களுடன் உரையாடல் எனப் பொழுது மெதுவாகச் சென்றாலும் அழகாகவே போகின்றது. ஒவ்வொன்றையும் ஈடுபாட்டுடன் இரசித்துச் செய்ய முடிகிறது. Virtual World ஐ விட நிஜ வாழ்வு அருமையானது.

சில எதிர்பாராத சம்பவங்களின் விளைவாக எனது தனிப்பட்ட மனநிலை கடந்த சில மாதங்களாக எழுதுவதற்கு உகந்ததாக இல்லை. காலம் ஒரு அற்புதமான மருந்து. நூல்கள் வழியாகக் கற்பது மறந்து போகலாம். வாழ்க்கை அனுபவங்கள் கற்றுத் தருவது  வலி தந்தாலும் அவை அருமையானவை. அது சீர்திருத்துகிறது. உயிரோடும் உறைந்துவிடுகிறது.

இப்போதைய சூழலில் நல்ல நூல்களை வாசிப்பதும் எழுதுவதும் மனதுக்கும் ஆரோக்கியமாக இருக்கும் என நம்புகிறேன். எழுதுவது என்பது ஆன்மாவோடு உரையாடுவது.




தற்போது பல செய்திகள் படிக்கும் போது, கேட்கும் போது மிக வருத்தத்தைத் தந்தாலும் நமது கைக்கு மீறி நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

நதி நீர் மாசு குறைதல், பல ஆயிரக்கனக்கானை டன் எடை திடக்கழிவுகள் குறைவு, காற்றில் நுண்துகளின் அளவு குறைதல், மதுபானக் கடைகள் மூடல், கட்டற்ற நுகர்வின் கட்டுப்பாடு, விபத்துக்களில் நிகழும் உயிரிழப்புகள் அற்ற பத்து நாட்கள்.., எனக் கண்ணுக்குப் புலப்படாமல் பல நன்மைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது

இவையனைத்தையும் விட வாழ்க்கைக்கு இன்றியமையாதது எது?  வாழ்விற்கு அத்தியாவசியமான பணியாளர்கள் யார்? என்பதையும்  இந்தச் சூழல் அற்புதமாக அடையாளம் காட்டுகின்றது.

இந்த அமைதியான ஓய்வில் எது முக்கியமான தேவை?

இயற்கை சொல்ல விரும்பும் சேதியைக் கேட்கும் காதுகள் இருந்தால் நன்றாக இருக்கும். "பூமி மனிதனுக்கானது மட்டுமல்ல ; மனிதனுக்காகவும் படைக்கப்பட்டது." எனும் ஒலி சன்னமாகக் கேட்கிறது.

நம்மைச் சுற்றி நிகழ்வதைத் தெளிவாகக் காண்கிற கண்களும் உணர்கிற இதயமும் இருந்தால் அது இன்னும் அதிக பாக்கியமுள்ளவை எனத்தான் தோன்றுகிறது.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !