சனி, 26 நவம்பர், 2022

49. சூது விரும்பேல்.

கள்ளம் கபடின்றி வாழ்.


சூது என்றால் தீயது, வஞ்சனை எனப் பொருள்படும். பிறரின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய செயல் சூது. சூது என்பது சூதாட்டத்தையும் குறிக்கும் 

சூது விரும்பேல் என ஔவை குறிப்பிடுவது, சூழ்ச்சி எண்ணத்துடன் செயல்புரிய விரும்பாதே. 

பிறர் வாழ்வைச் சீர் குலைக்கும் சதி எண்ணங்கள் மனதில் எழுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

தகாத ஒன்றை விரும்புவது, அதை அடையத் தீர்மானிப்பது, அதற்காகத் தூர் ஆலோசனை செய்வது, திட்டம் தீட்டுவது, தீய வழியில் அதை அடைய முயல்வது இவை யாவும் சூது நிறைந்த மனதில் நிகழும் ஆசைகளின் (விருப்பங்கள்) விளைவுகள். 

இராவணன் சீதையை அடைய முயல்வது, துரியோதனன் நாட்டை அபகரிப்பது; சூதின் விளைவுகளைப் பற்றித் தான் இந்தியாவின் இரு மாபெரும் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் விரிவாக எடுத்துக் கூறுகிறது.

தவறான விருப்பத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் அது ஆசைப்பட்டவரையே அழித்துவிடும். 

சுயநலன், காமம், பிறர் பொருள் மீது இச்சை, பெருமை, ஆணவம், அகங்காரம், பழி வாங்குதல் போன்ற தீய உணர்வுகள் மேலோங்கும் போது மனதில் சூது பிறக்கிறது. அது உட் புகுந்தவர் மனதை ஆட்டிப் படைக்கும். 

சூது மனதில் புகுந்தால்

1. பொய் பேசுவர் (அல்லது உண்மையை மறைப்பார்கள்).

2. ஏமாற்றுவது, நடிப்பது இயல்பான நடத்தையாக இருக்கும்.

3. மன சாட்சி செத்து விடும். (தர்மம், அதர்மம் எனப் பிரித்துப் பார்த்து செயல் புரியும் உணர்வு மழுங்கிவிடும். தீமை செய்கிறோம் எனும் குற்ற உணர்வு, பயம் இருக்காது.)

4. நல்லோர் நட்பு விலகிவிடும். தீயோர் உறவு உருவாகும்.

5. தான் செய்யும் தீயசெயல் குறித்த வெட்கம், கூச்சம், அவமானம் போன்ற உணர்வுகள் ஏற்படாது.

6. நல்லறிவு முற்றிலும் இயங்காது.

7.  மிகுந்த சினம், தீய சொற்கள் பேசுவது, தீய நடத்தை இயல்பான வாழ்க்கை முறையாக இருக்கும்.  

ஆகவே ஔவை அறிவுறுத்துகிறார் - சூது விரும்பேல். 

பிறன் மனைவியை (கணவரை), சொத்தை, நிலத்தை, உடைமைகளை, வெற்றியை, அதிகாரத்தை, ..,  சதி, சூழ்ச்சி செய்து எப்படியாவது குறுக்கு வழியில் அடைந்திட வேண்டும் என ஒரு போதும் விரும்பாதே.

 ''தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். எனினும் மீண்டும் தர்மம் வெல்லும்'' என்பது அறத்தின் வலிமையை உணர்த்திடும் அற்புத வைர வரிகள்.

உலக சரித்திரத்தின் பல பக்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பின்னப்பட்ட சதி வலைகளால் நிறைந்துள்ளன. ஒவ்வொரு கொடும் குற்றச் சம்பவங்களுக்குப் பின்பாகவும் ஒரு சூழ்ச்சி மறைந்துள்ளது. 

எனினும், என்னதான் சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், இறுதியில் சதி செய்து அடைந்தவை அழ அழ வைத்து வேடிக்கை காட்டும் எனக் குறள் கூறுகிறது.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

 'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்'' "சூதும் வாதும் வேதனை செய்யும்" என முதுமொழி பகிர்கிறது. 

கால ஓட்டத்தில் தான் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள். வாழ்க்கை மாறி மாறி நிகழ்கிறது. எனினும் தர்மம் எனும் நியதி என்றும் மாறாதது. 

எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவராயினும், எந்த குலத்தில் பிறந்திருந்தாலும், எந்த மொழி பேசியவராயினும், எந்த நாட்டில் வசித்தவராயினும், எந்த சமய நம்பிக்கை பின்பற்றுபவராயினும் அறம் சார்ந்து வாழ்க்கை வாழ்ந்த மானுடமே கால வெளியைக் கடந்து நினைவு கூறப்படுகிறது. போற்றப்படுகிறது.

சூது என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அதன் உச்சக் கட்டத் தீமைகளை விளக்குகிறார்.

உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும் 
அடையாவாம் ஆயம் கொளின் 

ஒருவன் சூது களத்தில் செயல்பட்டால் புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனை விட்டு நீங்கும்.  (ஆயம் என்பது உருளாயம் - சூதாடும் களம்).

கள்ளம் கபடற்ற குழந்தைகள் போல மனம் உடையவரே இறைவனுடைய அரசில் இடம் பெறுவர் என்பது இறை வாக்கு.

மனதில் மாசில்லாமல் இருப்பதே அறம் என்கிறது குறள்.

அக எல்லா விருப்பங்களையும் இறைவனிடம் ஒப்புவித்துவிட்டு, '' என் விருப்பமல்ல, உன் விருப்பம் எனது வாழ்வில் நடக்கட்டும். எது நல்லதோ அதை உணர்த்தும். அதை மட்டும் செய்யத் தேவையான சக்தி தா'' என்று சொல்லி இறைவனிடம் சரணடைவது உத்தமம். அப்போது இவ்வுலகில் நாம் செய்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளைச் செம்மையாகச் செய்து நிறைவேற்றுவோம்.



படம். இணையத்திலிருந்து நன்றியுடன்..,

சனி, 19 நவம்பர், 2022

48. சுளிக்கச் சொல்லேல்.

கேட்பவர் முகம் மலர பேசுவோம்.



சுளிக்கச் சொல்லேல்: 

- மற்றவர்கள் முகம் கோணும்படியான சொற்களைப் பேசக்கூடாது. 

- பிறர் மனம் நோகப் பேசாதே.

- கேட்பவருக்கு கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.

- சிலரது பேச்சைக் கேட்கும் போது கோபம் வரும். சிலர் செய்யும் செயல்கள் வெறுப்பைத் தரும். அப்போது எழும் எரிச்சல் தரும் உணர்வால் நாம் முகத்தைச் சுளித்துக் கொள்வது உண்டு. அவ்வாறு பிறர் முகம் சுளிக்கும் விதமாக நாம் எந்தச் சொல்லையும் பேசக்கூடாது. அப்படிப் பட்ட செயலைச் செய்யவும் கூடாது.

வார்த்தைகள் மனதைக் கிழிக்கும்:

சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தைச்  செய்தித்தாளில் வாசித்தேன். அது மனதைக் கலங்க வைத்தது. தனது சகாக்களால் அவர்கள் அவமதிக்கப்பட்டார்கள். ஆடைகள் நீக்கப்பட்டது. திகிலூட்டும் கேலிக்குரிய செயல்களைச் செய்திட வற்புறுத்தப்பட்டனர். இது மிகக் கொடூரமானது. துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற கொடூரமான மற்றும் வெறுக்கத்தக்க, முகம் சுளிக்கச் செய்திடும் பல செய்திகளை அனுதினம் வாசிக்க நேரிடுகிறது. பார்க்கவும் நேரிடுகிறது. 

ஒருவரைக் கேலி செய்வது எளிது. வார்த்தைகளால் காயப்படுத்துவது எளிது. ஆழ்ந்த  சிந்தனை இல்லாமல் சமூக வலைத் தளங்களில் ஒரு கருத்தை இடுகையிடுவது மிகவும் எளிதானது. ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப சில வினாடிகள் மட்டுமே போதுமானது. ஆனால் அந்த செய்தியினால் பாதிக்கப்படுபவரது உள்ளத்தில் ஏற்படுத்தும் ஆறாத காயத்தை ஆற்றுப்படுத்துவது, அவரை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

வார்த்தைகள் கொல்லும். வார்த்தைகள் உருவாக்கவும் செய்யும். ஒருவரை உடல் ரீதியாக அடித்துக் காயப்படுத்துவது மட்டுமே தீங்கு விளைவிக்கக் கூடியவை என மட்டுப்படுத்தி விடக் கூடாது. அவற்றை விடக் கேலியாகப் பேசப்படும் சில வார்த்தைகள் ஒருவரது சுயமரியாதையை ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் செய்துவிடும். அவை மனதில் ஏற்படுத்தும் காயம் பல ஆண்டுகள் கூட நீடிக்கும். அவை நினைவில் எழும்பும் பொழுதெல்லாம் அவருக்கு அது தீராத வலியை ஏற்படுத்தும்.

வார்த்தைகள் அழிவதில்லை:

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை போல காயப்படுத்தும் வார்த்தைகள் சொன்ன பிறகு அல்லது மனதை நோகடிக்கும் ஒரு செய்தியை அனுப்பிய பிறகு அதை ஒரு போதும் திரும்பப் பெற முடியாது. அதைப் பெறுபவரின் எண்ணங்களிலும், மனதிலும், நினைவிலும் தொடர்ந்து ஆறாத ரணமாக அழியாமல் அந்த செய்தி நிலைத்து நிற்கும். ஆகவே அலட்சியமாகப் பேசக் கூடாது. உதாசீனப்படுத்திப் பேசவும் கூடாது. நகைச்சுவையாகக் கூட யாரையாவது பார்த்துக் கிண்டலான கருத்துக்களைச் சொல்வதற்கு முன்பாக நிறுத்தி நிதானமாக யோசித்துப் பேசுங்கள்.  

மன்னிப்பின் மாண்பு:

ஒருவேளை பிறர் மனதை வருத்தப்படுத்தும் வார்த்தைகளைப் பேசியிருந்தால், நம்மால் செய்யக்கூடிய சிறந்த விஷயம் அதற்காக மன்னிப்பு கேட்பது. அதற்குத் தைரியம் தேவை. மன்னிப்பைக் கேட்பதற்குக் கடினமாக இருக்கலாம். 

ஆனால் நாம் காயப்படுத்தியவர்களைச் சீர் செய்ய வேண்டியது நமது கடமை. அதுபோல மீண்டும் பேசாதபடி கவனமாக இருக்க வேண்டும். மேலும் அந்த மாதிரியான வார்த்தைகள் நம்மிடமிருந்து வெளிவராத அளவுக்கு மனம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நல் வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்:

ஒருபோதும் பிறரைப் புண்படுத்தக்கூடிய வார்த்தைகளைப் பேசாதீர்கள். ஒருவர் பாதுகாப்பற்றதாக அல்லது ஒதுக்கப்பட்டதாக உணரக்கூடிய சூழலை உருவாக்காதீர். 

எந்த சூழ்நிலையிலும் தீங்கு விளைவிக்கும் வார்த்தைகளைச் சொல்லவோ, அனுப்பவோ கூடாது. அது சரியானதல்ல.

ஒருவரைக் காயப்படுத்துவதற்கு எதிரானது என்ன? 
மகிழ்ச்சி அளிப்பது. 

விமர்சிப்பதற்கு எதிரானது என்ன? 
ஊக்கமளிப்பது. 

இது நம் வார்த்தைகளில் பிரதிபலிக்க வேண்டும். 

எதிர்மறையான வார்த்தைகளால் கிழித்தெறிபவராக இருப்பதற்குப் பதிலாக நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசுங்கள். ஒருவரது வாழ்க்கையை அழிப்பதற்கல்ல, கட்டப்படுவதற்கு உதவ வேண்டும். 

ஒருவருக்கொருவர் கருணை காட்ட வேண்டும். ஆசிர்வதிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாம் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தலாம். முன்மாதிரியாக இருங்கள். 

எதிர்வினைகளில் கவனம் செலுத்துங்கள்:

மற்றவர்களின் நடத்தைக்குப் பதிலாக உங்களிடமிருந்து வெளிப்படும் எதிர்வினைகளில் கவனம் செலுத்துங்கள். பிறரது எதிர்வினைகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் உங்களுடைய பதில்களைக்  கவனிக்கவும் (observe), மாற்றவும் (Change), மேம்படுத்தவும் (improve) கற்றுக் கொள்ள முடியும்.

எந்த உணர்வு கேலி பேசுவதற்குத் தூண்டுகிறது எனக் கவனியுங்கள். எந்த சூழல்களில் கிண்டலான நடத்தைகள் வெளிப்படுகிறது எனக் கவனியுங்கள். 

மக்கள் உங்களை மோசமாக நடத்தும்போது, ​​உங்களை அவமரியாதை செய்யும்போது அல்லது உங்களுக்கு எதிராக வசைபாடும்போது உங்கள் உடனடி எதிர்வினையைக் கவனியுங்கள்.

இத்தகைய சூழல்களில் பதில் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபடுவதற்குப் பதிலாக, பின்வாங்கவும் (Withdraw), பிரதிபலிக்கவும் (Reflect), பகுப்பாய்வு (Analyzes) செய்யவும் மற்றும் சிந்தனை மிக்க அடுத்த படியை எடுப்பதற்கும் முயலவும்.

கடந்த காலத்தில் உங்கள் நியாயமான கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைந்த தருணத்தில் உங்களைப் புண்படுத்தியவர்கள் எப்படி உங்களை நடத்தினார்கள் என்பதை நினைவு கூறுங்கள். அப்போது நீங்கள் அடைந்த வேதனை, அவமானம், துயரம் இவற்றை மறக்க வேண்டாம். இப்போது நீங்கள் பிறரை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். ஒரு போதும் பதிலுக்குப் பதில் செய்யாதீர்கள்.

விட்டுக்கொடுங்கள்:

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்குக் கலந்து கொள்வதற்குச் சிறப்பு அழைப்பு கிடைத்தது. எனது காரை நிறுத்த சென்ற போது ஒரு குறிப்பிட்ட பகுதியில்  நிறுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. சற்று வெகு தொலைவில் நிறுத்திவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல வேண்டும் என கூறினார். உடனடியாக எழுந்த உணர்வு கோபம். நமது இயல்பான முதல் புரிதல் என்னவென்றால், காரை வெகு தூரத்திலிருந்த இடத்தில் நிறுத்தச் சொல்வது என்பது மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதாக உணர்வது தான். அப்படி ஒரு பெரிய காட்சியை சுயம் மனத்திரையில் உருவாக்குகிறது.

இப்போது என் எதிர்வினை சண்டையிடுவது, வாகன நிறுத்துமிட விதி முறைமைகளை அவருக்கு எதிராகச் சுட்டிக்காட்டுவது அல்லது மேலாளரிடம் புகார் சொல்வது. 

ஆனால் இவற்றுள் எந்த எதிர்வினையும் செய்யாது அந்த நபரைக் கவனித்தேன். அந்த நபர் ஒரு தன்னார்வ பேட்ஜ் அணிந்திருந்ததைப் பார்த்தேன். அவரது முகத்தில் பெருமிதத்துடன் அதிக ஈடுபாட்டுடன் செயல் புரிவதையும் பார்க்க முடிந்தது. எனது இயல்புநிலை எதிர்வினை நடத்தையைச் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதற்குப் பதிலாக நேர்மறையான புரிதலைத் தேர்ந்தெடுத்தேன். 

அவர் இந்த  வெற்றிகரமான நிகழ்வுக்கு தன்னால் இயன்றதைச் செய்கிறார். இந்த நபர் செய்வது தவறாக இருந்தாலும் சரி, அநியாயமாக இருந்தாலும் சரி, அவருடைய மன அழுத்தத்தைக் கொஞ்சம் குறைத்து அவருக்கு இந்த நாளை இனிமையான நாளாக மாற்ற என்னால் உதவ முடியும். மற்றவர்களுக்குச் சேவை செய்ய தங்களால் இயன்றவரை முயற்சிக்கும் ஒருவருடன் வாதிடுவதை, வார்த்தைகளால் காயப்படுத்தாது என்னால் தவிர்க்க முடியும். அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் வாகனத்தை நிறுத்தினேன். அவர் மிக மகிழ்வுடன் தனது பணியைத் தொடர்ந்தார். இந்த எதிர்வினை இப்போது நினைத்தாலும் மகிழ்வைத் தருகிறது.

அன்பின் ஒளியைப் பரப்புங்கள்:

நாம் மற்றவர்களை எப்படி நடத்துவது என்பது நமது கையில் உள்ளது. அது சவாலான மனிதர்களாக இருக்கலாம். அல்லது கசப்பான இருள் சூழ்ந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவராக இருக்கலாம்.  நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு நம் வசம் உள்ளது என்பதை மறக்கக்கூடாது.

கொடுமை, துஷ்பிரயோகம், மோசமான நடத்தை போன்ற இருள் சூழ்ந்த நிலையில், பெற்றவர்களது கவனக்குறைவோடு வளரும் குழந்தைகளுக்குப் பிறருக்குத் தீங்கு விளைவிப்பது மற்றும் எதிர்மறையான பழக்கங்களைப் பின் பற்றுவது இயல்பாக இருக்கும். பொதுவாக இவர்களுக்கு  மற்றவர்களைத் துன்புறுத்துவது அல்லது மோசமாகப் பழிவாங்குவதைக் குறித்த குற்றவுணர்வு  இருக்காது. 

இவர்களையும் இருளிலிருந்து வெளியே கொண்டு வர முடியும். அன்பைத் தேர்ந்தெடுத்து, இரக்கம் மற்றும் புரிதலின் ஒளியைப் பரப்புவதன் மூலம் ஓர் மாற்றத்தை உருவாக்க முடியும்.

உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் வலியைக் குணப்படுத்தும் கருவியாக நீங்கள் இருக்க முடியும். நீங்கள் புண்படுத்தப்பட்ட பிறகும் மன்னிப்பு, புரிதல், அன்பு மற்றும் இரக்கம் சாத்தியம் என்பதை உங்களைக் காயப்படுத்தியவர்களுக்கும் காண்பிக்க முடியும்.

அவ்வாறு செய்வதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மகிழ்ச்சி நிறைந்த, நம்பிக்கை அளிக்கும் இடமாக மாற்ற முடியும்.

விட்டு விலகுங்கள்:

எனினும் சில மனிதர்கள் இயல்பிலேயே மிக மிகக் கொடுமையானவர்கள். நியாயமற்ற முறையில் செயல் புரிபவர்கள். அதீத எதிர்மறை இயல்பு கொண்டவர்கள். பிறரைக் காயப்படுத்தி அதில் இன்பம் அடைபவர்கள். கடும் சுயநலவாதிகள். இத்தகைய நபர்களை விட்டு விலகி வாழுங்கள். இவர்கள் உங்களது மன அமைதியைச் சீர் குலைத்து விடுவார்கள்.  இவர்களது சகவாசம் உடலில் தீராத நோயை உருவாக்கிவிடும்.


சனி, 12 நவம்பர், 2022

47. சீர்மை மறவேல்.

 நல்ல குணங்களைக் காத்துக் கொள்.


Good Character is not formed in a week or a month. It is created by little, a day by day. Protracted and patient effort is needed to develop good character. - Heraclitus of Ephesus.

நல்ல குணம் ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் உருவாகுவது இல்லை. இது சிறிது சிறிதாக, நாளுக்கு நாள் வளர்க்கப்படுகிறது. நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ள நீண்ட மற்றும் பொறுமையான முயற்சி தேவை.

சீர்மை - வார்த்தை விளக்கம்:

சீர்மை எனும் வார்த்தைக்கு, ஒழுங்கமைப்பு (In order), சிறப்பு (excellence), புகழ் (reputation), நன்னடத்தை (Good behavior) எனப் பல அர்த்தங்கள் உள்ளது. 

''சீர்மை மறவேல்'' என்பதற்குப் புகழுக்குக் காரணமான சிறப்பைத் தரும் நல்ல குணங்களை மறந்து விடாதே எனப் பொருள் கொள்ளலாம்.

சீர் என்பதற்கு தராசு எனும் அர்த்தமும் உண்டு. சீர்மை என்றால் தராசுமுள் போன்ற நடுவுநிலைமை.  ஆக ''சீர்மை மறவேல்'' என்பதற்கு ''நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, நடுவுநிலைமை தவறாமல் வாழ்வதற்கு மறந்து விடக்கூடாது'' என்பது மற்றுமொரு விளக்கம். 

நற்குணங்களை எளிதாக உருவாக்கிட முடியாது. அதை அமைதியாக அடைந்து விடவும் இயலாது. 

மனதில் உயர்ந்த இலட்சியம், சிறந்த குறிக்கோள் இவற்றை அடைய விட்டுக் கொடுக்காமல் போராடும் போது பல துயர சம்பவங்களை எதிர் கொள்ள நேரிடும். அந்த வேதனை அளிக்கும் சூழல் வலிகள் மிகுந்த அனுபவத்தைத் தரும். பெற்ற, கற்ற அனுபவங்கள் மனதை வலிமையாக்குகிறது. அந்த வலிமை பெற்ற மனதிலிருந்து நல்ல குணங்கள் பிறக்கின்றன.

ஒருவர் இயல்பான நிலையில் செய்யும் செயல்கள் வழியாக அவரது உண்மையான குணத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.  

நல்ல பண்புகள் உடையவர்கள் பணம், அதிகாரம் இவற்றால் மயங்கிச் சூழலுக்குத் தக்கவாறு மாற மாட்டார்கள். இழிவான ஆதாயத்திற்காகத் தவறான செயல்களைச் செய்ய மாட்டார்கள். 

திறமைகள் மூலமாக உயர்ந்த இடத்தை அடைய முடியும். ஆனால் அந்த உயர்ந்த நிலையைத் தக்க வைக்க நல்ல குணம் அவசியம். 

குறளிருந்து சில கடைப் பிடிக்க வேண்டிய நல்ல குணங்கள் மற்றும் விட்டு விலக வேண்டிய தீய குணங்களை அறிந்து கொள்வோம்.

இறையச்சம்:

சிறு வயதில் அப்பாவிற்குப் பயப்படுவோம். அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிவோம். அது தண்டனைக்கு அஞ்சுவதால் ஏற்படுவது. 

ஆனால் நாம் முதிர்ச்சி பெறும் போது தந்தையின் வார்த்தையை மிகக் கவனமாக மதித்துக் கேட்டு நடப்போம். நம்மீது அவருக்கு உள்ள உண்மையான அக்கறையை நாம் உணர்ந்து கொண்டதால் அந்த மாற்றம் நிகழ்கிறது.

அது போல, இறையச்சத்தால் நல்ல செயல்களைச் செய்கிறோம். கடவுளுக்குப் பயப்படுவதே நல்ல குணங்கள் நம்மில் உருவாகத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. நற் பண்புகள் நமக்குள் உருவாகின்றது. 

அவை நம் வாழ்வில் தரும் உயர்வு, மன நிறைவு, ஞானம், மேன்மை இவற்றால் இறைவனுக்கு நம் மீது உள்ள அன்பை உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஆக நற்பண்பு மிக்கவர் இறைவனுக்கு அஞ்சி அல்ல, அவரது பெருமையை, மேன்மையை உணர்ந்து இறை வார்த்தைக்குக் கீழ்ப் படிந்து நடக்கின்றனர். 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் அவை பயனற்றவையாகும். 

அது போல எட்டுக் குணங்களை உடைய ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்ட இறைவனின் திருவடிகளை வணங்கி நடக்காதவனின் தலையும் (அறிவும்) பயனற்றதாகும். 

அறம் செய்:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

நன்மை எது, தீமை எது என்பதை ஆராய்ந்து உணர்ந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொள்பவர்களே பெருமைக்குரியவர்கள்.

மனதில் தூய்மை:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

ஒருவன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் அதுவே. மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை.

பழி பாவத்திற்குப் பயப்படு:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 

பொருள் சேர்க்கும் போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து அனைவருடன் அதைப் பகிர்ந்து செலவு செய்யும்  பண்புடையவர் வாழ்க்கை களங்கமற்றது (குறைவற்றது). 

கடமையை செய்:

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் இருக்கச் செய்தலேயாகும்.

வீரத்துடன் செயல்புரி:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது எனும் உண்மை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள். 

விருந்தினரை உபசரி:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.  

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு உபசரிக்கின்றவருடைய வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்.

பயனுடைய சொற்களைப் பேசு:

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

நல்ல பண்பு உடையவர் பயனில்லாத சொற்களைப் பேசுவாரெனில், அவருடைய மேன்மை அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

நன்றி மறவாது இரு:

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பை ஏழேல் பிறவிகளிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் பெரியோர்.

நடுநிலை தவறாதே:

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி

தன்னைச் சமமாகச் செய்து கொண்டு, பின்பு பொருளைச்‌ சீர்‌ தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல்‌ அமைந்து, ஒரு பக்கமாகச்‌ சாயாமல்‌ நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்‌.

அடக்கத்துடன் இரு:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின் 

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப ஒருவர் நல்வழியில் அடக்கமாக வாழ்ந்தால், அவரது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவருக்குப் பெருமையைக் கொடுக்கும். 

ஒழுக்கம் உயிரினும் பெரிது:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். 

ஒழுக்கமே எப்போதும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

பிறன் மனைவியை விரும்பாதே:

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை விரும்பிச் செல்பவனிடமிருந்து நீங்காது.

தீமையைப் பொறுத்துக் கொள்:

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்றைய ஒரு நாள் மட்டுமே இன்பம். அந்த தீமையைப் பொறுத்தவருக்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

பொறாமைப் படாதே:

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

ஒருவர் எவரிடமும் பொறாமை கொள்ளாத  பெருந்தன்மை பெற்றால், அவருக்கு அதைவிடச் சிறந்த சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.

பிறர் பொருளை விரும்பாதே:

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

பிறர் பொருளை விரும்பி அதனைக் கவர்ந்து கொண்டு ஒருவன் வளம் பெற விரும்பினால் அது நலம் தருவதாக இருக்காது. அதனால் பிறர் பொருளை விரும்பக் கூடாது.

முதுகுக்குப் பின் இகழ்ந்து பேசாதே:

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்

ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சிணியம் இல்லாமல் நேரில் கடுமையாகப் பேசினாலும் பேசலாம். அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் பேசக் கூடாது.

தீங்கு தரும் செயலை மறந்தும் நினைக்காதே:

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

தீய செயல்களால் தீமையே விளையும். ஆகவே தீயச் செயல்களை நெருப்பைக் காட்டிலும் கொடுமையானவை எனப் பயந்து அவற்றை விட்டு விலகி வாழ வேண்டும்.

பகிர்ந்து கொடு:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

ஏழைகளின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

இரக்கம். (அருள்):

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

அருளால் வரும் செல்வமே எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாகும். அதைத் தவிர்த்த பொருளால் வாங்கப்படும் செல்வங்கள் இழிந்த மனிதரிடமும் உள்ளன.

புலால் மறுத்தல்:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
பொருளல்ல தவ்வூன் தினல்

இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே. ஒரு உயிரைக் கொலை செய்தல் இரக்கம் இல்லாத தன்மை. அதன் இறைச்சியைத் தின்பது அறம் இல்லாதது.

தவம் - தியானம் - இறை வேண்டல்:

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருப்பது ஆகிய இவையே தவம் என்பதன் இலக்கணம். 

ஏமாற்றக் கூடாது:

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட கொடியவர் எவரும் இல்லை.

திருடாதே:

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.  

திருடுவதால் சேர்க்கப்படும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி, முன் உள்ளதையும் சேர்த்து ஒன்றுமில்லாமல் அழித்துவிடும்.

உண்மை பேசு:

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. 

பொய் சொல்லாமல் ஒருவர் உண்மையைப் பேசி நன்மையையே செய்து வாழ்ந்தால் அவர் வேறு  அறங்களைச் செய்யத் தேவை இல்லை.

சினம் அழிவு - கோபப் படாதே:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

ஒருவர் துன்பம் நேராமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமானால், கோபத்தை அடக்கி ஆள வேண்டும் இல்லையேல் அக்கோபம், அவனையே அழித்துவிடும்.

மன்னிப்பு:

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். 

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே ஆகும்.

துன்பம் தரும் செயல்களைச் செய்யாதே:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

எங்கும், எப்போதும் துயரத்தைத் தரும் தீயச் செயல்களை மனம் அறிந்து சிறிதளவும் செய்யக்கூடாது. அதுவே சிறந்த அறம்.

கொலை செய்யாதே:

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. 

அறங்களின் வரிசையில் உயிர்களைக் கொல்லாமல் இருப்பது ஒப்பற்றது. முதன்மையானது. அதற்கடுத்து பின் வருவது உண்மை பேசுவது.

மெய்ப் பொருள் விரும்பு:

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். 

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாத மனம் உண்மையை விரும்பி தேடுவோர்க்கே உண்டாகும்‌. 


Character is not something that you buy; it is not a commodity that can be bartered for; it is not a quality suited for only the rich and famous; rather, character is built upon the foundational commitment of love, honesty, and compassion for others - Byron R. Pulsifer.

குணம் என்பது கடையில் வாங்கக் கூடிய ஓர் பொருள் இல்லை. ஒரு பொருளைக் கொடுத்து மாற்றாக இதைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இது ஒரு பண்டமும் இல்லை.

பணக்காரர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும் மட்டுமே இதைப் பெறக் கூடிய தகுதியும் தரமும் வாய்ந்தவர்கள் கிடையாது; 

மாறாக, பிறர் மீது நேர்மை, இரக்கம் மற்றும் அன்புடன் வாழ வேண்டும் எனும் அர்ப்பணிப்பு மிக்க  மனம் என்கிற அஸ்திவாரம் மீது குணங்கள் கட்டப்படுகின்றது - பைரன் ஆர். பல்சிஃபர்


படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்..,

சனி, 5 நவம்பர், 2022

அம்மா..,

 நினைவஞ்சலி.



அம்மா ஆழ்வார்திருநர் அடுத்த மணல்குண்டு எனும் சிற்றூரில் 02.10.1942ம் ஆண்டு பிறந்தார். அம்மா ஒரே ஒரு செல்லப் பெண். உடன் பிறந்தவர்கள்  ஜந்து சகோதரர்கள். அம்மா மூத்த சகோதரி. அம்மாவின் அப்பா திரு. சீனிப் பாண்டியன். தாயார் திருமதி சீனித்தாய். இருவரும் ஆசிரியர்கள். 

அவர்கள் தாத்தா அதாவது எனது பாட்டனார் தெய்வத்திரு. ஞானக்கண் அவர்கள் காலத்தில் தொடங்கிய "ஞானக்கண் ஆரம்ப பள்ளி" நூறு ஆண்டுகளைக் கடந்து இன்றும் அந்த சிற்றூரில் இயங்கி வருகிறது. 

அம்மாவின் திருமணம் 1962ம் ஆண்டு. 1963ம் ஆண்டில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றத் துவங்கினார். அவர்களது பெரும் பகுதியான பணிக்காலம் விருத்தாச்சலம், பறங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) பகுதியில் அமைந்தது.  கடைசி 5 வருடங்களில் சொந்த கிராமத்தில் (வீராணம், தென்காசி) பணி புரிந்து ஓய்வு பெற்றார்கள். (ஆசிரியர் பணி 1963-2000).

அவர் ஒரு கடினமான உழைப்பாளி:                                           

அம்மாவை நினைவு கூறும்போது முதலில் தோன்றுவது அவர் ஒரு கடினமான உழைப்பாளி. அவர்கள் ஓய்வெடுத்துப் பார்ப்பது அரிது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு இருப்பார்கள். 

1970-80களில் ஒரு வருடத்திற்குத் தேவையான அரிசியை அரைத்துச் சேமித்து வைப்பது வீடுகளில் வழக்கம். பெரிய பெரிய பித்தளை அண்டாக்களில் நெல்லை ஊற வைத்து, வேக வைத்து, அரிசியாக அரைத்துக் கொண்டு வருவார்கள். அந்த கடும் பணியை வருடம் தவறாது செய்வார். அந்த புது அரிசி உலர வைக்க வீடு முழுவதும் பரப்பப்பட்டிருக்கும். அந்த புது அரிசியின்  மணம் இன்றும் நாசியில். 

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். அவர்களுக்குச் சுத்தமான பால் கொடுக்கப் பட வேண்டும் என வீட்டில் மாடு வளர்க்கப்பட்டது. தென்னம் துடைப்பம் முதல் தேங்காய் எண்ணெய் வரை பல பொருட்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

ஆசிரியைப் பணியை மிகுந்த கடமையுணர்வுடன் செயல் படுத்தினார்கள். பெத்தநாயக்கன்குப்பம் எனும் சிறு கிராமத்தில் பணிபுரிந்த போது அந்த சிற்றூரில் பேருந்துகள் நிற்காது. பல வருடங்கள் தினமும் ஜந்து கிலோமீட்டர் நடந்து சென்று வருவார்கள். 

அவர்களது உணவை அவர்களேச் சமைத்தார்கள். தாமே துணியைத் துவைத்தார்கள். பாத்திரங்களைக் கழுவுவது வரை வேறு ஒருவர் செய்வதை விரும்பவில்லை. இறுதி வரை உழைத்தார்.



அம்மாவின் உலகம் - குடும்பம்:

அம்மாவின் உலகம் மிகச் சிறியது. வேலை, குடும்பம், ஆலயம் அவ்வளவுதான்.

அம்மா குடும்பத்திற்காகவே வாழ்ந்தார். ஒவ்வொரு நாள் காலையில் எழுந்தவுடன் சில இறை பாடல்கள் பாடுவார். பின்பு வேதம் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஜெபம். அம்மாவின் கடைசி தினம் வரையில் இந்த ஒழுங்கு முறை தவறவே இல்லை. அது போல இரவு தூங்கச் செல்லும் முன்பாகவும் இதே ஒழுங்கு முறை தான். 

எனது சிறு வயதிலிருந்து யாரேனும் ஒரு உறவினர் எங்களோடு எப்போதும் வசித்தது உண்டு. ஒவ்வொரு உறவுகளும் எங்களுடன் சில காலம் தங்கிப் படித்து ஒரு வேலை பெற்றுக் கடந்து சென்றனர். உறவுகளைப் பேதமின்றி நேசித்தார். பல உறவுகளின் வாழ்க்கைக்கு எங்களது வீடு அடைக்கலம் தரும் புகலிடமாக இருந்தது.

அவர்கள் வாழ்ந்த  விதம் நம்ப முடியாததாக இருக்கும். ஆனால் அது உண்மை. அம்மாவிற்கு கேளிக்கை நிகழ்வுகளில் விருப்பம் கிடையாது. நாங்கள் குடும்பமாகப் பார்த்தது ஒரே ஒரு திரைப்படம் தான். வீட்டில் திரைப்படப் பாடல்கள் ஒலித்ததே கிடையாது. திருமண Functions, சுப நிகழ்வுகளில் கூட அதை அனுமதித்தது இல்லை. 

எனது +2 படிக்கும் போது தான் முதன் முதலாக குடும்பமாக ஹோட்டலில் சாப்பிட்டோம்.  எந்த சூழலிலும் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது அம்மாவின் வழக்கம். வெளிப் பிரயாணங்களிலும் சமைத்து எடுத்துச் செல்வார்கள். எளிமையான வாழ்க்கை.

எங்கள் குடும்பம்:

எங்கள் தந்தை உயர்திரு. சுப்பிரமணியம் அவர்கள் நெடுஞ்சாலைத் துறையில் மேலாளராக பணிபுரிந்து 1991ம் வருடம் ஓய்வு பெற்றார். இன்றும் எங்களை வழி நடத்துகின்றார்.

நாங்கள் மூன்று பேர். முதல் சகோதரி திருமதி. ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி. அவரது கணவர் திரு. ஹென்றி மோகன். சங்கர் சிமென்ட்ஸில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகன் எரிக் எட்வின்.அவரது துணைவியார் மகிபா பிரின்ஸி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ரெபேக்கா ஷரன் & ஜெஸிக்கா. பஹ்ரைனில் வசிக்கின்றனர்.

இரண்டாவது மகள் ஹெல்மினா நேச கமலா. அவரது கணவர் சாமுவேல் ஆண்டனி. அவர்களுக்கு ஒரு மகன் கெவின் ஹென்றி டேனியல். துபாயில் வசிக்கின்றனர்.

இரண்டாவது சகோதரி தெய்வத்திரு. ஸ்டெல்லா சாந்தி மேரி. அவரது கணவர் திரு. செல்வராஜ். NHAIல் Project Director ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போதும் NHAIல் Team leader ஆக பணி புரிகிறார். சாந்தி அக்கா 22.02.2007ம் ஆண்டு இறைவனது திருவடியை அடைந்தார்கள். 

இவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். முதல் மகன் ரென்னி பிரபாகர், அவரது துணைவியார் கேத்தரீன். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்  ஜான் & ஜெனி. சென்னையில் வசிக்கின்றனர். 

இரண்டாவது மகன் ரெமோ ஷரன். மதுரையில் சொந்தமாக தொழில் நடத்துகிறார். 

கடைசியாக நான் மற்றும் எனது துணைவியார் திருமதி. முத்து ஜெய லதா. எனது மகன் ரியோ சாம். மருமகள் கேத்தரீன் பிரியா. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மெரில் & மைக்கேல். மெல்பேர்னில் வசிக்கின்றனர்.

எங்களது மகள் ஏமி கேத்தரீன். மருமகன் மனோஜ் பால். இருவரும் பல் மருத்துவர்கள். மருமகன் கனடா தேசத்தில் பணி புரிகின்றார்.

அம்மாவின் ஜெபம் மற்றும் வழி காட்டுதல் எங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிக முக்கிய காரணம். அனுதினம் எங்கள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி ஜெபிப்பார்கள். எங்கள் முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். எங்கள் உயர்வைப் பற்றிப் பேசி மகிழ்ந்தார்கள். நாங்கள் ஏதேனும் சிறு பொருளை அளித்தாலும் வருவோர் போவோரிடம் அதைப் பெரிதாகக் கூறி அக மகிழ்ந்தார்கள். 

எங்களை ஈன்றெடுத்து, வளர்த்து, கல்வியளித்து, திருமணம் செய்வித்து குடும்பமாக வாழ வைத்ததே அவர்களுடைய வாழ்க்கை.

அம்மா என்றால் சிக்கனம்:

அம்மா எதையும் நிதானமாக அணுகுபவர். பொருட்களை அளவுடன் பயன்படுத்துபவர். பல வருடங்கள் பழமையான பொருட்கள் கூட பத்திரமாக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இளமையில் மிக நெருக்கடியான பண சூழலில் வளர்ந்தவர். அதை  இறுதி வரை மறக்காது சிக்கனமாக வாழ்ந்தார்.

கடைசிவரை எதாவது ஓர் சிறு சேமிப்பில் இணைந்திருந்தார். பொருட்களைப் பிறருக்குத் தானமாகக் கொடுத்தாலும்  கூட அதை அளந்து தான் கொடுப்பார். ஒவ்வொரு வரவு செலவும் கடைசி வரை எழுதி வைத்திருந்தார். 

கொடுக்கும் கரங்கள்:

அம்மா இறுதி வரை கொடுக்கும் ஸ்தானத்தில் வாழ்ந்தார். பணத் தேவைகளுடன் வருபவர்களுக்கு தன்னால் இயன்ற அளவு மறுக்காமல் உதவினார். அவருக்கு உதவியவர்களுக்கு உடனடியாக பதிலுதவி செய்திடுவார். எதையும் பிறரிடமிருந்து இலவசமாகப் பெறுவதற்குப் பிடிக்காது. பிறர் பொருளுக்கு ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை. 

ஒவ்வொரு பேரன், பேத்தி, பூட்டன், பூட்டிக்கும் செய்ய வேண்டியவற்றை மகிழ்ச்சியோடு செய்து அழகு பார்த்தார்கள். 

கடைசி தினத்தன்று கூட இரண்டாவது சகோதரியின் மகன் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையுடன்  வந்திருந்தார். அந்தக் குழந்தையை மகிழ்ச்சியோடு ஏந்தினார். அவர்களுக்கு பிடித்தமான உணவைச் சமைத்தார். அவர்களைப் பார்த்ததில் அவ்வளவு மகிழ்ச்சி. 

அம்மாவின் விருப்பங்கள்:

அம்மாவிற்கு இறைப்பணியில் தீராத வாஞ்சை. பல வருடங்களாக ஒவ்வோர் நாளும் மாலை ஆலயத்தில் ஜெபம் நடத்துவதை மிக மகிழ்ச்சியுடன் செய்தார்கள். ஞாயிறு ஆராதனைக்குக் குறித்த நேரத்தில் ஆலயத்தில் இருப்பார்கள். தாமதம் எனும் பேச்சிற்கே இடமில்லை. 

ஆலயத்தின் ஒவ்வொரு ஊழியங்களிலும் ஆவலுடன் பங்கு பெறுவார்கள். குறிப்பாகக் கிறிஸ்மஸ் பவனி ஒவ்வொரு வருடமும் எங்களது இல்லத்தில் சிறப்பாக நடைபெறும். அவர்களுக்கான உணவு தயாரிப்பதற்காக அவ்வளவு சிரத்தை எடுப்பார்கள். ஆலயத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்குக் கிறிஸ்மஸ் பரிசுப் பொருட்கள் தெரிவு செய்ய அதிக உற்சாகமாக ஈடுபடுவார்கள்.

அவர்களது இறுதிக் காலத்தில் எங்களது வீட்டிற்கு வருகை தருவதில் உறவினர்களை விட ஊழியர்களே அதிகம் எனலாம். ஊழியர்களுடன் குழந்தையைப் போல உரையாடுவார். அவர்களை உபசரிப்பதில் அதிக மகிழ்ச்சியடைவார்கள். 

பார்வையற்றவர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஊழியங்கள், மிஷனரிப் பணிகள், பல சுதேச ஊழியங்களை அவர்கள் கிரமமாக ஆதரித்துத் தாங்கினார். வீராணம் CSI திருச்சபையின் பல வகையான ஊழியங்களிலும் இணைந்து செயல் பட்டார். திருச்சபையில் பல பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றினார்.

அம்மாவின் இறுதி நேரங்கள்:

23.10.2022 அன்று இரவு 9 மணியளவில் வழக்கம் போல என்னுடன் தொலைப்பேசியில் பேசினார். ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வது குறித்துப் பேசினார்.  

இரவு 10 மணி மாதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்தார். வழக்கம் போல் இரவு ஜெபம் செய்தார். இரவு 10:30 மணியளவில் சற்று அசௌகரியமாக உணர்ந்தார். அப்பா மற்றும் உறவினர்கள் உதவி செய்தனர். 10:45க்கு நெஞ்சில் லேசான வலி. அடுத்த சில நிமிடங்களில் வலி தீவிரமாகி ''ஆண்டவரே'' என அழைத்தார். மயங்கி விழுந்தார். 10:50 மணியளவில் அவரது ஆன்மா இறைவனது பாதம் அடைந்தது.



அம்மாவின் இறுதி அடக்க ஆராதனையில் உறவுகள், சபை மக்கள், பல தேவ ஊழியர்கள் பங்கு பெற்றனர். நாங்கள் அறியாத பலர், குறிப்பாக சபை மக்கள் அம்மாவின் அன்பை கண்ணீரோடு பகிர்ந்தனர். அவர்கள் ஒரு முழுமையான வாழ்வு வாழ்ந்து தமது ஓட்டத்தை கர்த்தருக்குள் நிறைவு செய்த்தை உணர்ந்தோம்.

இனி அனுதினம் இருமுறை அழைக்கும் அவரதுக் குரலைக் கேட்க முடியாது. அவர்களைப் பார்க்க முடியாது. ''எப்படா வருவ'' எனக் கேட்டுக் காத்திருக்கும் உயிர் இனி இல்லை. வாழ்வின் கடினமான நேரங்களில், மனம் சோர்ந்து துவளும் போது ஆற்றுப் படுத்தும் அந்த ஆறுதல் வார்த்தைகள் கிடைக்காது. வாழ்க்கைப் போராட்டத்தில் திறப்பின் வாசலில் நின்று போராடும் தாய் இனி இல்லை. அவர்களது அன்பு நிறை செயல்கள் மனதில் எழும்பும் போது விழியில் நீர் சுரக்கின்றது.




அவர்கள் உடல் திருச்சபைக் கல்லறைத் தோட்டத்தில் உறங்குகிறது. அவர்கள் ஆன்மா இறைவனது சமூகத்தில் இளைப்பாறுகிறது என விசுவாசிக்கிறோம். 

அம்மா..,  உயிர்த்தெழுதலின் நாளில் நாம் மீண்டும் சந்திப்போம்.