திங்கள், 8 அக்டோபர், 2018

மகிழ்ச்சிக்கான நான்கு வழிப் பாதை.

மகிழ்ச்சி - ஒரு நெடிய நான்கு வழிப் பாதைப் பயணம்.


(Khasab Musandam)

மனிதர்களின் மனதில் மகிழ்ச்சி பொங்கும் போது மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் குறித்த ஆய்வு குறிப்புகள் மிகவும் சுவாரசியமானது.

அதன் படி மகிழ்ச்சிகரமான சூழலில் நான்கு விதமான வேதிப் பொருட்களை மூளையில் இருந்து வெளிப்படுகிறது என கண்டுபிடிக்கப்பட்டது.

அவை:
  • Endorphins
  •  Dopamine
  •  Serotonin
  •  Oxytocin
எத்தகைய சூழலில் இருந்து இந்த வேதிப்பொருட்கள் மூளையில் இருந்து வெளிப்படுகிறது என பார்ப்போம்.

1. உடற்பயிற்சி:

 

(Gym at Khasab Musandam)

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மிக முக்கியமானது. இதன் தொடர்ச்சியாக முறையாக உடற்பயிற்சி செய்வது முக்கியம். இவ்வித உடற்பயிற்சிகள் செய்வதால் தசைகள் களைப்படைகின்றது. இந்தத் தசைகளை வலுப்படுத்தவும் உடல் வலியைப் போக்கவும் மூளையில் இருந்து சுரக்கும் வேதிப் பொருள் தான் Endorphins.

இது மனதில் மகிழ்ச்சி மற்றும் பெருமித உணர்வுகளை வெளிப்படுத்தும். எனினும் இது ஏற்படுத்தும் மகிழ்ச்சி உணர்வு தற்காலிகமானது.

2. இலக்கை அடைதல்:


(Coastal Project Road Khasab Musandam)

வாழ்க்கை என்பது சிறிய மற்றும் பெரிய இலக்குகளால் வழி நடத்தப் பெறுகின்றன. குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி, இலகுவான பயணத்துக்கு உகந்த வாகனங்கள், வசதியான வீடு, விடுமுறைக்குச் சுற்றுலா, உயர்ந்த ஆடைகள், வேலையை எளிதாக்கும் சாதனங்கள்..., என அடைய ஆசைப்படும் பட்டியல் மிக நீளமானது. இத்தகைய இலக்கை அடையவே கடுமையாக திட்டமிட்டு உழைக்கிறோம்.

இந்த இலக்கை அடையும் தருணங்களில் நமது மூளையில் இருந்து வெளிவரும் வேதிப் பொருள் தான் Dopamine. இந்த இரசாயனப் பொருள் மனதில் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் திருப்திகரமான உணர்வை ஏற்படுத்தும். ஒவ்வொரு இலக்கை அடையும் போது இந்த மகிழ்ச்சியான உணர்வைப் பெற முடியும். இதுவும் ஒரு தற்காலிக உணர்வுக் தூண்டுதலே.


3. சமூக நலம் விழைதல்:



(Sunday School Children -  St. Luke Church, Salalah)

நமது பணம், திறமை, நேரம் இவற்றை நம்மைச் சுற்றி வாழும் சமூக மேம்பாட்டுக்காகச் செலவிடும் போது மூளையில் இருந்து வெளிவரும் வேதிப் பொருள் தான் Serotonin.

அதனால் தான் வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்கள் இந்த சமூகத்திற்கு என தங்கள் பணத்தை, நேரத்தை, திறமையை அளிக்க உந்தப் படுகின்றனர். நம்மைச் சுற்றி வாழும் மக்களுக்கு உதவும் போது ஆத்ம திருப்தி உண்டாகும்.

ஓய்வு நேரத்தில், விடுமுறை காலத்தில் தொண்டு நிறுவனங்கள், சமூக பணி செய்யும் மையங்கள் இவர்களோடு சேர்ந்து பணிபுரிவது நல்ல நட்புககளின் அறிமுகமும் கிடைக்கும். இத்தகைய பணி புரிதல் வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்குச் சமூகத்திற்கு நமது பங்களிப்பை நல்குவோம்.

4. அன்பும் அக்கறையும்:


(With Grand daughter Merryl)

Oxytocin எனும் வேதிப்பொருள் நமது உள்ளத்தில் அன்பு உணர்வு பொங்கும் தருணங்களில் உருவாகிறது. நண்பர்களோடு சேர்ந்து அளாவுதல், உறவுகளின் நெருக்கமான பகிர்தல், பிடித்தமான மனிதர்களின் கூட்டுறவு, நீண்ட பிரிவுக்குப் பின்பு சந்திக்கும்போது கட்டிக் தழுவுதல் என நெருக்கமான அன்பின் தருணங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவசியம்.

உறவுகளை மேம்படுத்துவது வழியாக மகிழ்ச்சியாக இருக்க முடியும். நான்கு வழிப் பாதையில் இதுவே மிக எளிய வழி. புன்னகை பொங்கும் முகத்துடன் சந்தியுங்கள். அனைவருடனும் அன்பு செலுத்துங்கள். உடன் வாழ்பவர்களுடன் இணக்கமாக இருப்பதற்கு முயற்சி எடுங்கள். நண்பர்களோடு விளையாட்டுகள், உறவுகளோடு விழாக்கள் என  உற்சாகம் தரும் நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

இந்த நான்கு வாழ்க்கை முறைகளும் கடைப்பிடிப்பதன் வழியாக முழுமையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்..

வாழ்க வளமுடன்.


சனி, 29 செப்டம்பர், 2018

நற்குணங்கள் தரும் நல்வாழ்வு.

🌺 நற்குணங்கள் தரும் நல்வாழ்வு.




🔹 கசப்பை வளரவிடாதீர்கள். பழிவாங்குதலில் முடியும்வரை அதன் அனல் அணையாது!

அதற்கு மாற்றாக அன்பினால் மனதை நிரப்புங்கள். அதன் நேசத்தில் எப்போதும் மகிழ்ந்து களி கூறலாம்.

🔸 இச்சையை வளரவிடாதீர்கள். விபச்சாரத்தில் முடியும்வரை அதன் இமை சாயாது!.

ஒழுக்கத்தை உயிரை விட மேலாக கருதி நேசியுங்கள். அதுவே வாழ்வை மேன்மைப்படுத்தும்.

🔹 கோபத்தை வளர விடாதேயுங்கள். கொலையில் முடியும்வரை அதன் குருதி ஆறாது!

மன்னிப்பை ஈந்தளியுங்கள். மனதின் சமாதானம் கடலைப்போல விஸ்தாரம் ஆகும்.

🔸 பெருமையை வளர விடாதேயுங்கள். அவமானத்தில் முடியும்வரை அதன் தாகம் தீராது!

தாழ்மையை மனதில் எப்போதும் தரித்துக் கொள்ளுங்கள். அது உயர்ந்ததும் உன்னதமான நிலையை எய்திட அனுக்கிரகம் செய்திடும்.

🔹 பொறாமையை வளர விடாதேயுங்கள். நம்மை கொல்லாதவரை அதன் வேகம் குறையாது!

பிறரின் திறமையை, உழைப்பை, உயர்வை அங்கீகரியுங்கள். அது அனைவருடனும் நட்போடும், நேசத்துடனும் வாழ்வில் சுபிட்சமாக வாழந்திட அருள் செய்யும்.

வாழ்க வளமுடன்.

வியாழன், 20 செப்டம்பர், 2018

மகிழ்ச்சி எனும் இரசவாதம்.

மகிழ்ச்சி எனும் இரசவாதம்.



(கல்லூரி நண்பர்கள் பொங்கல் கூடுகை - மாங்கரை) 

இங்கு பக்ரித் கொண்டாட்டங்கள் முன்னிட்டு  தொடர்ந்து ஒன்பது தினங்கள் விடுமுறை அறிவித்தாயிற்று.

ஏறக்குறைய பத்து தினங்கள்  தனியாக விடுமுறையைச் செலவழிப்பது என்பது மிகச் கடினமாகத் தென்பட்டது. விமான கட்டணமோ நான்கு ஐந்து மடங்கு எகிறியது.

இருப்பினும் விடுமுறையை அப்பா, அம்மா, உறவுகள் மற்றும் நட்புகள் உடன் இணைந்து கொண்டாடிட, மகிழ்ந்திட தீர்மானித்து ஊர் நோக்கிப் பயணித்தேன்.

மகிழ்ச்சி என்பது பயணங்கள் வழியாகவே தொடங்குகிறது.

பிறப்பு என்பது கூட, உயிர் ஒரு ஆனந்த அனுபவத்தை எதிர் நோக்கிய நீச்சல் பயணத்தில் தானே தொடங்குகிறது.

திருநெல்வேலி - குற்றாலம் இடையில்  வீராணம் எனும் ஒரு எளிமையான கிராமம் தான் எனது தந்தையின் பூர்விகம்.

அப்பா, அம்மா இருவரும் கடலூர் மாவட்டத்தில் அரசுப் பணியாளர்களாக பணிபுரிந்து தற்போது ஓய்வாகக் கிராமத்தில் வசிக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் தான் அப்பா முழுவதுமாக பணி புரிந்து ஓய்வு பெற்றார்கள். பணி நிறைவுக்கு சில வருடங்கள் முன்பாக அம்மா  மாறுதல் பெற்று சொந்த ஊரில் பணி புரிந்து பின்பு ஓய்வு பெற்றார்கள்

எனவே சிறு வயதில் இருந்தே, திருநெல்வேலி தொடர்பு என்பது வருடத்தில் ஒரு மாதம் விடுமுறை பொழுது மட்டும் தான்.

பள்ளிப் படிப்பு முழுவதும் நெய்வேலி அருகில் உள்ள குறிஞ்சிப்பாடி என்னும் சிற்றூர். பின்னர் கோவையில் கல்லூரி வாழ்க்கை.

ஆகையால் சிறு வயதிலேயே நீண்ட பயணங்கள் இயல்பாக அமைந்து விட்டது.

பள்ளி ஆண்டு விடுமுறைக்குச் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்வது என்பது அப்போது ஒரு திருவிழா கொண்டாட்டம்.

எல்லாத் துணிகளையும் பெட்டியில் வைத்து விட்டு கடைசித் தினத்தன்று வெறும் துண்டோடு அமர்ந்து பயணத்துக்காகத் தயாராகி காத்திருக்கும் அற்புதமான தருணங்கள் அது.

"சுகமா இரிக்கிகளா" "வடக்க இருந்து எப்ப வந்தீக"  என்ற சொந்த ஊரின் விசாரிப்பு தெரு முழுவதும் வாஞ்சையுடன் தொடரும்.

இன்றும் கூட அது தொடர்கிறது.

அம்மாவின் பூர்விகம் ஆழ்வார்திருநகர். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த அழகியதொரு ஊர்.

ஏப்ரல், மே மாதக் கோடையிலும் கூட வற்றாத தாமிரபரணி பாய்ந்த அழகிய காலமது.

பாட்டியின் வீட்டில் காலைப் பொழுது சுடச் சுட கடுங்காப்பியுடன் துவங்கும். உடன் சுற்று முறுக்கு. பள்ளி விடுமுறை காலம் ஆதலால் வீடு முழுவதும் சொந்தங்களால் நிறைந்து இருக்கும்.

நீராகாரம் குடித்து விட்டு ஆற்றை நோக்கிச் செல்லும் பயணம் எப்போது திரும்புவோம் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

ஆற்றுப்படுகையில் தோண்டி எடுத்துப் பருகிய சுனை நீரின் இனிப்பு இன்னும் மனதில் தித்திக்கிறது.

அந்த ஒரு மாதம் எப்படிப் போனது  என்றே தெரியாது. சிறகடித்துப் பறந்த நாட்கள்.

விடுமுறை முடிந்து ஊர் திரும்பி பள்ளி வந்தவுடன் நண்பர்கள் நான் பேசும் விதம் குறித்து கேலி செய்வார்கள்.

என்னடா "ஏல", "வால",  "போல" ன்னு இழுத்து இழுத்து பேசுற.

நம்மை அறியாது ஒட்டும் பேச்சின் மண் வாசம்.

மகிழ்ச்சிக்கான காரணிகள் குழந்தைப் பருவத்தில் இருந்து வாலிப வயதுக்கு இடம் பெயரும் போது தடம் மாற்றம் அடைகிறது.

அது உறவுகளின் கூட்டுறவில் இருந்து விலகி நட்பின் கூடாரத்துக்குள் நுழைகிறது.

கல்லூரி வாழ்க்கை என்பது ஓர் வசந்த காலம். கோவையில் வாழ்ந்த அந்தத் தருணங்கள் வாழ்க்கையில் ஒரு கொண்டாட்டம்.

அப்போது மகிழ்ச்சி என்பது திட்டமிடப்படாத இயல்பாக நிகழும் ஒரு நிகழ்வாகும்.

ஆனாலும் கல்லூரி வாழ்க்கையில் மகிழ்ச்சியாகக் கருதி செய்த பல செயல்கள் இப்போது திரும்பிப் பார்த்தால், அது நகைப்பாகத் தான் இருக்கிறது.

வாலிப பருவத்தில் இருந்து இளம் மனிதனாக உருவெடுப்பது கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாக உருமாற்றம் அடைவதற்கு ஒப்பாகக் கருதலாம்.

எனது இளமைக் காலத்தில் குறிப்பாக 1997 துவங்கி 2003 வரையில் வாழ்க்கை  என்பது பயணங்களால் நிரம்பி வழிந்தது. அப்போது  இந்தியாவின் 18 மாநிலங்களில் நடைபெற்ற கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்ய வேண்டியது எனது பொறுப்பு.

கிழக்கில் இருந்து மேற்கு; தெற்கிலிருந்து வடக்கு எனத் தேசம் தழுவிய பயணங்கள். அப்போது பெற்ற அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வரையறைகளைப் பெரிதும் மாற்றம் செய்தன.

பால பருவம் துவங்கி இளம் பருவம் வரை மகிழ்ச்சியாக இருப்பது என்பது  உடல் கிளர்ச்சியை மையமாகவும் உணர்வு சார்ந்த செயல்களில் ஈடுபட்டும்  தனது ஆசைகளை மனம் தீர்த்து கொண்டதாகவே இருந்திருக்கிறது.

அப்போது மகிழ்ச்சி என்பது புலன் உணர்வு சார்ந்த ஒரு குதுகலம்.

பொருட்கள் அளித்த ஈர்ப்பு, பாலுறவு கவர்ச்சி, பிறரின் அங்கீகாரத்தைப் பெற விழையும் ஏக்கம், எதிர் பால் அங்கீகாரம், தன்னை முதன்மைப் படுத்த விழையும் ஆர்வம் என ஒரு விதமான மயக்க நிலைதான் மனதை ஆளுமை செய்திருக்கிறது.

இளமைப் பருவம் கடந்து ஆளுமை உணர்வு மனதில் துளிர்க்கும் போது தான் சந்தோஷத்திற்கான வரையறைகள் உருமாற்றம் அடைவதாகத் தோன்றுகிறது.

அப்போது மகிழ்ச்சி என்பது குடும்பத்தின் நிலையை உறவுகள் மத்தியில் உயர்த்துவது, பிள்ளைகளுக்குச் சிறந்த  வாழ்க்கையை அமைத்துத் தருவது, பணியிடத்தில் சிறந்த பதவியை அடைவது, நட்பு வட்டத்தில் ஒரு மதிப்பு மிக்க ஸ்தானத்தை அடைவது, சமூக வெளியில் தன்னார்வ பொறுப்புகளை ஏற்பது எனத் தேடல்கள் திசை மாறிப் பயணிக்கின்றன.

இப்போது கால ஓட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வரையறைகள் முற்றிலுமாக மாறுதல் அடைந்து வருகிறது.

ஐம்பதைத் தொடும் வயதில் அநேகமாகத் திரும்பவும் குழந்தைப் பருவத்திற்கே மனம் வட்டமிட்டுத் திரும்புகிறது.

இப்போது மனம் மீண்டும் உறவுகளின், நட்புகளின் கூடுகையையே பெரிதும் விரும்புகிறது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் கல்லூரி நண்பர்களின் சில  குடும்பங்கள் ஒன்றாகக் கூடி  கோவை அருகில் உள்ள மாங்கரை வனப்பகுதியில் பொங்கல் வைத்துக் கொண்டாடியது மனதில் இன்றும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.


கோவையில் வசிக்கும் கல்லூரி நண்பர் திருமதி உஷா அங்குசாமி தனது கணவருடன் இனைந்து, அவர்கள் இருவருமாக முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.




அந்த நாள் முழுவதும் கல்லூரியில் வாழ்ந்த நாட்களுக்கு திரும்பிப் பயணம் செய்தோம். 


ஆச்சரியமாக  நாள் முழுவதும்  மொபைல் போனைத் தொடவே இல்லை. 


மனதில் இருந்து பகிர்ந்து கொள்ளும் அன்பு, கரிசனை, உபசரிப்பு, செவிமடுத்துக் கேட்டல், உற்சாகமாகச் சம்பவங்களை பகிர்தல் என அந்தநாள் அற்புதமாகக் கடந்து சென்றது.

உண்மையான மகிழ்ச்சிக்கான காரணிகள் இப்போது முற்றிலும் மாறுபடுகிறது.

இந்த இரசவாதம் அற்புதமானது.

இது தெள்ளத் தெளிவாக புலப்படுகிறது.

மகிழ்ச்சியிலிருந்து ஆனந்தம் என்பது ஓர் வளர் நிலை அனுபவம்.

மகிழ்ச்சிக்கான வரையறைகள் கால ஓட்டத்தில் கடும் மாறுதலடைகின்றன.

ஒவ்வொரு கட்டத்தையும் வெற்றிகரமாகக் கடந்து வந்தால் மட்டுமே அடுத்த நிலைக்குப் பயணிக்க முடியும் எனத் தோன்றுகிறது.

ஒன்றை அடைந்து அதை அனுபவித்துத் தீரும்போது மட்டுமே அதன் மீது உள்ள பிடிப்பு அகல்கிறது.

வாழ்வின் உண்மையான வளர்ச்சியில் காமமும், கபடும், அகந்தையும்  மெல்ல மெல்ல அழிகின்றன.

உடலின் திறனும் மனதின் அகங்காரமும் குறைவதால் புத்தி தெளிகிறது. மனம் புதிதாக பிறக்கிறது.

எதிலும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் கூடுகிறது.

இன்று முதிர்ந்த நிலையில் முகமூடி அணிந்த நட்புகள் வெறுப்பைத் தருகிறது.

போலியான மனிதர்களின் உரையாடல் அலுப்பைத் தருகிறது.

வேடதாரிகளால் எரிச்சல் ஏற்படுகிறது.

அர்த்தமற்ற பொய் உறவுகளை மனம் நிராகரிக்கிறது.

ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களை விட்டு  மனம் விலகி ஓடுகிறது.

புதிய நூதனமானப் பொருட்கள் வாங்குவதில் அவ்வளவு நாட்டமில்லை.

பெரும் திரள் கூட்டம் உவப்பானதாக இல்லை.

மற்றவர்களை உற்றுப்பார்க்க வைக்க வேண்டும் எனத் தீர்க்கமாக காரியத்தில் ஈடுபடுவது அவ்வளவு சுவாரசியம் தருவதாக இல்லை.

மாறாக

உண்மையான மனிதர்களின் ஒற்றை வார்த்தை உரையாடல் மனதில் மாயாஜாலம் செய்கிறது.

அர்ப்பணித்து உழைத்து முன்னேறும் திறம் மிக்க மனிதர்களின் கூட்டுறவு அளவற்ற ஆனந்தம் தருகிறது.

ஒத்த அலைவரிசை உடைய நட்புகளின் உரையாடல் மனதை உவகையாக்குகிறது.

சிறந்த படைப்புகளில் ஒளிந்திருக்கும் படைப்பாளரின் மனதை அதன் கலை உணர்வுகளை அவரது கற்பனைகளின் வீரியத்தை, அபிலாஷைகளைக் கண்டு உணரும்போது மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

நம்மைப் பிரியமாக நேசிக்கும் உறவுகள், நட்புகள் அருகாமை அளவற்ற ஆனந்தத்தை அளிக்கின்றன.

இன்று மகிழ்ச்சி என்பது உணர்வுகளை உண்மையான நட்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது அடையும் ஒரு ஆனந்த நிலையாகத் தோற்றமளிக்கிறது.

எனவே சிறு விடுமுறைக்கும் ஊர் நோக்கிப் பயணிக்கிறேன்.

உண்மையான உறவுகளும், நட்புகளும் தான் வாழ்க்கையை இன்று அர்த்தமும் மகிழ்ச்சியுமாக  ஆக்குகிறது.

நமக்காக மதிப்புமிக்க  நேரத்தையும், உழைப்பையும் தனது செல்வத்தையும் செலவிட ஆயத்தமாக இருக்கும் பத்து பேரைச் சம்பாதித்து விட்டால் போதும்.

இந்த உலக வாழ்வில் துன்பங்கள் மத்தியிலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அது நிச்சயமானதொரு உத்தரவாதம் தரும்.




சனி, 18 ஆகஸ்ட், 2018

அகந்தை செய்யும் மாயம்.

🌺 அகந்தை செய்யும் மாயம். 



(Excerpts from the book of  "Cutting through Spiritual Materialism".)
by Chogyam Trungpa.

The problem is that ego can convert anything to its own use, even spirituality.


▪ நாம் எதிர்கொள்ளும் மனதின் எரிச்சல்களைத் தவிர்க்கவும், தன்னை பாதுகாப்பாகத்  வைத்துக் கொள்வதும் அகந்தையின் இயல்பான தன்மையாக இருக்கிறது.

▪ அகந்தையின் ஆளுகையால் மனம் புதிதாக எதையும் உள்வாங்கிக் கொள்ளமுடியாமல் தடுக்கப்படுகிறது.

▪ அகந்தை தன் அடையாளத்தை இழக்க நேரிடும் எந்த முயற்சியிலும் இறங்குவதில்லை.

▪ ‘சமயம்’ என்பதன் மூலம் தன் அடையாளத்தைக் காத்துக்கொள்ளலாம் என்று அகந்தை நினைப்பதால், அஃது அந்த வழியில்  பயணிக்கிறது.

▪ ஆன்மிகத் தேடல் என்பதை வீரதீரமான செயல்களை செய்வதன் வழியாகவே நிறைவேற்ற அகந்தை விரும்புகிறது.

▪ நமது தனித்துவத்தை இழந்துவிடாமல் இருப்பதற்கான  முயற்சிகளை செய்யவே மனதில் மறைந்திருக்கும் அகந்தை இடைவிடாமல் விழிப்புடன் போராடுகிறது.

▪ நாம் இதன்மூலம்  அகந்தை ஆன்மாவை விட்டு வெளியேறும் அனைத்து முயற்சிகளையும்  கட்டுப்படுத்துகிறோம்.

▪ இந்த மாதிரியான செயல்கள் நமக்கு ஆன்மிகப் பாதையில் பயணிப்பதைப் போன்ற ஒருவிதமான மாயத் தோற்றத்தை உருவாக்கும். ஆனால், உண்மையில் அப்போதும் நாம் போலியான நாமாக மட்டுமே இருக்கிறோம்.

▪ வாழ்க்கையின் யதார்த்தங்களை சந்திக்க நாம் பயப்படுகிறோம். எனவே அதிலிருந்து தப்பிப்பதற்காக அவற்றைக் கருத்தாக்கங்களாக வகைப்படுத்தவும், எளிதில் புரியாத பாசாங்குகளாகவும் மாற்றிடவும் அகந்தை விழைகிறது.

▪ நாம் வாழ்க்கையின் சூழ்நிலைகளை அதன் போக்கில் பார்க்கத் தயாராக இருக்க வேண்டும். அதை ஆன்மிகமாகவோ மறைபொருளாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை.

🔹உண்மையில் ஆன்மிகம் என்பது நமது நடத்தை, விழிப்பைக் கையாளும் அகந்தையின்  நிலைகளிலிருந்து விலகியிருப்பதே ஆகும்.

🔸இயல்பாக இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே ஆன்மீகம்.

🔹உண்மையான ஆன்மிகப் பயணத்தில் பயணிக்கும்போது நமது பாசாங்குத்தனத்தைப் பார்த்து நம்மால் சிரிக்கமுடியும். ஆனால், போலியாக அகந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தங்களது நகைச்சுவை உணர்வை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள்.

🔸 உண்மையான ஆன்மிகம் மிகவும் சாதாரணமானதும் கடினமானதுமாகும்.
அதில் நமது நம்பிக்கைகளை ஒப்படைத்துவிட்டு ஏமாற்றங்களுக்குப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்வது அறிவின் அடையாளமாகும். ஏனென்றால், அது நமது அகந்தை, கனவுகளின் இருப்பை நிராகரிக்கிறது.


(என். கௌரி அவர்கள் இந்து நாளிதழ் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.)

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

Salalah - அழகிய நகரம்.

Salalah  




சலாலா ஓமான் தேசத்தின் தெற்கில் அமைந்துள்ளது. மஸ்கட்டில் இருந்து ஏறக்குறைய 1100 கி.மி. தெற்கு நோக்கிப் பயணிக்க வேண்டும். ஏமன் தேசத்தின் அருகில் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். தற்போது அரசாளும் மன்னர் பிறந்த ஊர். ஒரு புறம் கடல் மற்ற மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கு.

சலாலாவின் சிறப்பு " kareef" எனும் சாரல் மழை தூவும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான வசந்த காலம்.

அரபு தேசத்தின் தகிக்கும் உஷ்ண காலத்தில் இந்தப் பகுதியில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையால் இது ஒரு பாலைவன சோலையாக, சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.

இது ஒரு சிறிய நகரம். ஊரைச் சுற்றி தென்னந்தோப்பு, வாழை மரம், பழத் தோட்டங்கள் என கேரள மாநிலத்தின் ஒரு கிராமத்தை நினைவு படுத்தும்.



சுற்றுலாத் தலமாக இருப்பதால் திரும்பிய திசை எல்லாம் உணவகங்கள் தான். மிகச் சிறந்த தென் இந்திய சைவ உணவகங்கள் உள்ளன. "Karref" இன் மூன்று மாதங்கள் முழுவதும் சாலை முழுவதும் சேறும் சகதியும் பூசப்பட்ட வாகனங்கள் அணிவகுப்பு தான்.

அந்த மூன்று மாதங்களும் மலையில் இருந்து வழியும் அருவிகள், சிற்றோடை, ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகள், பசுமையான மலைகள் எனக் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும்.



இங்கு விளையும் சாம்பிராணி வாசனைப் பிசின் மிகப் பிரசித்தமானது. இது மிகப் பழமையான ஒரு வியாபார ஸ்தலம்.  தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் archeological sites உள்ளது.

Khor Rorī எனும் இடத்தில் பழங்கால மக்கள் (BC 2 nd Century)   உபயோகம் செய்த மட் பாண்டம், குளியறை கல் தொட்டிகள், கல் அரவை இயந்திரம் எனப் பல பொருட்கள் அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.


அவர்கள் வாழ்ந்த இடங்கள் அதே விதத்தில் மிக அழகாகப் பராமரிக்கப்படுகின்றன.

Salalah வில் இந்து கோவில்கள், கிறித்தவ ஆலயங்கள் உண்டு.  எல்லாச் சமய நம்பிக்கை உடையவர்கள் தங்கள் மொழிகளிலேயே  வழிபாடு செய்ய அனுமதி உண்டு.


இங்கு யோபு என்னும் இறைத்தூதர் வாழ்ந்து மரித்தார் எனக் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய நம்பிக்கை உடையவர்கள் நம்புகிறார்கள். அவரது கல்லறை புனித இடமாக, வழிபாடு ஸ்தலமாக விளங்குகிறது.

ஓமான் தேசத்தின் முக்கிய துறைமுகங்களில் சலாலா துறைமுகம் ஒன்று.

மிக நவீனமான வசதிகள் உடைய அழகிய பன்னாட்டு விமான நிலையம் உண்டு. திருவனந்தபுரம், கொச்சின் நேரடி விமான சேவையும் உள்ளது.

2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதவி உயர்வு பெற்று இந்தப் பகுதிக்கு மாறுதல் ஆகி வந்தேன். இறைவன் அருளால் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்கள் வரை இங்குப் பணியாற்றவும் எனது பொறுப்பில் வழங்கப்பட்ட திட்டப்பணிகள் முடிக்கவும் கடவுள் உதவினார்.

நல்ல நண்பர்கள், ஆலயங்கள், சீதோஷ்ண நிலை, உணவகங்கள், தோப்புகள், தோட்டங்கள், சாரல் மழை என நமது ஊரில் வசிப்பது போலவே ஒரு தோற்றம்.

ஆஸ்திரேலியாவில் எனது மகனின் மேல்படிப்பு, மகள் பல் மருத்துவ படிப்பு, மகனின் திருமணம், புதிய பேத்தியின் வரவு, மகன் குடும்பமாக ஆஸ்திரேலியாவில் குடியேற்றம் என இந்தக் காலத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும்எனது மனதுக்கு மிக நெருக்கமானது.


வாழ்க்கை ஒரு நெடிய பயணம். அது மகிழ்வைத் தேடி ஓடும் பயணம் அல்ல.  அந்தப் பயணத்தில் அடையும் அனுபவங்களே துயரங்களும் மகிழ்ச்சியும்.

ஏமாற்றுபவர்கள் வழியாகத் தான் நல்ல நட்புகளின் அருமை புரிகிறது.

துயரமான இடங்களில் பணி புரியும் போது தான் சிறந்த இடங்களுக்கான வாசல்கள் திறக்கின்றன.

ஏழ்மையும் வறுமையில் வாழ்ந்த தருணங்கள் தான் பணத்தின் மதிப்பை கற்றுத் தந்தது.

தோல்விகளும் தனிமையும் தான் வெற்றியில் அடக்கத்தையும் பணிவையும் சொல்லித் தருகிறது.

தவறுகள் மன்னிக்கப்பட்ட போது தான் அன்பின் அர்த்தம் புரிகிறது.

உதவி செய்தும் மறக்கப்படும் போது தான் நமக்கு உதவியவர்களுக்கு நன்றி செலுத்தும் பண்பு வளர்கிறது.

புதிய இடம் நோக்கி தெற்கு எல்லையிலிருந்து வடக்கு எல்லை நோக்கி மீண்டும் அடுத்த பயணம்.

அதுவும் ஒரு சுற்றுலா தலமாகும்..

வாழ்க்கை என்பது நகர்தல். அதுவே சுவாரசியம்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மறு பிறப்பாளன்

மறு பிறப்பு.





"நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் கடவுளின் இறையரசில் இடம்பெற முடியாது” - இயேசு கிறிஸ்து.

ஒரு யூத சமய போதகர் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக  இரவில் இயேசுவை சந்திக்கிறார். அவரிடம் இயேசு கிறிஸ்து கூறியது தான் இந்த மாபெரும் உண்மை.

ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? 

ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் எப்படி நுழைய முடியும்? "ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாகப் பிறக்க முடியாதே” என அந்தப் போதகர் மறு உத்தரவு சொன்னார்.

அதற்கு இயேசு:

ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். "நீ மறுபடியும் பிறக்க வேண்டும்". 

"காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் இறைமையினால் மறுபடியும் பிறக்கிறான்” என்றார்.

மறுபடி பிறத்தல் என்பது குலப்பிறப்பால், சமய அடிப்படையில் நிகழ்வதல்ல.

எந்த ஒரு மனிதன் தனது இழிநிலையை உணர்ந்து, அந்த இழிநிலைக்குக் காரணமான அனைத்துச் செய்கைகளையும் விட்டு விலகி புது வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தீர்மானிக்கிறானோ அப்போது மறு பிறப்பாளானாக தனது பயணத்தை  துவக்குகிறான்.

தனது இழிநிலையை உணர்ந்து புத்தி தெளிதல் எனும் இந்த நிகழ்வு கடவுளின் அருளால் மாத்திரம் ஒரு மனிதனின் ஆன்மாவில் நிகழ்கிறது.

ஒவ்வொரு மனிதரும் வாழ்வின் கஷ்ட நேரத்தில் இவ்வித புத்தி தெளிவை லேசாக உணர்ந்தாலும், துன்பம் விலகிய உடன் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்கே திரும்பி விடுவர். காரணம் அந்தப் பழைய வாழ்க்கைத் தரும் இன்ப மயக்கம்.

இவ்விதம் இல்லாது துன்பம் நேரிடினும் தனது அர்ப்பணிப்பில் உறுதியாக வாழ்வைத் திட சங்கல்பம் கொண்டு தொடர்பவர்கள் மறு பிறப்பு அடைந்தவர்கள்.

சில குறிப்புகள்:


▪ ஆன்மா ஆசைப் பிணைப்பு என்ற ஒரு வகை உணர்வு பந்தத்தால் இவ்வுலகில் கட்டப்பட்டுள்ளது.

▪ அந்த ஆசைப் பிணைப்பில் இருந்து விடுபட்ட ஒருவன் இறை  நிலையை நோக்கிப் பயணிக்கிறான்.

▪ இருளடைந்த மேகங்களில் இருந்து வெளிவரும் நிலவைப் போல ஆசையில் இருந்து விடுபட்டவன்  ஞானத்தை புதையலைத் தேடுவது போலத் தேடி, நாடி தனது களங்கங்கள் அனைத்தையும் நீக்கி, தன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையுடன் வாழ்ந்திருப்பான்.

▪ ஆசையற்றவனாக இருக்கும் ஒருவன் ஒரு போதும் ஆன்மாவில் மரணம் அடைவதில்லை.  ஒழுக்கமும், தூய்மையை விரும்பும் மனோ நிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.

▪  புலன்களால் நுகரும் மணம், சுவை, பிறபொருட்கள் அளிக்கும் இன்பங்களில்   நாட்டம் இருக்காது.

▪ பாராட்டுக்கள், சாதனை மற்றும் புகழில் பற்று இருக்காது.

▪ அனைத்து உயிரினங்களின் வலி உணர்ந்து அவற்றைத் தனது சொந்த உறவைப் போல கருதி சிநேகமாக நடந்து கொள்வான்.

▪ அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும்  நிறுத்துகிறான்.

▪ எண்ணத்தாலும், வாக்காலும், செயலாலும் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் அன்பு செலுத்தி ஆதரிக்கிறான்.

▪ சடங்குகள் முக்கியமானது அல்ல அதன் பொருள் என்ன என்று உணர்ந்து கடைப்பிடிக்க கவனமாக இருப்பான்.

▪ வேதங்கள் அனைத்தையும் கற்று, சமய சடங்குகளை கடமையுணர்வுடன் நிறைவேற்றி, உபவாசம், விரதம் இருந்து, வேத தர்க்கங்கள்  அனைத்தையும் அறிவதால் மட்டுமே ஒருவன் மறுபிறப்பாளன் ஆகமாட்டான்.

▪ கருணை, அன்பு இவை இல்லாமல், ஆசை, பெருமை நிறைந்து இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தர்மங்களுடன்  கூடிய. பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே இறைமை நிலையை அடைந்துவிட முடியாது.

 ▪ எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் நடுநிலையில் பற்றறுத்து சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் போது அவன் இறைமை நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.

🔹 வைராக்கியம் நிறைந்த இறைப்பற்று,

🔸 சுயப் பற்றிலிருந்து விடுதலை,

🔹 இடைவிடாது உண்மையைத் தேடி விழைதல்,

🔸பொறுமையுடன் துன்பத்தில் அமைதி காத்தல்,

🔹 துன்பம் இழைப்பவரையும் மன்னித்தல்.

🔸 மனத் தாழ்மையாக இருத்தல்.

🔹 அனைத்து உயிர்களிடத்தும் இறைமையைக் காணுதல்

ஆகிய எழு குணங்களைக் கொண்டவர்கள் நிச்சயம் முழுமையடைவார்கள் அல்லது நிறைவடைவார்கள்.

வாழ்க்கை என்பது ஓர் அழகான வாய்ப்பு. அதன் பொருளையும் தனது படைப்பின் அவசியத்தையும் உணர்ந்து கொள்வதை விட ஒருவருக்கு மேலானது வேறு ஒன்றும் இல்லை. 

சனி, 28 ஜூலை, 2018

வெறுமையான / நிறைவான பாத்திரம்.


வெறுமையான / நிறைவான பாத்திரம்.




விருப்பங்களை  நிறைவேற்ற முற்படும் போது அதற்கான விடையை மனமானது தனது சிந்தனைத் தொகுப்புகளில் இருந்தே தேடத் துவங்குகிறது. "இதயத்தின் நிறைவே வாய் பேசும்".

இதயத்தை ஒரு பாத்திரமாக உருவகப்படுத்தினால்; அது சிந்தனை மற்றும் அனுபவங்கள் கற்றுக் கொடுத்த இன்ப மற்றும் துன்ப உணர்வுகளால் நிறைந்து காணப்படுகிறது.

நாம் பேசும் வார்த்தைகள் இந்தச் சிந்தனை தொகுப்புகளில் இருந்தே வெளி வருகின்றன. நமது செயல்களை இந்த அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்களும், நம்பிக்கைகளும் தான் தீர்மானிக்கிறது.

நமது பாத்திரங்கள் நிறைவை நோக்கி நகர்கிறதா அல்லது வெறுமையாக உள்ளதா?

அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைக்கு மனதை நல்ல எண்ணங்களால் தொடர்ந்து நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இஃது ஓர் இடைவிடாத தொடர் பணி. 


நற்சிந்தனை:


நல்ல எண்ணங்கள் என்பது அன்பை முதன்மைப் படுத்தும். பிறரைக் குற்றப்படுத்தாது. விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாக இருக்க விரும்பும். துன்ப சூழலில் பொறுமையுடன் அமைதி காக்கும். எதிரிடையாகச் செயல்படுபவரை  மன்னிக்கவும் அவரிடமிருந்து விலகி வாழவும் கற்றுக் கொடுக்கும்.

நல்ல மனிதர்களின் கூட்டுறவை விரும்பும். நல் நம்பிக்கையை ஏற்படுத்தும். தீய நடத்தைகள் அளிக்கும் தற்காலிக இன்பத்தை வெறுத்து இச்சை அடக்கத்துடன் வாழ உதவும்.

நல்ல எண்ணங்கள் சாந்தமும் தயவும் உடையது. பொறாமை, கசப்பு, வெறுப்பு இவற்றுக்கு எதிரானது. கர்வம், சுய தம்பட்டம், பெருமை இவற்றை மனதில் இருந்து அகற்றும்.

பிறருக்குத் தீங்கோ, கெடுதலோ நினைக்காது. நல்லவர்கள் வெற்றி பெறும் போது மகிழும்.

நெருக்கடிகள் மற்றும் வெற்றிகள்:


வாழ்வின் நெருக்கடியில் தவறான பாதையில் செல்லத் தூண்டப்படுவோம். நல்ல எண்ணங்கள் மேல் உள்ள வலிமையான நம்பிக்கை மட்டுமே துயரமான தருணங்களில் தவறான பாதையில் செல்ல விடாது நம்மைக் காப்பாற்றும்.

வாழ்வில் அடையும் சிறு வெற்றிகள் கவனச் சிதறலை ஏற்படுத்தும். வெற்றிகரமான பாதையில் பயணிக்கும் போது உடன் பயணிப்பவர்களைத் திருப்தி படுத்த தவறான பாதையில் செல்லும் படி தூண்டப்படுவோம். இதைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

நல்ல எண்ணங்கள் நல் மனிதர்களின் கூட்டுறவால் மேம்படும்.

இன்றைய கடினமான காலத்தில் நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புதல் என்பது சவாலானது. ஒரு தோட்டத்தைப் பராமரிப்பது போன்று தொடர்ந்து கவனமாக உழைக்க வேண்டும். கவனமற்று அலட்சியமாக இருந்தால் களைகள் பரவி புதர் மண்டி விடும்.

வாசிப்பு, தேடல், நட்பு, தனிமையில் இருக்கும் போது ஏற்படும் விருப்பங்கள், நேரத்தைச் செலவிடும் விதம் இவை தான் நமதுப் பாத்திரத்தை எதைக் கொண்டு நாம் நிரப்ப விரும்புகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது.

வெள்ளி, 22 ஜூன், 2018

ஒரு நேரத்தில் ஒரு செயல்

🌸 ஒரு நேரத்தில் ஒரு செயல்.

Thich Nhat Hanh



(இந்து நாளிதழ் (22-06-2018)  என். கௌரி அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சாரம்)

Thich Nhat Hanh வியட்நாமில்  வாழ்ந்த பவுத்த சமய துறவி.

இவரின் மிகச் சிறந்த வழி காட்டும் நூல்:
‘The Miracle of Mindfulness: An Introduction to the Practice of Meditation’ என்ற புத்தகம்.

இந்தப் புத்தகத்தில் அன்றாட வாழ்க்கையில் நமது எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கிறார்.

🔹 தற்கண உணர்வு:

(நிகழ்காலத்தில் வாழ்தல் - Living at the moment).

மனிதர்கள் எப்போதும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதால் அவர்களுக்கு தற்கண உணர்வுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியப்படவில்லை.

தற்கண உணர்வே இல்லாமல் பொறுமையின்மை, கோபம் போன்றவற்றுடன் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஒரு நேரத்தில் ஒரே ஒரு செயலை மட்டும் செய்வதன் மூலம் தற்கண உணர்வைக் கைக்கொள்ள முடியும்.

இதன் வழியாக அமைதியை உடனடியாகக் கண்டடைய முடியும்.

🔸 தற்கண உணர்வை அடையும் வழிகள்.


தற்கண உணர்வோடு வாழ்வதற்கு எதிராக இருப்பது எது என்றால் மனதில் எழும் நிலையற்ற தன்மையும், மறதியும்.

நம் எண்ணங்கள் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். 

இந்த அலைபாய்ச்சல் நமது சிந்தனையை தடம் புரள செய்யும்.
 
இப்படி மாறி மாறி சிந்தனையை சிதற விடாமல் தற்கண உணர்வைத் தக்கவைப்பதற்கான சிறந்த வழிகள்

▪ மூச்சுப் பயிற்சி

▪ சுய கண்காணிப்பு

▪ புன்னகை

🔹 மூச்சுப் பயிற்சி:


சுவாசத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால், நம் உடல்களையும் மனங்களையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதாக அர்த்தம்.

சுவாசத்தின் மீது கவனத்தைத் திருப்பும்போதே மன அலைச்சல் இருந்து படிப்படியாக விடுபட்டுவிட முடியும்.

மூச்சுப் பயிற்சியைச் சரியாக மேற்கொள்பவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முடியும்.

எண்ணங்கள் தலையில் கூட்டம் கூட்டமாகத் தோன்றிக் கொந்தளிக்கும்போது, உடலுக்குக் கவனத்தைத் திருப்பி பிரக்ஞையுடன் சுவாசத்தை மேற்கொண்டால், மனதுக்கும் உடலுக்கும் ஆறுதல் ஏற்படுவதை உணர முடியும்.

🔸 சுய கண்காணிப்பு:


விழிப்புணர்வு என்பது தியானப் பயிற்சியின்போது மட்டும் இருப்பதில்லை. அது இருபத்துநான்கு மணிநேரமும் நம்மிடம் இருப்பது.

எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாலும் நமக்குத் தற்கண உணர்வு இருக்க வேண்டும்.

உங்களது எண்ணங்களைத் தொடர்ந்து நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்களுக்கு நீங்களே அமைதியாக விளக்க வேண்டும்.

உதாரணமாக, “நான் இந்தப் பாதையின் வழியாக என் கிராமத்துக்குச் செல்கிறேன்” என்று சொல்லும்போது, நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியின் அற்புதத்தையும் உங்களால் பாராட்ட முடியும்.

🔹 புன்னகை


காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும்போதே புன்னகையுடன் விழிப்பது தற்கண உணர்வை அடைவதற்கான சுவாரசியமான வழி.

இந்தப் புன்னகையை நாள் முழுவதும் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

கோபமாக இருக்கும் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, இசை கேட்கும் மன நிலையில் இருந்தாலும் சரி,  நேரம் கிடைக்கும் போதெல்லாம் புன்னகையுங்கள்.

இப்படிப் புன்னகை புரிவதன் மூலம் உங்கள் துக்க அல்லது சந்தோஷ உணர்வுகளில் நீங்கள் கரைந்து விடாமல் உங்களது தற்கணத்தில்  மனதை இருத்த உதவும்.

விழிப்புணர்வுடன் ஒரு நாள்:


ஒரு வாரத்தில் ஒரு நாள் முழுவதும் தற்கண உணர்வைப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்துகிறார் நாட் ஹான்.

அந்த நாளில் வீட்டைச் சுத்தப்படுத்துவது, குளிப்பது என எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயலைப் பொறுமையாகவும் விருப்பத்துடனும் அனுபவித்தும் செய்யச் சொல்கிறார் அவர்.

வாரத்தில் ஒரு நாள் இந்தத் தற்கண உணர்வுப் பயிற்சியை மேற்கொண்டால் அது வாரம் முழுவதும் பெரும் பயனைத் தரும் என்கிறார் அவர்.

♦ இக்கணமே சிறந்தது (டால்ஸ்டாயின் மூன்று முத்தான சிந்தனைகள்)

இந்தப் புத்தகத்தில், டால்ஸ்டாய் சிந்தனையை  Thich  Nhat Hanh மேற்கோள் காட்டுகிறார்.

ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும்:


  • எது சிறந்த நேரம்? 
  • ஒரு பணியை இணைந்து மேற்கொள்வதற்கான முக்கியமான நபர்கள் யார்?
  • எப்போதுமே செய்ய வேண்டிய முக்கியமான பணி எது?


▪ மிகச் சிறந்த நேரம் என்பது இக்கணம்தான். 

▪ மிக முக்கியமான நபர் என்பவர் எப்போதும் உங்களுடன் இருப்பவர்தான். 

▪ மிக முக்கியமான பணி என்பது உங்களுடன் சேர்ந்து பயணிப்பவரை மகிழ்ச்சிப்படுத்துவதுதான்.

இப்போதும் நாம் இருக்கும் நிலையில், நம் அருகிலிருப்பவர்களுக்கு எதைச் செய்ய இயலுமோ அதைச் செய்வதே சரியான செயல்.

நமக்கு அருகிலிருப்பவர்களின் மகிழ்ச்சிக்கு வழிசெய்யாமல் நம்மால் உலகத்தைச் சிறந்த இடமாக மாற்ற முடியாது.

திங்கள், 18 ஜூன், 2018

தனித்துவம்

தனித்துவம்.



  
ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு சிறப்பான திறமை மறைந்து இருக்கும். அதை அடையாளம் கண்டு வளர்த்து எடுத்தால் தனித்துவத்தோடு மிளிர முடியும்.

எந்தவொரு செயலில் ஈடுபடும் போது மனம் தன்னை மறந்து லயித்து அதில் மூழ்கிப் போகிறதோ அந்தச் செயல் தான் இயல்பாக அளிக்கப்பட்ட வரம்.

அந்த செயலைச் செய்யும் போது சூழ இருக்கும் சப்தங்கள் கேட்காது. அந்தச் செயலை செய்துமுடிக்கும் வரை பசி எடுக்காது. நேரம் செல்வது தெரியாது. கவனம் முழுவதும் குவிந்து கிடக்கும்.

இந்தத் தனித்துவத்தை உணர்வதே வெற்றிகரமான வாழ்க்கைக்கு முதல் படி.

தடைகள்:


தனித்துவமான திறமையை உணர்ந்தாலும் அதை வெளிக் கொண்டு வர பல தடைகள் உள்ளன. பல திறமை வாய்ந்த நபர்கள் குடும்ப சூழ்நிலை, உடல் நலம் குறைவு, சமூக அழுத்தம் போன்ற புறக் காரணிகளால் வாய்ப்புகளை இழக்கின்றனர். இவர்களைக் குறித்து வாசிக்கும் போது ஆதங்கப்படுகிறோம்.

ஆனால் மிக மோசமானது அலட்சியகரமான மனோபாவம். தனக்கு அளிக்கப்பட்ட திறமையின் மதிப்பை அறியாது அதை அலட்சியம் செய்து ஒரு சிறு கூட்டுக்குள் அடைத்துக் கொண்டு, சுய கட்டுப்பாடு இல்லாது தனது தனித்துவத்தை பாழ்படுத்தி வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் ஏராளம்.

இவர்கள் நிதர்சனத்தை உணராது, வெட்டிப் பேச்சு பேசி, தற்பெருமை பிடித்து, பலவீனமான பழக்கங்களுக்கு அடிமையாகி தனது தனித்துவத்தை பாழ்படுத்தி வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள்.

ஆனால் இங்கு வலியுறுத்த விரும்புவது தனித்துவத்தை உணர்ந்து, தன் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் சுய கட்டுப்பாடு பற்றியே.




சற்று கவனித்துப் பாருங்கள்:


உறவினர்கள், நட்பு வட்டம், அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் என நமக்கு மிக நெருக்கமாக உள்ளவர்களில் யார் மிகவும் முக்கியமான  மனிதர்களாகப் போற்றப்படுகிறார்கள்?

வெற்றிகரமான நிறுவனங்களில் பொறுப்புகள் யார் வசம் உள்ளது?

சிறந்த குடும்பங்களில் முடிவுகளை எடுக்கும் நபர்களுக்கு என ஏதேனும் பொதுப் பண்புகள் உள்ளதா?

கொஞ்சம் உற்று நோக்கினால் அந்த மதிக்கப்படுகிறவர்களுக்கு என சில பொதுவான பண்புகள் இருக்கும்.

உரையாடல்:


அவர்களிடம் தேவையற்ற பேச்சு இருக்காது. எதையும் மிகைப்படுத்திப் பேச மாட்டார்கள். உண்மையை வெளிப்படுத்த இயலாத நிலையில் அமைதியாக இருப்பார்கள். ஒரு போதும் முடியாத உறுதிமொழியை வாக்கு செய்ய மாட்டார்கள்.

பிறரைத் திருப்தி செய்வதற்காக தவறானவற்றை நியாயப்படுத்த மாட்டார்கள். தன்னால் முடியாத செயல்களை செய்வததற்கு பணித்தால் மிக நிதானமாக அதை மறுத்து விடுவார்கள். எப்போதும் ஏமாற்றிப் பேசுபவர்களிடமிருந்து பிரிந்து விலகி இருப்பார்கள். வீணான விவாதத்தில் தலையிட மாட்டார்கள்.

பணியில் உள்ள ஈடுபாடு:


தனக்கு அளிக்கப்பட்ட வேலைகளை வாய்ப்புகளாகக் கருதி நுட்பமாக உழைப்பார்கள். அது சார்ந்த அனைத்து விபரங்களையும் சேகரித்து செயல்படுவார்கள். குழுவோடு இணக்கமாக இருப்பார்கள். சிறந்த பணியாளர்களை இலகுவாக அடையாளம் காண்பார்கள். ஒவ்வொருவர் பங்களிப்பையும் உணர்ந்து அவர்களை மகிழ்ச்சியான சூழலில் வைத்துப் பராமரிப்பார்கள். வேலைக்கு இடையூறாக இருந்து வீணாகச் செயல் புரிபவர்களைக் களையெடுப்பர். அநதப் பணி முடிந்தாலும் அதை திரும்பவும் கவனமாக ஆராய்ந்து பார்ப்பார்கள்.




ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு:


தனித்துவமான மனிதராக மிளிர ஆசைப் பட்டால் மனதையும் உடலையும் மேம்படுத்தும் வகையில் ஓய்வு நேரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடற்பயிற்சி, யோகா, நீச்சல், சைக்கிளிங் போன்றவை ஒரு சில சிறந்த ஆரோக்கியமான பொழுதுபோக்குகள்.

ஏதேனும் ஒரு குழு விளையாட்டில் பங்கு பெறுவது மிக உற்சாகம் தரும்.

உடற்பயிற்சி செய்பவர்கள் இயல்பாகவே உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். நேர நிர்வாகத்திலும் சிறந்து விளங்குவர். உடற்பயிற்சி மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும். மனதை கூர்மைப் படுத்தும்.

உயர்ந்த கருத்துக்களை வலியுறுத்தும் நூல்களை வாசிப்பது மனதைச் செழுமையாக்கும். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும். இலக்கை அடையத் தடையாக உள்ள இச்சையை மேற்கொள்ளப் பெலன் அளிக்கும். தன்னடக்கம் தரும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும்.

ஏதேனும் ஒரு பிடித்தமான சமூக அக்கறை கொண்ட குழுக்களில் அங்கம் வகிப்பது மனதிற்கு வலிமையையும் நிறைவையும் தரும்.

இசை, எழுத்து, புகைப்படம் எடுத்தல், கைவினை படைப்புகள் என ஏதாவது ஒரு பிடித்தமான துறையில் ஈடுபாடு கொள்வது வாழ்வை முழுமையானதாக்கும்.

எதிர்பார்ப்புகள்:


ஒரு மனிதர் மதிப்பின் உயரம் அவர் எந்தளவு சுயநலம் இல்லாதவர்களாக இயங்குகிறார் என்பதாலேயே அளக்கப்படுகிறது.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற வாக்கியம் மிக மிக ஆழ்ந்த பொருள் உடையது. அது பரிபூரணமான இறை நம்பிக்கையின் வெளிப்பாடு.

நல்லதோர் பயன்படுத்தப்பட்ட நிலத்தில் விதையை விதைக்கலாம். பாதுகாப்பாக வேலி அடைத்துக் காப்பாற்ற முடியும். நீரும், உரமுமிட்டு பேண முடியும். எனினும் விதையிலிருந்து ஒரு குருத்து முளைத்து வளருவது நம் கையில் இல்லை.

அந்த விதையிலிருந்து ஓர் உயிரை விளையச் செய்பவர் ஒருவர் உண்டு. அவர் அளிக்கும் பலன் துல்லியமாக இருக்கும். அது சரியான நேரத்தில் இருக்கும்.

தனித்துவமான வாழ்க்கை என்பது இப்படிப்பட்ட நம்பிக்கையோடு எதிர்பார்ப்புகளற்றதாக தனக்கு அளிக்கப்பட்ட சக்தியோடு தனது பொறுப்புகளை நிறைவேற்றுவது.

இத்தகைய மன நிலையில் வாழ்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் எந்த ஒரு பணியில் இருந்தாலும் நிச்சயமாக முக்கியமான நபர்களாகத் தனித்துவமாக இருப்பார்கள்.

தனித்துவத்தின் நிறைவான வெற்றி என்பது தன்னை இழத்தலில் மறைந்து இருக்கிறது.

ஞாயிறு, 17 ஜூன், 2018

வஞ்சகம் பேசேல்.

27 - வஞ்சகம் பேசேல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வர்க்கம்.)

தான் வாழ்வதற்காக அடுத்தவரை ஏமாற்றிப் பொய் சொற்களைப் பேசாதே என்பது இதன் பொருள்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உள்ளது என்பதை உணர்த்துவதே நீதி போதனைகளின் அடிப்படை கோட்பாடு.

ஒரு செயலை செய்யாதே என்று அது வலியுறுத்தினால் அதன் பொருள்:

அந்தத் தீய செயலைச் செய்யும் போது  அது பிறருக்கு தீராத மன வேதனையை வருவிக்கும்.

அப்படித் துயரம் பட்டவர் விடும் கண்ணீர் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் கட்டாயம் திரும்பி நம்மை வந்தடையும். 

எனவே தற்காலிகமாக அது அளிக்கும் அற்ப சந்தோஷத்திற்காக உனது விலைமதிப்பற்ற உயர்ந்த வாழ்வை இழந்து விடாதே என்பதாகும்.

இன்றைய காலகட்டத்தில் இந்தக் கருத்தை நாம் மிக அவசியமாகத் தியானிக்க வேண்டும்.

சுயநலம் மிகுந்த ஒரு காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எப்படியாவது பிறரை ஏமாற்றி சுக வாழ்வு வாழ்ந்தால் போதும் என்கிற மனநிலை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

பொய் பேசுதல், ஏமாற்றுதல், நடித்தல் இவை அனைத்தும் வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி செய்பவர் ஆயுதங்கள். 

இத்தகைய சூழ்ச்சி செய்பவர் முகஸ்துதி செய்வது, ஒரு பொருளை தருவதாக ஆசை காண்பிப்பது, உங்கள் விருப்பத்தை அறிந்து அதைத் தவறான வழியில் அடையும்படி ஊக்குவிப்பது என தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள கருத்தாக முயல்வார்கள்.

முதலாவது கருத்தில் கொள்ள வேண்டியது: இப்படி பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் மக்கள் ஒரு போதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழ முடியாது. 

நிச்சயமாக அவர்கள் அதற்குரிய தண்டனை அடைவார்கள்  என்பதை நம் மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ள வேண்டும்.

இந்த நம்பிக்கை நம்மை எந்தச் சூழ்நிலையிலும் பிறரை ஏமாற்றிப் பிழைக்க கூடாது எனும் உணர்வை நம் மனதில் உறுதியாகப் பதித்துவிடும்.

இரண்டாவது நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியது: ஏமாற்றுபவர்களை விட்டு எவ்வளவு தொலைவு விலகி இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகி வாழவேண்டும்.

"உள்ளோன்று வைத்து புறமொன்று பேசுவார் தம் உறவு கலவாதிருக்க வேண்டும்" என்பது வள்ளலார் வாக்கு.
மிகப் பெரும் பணக்கார உறவினர்  ஒருவர் கதை இது.
எல்லாரையும் சாதுரியமாக ஏமாற்றி மிகப் பெரும் செல்வந்தர் ஆனார். எப்போதும் வாயில் வஞ்சகம். 
வட்டி கொடுப்பது பிரதான தொழில். அவரிடம் சிக்கி கொண்டால் வாங்கியது போல நாலத்தனை பணத்தை இழக்க வேண்டி இருக்கும்.
அவர் இப்படி தவறான வழியில் பொருட்கள் ஈட்டுவதைக் குற்றமாக கருதவில்லை.
அவர் குழந்தைகள் வசதியானவர்கள் படிக்க இயலும் உயர்ந்த கல்விச் சாலைகளில் கற்றனர். தனது குழந்தைகளை பார்த்துப் பார்த்து வளர்த்தார். ஆண்டுகள் பல கழிந்தன.
ஆனால் பிள்ளைகள் வளர்ந்தபோதோ தந்தையின் சொத்துக்கள் அனைத்தையும் குடித்து, தவறான நண்பர்கள், உறவுகள் என  விற்று அழித்தனர். ஏழு தலைமுறைகள் இருக்கும் என நம்ப்பட்ட சொத்துக்களை அவர் கண்முன் முதிர் வயதில் அவர் பிள்ளைகளே  அழித்துக் கரைத்தனர்.

விதி வலியது. 

தனது குழந்தைகளுக்காக அவர் தவறான பாதையில் சேர்த்த பணத்தை அந்தப் பிள்ளைகளை வைத்தே விதி அழித்தது.

கண்முன் நிகழும் அதைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது.
இறைவன் மனதை ஆட்டிப் படைப்பவன்.
செய்த தவற்றை கண்ணீர் விட்டுக் கதற வைக்கும் சூழலை உருவாக்குவார்.
வஞ்சகம் செய்தல் கூடாது.
வஞ்சகரோடு வாழ்தலும் கூடாது.




வெள்ளி, 15 ஜூன், 2018

தன்னை உணர்தல் - வாசித்தல் வழியாக.

🌸 தன்னை உணர்தல் - வாசித்தல் வழியாக


வாழ்க்கையில் நமது புரிதல்கள் கால ஓட்டத்தில் மாறிக் கொண்டே வருகிறது.

நமக்கு நன்மை எது, தீமை எது என்பதை அனுபவங்கள்  கற்றுத் தருகின்றன.

துயரமான வருடங்களில், தனிமையில், இழப்புக்களில், ஏமாற்றங்களில், துரோகங்களில், தவறுகளில் இருந்தே நாம் சிறந்த பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம்.

எதையும் நம்பும் மனம் தோல்வியை எதிர் கொள்ளும் போது, ஏமாற்றத்தை  சந்திக்கும் போது வாழ்வின் பல உண்மைகளை கற்றுக் கொள்கிறது.

இத்தகைய மனச் சோர்வான தருணங்களில் இருந்து நம்மை மெல்லத் தூக்கி எடுத்து வாழ்க்கை பாதையில் மீண்டும் நிலை நிறுத்துவதில் சிறந்த புத்தகங்களின் பங்களிப்பு அபாரமானது.

நமது அறிவின் கூர்மை, திறன், புரிதல் நல்ல புத்தகங்களை வாசிப்பதினால் மேம்படுகிறது.

சிறந்த புத்தகம் என்பது மனதில் அன்பை விதைக்க வேண்டும்.

வாசித்தல் நம்மை சக உயிர்களையும் தனது உயிரைப் போல் கருதும் உணர்வை ஊட்ட வேண்டும்.

அகந்தையை அழிக்க வேண்டும்.

பிறர் வலி உணர்ந்து அதைத் துடைக்க வேண்டும் எனும் மன நிலைக்கு உயர்த்த வேண்டும்.

மாறாகப் பிரிவினையை, சக மனிதனை வெறுக்கும் படி வன்முறையைத் தூண்டுகிற எழுத்துக்கள் நஞ்சை விடக் கொடியது.

வாசித்து உணர்ந்த கருத்துக்களை வாழ்வில் அப்பியாசம் செய்யப்படும் போது மட்டுமே அது மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

நல்ல கருத்துக்கள் கடைப்பிடிப்பதன் வழியாக  நம்முடைய
மனசாட்சியானது உயிர்ப்படைகின்றது.

மனசாட்சியை உணர்தல் என்பது சுய வெளிப்பாட்டின் ஒரு உயர்ந்த அனுபவம்.

எளிமையான, தூய்மையான, திறந்த, தன்னலமற்ற மனதை சிறந்த நூல்கள் நம்முள் உருவாக்குகிறது.

உயர்ந்த சிந்தனைகளைப் பெறுவதற்கு நமது மனம் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் இருத்தல் அவசியம்.

ஏதேனும் ஒரு கொள்கையில் தீவிரமாக பற்றுக் கொண்ட மனம் முழுமையான உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியாது.

உண்மையை முழுமையாக அறிய வேண்டும் என்றால் பயமின்றி கற்றுக் கொள்ள விழையும் மனம் அவசியம்.

தூய்மையான அன்பால் நிறைந்த மனம் உண்மையைக் கற்றுக் கொள்ள
எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

எல்லாம்  எனக்குத் தெரியும் எனும் மனப்போக்கு கற்பதை  தேக்கமடையச் செய்யும்.

நாம் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டபோது மனம் தன்னில்தானே பெருமை கொள்கிறது. தன்னம்பிக்கை அடைகிறது.

இந்த உணர்வு அகந்தையாக மாறும்போது அது தன்னைத்தானே மையப்படுத்தும் எண்ணங்களை
உருவாக்கி விடுகிறது.

இது தொடர்ந்து கற்றலைச் சாத்தியமில்லாமல் செய்துவிடுகிறது.

பரந்து விளங்கும் இந்தப் பிரபஞ்சத்தில் நான் ஒரு துகள் என்ற ஆழமான உணர்வு மனத் தாழ்மையை தரும்.

இந்தப் பிரபஞ்சத்தின் அளவற்ற தன்மையை உணரும்போது  ‘நான்’ என்கிற உணர்வுக்கு அப்பால் மனம் கடந்துவிடுகிறது.

அத்தகைய முதிர்ச்சி அடைந்த மனம் நல்லது, கெட்டது
எனும் பாகுபாட்டை செயல்களையும் அதன் விளைவுகளைக் கொண்டு மட்டுமே தீர்மானிக்கும்.

நல்ல செயல்களை போற்றுகிறது. அந்த செயலைச் செய்தவரை வாழ்த்துகிறது.

தீய செயல்களை வெறுக்கிறது. ஆனால் தீமை செய்பவர்களை பழி தீர்ப்பதில்லை.

முதிர்ச்சி அடைந்த மனம் இறந்த காலத்தின் நினைவுகளில் அலசலடிப்பட்டு உறைந்து போவதில்லை.

எதிர்காலத்தினைக் குறித்த அச்சத்தில் அமிழ்ந்து போவதும் இல்லை.

அது நிகழ்கால தருணத்தின் செயல்களில் மாத்திரம்  முழுமையான கவனம் செலுத்துகிறது.

இதனால் வீணான, தேவையற்ற தொடர்ச்சியான எண்ணங்களின் போராட்டத்திலிருந்து மனம் விடுதலை அடைகிறது.

இது ஒன்று  எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைத் தரும்.

வாழ்வில் வெளிப்புற சூழலை மாற்றுவதை விட உட்புறமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தால் அது மிகச் சிறப்பானது.

இந்த உள்ளான மாற்றத்தின் தாக்கம் செயல்களாக வெளிப்படும்போது சுற்றி வாழும் சமூகத்தை உயர்த்துகிறது.

இந்தப் பயிற்சியில் நாம் எந்த அளவுக்கு நமது சக்தியையும், நேரத்தையும் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நமது வாழ்க்கை அர்த்தம் நிறைந்ததாக மாறுகிறது.

திங்கள், 12 மார்ச், 2018

அரவம் ஆட்டேல்.

🌸 அரவம் ஆட்டேல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வர்க்கம்.)


25. அரவம் ஆட்டேல் : "பாம்புடன் விளையாடாதே".


அரவம் என்றால் பாம்பு என்று பொருள்.

தீயமனிதருடன் உறவு கலந்து நெருக்கமாகப் பழகாதே என்பது இதன் பொருள்.

தனது சுயபெருமை, இன்பம், அதிகாரம், இச்சை இவற்றைச் சுகிக்க பிறர்க்கு எத்தகைய தீங்கையும் இழைக்கத் தயங்காதவர்களே தீயவர் ஆவார்.

இந்தச் சுயநலவாதிகள் தங்களது அநீதியான நடவடிக்கைகள் மூலமாகப் பிறரது வாழ்வில் தீராத வேதனையை ஏற்படுத்தத் தயங்கமாட்டார்கள்.

பிறரது மனக் காயங்கள்,  துன்பம், வலி, வேதனை இவர்கட்கு ஒரு பொருட்டே அல்ல.

இத்தகைய தீய சுபாவம் உடைய மனிதரைக் கண்டால் பாம்பைக் கண்டு பதறி விலகுவதுபோல் விலகி ஓட வேண்டும்.

வாழ்வில் சந்திக்கும் ஏமாற்றங்களே மனிதர்களை அடையாளம் காண கற்றுக் கொடுக்கும்.

ஏமாற்றங்கள், துரோகங்கள் மனதில் ஆழமான வெறுப்பை, தீராத வலியை, எரிச்சலை, கோபத்தை பொங்கச் செய்யும்.

எனினும்  இது மனதுக்கும், உடலுக்கும் நல்லதல்ல.

மன்னிப்பதே சிறந்த அறம்.

"தீமை செய்பவருக்கும் நன்மை செய்யுங்கள்" என்பது மிக ஆழமான சத்தியம்.

தீமைக்கு நன்மை செய்ய வேண்டும் எனும் சிந்தனையை நம்பி ஏற்றுச் செயல்படும்போது மனதில் ஆழமாக ஊடுருவி குத்தப்பட்ட காயங்கள் ஆறத் துவங்குகிறது.

மன்னிக்கும் பண்பு மன வலிமையை, ஞானத்தை, அமைதியை அளிக்கிறது.

தீங்கு இழைத்தவரை மன்னித்து மறந்து விடுங்கள்; ஆனால் அவர் கற்றுக் கொடுத்தப் பாடத்தை ஒரு போதும் மறக்காது நினைவில் நிலை நிறுத்துங்கள்.

பாம்புகளுடன் தோழமை கொள்ளாதீர்.


வெள்ளி, 5 ஜனவரி, 2018

இயல்பு அலாதன செய்யேல்.

🌸 இயல்பு அலாதன செய்யேல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்) 


24. இயல்பு அலாதன செய்யேல் :


தீமை பயக்கும் செயல்களைச் செய்யாதே.


எது தர்மம்? 


நமக்கும் பிறர்க்கும் நன்மை தரும் செயல்கள் தர்மம்.

பிற உயிர்கட்குத் தீங்கு இழைக்காத செயல்கள் தர்மம்.

நமது மனம், உடல் மாசுபடாவண்ணம் காத்துக் கொள்வது தர்மம்.

தன்னைப்போல் பிறனைநேசிப்பது தர்மம்.

நமக்குப் பிறர் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அவற்றை மற்றவர்க்கு நாமும் செய்வது தர்மம்.

இயல்பு அலாதன செய்யேல் .


இயல்பாகவே நமக்கு நன்மை அளிப்பது ஏதுவென்று நன்றாகத் தெரிகிறது. அஃது அறிவு ; புத்தி.

ஆனால் பெரும்பாலும் மனம்  நல்லவழியில் நடக்க மறுக்கிறது. இஃது உணர்வு ; சபலம்.

ஒரு செயலை செய்யும்போது அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தாலும், பெரும்பாலும் உணர்வுப்பூர்வமாகவே முடிவெடுத்துச் செயலாற்றுகிறோம்.

உணர்வின் ஆதிக்கத்தால், தீமை பயக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் நம்மால் உறுதியாக சில தீய பழக்கங்களை விட்டு விலக முடியவில்லை.

நன்மை செய்ய வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும் நம்முள் உறைந்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஏதோவொன்று இருந்துகொண்டு நன்மை தரும் செயல்களைச் செய்யவிடாமலும், தீமையான செயல்களைச்  செய்யும்படியும் தூண்டுகிறது”.

இதை மேற்கொள்வது எப்படி?


இறை நம்பிக்கையே அடிப்படை.

நன்மையின் பாதை தற்காலிகமாகத் துன்பத்தை தந்தாலும் இறுதியில் வெற்றியையே தரும் என எல்லாச் சமய வேதங்கள் சொல்வதை உணர்வுப்பூர்வமாக நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தீய பழக்கங்கள் தரும் அனுபவம்  இன்பமாக இருந்தாலும், பிற்காலத்தில் தவறான செயல்களின் விளைவு நிச்சயம் துன்பத்தையே விளைவிக்கும் என்பது மனதில் திடமாக பதிய வேண்டும்.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்பது மாறாத விதி.

காரியகாரண சம்பந்தம் உடனே வெளிச்சமாகாவிட்டாலும் செயலின் விளைவிலிருந்து மனிதன் தப்ப முடியாது.

இஃது இயற்கையின் நியதி.

ஆகையால் தீவினை தவிர்க்கப்படவேண்டும். பாபச் செயல்கள் செய்ய அஞ்சவேண்டும். மாறாக அறம் செய்ய விரும்ப வேண்டும்.

தீமை பயக்கும் செயல்களைச் செய்யாதே.

கடவுளுக்குப் பயந்து நடக்கத் தீர்மானிப்பதே ஞானத்தின் துவக்கம்.

புதன், 3 ஜனவரி, 2018

மண் பறித்து உண்ணேல்.

🌸 மண் பறித்து உண்ணேல்.


23. மண் பறித்து உண்ணேல்.


பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே.  

தன்னுடைய  சுயநலத்துக்காக  பிறர் உடைமைகளை அபகரித்து வாழ நினைப்பது பாவம்.

நிலவுடைமை சமூகத்தில் செல்வந்தர் என்பது நிலவளம், கால்நடைகள் மற்றும் குடும்பத்தின் ஆண் மக்களின் எண்ணிக்கை வைத்தே நிர்ணயம் செய்யப்பட்டது.

மண்ணிற்காக நடந்த யுத்தமே மகாபாரதம்.

நிலத்தை அபகரிப்பதற்காக நடந்த ; இன்றும், நடக்கும் கொலைகள் ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது.

கடவுளின் பத்து கட்டளைகளில் இரண்டுமுறை இந்தக் கட்டளை வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது.

"களவு செய்யாதிருப்பாயாக"

"பிறர் பொருளை இச்சியாதிருப்பாயாக".


ஆகாப் என்னும் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு அவன் நிலத்தின் அருகில் இருந்த ஒரு குடியானவனின் திராட்சைத் தோட்டத்தின் மீது கண். அந்த ஏழையை அழைத்து அந்த நிலத்தை விற்கும்படி நெருக்கினான். அந்தக் குடியானவன் அந்த நிலம் தனது மூதாதையரின் பூர்விகமான இடம், எனவே அதை விற்க இயலாது என மறுத்துவிட்டான்.

அரசன் மனமடிவாகி தனது அரண்மளையில் சோர்ந்து துக்கமாக இருந்தான். அவன் மனைவி காரியங்களை அறிந்து, இரண்டு பொல்லாத மனிதர்களை நியமித்து அந்தக் குடியானவன் மீது இராஜ துரோக குற்றம் பொய்யாக சுமத்தி அவனைக் கொலை செய்கிறாள்.

அந்தக் குடியானவன் இறந்த செய்திகேட்ட அரசன் மனமகிழ்ச்சியோடு அந்த நிலத்தை அபகரிக்கிறான். ஆனால் முடிவு என்ன தெரியுமா?

எந்த இடத்தில் குடியானவன் இரத்தம் சிந்தப்பட்டதோ, அதே இடத்தில் அந்த அரசன் மற்றும் அரசியின் இரத்தமும் சிந்தப்பட்டது.

இது வெறும் கதை அல்ல.

பிறரை ஏமாற்றி, அவர் சொத்துக்களை அபகரித்தவர்கள் வம்சங்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

பிறர் நிலத்தை, உடைமைகளை ஏமாற்றி, மிரட்டி அபகரித்த வம்சங்களின் வாரிசுகள் உணவுக்காக வீதிகளில் அலைந்து திரிவதை இன்றும் காணலாம்.

இன்றும்கூட கொள்ளையடித்து கட்டப்பட்ட மாளிகைக்குள் வசிப்பவர்கள் பார்வைக்கு வேண்டுமானால் பகட்டாக தெரியலாம். அது வெளிப்புறத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட கல்லறைகளே. உண்மையில் அவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைக்குள் வாழும் அழுகிய சரீரங்களே.

ஒருபோதும் பிறர் பொருள், உடைமை, சொத்து இவற்றின் மீது ஆசைப்படக்கூடாது.

நமக்கு இருக்கும் செல்வாக்கு, அதிகாரம் மூலம்  தவறான வழிகளில் அதை அடைந்தால், அது  கதற கதற வைத்து நம்மைவிட்டு எடுக்கப்படும்.

நமக்கு கடவுள் அருளும் சம்பத்துக்களுடன் இனிமையாக வாழ்வோம்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

செவ்வாய், 2 ஜனவரி, 2018

பருவத்தே பயிர் செய்.

🌸 பருவத்தே பயிர் செய்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)


22. பருவத்தே பயிர் செய் :

ஒவ்வொரு செயலுக்கும் அதைச் செய்ய குறிப்பிட்ட காலமுண்டு.
எனவே எந்த ஒரு செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய கவனமாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Bible இலிருந்த இந்தப் பகுதி இங்கு மிகப் பொருத்தமானது :


வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு.

கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு.

நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு.

அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு.

புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு.

கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு.

தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு.

தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு.

காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு.

கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு.

மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.

சினேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு.

யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.

பருவத்தே பயிர் செய் :


ஒவ்வொரு பயிரும் அதிக மகசூலைப் பெறுவதற்கு அதற்கு ஏற்ற உகந்த பருவ சூழலில் விவசாயம்  செய்தால்தான் சிறந்த விளைச்சல் கைகூடி வரும். உழைப்புக்குப் பலன் கிட்டும்.

இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு வயதிலும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உள்ளது. அந்த வயதில் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற அலட்சியம் செய்தால் பிற்கால வாழ்வில் அதற்காக மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். சில தவற விடப்பட்ட வாய்ப்புகளை எத்தனை சிரமப்பட்டு முயற்சித்தாலும் போனது போனதுதான்.

எனவே எந்த வயதில் எதைச் செய்ய வேண்டும் என்கிற தெளிவு வேண்டும்.

இளமையிலே கல்வி கற்றுக்கொள்ள முழு கவனம் செலுத்த வேண்டும்.
உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
உணவு, உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம், வருமானம், சேமிப்பு  குறித்து
ஒவ்வொரு வயதுக்கு ஏற்றவாறு சரியான திட்டமிடுதல் வேண்டும்.

வாழ்க்கை கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் கற்பது.

வேதங்கள்  வாழ்க்கையின் பிரச்சினைகளுக்காக  கவலைப்படக்கூடாது எனச் சொல்கிறது. அதைக் குறித்து பயப்படாதேயுங்கள் என்றும் அறிவுறுத்துகிறது.

ஆனால் எப்போதும் வாழ்க்கையை சரியாகத் திட்டமிட்டு விழிப்புணர்வுடன் வாழுங்கள் என அறிவுறுத்துகிறது.

இதிகாசங்களின் கதாப்பாத்திரங்கள் எவற்றை வாழ்க்கையில் செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று  உணர்த்தப் பயன்படுகிறது. ,

இன்று எந்த வயதில்  நாம் இருந்தாலும்  நமக்கிருக்கும்  வாய்ப்புகள், வலிமை கொண்டு மீதமிருக்கும் காலத்தில் எங்கனம் சிறப்பாக பயனுள்ளதாக வாழமுடியும் என்று திட்டமிடுதல் நல்லது.

திங்கள், 1 ஜனவரி, 2018

நன்றி மறவேல்

🌸 நன்றி மறவேல். 

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)


21. நன்றி மறவேல் :

ஒருவர் நமக்குச் செய்த உதவியை ஒருபோதும் மறக்கக்கூடாது.

ஒருவர் பிறர்க்கு செய்யும் நல்ல செயல்கள் என்றும் நன்மை பயக்கும்.

இத்தகைய நல்ல செயல்களே நன்று என்பதாகும்.

நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது.

இவ்விதம் நாம் பிறர் வழியாகப் பெற்ற உதவிகளை, அதன் மூலம் அடைந்த நன்மைகளை மறக்கக்கூடாது.

அவர்களுக்குத் திரும்ப பதில் நன்றி செய்வதற்கு எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும்.

இவ்விதம் திரும்ப செய்யவேண்டும் என்று எண்ணுவதுதான் மறவாமை.

அதற்குப் பெற்றுக்கொண்ட உதவியின் மதிப்பை உணர்வதே  முதல் படி.

அப்படி உணர்ந்தோமேயானால் உதவி செய்தவருக்கு நன்றி பாராட்டுவதும், வேறோருவருக்கு இப்படியான சந்தர்ப்பத்தில் நாமே முன்வந்து தேவையான உதவியை செய்வதாகவும் அமையும்.

இதுவே அறம்.

நன்றி என்ற அறம் போற்றும் மற்றுமோரு ஒளவையார் அருளிய செய்யுள் ’மூதுரை’யிலிருந்து

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

நிலைபெற்றுத் சோர்வடையாது வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் பருகிய தண்ணீரைத் தன் மர உச்சியில் சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், ஒருவரின் உதவியை நாம் மறவாமல் நன்றி பாராட்டவேண்டும்.

'நன்றி' பற்றி பகவத்கீதை கூறுவது:


‘கர்மத்தை செய், பலனை என்னிடம் விட்டு விடு’.

அஃதாவது 'உன்னுடைய செயல்கள் நன்மை செய்வதானால்' அதை யாருக்கு வேண்டுமானாலும் செய்.

‘எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்து கொண்டே இரு’.

அதுவே சுதர்மம்.

நன்மை செய்வது என்று தீர்மானித்து விட்டால் நன்றி கெட்டவனுக்குக்கூட செய். 

காரணம், நீ செய்யும் நன்மை ஏதோ ஒரு வடிவத்தில் மிக்க பலனோடு உனக்கு திரும்பி வருகிறது.

அவன் செய்கிற தீமை வட்டியோடு அவனுக்கு போய்ச் சேருகிறது.

நன்றி பற்றிய கதை ஒன்று :

தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது.

அதன் மீது பரிதாபப்பட்ட ஒரு சந்நியாசி, அதை எடுத்து வெளியில் விட முயன்றார்.

அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது.

மீண்டும் அவன் எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று.

'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று ஒருவர் கேட்டார்.

சந்நியாசி சொன்னார்:

'கடைசி வரை அது தன் சுபாவத்தை விட வில்லை'.

அது போல 'நானும் நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை'

இதுவே சுதர்மம்.

'நன்றி' பற்றி திருக்குறள் :


'ஏதோ, உதவி செய்ய வேண்டும் என்று  எல்லோருக்கும் செய்யாதே.

யாருக்குச் செய்கிறோம் என்று அறிந்து செய்.

அதாவது நன்றியுள்ள ஒருவனுக்கு, உண்மையாகவே தேவைப்படுகிறவனுக்குச் செய்யப்பட வேண்டும்.

ஒருவர் நமக்குச் செய்த நன்மையைய் மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டுமே அக்கணமே மறந்து விடுவது நல்லது!!!


அனைவருக்கும் இனிய அன்பின்  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..,