வெள்ளி, 22 ஜூன், 2018

ஒரு நேரத்தில் ஒரு செயல்

🌸 ஒரு நேரத்தில் ஒரு செயல்.

Thich Nhat Hanh



(இந்து நாளிதழ் (22-06-2018)  என். கௌரி அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சாரம்)

Thich Nhat Hanh வியட்நாமில்  வாழ்ந்த பவுத்த சமய துறவி.

இவரின் மிகச் சிறந்த வழி காட்டும் நூல்:
‘The Miracle of Mindfulness: An Introduction to the Practice of Meditation’ என்ற புத்தகம்.

இந்தப் புத்தகத்தில் அன்றாட வாழ்க்கையில் நமது எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கிறார்.

🔹 தற்கண உணர்வு:

(நிகழ்காலத்தில் வாழ்தல் - Living at the moment).

மனிதர்கள் எப்போதும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதால் அவர்களுக்கு தற்கண உணர்வுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியப்படவில்லை.

தற்கண உணர்வே இல்லாமல் பொறுமையின்மை, கோபம் போன்றவற்றுடன் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஒரு நேரத்தில் ஒரே ஒரு செயலை மட்டும் செய்வதன் மூலம் தற்கண உணர்வைக் கைக்கொள்ள முடியும்.

இதன் வழியாக அமைதியை உடனடியாகக் கண்டடைய முடியும்.

🔸 தற்கண உணர்வை அடையும் வழிகள்.


தற்கண உணர்வோடு வாழ்வதற்கு எதிராக இருப்பது எது என்றால் மனதில் எழும் நிலையற்ற தன்மையும், மறதியும்.

நம் எண்ணங்கள் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். 

இந்த அலைபாய்ச்சல் நமது சிந்தனையை தடம் புரள செய்யும்.
 
இப்படி மாறி மாறி சிந்தனையை சிதற விடாமல் தற்கண உணர்வைத் தக்கவைப்பதற்கான சிறந்த வழிகள்

▪ மூச்சுப் பயிற்சி

▪ சுய கண்காணிப்பு

▪ புன்னகை

🔹 மூச்சுப் பயிற்சி:


சுவாசத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால், நம் உடல்களையும் மனங்களையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதாக அர்த்தம்.

சுவாசத்தின் மீது கவனத்தைத் திருப்பும்போதே மன அலைச்சல் இருந்து படிப்படியாக விடுபட்டுவிட முடியும்.

மூச்சுப் பயிற்சியைச் சரியாக மேற்கொள்பவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முடியும்.

எண்ணங்கள் தலையில் கூட்டம் கூட்டமாகத் தோன்றிக் கொந்தளிக்கும்போது, உடலுக்குக் கவனத்தைத் திருப்பி பிரக்ஞையுடன் சுவாசத்தை மேற்கொண்டால், மனதுக்கும் உடலுக்கும் ஆறுதல் ஏற்படுவதை உணர முடியும்.

🔸 சுய கண்காணிப்பு:


விழிப்புணர்வு என்பது தியானப் பயிற்சியின்போது மட்டும் இருப்பதில்லை. அது இருபத்துநான்கு மணிநேரமும் நம்மிடம் இருப்பது.

எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாலும் நமக்குத் தற்கண உணர்வு இருக்க வேண்டும்.

உங்களது எண்ணங்களைத் தொடர்ந்து நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்களுக்கு நீங்களே அமைதியாக விளக்க வேண்டும்.

உதாரணமாக, “நான் இந்தப் பாதையின் வழியாக என் கிராமத்துக்குச் செல்கிறேன்” என்று சொல்லும்போது, நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியின் அற்புதத்தையும் உங்களால் பாராட்ட முடியும்.

🔹 புன்னகை


காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும்போதே புன்னகையுடன் விழிப்பது தற்கண உணர்வை அடைவதற்கான சுவாரசியமான வழி.

இந்தப் புன்னகையை நாள் முழுவதும் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

கோபமாக இருக்கும் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, இசை கேட்கும் மன நிலையில் இருந்தாலும் சரி,  நேரம் கிடைக்கும் போதெல்லாம் புன்னகையுங்கள்.

இப்படிப் புன்னகை புரிவதன் மூலம் உங்கள் துக்க அல்லது சந்தோஷ உணர்வுகளில் நீங்கள் கரைந்து விடாமல் உங்களது தற்கணத்தில்  மனதை இருத்த உதவும்.

விழிப்புணர்வுடன் ஒரு நாள்:


ஒரு வாரத்தில் ஒரு நாள் முழுவதும் தற்கண உணர்வைப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்துகிறார் நாட் ஹான்.

அந்த நாளில் வீட்டைச் சுத்தப்படுத்துவது, குளிப்பது என எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயலைப் பொறுமையாகவும் விருப்பத்துடனும் அனுபவித்தும் செய்யச் சொல்கிறார் அவர்.

வாரத்தில் ஒரு நாள் இந்தத் தற்கண உணர்வுப் பயிற்சியை மேற்கொண்டால் அது வாரம் முழுவதும் பெரும் பயனைத் தரும் என்கிறார் அவர்.

♦ இக்கணமே சிறந்தது (டால்ஸ்டாயின் மூன்று முத்தான சிந்தனைகள்)

இந்தப் புத்தகத்தில், டால்ஸ்டாய் சிந்தனையை  Thich  Nhat Hanh மேற்கோள் காட்டுகிறார்.

ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும்:


  • எது சிறந்த நேரம்? 
  • ஒரு பணியை இணைந்து மேற்கொள்வதற்கான முக்கியமான நபர்கள் யார்?
  • எப்போதுமே செய்ய வேண்டிய முக்கியமான பணி எது?


▪ மிகச் சிறந்த நேரம் என்பது இக்கணம்தான். 

▪ மிக முக்கியமான நபர் என்பவர் எப்போதும் உங்களுடன் இருப்பவர்தான். 

▪ மிக முக்கியமான பணி என்பது உங்களுடன் சேர்ந்து பயணிப்பவரை மகிழ்ச்சிப்படுத்துவதுதான்.

இப்போதும் நாம் இருக்கும் நிலையில், நம் அருகிலிருப்பவர்களுக்கு எதைச் செய்ய இயலுமோ அதைச் செய்வதே சரியான செயல்.

நமக்கு அருகிலிருப்பவர்களின் மகிழ்ச்சிக்கு வழிசெய்யாமல் நம்மால் உலகத்தைச் சிறந்த இடமாக மாற்ற முடியாது.

திங்கள், 18 ஜூன், 2018

தனித்துவம்

தனித்துவம்.



  
ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு சிறப்பான திறமை மறைந்து இருக்கும். அதை அடையாளம் கண்டு வளர்த்து எடுத்தால் தனித்துவத்தோடு மிளிர முடியும்.

எந்தவொரு செயலில் ஈடுபடும் போது மனம் தன்னை மறந்து லயித்து அதில் மூழ்கிப் போகிறதோ அந்தச் செயல் தான் இயல்பாக அளிக்கப்பட்ட வரம்.

அந்த செயலைச் செய்யும் போது சூழ இருக்கும் சப்தங்கள் கேட்காது. அந்தச் செயலை செய்துமுடிக்கும் வரை பசி எடுக்காது. நேரம் செல்வது தெரியாது. கவனம் முழுவதும் குவிந்து கிடக்கும்.

இந்தத் தனித்துவத்தை உணர்வதே வெற்றிகரமான வாழ்க்கைக்கு முதல் படி.

தடைகள்:


தனித்துவமான திறமையை உணர்ந்தாலும் அதை வெளிக் கொண்டு வர பல தடைகள் உள்ளன. பல திறமை வாய்ந்த நபர்கள் குடும்ப சூழ்நிலை, உடல் நலம் குறைவு, சமூக அழுத்தம் போன்ற புறக் காரணிகளால் வாய்ப்புகளை இழக்கின்றனர். இவர்களைக் குறித்து வாசிக்கும் போது ஆதங்கப்படுகிறோம்.

ஆனால் மிக மோசமானது அலட்சியகரமான மனோபாவம். தனக்கு அளிக்கப்பட்ட திறமையின் மதிப்பை அறியாது அதை அலட்சியம் செய்து ஒரு சிறு கூட்டுக்குள் அடைத்துக் கொண்டு, சுய கட்டுப்பாடு இல்லாது தனது தனித்துவத்தை பாழ்படுத்தி வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் ஏராளம்.

இவர்கள் நிதர்சனத்தை உணராது, வெட்டிப் பேச்சு பேசி, தற்பெருமை பிடித்து, பலவீனமான பழக்கங்களுக்கு அடிமையாகி தனது தனித்துவத்தை பாழ்படுத்தி வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள்.

ஆனால் இங்கு வலியுறுத்த விரும்புவது தனித்துவத்தை உணர்ந்து, தன் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் சுய கட்டுப்பாடு பற்றியே.




சற்று கவனித்துப் பாருங்கள்:


உறவினர்கள், நட்பு வட்டம், அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் என நமக்கு மிக நெருக்கமாக உள்ளவர்களில் யார் மிகவும் முக்கியமான  மனிதர்களாகப் போற்றப்படுகிறார்கள்?

வெற்றிகரமான நிறுவனங்களில் பொறுப்புகள் யார் வசம் உள்ளது?

சிறந்த குடும்பங்களில் முடிவுகளை எடுக்கும் நபர்களுக்கு என ஏதேனும் பொதுப் பண்புகள் உள்ளதா?

கொஞ்சம் உற்று நோக்கினால் அந்த மதிக்கப்படுகிறவர்களுக்கு என சில பொதுவான பண்புகள் இருக்கும்.

உரையாடல்:


அவர்களிடம் தேவையற்ற பேச்சு இருக்காது. எதையும் மிகைப்படுத்திப் பேச மாட்டார்கள். உண்மையை வெளிப்படுத்த இயலாத நிலையில் அமைதியாக இருப்பார்கள். ஒரு போதும் முடியாத உறுதிமொழியை வாக்கு செய்ய மாட்டார்கள்.

பிறரைத் திருப்தி செய்வதற்காக தவறானவற்றை நியாயப்படுத்த மாட்டார்கள். தன்னால் முடியாத செயல்களை செய்வததற்கு பணித்தால் மிக நிதானமாக அதை மறுத்து விடுவார்கள். எப்போதும் ஏமாற்றிப் பேசுபவர்களிடமிருந்து பிரிந்து விலகி இருப்பார்கள். வீணான விவாதத்தில் தலையிட மாட்டார்கள்.

பணியில் உள்ள ஈடுபாடு:


தனக்கு அளிக்கப்பட்ட வேலைகளை வாய்ப்புகளாகக் கருதி நுட்பமாக உழைப்பார்கள். அது சார்ந்த அனைத்து விபரங்களையும் சேகரித்து செயல்படுவார்கள். குழுவோடு இணக்கமாக இருப்பார்கள். சிறந்த பணியாளர்களை இலகுவாக அடையாளம் காண்பார்கள். ஒவ்வொருவர் பங்களிப்பையும் உணர்ந்து அவர்களை மகிழ்ச்சியான சூழலில் வைத்துப் பராமரிப்பார்கள். வேலைக்கு இடையூறாக இருந்து வீணாகச் செயல் புரிபவர்களைக் களையெடுப்பர். அநதப் பணி முடிந்தாலும் அதை திரும்பவும் கவனமாக ஆராய்ந்து பார்ப்பார்கள்.




ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு:


தனித்துவமான மனிதராக மிளிர ஆசைப் பட்டால் மனதையும் உடலையும் மேம்படுத்தும் வகையில் ஓய்வு நேரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடற்பயிற்சி, யோகா, நீச்சல், சைக்கிளிங் போன்றவை ஒரு சில சிறந்த ஆரோக்கியமான பொழுதுபோக்குகள்.

ஏதேனும் ஒரு குழு விளையாட்டில் பங்கு பெறுவது மிக உற்சாகம் தரும்.

உடற்பயிற்சி செய்பவர்கள் இயல்பாகவே உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். நேர நிர்வாகத்திலும் சிறந்து விளங்குவர். உடற்பயிற்சி மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும். மனதை கூர்மைப் படுத்தும்.

உயர்ந்த கருத்துக்களை வலியுறுத்தும் நூல்களை வாசிப்பது மனதைச் செழுமையாக்கும். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும். இலக்கை அடையத் தடையாக உள்ள இச்சையை மேற்கொள்ளப் பெலன் அளிக்கும். தன்னடக்கம் தரும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும்.

ஏதேனும் ஒரு பிடித்தமான சமூக அக்கறை கொண்ட குழுக்களில் அங்கம் வகிப்பது மனதிற்கு வலிமையையும் நிறைவையும் தரும்.

இசை, எழுத்து, புகைப்படம் எடுத்தல், கைவினை படைப்புகள் என ஏதாவது ஒரு பிடித்தமான துறையில் ஈடுபாடு கொள்வது வாழ்வை முழுமையானதாக்கும்.

எதிர்பார்ப்புகள்:


ஒரு மனிதர் மதிப்பின் உயரம் அவர் எந்தளவு சுயநலம் இல்லாதவர்களாக இயங்குகிறார் என்பதாலேயே அளக்கப்படுகிறது.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற வாக்கியம் மிக மிக ஆழ்ந்த பொருள் உடையது. அது பரிபூரணமான இறை நம்பிக்கையின் வெளிப்பாடு.

நல்லதோர் பயன்படுத்தப்பட்ட நிலத்தில் விதையை விதைக்கலாம். பாதுகாப்பாக வேலி அடைத்துக் காப்பாற்ற முடியும். நீரும், உரமுமிட்டு பேண முடியும். எனினும் விதையிலிருந்து ஒரு குருத்து முளைத்து வளருவது நம் கையில் இல்லை.

அந்த விதையிலிருந்து ஓர் உயிரை விளையச் செய்பவர் ஒருவர் உண்டு. அவர் அளிக்கும் பலன் துல்லியமாக இருக்கும். அது சரியான நேரத்தில் இருக்கும்.

தனித்துவமான வாழ்க்கை என்பது இப்படிப்பட்ட நம்பிக்கையோடு எதிர்பார்ப்புகளற்றதாக தனக்கு அளிக்கப்பட்ட சக்தியோடு தனது பொறுப்புகளை நிறைவேற்றுவது.

இத்தகைய மன நிலையில் வாழ்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் எந்த ஒரு பணியில் இருந்தாலும் நிச்சயமாக முக்கியமான நபர்களாகத் தனித்துவமாக இருப்பார்கள்.

தனித்துவத்தின் நிறைவான வெற்றி என்பது தன்னை இழத்தலில் மறைந்து இருக்கிறது.

ஞாயிறு, 17 ஜூன், 2018

வஞ்சகம் பேசேல்.

27 - வஞ்சகம் பேசேல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வர்க்கம்.)

தான் வாழ்வதற்காக அடுத்தவரை ஏமாற்றிப் பொய் சொற்களைப் பேசாதே என்பது இதன் பொருள்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உள்ளது என்பதை உணர்த்துவதே நீதி போதனைகளின் அடிப்படை கோட்பாடு.

ஒரு செயலை செய்யாதே என்று அது வலியுறுத்தினால் அதன் பொருள்:

அந்தத் தீய செயலைச் செய்யும் போது  அது பிறருக்கு தீராத மன வேதனையை வருவிக்கும்.

அப்படித் துயரம் பட்டவர் விடும் கண்ணீர் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் கட்டாயம் திரும்பி நம்மை வந்தடையும். 

எனவே தற்காலிகமாக அது அளிக்கும் அற்ப சந்தோஷத்திற்காக உனது விலைமதிப்பற்ற உயர்ந்த வாழ்வை இழந்து விடாதே என்பதாகும்.

இன்றைய காலகட்டத்தில் இந்தக் கருத்தை நாம் மிக அவசியமாகத் தியானிக்க வேண்டும்.

சுயநலம் மிகுந்த ஒரு காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எப்படியாவது பிறரை ஏமாற்றி சுக வாழ்வு வாழ்ந்தால் போதும் என்கிற மனநிலை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

பொய் பேசுதல், ஏமாற்றுதல், நடித்தல் இவை அனைத்தும் வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி செய்பவர் ஆயுதங்கள். 

இத்தகைய சூழ்ச்சி செய்பவர் முகஸ்துதி செய்வது, ஒரு பொருளை தருவதாக ஆசை காண்பிப்பது, உங்கள் விருப்பத்தை அறிந்து அதைத் தவறான வழியில் அடையும்படி ஊக்குவிப்பது என தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள கருத்தாக முயல்வார்கள்.

முதலாவது கருத்தில் கொள்ள வேண்டியது: இப்படி பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் மக்கள் ஒரு போதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழ முடியாது. 

நிச்சயமாக அவர்கள் அதற்குரிய தண்டனை அடைவார்கள்  என்பதை நம் மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ள வேண்டும்.

இந்த நம்பிக்கை நம்மை எந்தச் சூழ்நிலையிலும் பிறரை ஏமாற்றிப் பிழைக்க கூடாது எனும் உணர்வை நம் மனதில் உறுதியாகப் பதித்துவிடும்.

இரண்டாவது நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியது: ஏமாற்றுபவர்களை விட்டு எவ்வளவு தொலைவு விலகி இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகி வாழவேண்டும்.

"உள்ளோன்று வைத்து புறமொன்று பேசுவார் தம் உறவு கலவாதிருக்க வேண்டும்" என்பது வள்ளலார் வாக்கு.
மிகப் பெரும் பணக்கார உறவினர்  ஒருவர் கதை இது.
எல்லாரையும் சாதுரியமாக ஏமாற்றி மிகப் பெரும் செல்வந்தர் ஆனார். எப்போதும் வாயில் வஞ்சகம். 
வட்டி கொடுப்பது பிரதான தொழில். அவரிடம் சிக்கி கொண்டால் வாங்கியது போல நாலத்தனை பணத்தை இழக்க வேண்டி இருக்கும்.
அவர் இப்படி தவறான வழியில் பொருட்கள் ஈட்டுவதைக் குற்றமாக கருதவில்லை.
அவர் குழந்தைகள் வசதியானவர்கள் படிக்க இயலும் உயர்ந்த கல்விச் சாலைகளில் கற்றனர். தனது குழந்தைகளை பார்த்துப் பார்த்து வளர்த்தார். ஆண்டுகள் பல கழிந்தன.
ஆனால் பிள்ளைகள் வளர்ந்தபோதோ தந்தையின் சொத்துக்கள் அனைத்தையும் குடித்து, தவறான நண்பர்கள், உறவுகள் என  விற்று அழித்தனர். ஏழு தலைமுறைகள் இருக்கும் என நம்ப்பட்ட சொத்துக்களை அவர் கண்முன் முதிர் வயதில் அவர் பிள்ளைகளே  அழித்துக் கரைத்தனர்.

விதி வலியது. 

தனது குழந்தைகளுக்காக அவர் தவறான பாதையில் சேர்த்த பணத்தை அந்தப் பிள்ளைகளை வைத்தே விதி அழித்தது.

கண்முன் நிகழும் அதைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது.
இறைவன் மனதை ஆட்டிப் படைப்பவன்.
செய்த தவற்றை கண்ணீர் விட்டுக் கதற வைக்கும் சூழலை உருவாக்குவார்.
வஞ்சகம் செய்தல் கூடாது.
வஞ்சகரோடு வாழ்தலும் கூடாது.




வெள்ளி, 15 ஜூன், 2018

தன்னை உணர்தல் - வாசித்தல் வழியாக.

🌸 தன்னை உணர்தல் - வாசித்தல் வழியாக


வாழ்க்கையில் நமது புரிதல்கள் கால ஓட்டத்தில் மாறிக் கொண்டே வருகிறது.

நமக்கு நன்மை எது, தீமை எது என்பதை அனுபவங்கள்  கற்றுத் தருகின்றன.

துயரமான வருடங்களில், தனிமையில், இழப்புக்களில், ஏமாற்றங்களில், துரோகங்களில், தவறுகளில் இருந்தே நாம் சிறந்த பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம்.

எதையும் நம்பும் மனம் தோல்வியை எதிர் கொள்ளும் போது, ஏமாற்றத்தை  சந்திக்கும் போது வாழ்வின் பல உண்மைகளை கற்றுக் கொள்கிறது.

இத்தகைய மனச் சோர்வான தருணங்களில் இருந்து நம்மை மெல்லத் தூக்கி எடுத்து வாழ்க்கை பாதையில் மீண்டும் நிலை நிறுத்துவதில் சிறந்த புத்தகங்களின் பங்களிப்பு அபாரமானது.

நமது அறிவின் கூர்மை, திறன், புரிதல் நல்ல புத்தகங்களை வாசிப்பதினால் மேம்படுகிறது.

சிறந்த புத்தகம் என்பது மனதில் அன்பை விதைக்க வேண்டும்.

வாசித்தல் நம்மை சக உயிர்களையும் தனது உயிரைப் போல் கருதும் உணர்வை ஊட்ட வேண்டும்.

அகந்தையை அழிக்க வேண்டும்.

பிறர் வலி உணர்ந்து அதைத் துடைக்க வேண்டும் எனும் மன நிலைக்கு உயர்த்த வேண்டும்.

மாறாகப் பிரிவினையை, சக மனிதனை வெறுக்கும் படி வன்முறையைத் தூண்டுகிற எழுத்துக்கள் நஞ்சை விடக் கொடியது.

வாசித்து உணர்ந்த கருத்துக்களை வாழ்வில் அப்பியாசம் செய்யப்படும் போது மட்டுமே அது மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

நல்ல கருத்துக்கள் கடைப்பிடிப்பதன் வழியாக  நம்முடைய
மனசாட்சியானது உயிர்ப்படைகின்றது.

மனசாட்சியை உணர்தல் என்பது சுய வெளிப்பாட்டின் ஒரு உயர்ந்த அனுபவம்.

எளிமையான, தூய்மையான, திறந்த, தன்னலமற்ற மனதை சிறந்த நூல்கள் நம்முள் உருவாக்குகிறது.

உயர்ந்த சிந்தனைகளைப் பெறுவதற்கு நமது மனம் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் இருத்தல் அவசியம்.

ஏதேனும் ஒரு கொள்கையில் தீவிரமாக பற்றுக் கொண்ட மனம் முழுமையான உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியாது.

உண்மையை முழுமையாக அறிய வேண்டும் என்றால் பயமின்றி கற்றுக் கொள்ள விழையும் மனம் அவசியம்.

தூய்மையான அன்பால் நிறைந்த மனம் உண்மையைக் கற்றுக் கொள்ள
எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

எல்லாம்  எனக்குத் தெரியும் எனும் மனப்போக்கு கற்பதை  தேக்கமடையச் செய்யும்.

நாம் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டபோது மனம் தன்னில்தானே பெருமை கொள்கிறது. தன்னம்பிக்கை அடைகிறது.

இந்த உணர்வு அகந்தையாக மாறும்போது அது தன்னைத்தானே மையப்படுத்தும் எண்ணங்களை
உருவாக்கி விடுகிறது.

இது தொடர்ந்து கற்றலைச் சாத்தியமில்லாமல் செய்துவிடுகிறது.

பரந்து விளங்கும் இந்தப் பிரபஞ்சத்தில் நான் ஒரு துகள் என்ற ஆழமான உணர்வு மனத் தாழ்மையை தரும்.

இந்தப் பிரபஞ்சத்தின் அளவற்ற தன்மையை உணரும்போது  ‘நான்’ என்கிற உணர்வுக்கு அப்பால் மனம் கடந்துவிடுகிறது.

அத்தகைய முதிர்ச்சி அடைந்த மனம் நல்லது, கெட்டது
எனும் பாகுபாட்டை செயல்களையும் அதன் விளைவுகளைக் கொண்டு மட்டுமே தீர்மானிக்கும்.

நல்ல செயல்களை போற்றுகிறது. அந்த செயலைச் செய்தவரை வாழ்த்துகிறது.

தீய செயல்களை வெறுக்கிறது. ஆனால் தீமை செய்பவர்களை பழி தீர்ப்பதில்லை.

முதிர்ச்சி அடைந்த மனம் இறந்த காலத்தின் நினைவுகளில் அலசலடிப்பட்டு உறைந்து போவதில்லை.

எதிர்காலத்தினைக் குறித்த அச்சத்தில் அமிழ்ந்து போவதும் இல்லை.

அது நிகழ்கால தருணத்தின் செயல்களில் மாத்திரம்  முழுமையான கவனம் செலுத்துகிறது.

இதனால் வீணான, தேவையற்ற தொடர்ச்சியான எண்ணங்களின் போராட்டத்திலிருந்து மனம் விடுதலை அடைகிறது.

இது ஒன்று  எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைத் தரும்.

வாழ்வில் வெளிப்புற சூழலை மாற்றுவதை விட உட்புறமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தால் அது மிகச் சிறப்பானது.

இந்த உள்ளான மாற்றத்தின் தாக்கம் செயல்களாக வெளிப்படும்போது சுற்றி வாழும் சமூகத்தை உயர்த்துகிறது.

இந்தப் பயிற்சியில் நாம் எந்த அளவுக்கு நமது சக்தியையும், நேரத்தையும் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நமது வாழ்க்கை அர்த்தம் நிறைந்ததாக மாறுகிறது.