ஞாயிறு, 5 ஜூலை, 2020

38. கெடுப்பது ஒழி

 பிறருக்குத் துன்பம் இழைக்காதே.

(ஆத்திசூடி - ககரவர்க்கம்) 

 


கெடுதல் ஒழி : பிறருக்குக் கெடுதல் தரும் செயல்களைச் செய்யாதே. 

மனதாலும் பிறர்க்குக் கெடுதல் செய்ய நினைத்தல் கூடாது. அது தீமை. பிறரைக் கொடுமைப்படுத்தி இரசிப்பது ஓர் குரூர குணம். அது வாழ்வில் பழியையும் தீரா பாவத்தையும் விளைவிக்கும்.

மனம் ஏன் பிறர்க்குத் தீமை செய்ய விழைகிறது?

"பிறரை அடக்கி ஆள வேண்டும் எனும் வேட்கை",  "ஆதிக்க திமிர் உணர்வு" மனித மரபணுக்களில் பெருமிதத்தின் அடையாளமாக ஆழமாகப் பதிந்துள்ளது. 

அந்த உணர்வு சீண்டப்படும்போது அவை பிறர்க்குக் கெடுதல் விளைவிக்கும்  செயல்களாக வெளிப்படுகின்றது. 

"நான் நினைத்தபடிதான் சகலமும் நடக்க வேண்டும்" எனும் அகந்தை நடத்தைப் பிறர் மனதை நோகச் செய்கிறது. 

"சுய மோகம்" பிறருக்கு அநீதியைச் செய்ய அச்சப்படுவதில்லை.

ஒரு கொள்கையின் மீது உள்ள தீவிர வெறி மனக் கண்களைக் குருடாக்கும். இவை மாற்றுக் கருத்துக்களைப் பேச அனுமதிப்பதில்லை. மாற்றுக் கருத்துடையவரைக் கொடுமைப்படுத்தவும் தயங்காது..





இரு விதங்களில் தீங்கிழைத்தல் நிகழ்கிறது. ஒன்று உடலை 
வன்முறையாகத் தாக்கி 
காயப்படுத்துதல். 

மற்றது உளவியல் ரீதியாக மனதை நோகடித்தல். 

தங்கள் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுபவர் மீது அமிலத்தை வீசுதல், 
சூடு போடுதல், அடித்துக் காயப்படுத்துதல், கொலை செய்தல் 
எனப் பல வகையில், உடல்ரீதியான வன்முறைத் தாக்குதல் நிகழ்த்தப்படுகின்றன. 

நேரிடையாக கெடுதல் செய்ய இயலாத வலிமையற்றவர்கள் வஞ்சக வடிவில் மறைமுகமாகப் பிறர்க்குக் கெடுதல் செய்கின்றனர். இவை உளவியல் 
தாக்குதல்கள்.

அமில வார்த்தைகளால் பேசிக் காயப்படுத்துதல், அவதூறு செய்திகளைப் பரப்புதல், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல், குழுவாக இணைந்து எதிர்ப்பவரைத் தனிமைப்படுத்துதல், புறக்கணித்தல், 
பேசாதிருத்தல், பொதுவெளியில் அவமதித்தல், காத்திருக்க வைத்தல், நடித்து ஏமாற்றுதல்  போன்றவை உளவியல் தாக்குதல்கள்.  

பிறருக்குத் தீங்கு தரும் செயல்களுக்கு 
உளவியல் பாதிப்புகளும் முக்கியமான காரணமாக இருக்கின்றன. மனதில் மறைந்திருக்கும் வன்ம உணர்வுகள் 
கெடுதலைச் செய்யத் தூண்டுகின்றன. அவை ஒழிக்கப்பட வேண்டும். 

இந்தக் கட்டுரைத் தொகுப்பில் சில கற்பனை நிகழ்வுகள் 
விவரிக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு சம்பவங்களின் 
பின்னணியாக மறைந்திருக்கும் உளவியல் பாதிப்பைக் கூர்ந்து கவனிப்பது நல்லது.

சில சம்பவங்கள் :




1. ஆனந்த் திறமையான பணியாளர். உயர் வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரவி இவரை விட மிகத் திறமையாகப் பணி புரிகிறார். ரவி வேலைகளைச் சுறுசுறுப்புடன் கச்சிதமாகச் செய்து முடிக்கிறார். எல்லோரும் அவரைப் பாராட்டுகின்றனர். 

ஆனந்த்தால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனந்தின் பொறாமையுணர்வு ரவியைத் துன்பப்படுத்தத் தூண்டுகிறது. திறமையை அங்கீகரிக்க மறுக்கும் அவரது மனநிலை ரவியைக் குறை கூறு தூண்டுகிறது. அவனது சிறிய அற்ப தவறுகளைக் கூடப் பெரிது படுத்தி அலுவலகத்தில் அவமரியாதை செய்கிறார். ஒரு குழுவாகச் சேர்ந்து ரவியைத் தனிமைப் படுத்தி அகற்ற முயல்கிறார். 

2. சங்கருக்கு வேலையில் போதிய திறமை கிடையாது. தனது வேலையைத் தக்க வைக்க உயர் நிலையில் உள்ளவர்களின் பலவீனத்தை அறிந்து கொள்கிறான். அவர்களது முறையற்ற தேவைகளை மறைமுகமாகப் பூர்த்தி செய்கிறான். அலுவலகத்தில் செல்வாக்கு உடையவனாக வலம் வருகிறான். சங்கருக்கு நேர்மையாக பணிபுரியும் மணியைக் கண்டால் காரணமின்றி எரிச்சல் வருகிறது. மணிக்குத் தொல்லைகள் ஏற்படுத்துகிறான்.

3. ஜோ ஒரு உல்லாசப் பிரியன். பெண் பித்தன். தனது மன உணர்வுகளைத் திருப்தி செய்வதற்காகப் பெண்களை ஏமாற்றுகிறான். தெரிந்தே கெடுதல் செய்கிறான். பல பெண்கள் வாழ்வு பாழாகின்றது. அவர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். அவனுக்கு அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை. 

4. குமாரும் ராஜியும் மிகச் சிறந்த உடன் பிறப்புகள். இயல்பில் நல்லவர்கள். பாசமாக வளர்ந்தவர்கள். சிறு வயதிலிருந்து ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்தவர்கள். ராஜி குடும்பத்திற்காகக் கடுமையாக உழைக்கிறாள். குழந்தைகளின் வாழ்விற்காகப் பல தியாகங்களைச் செய்கிறாள். ஆனால்  குமாருக்கும் அவர் மனைவிக்கும் பணத்தை சாம்பாதித்தில் மிகுந்த ஆர்வம். பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்க சமயமில்லை. 

வாழ்வின் பிற்பகுதியில் ராஜியின் குழந்தைகள் உயர்ந்தநிலை அடைந்தனர். குமாரின் குடும்பத்தினரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் ராஜியுடன் பேசுவதை நிறுத்துகின்றனர். அவளைப் பற்றி உறவினர்களிடம் அவதூறாகப் பேசி அவளது நற்பெயரைக் கெடுக்கின்றனர். 

5. செல்வனுக்குக் கனவுகள் ஏராளம். அவனுக்குக் கஷ்டப்பட்டு உழைக்க  விருப்பமில்லை. நிரந்தரமாக எந்தவொரு வேலையிலும் தரித்திருப்பதில்லை. ஆனால் உல்லாசமாக வாழ ஆசை. குடும்பத்தை நடத்த போதிய வருவாய் இல்லை. 
வசதியான வாழ்வையும் இழக்க விருப்பமில்லை. இதனால் வீட்டைச் சுற்றி கடன். இந்த இயலாமை மனைவியிடம் வன்முறையாக வெளிப்படுகிறது. குழந்தைகள் அடிக்கப்படுகின்றனர். கொடிய செயல்களைச் செய்கிறான். 

6. மதனுக்குத் தாம்பத்திய உறவில் தோல்வி. அதைச் சரி செய்ய முறையாகச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால் வெட்கம் அவனைத் தடுத்தது. இந்த இயலாமையை மறைக்கத் தன்னைச் சுற்றி வாழ்பவர்களிடம் நல்லவனாக நடிக்கத் துவங்குகிறான். ஆனால் தனிப்பட்ட வாழ்வில் மனைவியிடம் கொடியவனாக நடந்து கொள்கிறான். 

இயலாமை மனைவியின் நடத்தைக் குறித்த சந்தேகமாக வளர்கிறது. அவை
மனதைப் புண்படுத்தும் கொடும் அமில வார்த்தைகளாக வெளிப்படத் 
துவங்குகின்றன. 

புறக்கணிப்பு, பேசாதிருத்தல், தனிமைப்படுத்துதல், ஏளனம் செய்தல், வன்முறை பிரயோகித்தல் எனக் கொடுஞ் செயல்களாக அவை விரிவடைகின்றன. துன்பப்படுத்தி கண்ணீர் சிந்தவைப்பதை அவனது மனம் ஆளுமையாக எண்ணுகிறது. 

7. மோகனுக்குத் திருமணமானது. அவன் தன்னைக் கை விட்டுவிடுவானோ எனும் அச்சம் மோகனது பெற்றோரை வாட்டியது. தங்களது ஆதிக்கம் பறி போய்விடுமோ எனும் பயம் அவர்களைப் பீடித்தது. மருமகளைப் பற்றிக் குறை கூறுகின்றனர். வீண் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். மகனது அனுதாபத்தைப் பெற நடிக்கின்றனர். 
திருமண வாழ்வு சீர்குலைகிறது. 

8. அன்பு பெற்றோருக்கு ஒரே மகன். நன்கு  படிக்க வைத்தனர். நல்ல வேலை, திருமணம், குழந்தைகள் என வாழ்வு சுகித்தது. அவனது குழந்தைகள் வளர வளரப் பெற்றோரிடம் பேசுவதற்குக் கூட நேரமில்லை. தொலைப்பேசியில் அவனது குரலைக் கேட்பதற்காக அவர்கள் உயிர் வாழ்ந்தனர். அவர்களிடம் பேசக் கூட. அன்பிற்குப் பொறுமையில்லை. எரிந்து விழுகிறான். வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அவனது  வருகைக்காக மட்டுமே கிராமத்தில் பெற்றோரின் உயிர் மிச்சமாக இருக்கிறது. 

இத்தகைய நிகழ்வுகள் நம்மைச் சுற்றி அனுதினம் நடக்கும் காட்சிகள். இங்குப் பிறரைத் துயரப்படுத்துதல் மிகச் சாதாரணமாக நடக்கிறது. 

இதைச் செய்பவர்களுக்கு தாங்கள் பிறருக்குக் கெடுதல் செய்கிறோம் எனும் குற்றவுணர்வு துளியும் இருப்பது இல்லை. 

பெருமை, வஞ்சனை, மோக இச்சை, பொறாமை, சோம்பல், இயலாமை,  விட்டுக்கொடுக்க மனமின்மை, நன்றி மறத்தல் என பல மன உணர்வுகள் தீயெண்ணமாக உருவெடுக்கின்றன. அவைகள் பிறருக்கு தீங்கிழைக்கும் செயல்களாக வெளிப்படுகின்றன.

தனது அதிகாரத்தைத் தக்க வைக்க மனம் செய்யும் விசித்திர நாடகங்கள் மிகத் தந்திரமானவை. அவற்றை நம்மால் எளிதில் இனம் பிரித்து உணர முடியாது. 

உணர்வுகள் தூண்டப்பட்டால் அறிவு செயலிழக்கும். 




நன்மையைச் செய்வோம் :

ஓர் தீய உணர்வை ஒழிக்க அதைவிட வலிமையான நல்ல நம்பிக்கையைத் தரும் நல் உணர்வு மனதில் விதைக்கப்பட வேண்டும். அவை இனிய அனுபவமாக மாற வேண்டும். 

எந்தவொரு செயலுக்கும் எதிர்விளைவு உண்டு என்பது பிரபஞ்ச விதி. நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். பிறருக்குத் தீமை செய்வது இறுதியில் நமக்கே கெடுதியாக முடியும்  எனும் உண்மை நம் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும். 

நமது வாழ்வின் பல அனுபவங்கள் அதை உணர்த்தும். கற்றுத்தரும். அதை மறக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் அதை நினைவில் கொண்டு வர வேண்டும். 

பிறர்க்குத் தீங்கிழைப்போர்க்குத் தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது. 

பிறருக்குத் தீங்கு செய்ய நினைத்தால் தெய்வத்தின் அருள் நம்மைவிட்டு அகன்றுவிடும். 

பிறருக்குத் தீங்கு செய்தவர் நீதிமன்றத்தை வேண்டுமெனில் ஏமாற்றித் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியும். உலகத்தை நடித்து ஏமாற்றலாம். அது தற்காலிகம்.  ஆனால் தெய்வம் நின்று கொல்லும். 

ஒவ்வொரு மனிதரும் தான் செய்த தீமையை உணராமல் மரிப்பதில்லை. ஒரு கணப் பொழுதாவது அது மனதைக் கேள்வி கேட்கும்.

நன்மை செய்தும் தீமையை எதிர் கொள்ள நேர்ந்தால் பொறுமையுடன் இறை சமூகத்தில் அமர்ந்திருப்பது சாலச்சிறந்தது. துயர நேரங்களில் கடந்த காலத்தைச் சீர்தூக்கிப் பார்த்து சிந்தனை செய்தல் சிறந்தது. நமது பிழைகளை உணரவும் சீர் செய்யவும் அவை உதவும். துயரங்கள் நமது நடத்தையைச் சரி செய்ய உதவுகிறது.

கெடுதல் செய்வோரைப் பழிவாங்கத் 
திருப்பி கெடுதல் செய்வது தவறானது. 
எந்த சூழலிலும்  தீமைக்குப் பதிலடியாகத் தீமை செய்வது நல்லதல்ல. அந்தத் தீயவரை விட்டு விலகுதல் நல்லது. 

தீமை செய்தவருக்கும் நன்மை செய்வது என்பது தெய்வீக அருள். கெடுதல் செய்தவரை மன்னித்தல் மனதை உறுதிப்படுத்தும். மனதில் பழி வாங்கும் உணர்வை அகற்றும். மனம் அமைதி அடையும். அப்போது பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு மனதில் பிறக்கும்.

மனதில் அன்பும் நல்ல நம்பிக்கையையும் வளர்த்தெடுப்பது அவசியம். நல் நம்பிக்கை அற நூல்களைத் தொடர்ந்து கிரமமாக வாசிப்பதால் உறுதிப்படுகிறது. நல்ல கூட்டுறவு நல்ல நம்பிக்கையைப் பாதுகாக்கிறது. இறை வேண்டலில் தரித்திருப்பது மனதைத் தூய்மையாக்குகிறது.

ஆக வாழ்வின் சிறந்த அறம் எது?

மனதைத் தூய்மையாக வைத்திருப்பதே சிறந்த அறம். பிற உயிர்க்கு மனதால் கூட தீங்கு எண்ணாதிருத்தல் மனத் தூய்மை.

தனது மனதைத் தூய்மையாக மாற்றுவதற்குப் போராடுவதை விடச் சிறந்ததொரு  வாழ்க்கைப் போராட்டம் வாழ்வில் வேறு எதுவுமில்லை.

அதைத் தான் ஔவை இரு வார்த்தையால் சொல்கிறார். 

"கெடுதல் ஒழி".

ஔவை வலியுறுத்திச் சொல்வது : கெடுதலை அழி என்றல்ல; கெடுதல் ஒழி.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

சனி, 13 ஜூன், 2020

கவனித்துப் பாருங்கள்

  தகவமைப்பு.  

 

  
வறண்ட வெறுமையான 
ஊளையிடும்
பாலை நிலத்தின்
அவாந்தர வெளியில்
அழகியதொரு சப்பாத்திக்கள்ளி  

சூழல் குறித்து 
முறுமுறுக்காது 
தன்னைத்தான் பொருத்தி
நீர் ஆவியாகாவண்ணம் 
கிளைகள் நீக்கி 
இலைகள் துறந்து  
தண்டில் பாத்திகட்டிப்
பனி நீரை 
வேருக்குப் பாய்ச்சி 
பாதுகாக்க
முட்களைச் சூடி 
வறண்ட நிலம் மகிழக்
கடுவெளி களிக்கப் 
புஷ்பம் பூத்துச் சிரிக்கிறது

வான வீதியில்
உல்லாசமாக
உலாவருகின்றன
சில பறவைகள்

அவை
விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை

அவைகளுக்குக்
களஞ்சியமுமில்லை
பண்டகசாலையுமில்லை
அதற்காக அவைக்
கவலைப்படுவதுமில்லை

கூடித் திட்டமிட்டு 
சிறகை விரித்துச்
சோர்வின்றி பறந்து 
உணவைத் தேடிக் 
கண்டடைந்து 
களிக்கின்றன

அடர் வனத்தில்
உயர்ந்ததொரு மரம்

அவை
நூல் திரிப்பதுமில்லை
ஆடை நெய்வதுமில்லை

எனினும்
மகிமை பொருந்திய
மன்னர் அணியும்
மெல்லிய ஆடையினும்
மெலிதான மலரை
அணிந்து அழகுடன்
மிளிர்ந்து, கவர்ந்து
சந்ததியைக் கடத்துகிறது

இயற்கையோடு 
இயைந்தவை
சுயமதிப்பை,  
இருப்பை, 
மகிழ்ச்சியை 
எச் சூழலிலும் இழப்பதில்லை

அவை 
தம்மைத்தாமே
தகவமைக்கின்றன. 
மறைகின்றன.
மறுரூபமாகின்றன.

அதிகாலைப் பனித்துளி 
புல்லின் முனையில் பூ
காற்றில் தொலைந்த மேகம்
வெட்டி மறையும் மின்னல்

தோற்றமும் மறைவும்
நீர்க்குமிழி எனினும் 
தத்தம் கடமையை 
நிறுத்துவதில்லை

வாழ்வின் இருப்பை 
எது இறுதி செய்கின்றன?  
உண்மையை யார் உணர்வார்?

தகவமைப்பு 
உயிர்களின் வாழ்வியல் 
ஓர் புரிபடா சுழற்சி 

தேடல்
கூர்ந்து கவனித்தல்  
இயல்பைப் புரிதல்
தெரிந்து கொள்ளுதல் 
சோர்வின்றி உழைத்தல் 
அடைதல் 
அனுபவித்தல்
உண்மை உணர்தல்
பயணித்தல் அன்றி விலகல்
தன் வினை உணர்தல் 
சீர் செய்தல் 
மீண்டும் ஓர் புதிய தேடல்

புகையாக 
வாழ்க்கை கரைகிறது 
வாசனைகள் மட்டும் 
எச்சமாகக்
காற்றோடு காற்றில் 
கண்ணுக்குப் புலப்படா
நுண் துகளாக

வாழ்வுக்கேற்ற வாசனை 
வாசத்துக்கேற்ற மீள் வாழ்வு

தகவமைப்பு : மாறுகின்ற சூழலுக்கேற்பத் தன்னைப் பொருத்திக் கொள்கின்ற திறன்.  

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

சனி, 6 ஜூன், 2020

பண்பட்ட மனம்.

விதை - நிலம்.

(Christ's Parables - 3)


வாழ்வியல் உண்மையைக் கதை வடிவில் கேட்பது சுவாரஸ்யம். நாம் இயல்பாகப் பார்க்கும் காட்சிகள் வழியாகக் கதை சொல்லப்படும் போது மனம் இன்னும்  நெருக்கமான உணர்வை அனுபவிக்கிறது.

உவமை என்பது விளக்குவதற்குச் சிரமம் நிறைந்த ஒரு கருத்தைத் தெரிந்த உதாரணத்தின் மூலமாக விளக்கிக் கற்றுத் தருவது. கதை உவமை வழியாகச் சொல்லப்படும்போது விடுகதையாகிறது. "எதைக் குறித்து இந்தக் கதை மறைமுகமாக விளக்க முயல்கிறது?" என மனம் ஆர்வமுடன் சிந்திக்கிறது. புதிரின் முடிச்சை அவிழ்க்க உள்ளத்தில் தீவிர அலசல் நடைபெறுகிறது.

உவமை சுட்டும் பொருள் வெளிப்படும்போது உண்மை எளிதாகப் புரிகிறது. மனம் மகிழ்ச்சி அடைகிறது. அவ்விதம் கற்பது ஆழமாகப் பதிகிறது. அக்கருத்துக்கள் நினைவில் நிலைத்து நிற்கிறது.


இது ஓர் எளிய உவமை கதை :



ஒரு மனிதன் விதைப்பதற்காக வயலிற்குச் செல்கிறான். அவனிடம் நல்ல தரமான விதைகள் இருக்கின்றன. அவன் நிலத்தில் விதைகளைத் தூவினான்.

அதில் சில விதைகள் வழிப் பாதையோரத்தில் விழுந்தன. அதைப் பறவைகள் வந்து கொத்தித் தின்றன.

சில விதைகள் மண் அதிகமில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை முளைத்தது. துளிர் விட்டது. மேல் நோக்கிச் செழிப்புடன் வளர்ந்தது. ஆனால் நிலம் கடினமான பாறை நிறைந்த தரிசாக இருந்ததால் வேர் ஆழமாக ஊடுருவ முடியவில்லை. சிறிது காலத்தில் கோடைக்காலம் வந்தது. வெய்யில் உக்கிரமாகக் கொளுத்தியது. அந்தச் செடியின் வேர் ஆழமாக இல்லாததால் வாடி வதங்கிக் காய்ந்து அழிந்தது.

இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த இடத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைத்தது. நன்கு வளர்ந்தது. எனினும் முட் செடிகளும் உடன் பெரிதாக வளர்ந்து செடியை நெருக்கியதால் அதன் வளர்ச்சி தடைப்பட்டது. முடிவில் செடி விளைச்சலின்றி பலனளிக்காது போயிற்று.

மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தது. விளைச்சல் சிறப்பாக இருந்தது. அவற்றுள் சில முப்பது மடங்கு பலனளித்தது. வேறு சில அறுபது மடங்கு பலனளித்தது. இன்னும் சில நூறு மடங்கு பலனளித்தது..

உவமை சுட்டும் பொருள் :




இந்த உவமை நான்கு விதமான மனநிலை கொண்ட மனிதர்களைக் குறித்து கற்றுத் தருகிறது.

வாழ்வியல் உண்மைகள் மாறாதது. ஆனால் மனிதரின் மனப்பான்மை மாறுபட்டது.

ஒவ்வொருவர் மனதின் விருப்பங்களும் தேடல்களும் வித்தியாசமானது. எது நல்லது? எது கெட்டது? எனச் சிந்தித்துப் புரிந்து கொள்ளும் திறன் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது.

கூர்ந்து நோக்கினால் ஆழ் மனதின் விருப்பங்கள் குணமாகும். அந்த குணம் மனப்பான்மையைத் தீர்மானிக்கும். அவரவர்கள் மனப்பாங்கிற்குத் தக்க அறத்தைக் கடைப்பிடிப்பார்கள். அதற்குத்தக்க வாழ்வில் மாற்றம் நிகழும்.

இந்த உவமையில் "விதை" என்பது "வாழ்வியல் சார்ந்த அறத்தை - இறை வார்த்தைகளை" குறிக்கிறது.

மற்றும் "நிலம்" என்பது "மனம்". "பறவை" என்பது "தீயசக்தி". "சூரிய வெப்பம்" என்பது "துன்பம்". "முட்செடிகள்"  என்பது "பேராசை மற்றும் உலக மதிப்பைத் தேடுதல்".

இந்த கதையில் நான்கு வித மனப்பான்மை உடைய மனிதர்களைப் பார்ப்போம். இதில் நமது மனநிலை எங்குப் பொருந்துகிறது எனப் புரிந்து கொள்ள அது உதவியாக இருக்கும்.

1. உணர்வற்ற மனம்.




"சில விதை பாதையருகில் விழுகிறது. பறவைகள் வந்து அதைக் கொத்தித் தின்கிறது".

உணர்வற்ற மனதில் விழுந்த நல்ல கருத்துக்களால் எவ்வித பயனும் இல்லை என்பது இதன் பொருள்.

சில மனிதர்கள் நல்லக்  கருத்துக்களைக் கேட்பார்கள். வாசிப்பார்கள். விவாதிப்பார்கள். ஆனால் வாழ்வில் கடைப்பிடிக்க மாட்டார்கள். அதில்  உண்மையான விருப்பம் கிடையாது. பொழுது போக்கக் கேட்பார்கள். நேரப்  போக்கிற்காக வாசிப்பார்கள். புதிது புதிதாக வாசிக்க ஆர்வம் காட்டுவார்கள். வாசித்து முடிந்தவுடன் மறந்து விடுவார்கள். மனதில் எதுவும் பதியாது.

பறவை வந்து கொத்தித் தின்னும் என்பது நல்ல சிந்தனைகள் இவர்கள் மனதில் பதியாதவாறு தீயசக்தி செயல்படுவதைக் குறிக்கிறது. உணர்வற்ற தன்மையால் தீமை இவர்களை எளிதில் மேற்கொள்ளும். இருள் சூழ்ந்த உணர்வற்ற உள்ளத்தில் எந்த நல்ல எண்ணமும் தங்காது.

என் தலைக்கு மேல் பறவைகள் பறப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் என் தலையில் அவை கூடு கட்டாமல் பாதுகாக்க முடியும்.

2. உறுதியற்ற மனம்.




"சில விதைகள் மண் அதிகமில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை உடனே முளைத்துத் துளிர் விட்டது. ஆனால் நிலம் கடினமான பாறையாக இருந்ததால் வேர் ஆழமாக ஊடுருவ முடியவில்லை. வெய்யில் உக்கிரமாகக் கொளுத்தியபோது செடியின் வேர் ஆழமாக இல்லாததால் வாடி வதங்கிக் காய்ந்து அழிந்தது".

உறுதியற்ற மனதையுடையவர்கள் ஆவலுடன் நல்லக் கருத்துக்களைக் கேட்பார்கள். அதை ஏற்றுக் கொள்வார்கள். சில காலம் கருத்தாகக் கைக்கொள்வார்கள். நல்லவராக வாழ்ந்தால் துன்பம் வரும். அதை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாமல் சமரசம் செய்து கொள்வார்கள்.

வேர் ஆழமாக ஊடுருவினால்தான் செடி எந்தச் சூழலையும் எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியும். அதுபோல நல்ல சிந்தனையின் மேல் உறுதியான நம்பிக்கை இருந்தால்தான் எவ்வளவு துயரங்கள் வந்தாலும் அதைக் கடைப்பிடித்து நிலை நிற்க முடியும்.

வேர் பற்றாது விரைவாக வளரும் செடி சூரியனின் வெப்பத்தைத் தாங்காது கருகுவது போல எதிர்ப்புகள் மற்றும் துன்பத்தைத் தாக்குப் பிடிக்காத உறுதியற்ற மனமுடையவர் நல்லதைச் செய்வதில் நிலைத்திருக்க மாட்டார்கள்.

உறுதியற்ற மனமுடையவரின் நல்ல தீர்மானங்கள் விரைவில் முடிவுக்கு வரும்.

3. ஆசையில் சிக்குண்ட மனம்.



"இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த இடத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைத்தது. நன்கு வளர்ந்தது. எனினும் முட் செடிகளும் உடன் பெரிதாக வளர்ந்து செடியை நெருக்கியதால் அதன் வளர்ச்சி தடைப்பட்டது. முடிவில் செடி விளைச்சலின்றி பலனளிக்காது போயிற்று". 

முட்செடிகள் என்பது உலக ஆசையைக் குறிக்கின்றன. மூன்று ஆசைகள் மனதை மயக்குகின்றன. அவை பணத்தாசை, பாலுறவு மோகம், பதவி அதிகார வெறி. இந்த உலகப்பற்று மனதை வீழ்த்திவிடும்.

i. பண ஆசை ஒரு முள். 

இவ்வுலகத்தில் வாழப்  பணம் அவசியமானது. ஆனால் பணத்தின் மேல் ஏற்படும் மிதமிஞ்சிய ஆசை தவறான குறுக்கு வழியில் நடக்கத் தூண்டுகிறது. இலஞ்சம் வாங்க வைக்கிறது. பிறர் சொத்தை அபகரிக்கத் தூண்டுகிறது.

மித மிஞ்சிய பண ஆசை உறவுகளில் விரிசல் ஏற்படுத்துகிறது. தேவைக்கு அதிகமான பணம் முறையற்ற வாழ்க்கை வாழும்படி தூண்டி விடுகிறது.

நாம் பயன்படுத்தாத எத்தனைப் பொருட்களால் வீடு நிறைந்துள்ளது?

தவறான முறையில் சம்பாதித்து சொத்துக்களைச் சேர்த்து வைப்பதை விடக் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி, உயர்ந்த பண்புகள் அளிப்பது முக்கியம்.

தீய வழியில் சேரும் சொத்து முடிவில் குடும்பத்தை அழிக்கும்.

பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேர். அது  நல் வாழ்வு வாழத் தடை.

ii. முறையற்ற உறவுகள்  ஓர் முள்.

முறையற்ற பாலியல் தொடர்பு வாழ்வைக் கறைப்படுத்தும். அது புத்தியீனமாக நடக்கத் தூண்டும். சுற்றியிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் வெட்க உணர்வு மறையும். செய்யும் செயலின் விளைவைப் பற்றிய அச்சவுணர்வு அகலும். கூச்சம் விலகும். நீதி நியாய உணர்வுகள் அழியும். மனசாட்சி செத்து விடும். நன்மதிப்பு கெட்டுக் குடும்பம் சிதையும்.

முறைதவறிய பாலியல் உறவு மதிகேடு. அது நல் வாழ்வு வாழ விடாது.

iii. பதவி அதிகார வெறி ஓர் முள்.


பதவி அதிகாரம் ஓர் போதை. அது மெத்தப் படித்த மேதையையும் வீழ்த்திவிடுகிறது. தனது வாரிசை அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் எனும் ஒரே ஆசையால் எத்தனை நாடுகள் சிக்கிச் சீரழிகிறது.

குறுக்கு வழியில் தகுதியற்ற பிள்ளையை  உயர்ந்த பதவியில் அமர்த்த துடிக்கும் பெற்றோரின் பேராசையால் எவ்வளவு அழிவு ஏற்படுகிறது.

அதிகாரத்தைக் கைப்பற்றச் சண்டையிடும் சமயத்  தலைவர்களால் தெய்வ சபைகளும், அறமும் கேலிப் பொருளாகி மான்பிழந்து நிற்கிறது.

அகந்தையால் அழிந்த தலைவர்களின் கதைகளாலே உலக வரலாற்றின் பக்கங்கள் நிரம்பியுள்ளன.

தன் எஞ்சிய வாழ்க்கை இன்னும் சில வருடங்கள் தான் எனத் தெரிந்தும் ஒற்றை ஆளாக உலகையே மாற்றத் துடிக்கும் தலைவர்களின் அதிகார வெறி மக்களைத் தத்தளிக்கச் செய்கிறது. 

அதிகாரம் வீண் பெருமையை அளிக்கிறது. அதிகார போதையில் சிக்கியவரைச் சுற்றி வெற்றுத் துதிபாடும் வீணர் சேர்கிறார்கள். புகழில் சிக்கியவர் கண்கள்  உண்மையை உணர்வதில்லை.

அழிவுக்கு முன் அகந்தை. அதிகார ஆசை நல் வாழ்வு வாழப் பெருந்தடை.

இந்தக் கொடிய முட்கள் மூன்றும்  வாழ்க்கையிலிருந்து வெட்டி அகற்றப்பட வேண்டும்.

4. பண்பட்ட மனம். 


(வினோபாவேஜி அவர்கள்)

"மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தது. விளைச்சல் சிறப்பாக இருந்தது. அவற்றுள் சில முப்பது மடங்கு பலனளித்தது. வேறு சில அறுபது மடங்கு பலனளித்தது. இன்னும் சில நூறு மடங்கு பலனளித்தது."

பண்பட்ட மனம் நல்ல நிலம். அது இறைமை வாழும் உள்ளம். அது உண்மையை விரும்புகிறது. அதன் உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கிறது. அது அன்பால் நிறைந்திருக்கிறது. அதில் பெருமை இருப்பதில்லை. அது தீய வழிகளை வெறுக்கிறது. நற்செயல்கள் இறைவனது அருளால் தான்  செய்யப்படுகிறது எனும் தெளிவு இருக்கிறது.

மனதில் தந்திர உணர்வுகள் இருப்பதில்லை. நீதி உணர்வுகள் ஆளுகை செய்கிறது. வார்த்தைகளைக் கவனமாகப் பேசுகிறது. ஒரு செயலை செய்யும்முன் விளைவுகளை யோசிக்கிறது. ஆதாயத்தைவிட விளையும் பலன்மேல் கருத்தாக இருக்கிறது.

ஒரு நல்ல நிலத்தைப் பாருங்கள். அது வேலியடைத்துப் பாதுகாப்பாக இருக்கிறது. நன்கு பராமரிக்கப்படுகிறது. ஓர் பசுமையான செழிப்பு நிறைந்த தோட்டத்திற்குப் பின்புலமாக மிகச் சிறந்த உழைப்பாளி மறைந்திருக்கிறார்.

ஓர் நல்ல மனதிற்குள் அந்தராத்மாவாக குரு செயல்படுகிறார்.

இறை வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல் மூன்று விதமான அளவுகளில் (30%, 60%, 100%.) பலனளிக்கிறது. இறை வார்த்தைகளுக்கு வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதற்கேற்ப பலனும் அமைகிறது. 

சரணடைதல் அறுவடையின் அளவை நிர்ணயம் செய்கிறது.

ஓர் எளிய உவமை. எத்தனை ஆழ்ந்த பொருள்.

சான்றோர்களால் சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் அருளப்படுகிறது. அதில் மறைந்திருக்கும் மறைபொருளின் உண்மைத்தன்மையால் அது காலத்தைக் கடந்தும் பேசப்படுகிறது.

நம்பிக்கை  ஒவ்வொரு வார்த்தையின் பொருளை உணர்த்துகிறது. அகக் கண் திறக்கிறது. அதை ஏற்றுக் கீழ்ப்படிந்து கடைப்பிடிக்கும்போது வாழ்க்கை மாறுகிறது.

"வாசிப்பவர் சிந்திக்ககடவர்".

*******   *******   ******* 

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.



வெள்ளி, 29 மே, 2020

மன்னிப்பின் மாண்பு

 மீள்தல். 



[இந்தக் கட்டுரை Olivia Delong எழுதிய "How to forgive someone, Even when it feels impossible.  Forgiveness is something you do for yourself" எனும் ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தன் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டது.]

மன்னித்தல் நன்மையானது :



ஏமாற்றியவரை மன்னிக்க முடியுமா?
மன்னித்தல் என்றால் என்ன?
மன்னிப்பதால் மனதில் உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது? 
எது மன்னிப்பு?
எது  மன்னிப்பில்லை?
மன்னிப்பைச் சொல்லவேண்டுமா?

இக் கட்டுரை இது போன்ற சில கேள்விகளுக்கு எளிமையான விளக்கம் அளிக்கிறது.

ஏமாற்றுபவர் பல விதம்.

ஓர் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக நடித்து நம்பவைத்து ஏமாற்றுபவர் உண்டு. சுய இலாபத்துக்காக மோசடி செய்பவரைச் சந்தித்திருப்போம். ஆதாயத்திற்காக உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாகப் பொய் பேசுதல் இன்று சர்வசாதாரணம். தனது குறையை மறைப்பதற்காகப் பிறர் மீது பழி போடுதல் உறவுகளில், பணியிடத்தில் எதிர் கொள்கிறோம்.

இப்படிச் செய்பவர்களை மனதார மன்னிக்க முடியுமா?

மன்னிக்க வேண்டும். ஏனெனில் மன்னிப்பதால் அதிக நன்மை நிகழ்கிறது.

மன்னிப்பதால் மனம் மற்றும் உடல் இவற்றில் நிகழும் வேதியியல் மாற்றங்களை ஆழமாகப் புரிந்து கொண்டால் அதைப் பற்றி ஒரு புதிய பார்வை கிடைக்கும். அப்போது மன்னிப்பின் மாண்பை உணர்வோம்.

மன்னிப்பு : உடலும் - மனமும் :



கொஞ்சம் கவனமாகப் பார்ப்போம். ஏமாற்றப்பட்டது தெரிய வரும்போது மனதில் என்ன விதமான உணர்வுகள் ஏற்படுகிறது?

கோபம் கொந்தளிக்கும். அந்த எண்ணம் நினைவில் எழும் போதெல்லாம் மன அமைதி கெடும். மனப்பதற்றம் தொடரும். பழி வாங்கும் உணர்வு மேலிடும். தீமை செய்தவர்க்குத் தீங்கு நேரிட வேண்டுமென மனம் துடிக்கும். கவனம் சிதறும். தன்னிரக்கம், சுயபச்சாதாபம் மிகும். தனிமையை விரும்பும். இயல்பாகப் பணி செய்ய முடியாது.

இந்த கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை எண்ணங்கள் உடலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது?

இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத்தின் படபடப்பு கூடும். உடல் சோர்வாகும். நா வறளும். தலைவலி ஏற்படும். உணவு பிடிக்காது. தனிமையை விரும்பும். எதிலும் ஈடுபாடு இருக்காது. ஒரு வித வெறுமை மனதை ஆக்கிரமிக்கும். கண்ணீரும் சோகமும் தொடர்கதையாகும்.

இந்த மாய உணர்வுகளைச் சரியாகக் கையாளாவிட்டால் அவை மனதில், உடலில், நடத்தையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஏமாற்ற உணர்வுகளிலிருந்து மீளாவிடில் அது மனச் சோர்வு, உறக்கமின்மை, இதய நோய், பக்க வாதம், மூல நோய், சர்க்கரை வியாதி என உடல் உபாதையாக மாறும். நோயெதிர்ப்பு திறனை வெகுவாகக் குறைத்து விடும். சமூக கூட்டுறவை விட்டு விலகத் தூண்டும். பணித்திறனை இழக்கச் செய்யும்

மன்னிக்காத தன்மை மனம், உடல் இரண்டையும் கூடுதலாகப் பாதிக்கும்.


மன்னிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :




மன்னிப்பதால் மனதில், உடலில் நிகழும் வேதியியல் மாற்றங்களைத் தெரிந்து கொண்டால் மிக ஆச்சரியமாக இருக்கும். மாற்றங்களின் விளைவுகள் சில :
  • எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுதலை.
  • கோபம் நீங்கும். 
  • மனப் பதற்றம் நீங்கும்.
  • மன அழுத்தம் சீராகும்.
  • மனச் சோர்வு அகலும்.
  • மன அமைதி.
  • நல்ல உறக்கம்.
  • நிதர்சனம் மெல்லப் புரியும்.
  • மன வலிமை அதிகரிக்கும்.
  • எதிர்பார்ப்பு குறையும்.
  • சூழல் மாறும் எனும் புதிய நம்பிக்கை பிறக்கும். 
  • நன்றாக இருக்கிறேன் எனும் பாதுகாப்புணர்வு கிடைக்கும்.
  • முடக்கத்திலிருந்து விடுதலை.   
  • புதிய வாய்ப்புகளைத் தேடுதல்.. 
  • உண்மையான நட்பை அடையாளம் காணுதல்.
  • உடலில் உயர் இரத்த அழுத்தம் குறையும். 
  • இதயம் வலிமை பெறும். 
  • நோயெதிர்ப்பு திறன் கூடும்.   
மன்னிப்பதால் கிடைக்கும் இந்த நல் உணர்வுகளை நன்கு மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.

எது மன்னிப்பு? 



"இது எனக்கு நிகழ்ந்து விட்டது. இதை நான் பொறுமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்தச் சூழல் சகிக்க முடியாத வேதனை தான். எனினும் இதிலிருந்து விடுபட்டு எனது வாழ்வைத் தொடரப் போகிறேன். இதற்காக நான் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. இது ஏன் நிகழ்ந்தது எனும் காரண காரியங்களை நிதானமாகப் புரிந்து கொள்ள முயல்வேன். இது ஒரு வாழ்க்கைப் படிப்பினை. இவ்விதம் மீண்டும் நிகழாதவாறு எச்சரிக்கையாக இருப்பேன். ஒரு போதும் இவ்விதமாகப் பிறரை ஏமாற்றமாட்டேன். ஏனெனில் இதன் வலி எனக்குத் தெரியும். இந்த நிதர்சனத்தைப் புரிவது தான் எனது உடலுக்கும். மனதுக்கும் நல்லது. துரோகத்தை நினைக்கும்போது ஆவேசம் வருகிறது. அவர்களும் இவ்விதம்  வேதனை அனுபவிக்க வேண்டும் என மனம் துடிக்கிறது. ஆனால் தீய உணர்வுகள் ஒருபோதும் நன்மை தராது. மனதாலும் பிறர்க்குத் தீங்கு எண்ணுதல் கூடாது. கோபம், எரிச்சல், பகையுணர்வு முற்றிலும்  பயனற்றது. எனவே நான் மன்னிக்கிறேன்."

இவ்விதம் ஆழ்ந்த உண்மைகளைப் புரிந்த மனநிலையில் ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட தனிப்பட்ட அநீதியைத் திருப்பித் தாக்காது பொறுத்துக் கொள்வதே மன்னிப்பு.

எது மன்னிப்பில்லை?





தீங்கு நடந்தும் "எனக்கு ஒன்றும் ஆகவில்லை" என எதுவுமே நடக்காதது போலத் தீமை செய்தவரோடு மீண்டும் சகஜமாகப் பழகுதல் மன்னிப்பு இல்லை. தொடர்ந்து தவறுகள் செய்பவருடன் அனுசரித்துப் போவது மன்னிப்பு இல்லை

இவ்விதம் நடப்பது பெருந்தன்மை என்பது தவறான புரிதல். இத்தகைய "தாராள மனநிலை" தீமை செய்தவரைத் தொடர்ந்து தவறு செய்யும்படி ஊக்கப்படுத்தும்.

தீயவர் செய்த தவற்றைச் சுட்டிக் காண்பிக்க வேண்டும். அவர் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர் தமது தவற்றை உணர்ந்து மனம் வருந்தினால் மீண்டும் சேரலாம். அது ஒப்புரவாகுதல்.

ஆனால் தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்துபவருடன் தொடர்ந்து  சிநேகம் பாராட்டுவது மன்னிப்பல்ல. அது பொருளற்றது.

தெரிந்தும் திருந்த மறுப்பவரை  மாற்றவோ, புரிய வைக்கவோ கடும் முயற்சி எடுப்பது வீண் வேலை. அந்தச் சூழலில் அமைதியாக விலகி நிற்பது நல்லது. காலம் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் கற்றுக் கொடுக்கும்.

அன்பு செலுத்துங்கள். மன்னியுங்கள். ஆனால் தீயவர் நட்பு என்றும் வீழ்ச்சியை அளிக்கும். தீமையை விட்டு விலகியிருக்க வேண்டும்.

மன்னிப்பைச் சொல்ல வேண்டுமா?




மன்னித்தல் என்பது இறைவனுடன் ஆன்மா நிகழ்த்தும் உரையாடல்.

மன்னியுங்கள். உங்கள் பணியை நேர்மையாகத் தொடருங்கள். பொறுமையாகக் காத்திருங்கள். அவர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யுங்கள். அவர்களை மனதார வாழ்த்துங்கள். ஒரு நாள் தவறிழைத்தவர் உணர்வு அடைவர்

தாங்கள் செய்தது தவறு என்றே உணராதவரிடம் போய் மன்னித்துவிட்டேன் என்று சொல்வது பரிதாபம். திருந்த மறுப்பவரிடம் மன்னித்து விட்டேன் எனச் சொல்வது அர்த்தமற்றது.

ஏமாற்றியவரிடம் சென்று சொல்வதால் மன்னிப்பு முழுமையாவதில்லை. தவறு செய்தவர் அதை உணரும்போதே மன்னிப்பு பரிபூரணமாகிறது. அதுவே வாழ்வின் ஓர் அற்புதமான தருணம்.

உண்மை, பொய் இரண்டையும் மறைக்க முடியாது. அது ஓர் நாள் வெளியரங்கமாகும். அப்போது உங்களது மன்னிப்பின் மாண்பு வெளிப்படும்.

மன்னிப்பின் பாதை : 




மன்னித்தல் என்பது ஓர் தெய்வீக பண்பு. அதைக் கடைப்பிடிப்பது எளிதானதல்ல. நீடிய பொறுமை தேவை. மன்னிப்பை உறுதிப்படுத்த ஓர் வழி.

கடிதம் ஒன்றை எழுதுவோம். அதை யாருக்கும் காண்பிக்கத் தேவையில்லை. எதிர்பார்ப்புகளைப் பட்டியலிடுவோம். ஏமாற்றங்களைப் பதிவு செய்வோம். நமது குற்றங்களை ஆராய்வோம். செய்த சில தவறுகள் கண்ணீர் சிந்த வைக்கும். கண்ணீர் தீமையை அழிக்கும்.  இதயத்திலிருந்து எழும் எண்ணங்களை, உணர்வுகளை  அதில் கொட்டி விட வேண்டும். எதையும் மனதில் சுமக்க வேண்டாம். மறைக்கவும் வேண்டாம். எவை வலி ஏற்படுத்துகிறது? எதனால் வெகுண்டு எழுகிறோம்? எதை மறக்க முடியாது தவிக்கிறோம்?  திரும்பத் திரும்ப நினைவில் எழும்பி எவை வாட்டுகிறது? இவை ஒன்று விடாமல் எழுத வேண்டும். எழுதியதை மீண்டும் வாசித்துப் பார்த்தால் நம் கோப உணர்வை எவைத் தூண்டுகிறது எனப் புரியும்.

இப்போது காகிதத்தை எரித்து விடலாம். கோபத்தைத் தூண்டும் உணர்வு மீண்டும் எழுந்தால் அது நமக்கு முன்பே தெரியும் என மனதிடம் சொல்லுங்கள். மனம் சிறிது நேரத்தில் அமைதியாகிவிடும். புரிந்து கொள்ளப்பட்ட உணர்வுகளுக்கு வீரியம் அவ்வளவுதான்!.

மன்னிப்பும் காலமும் :


பயணத்தில் தவறுதலாக மிதித்து விட்டவரை விரைவாக மன்னித்து விட முடியும். ஆனால் ஓர் பாலியல் துன்புறுத்தலை அவ்வளவு எளிதாக மன்னித்து விட முடியாது. மனக் காயத்தின் ஆழத்திற்கேற்ப வலியும் இருக்கும்.

சில துரோகங்களைக் கஷ்டப்பட்டு மன்னித்து விடலாம். ஆனால் எளிதில் மறக்க முடியாது. ஆயினும் ஒருபோதும் பகையுணர்ச்சி வேண்டாம். பழி வாங்கும் உணர்வுக்கு இடம் கொடாது இருங்கள். அது மனதைக் காயப்படுத்தும். தீர்ப்பை அளிக்க வேண்டாம்.

சில கசப்பான நினைவுகள் மறைய காலம் பிடிக்கும். மன்னித்து விட்டாலும் மறக்க காலம் ஆகும். சில சமயம் மனதில் நம்மை மீறி ஆவேச கோப உணர்வுகள் எழும். ஏமாற்றுபவரைத் தண்டிக்கும் உணர்வு எழும். அது இயல்பானது. அதற்கு வருந்த வேண்டாம். உணர்வுகளால் மனதைக் காயப்படாது வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். காலம் ஒன்றே மாமருந்து.

ஏமாற்றியவரைத் தண்டிக்க இன்னும் ஓர்  சிறந்த வழி உள்ளது. தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டுங்கள். ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து காண்பிப்பதே அவர்களுக்கு அளிக்கும் சிறந்த தண்டனை.

இறுதியாக இறையருள் உதவியுடன் மன்னியுங்கள். மனதை ஒருமுகப்படுத்தி மன சஞ்சலங்களிலிருந்து மீண்டு வாருங்கள். அது மிகச் சிறந்த முடிவு.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge. 

திங்கள், 25 மே, 2020

1. கடவுள் வாழ்த்து

திருவடி சரணம்.

(அறத்துப்பால்  - 1. கடவுள் வாழ்த்து)



மையக் கருத்து : 

இறைவனது உயர்ந்த குணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே  ஞானம். அவரது தூய  பண்புகளை உணர்ந்து அன்புடன் பணிந்து வணங்க வேண்டும். அதுவே பக்தி. அவரது திருவடிகளைச் சரணடைய வேண்டும். அதுவே பயன் நிறைந்த வாழ்வு.  

கருத்து சுருக்கம் :

இறைவன் உலகம் அனைத்திற்கும் முதன்மையானவர். பேரறிவுடைய அவரைப் புரிந்து பணிந்து வணங்குவதே நல்லறிவு. மலர்ந்த உள்ளம் அவர் இருப்பிடம். அவருக்குப் பிடித்தவர், பிடிக்காதவர் எனும் பாரபட்சம் கிடையாது. அவர் ஈடு இணையற்றவர். 

இறைவன் திருவடிகளில் தஞ்சமடைந்தால் புகழ் நிறைந்த பெருவாழ்வு அமையும். பிறவித் துன்பம் நீங்கும். இன்ப, துன்ப உணர்வுகள் பாதிக்காது. தீய உணர்வுகளின் தூண்டுதலில் சிக்காமல் விலகிப் பாதுகாப்பாக வாழ முடியும். மனக்கவலை நீங்கும். வாழ்க்கையில் கரையேற முடியும். பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க முடியும்.

சிறப்புச் சொற்கள் :

வாலறிவன் - பேரறிவு உடையவர்.
மலர்மிசை - மலரின் கண். (மையம்)
இருள்சேர் - அறியாமை
ஆழி - கடல்
எண்குணத்தான் - எட்டு குணங்கள் :
1. அளவற்ற அறிவு, 
2. அளவற்ற இன்பம், 
3. அளவற்ற காட்சி, 
4. அளவற்ற வலிமை, 
5. உறவின்மை, 
6. பெயரின்மை, 
7. காலமின்மை, 
8. அழிவின்மை.

*******   *******   *******


1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

"அ" எனும் ஓசை ஒலித்தே அனைத்து முதல் எழுத்துக்களும் துவங்கும். அதுபோல இவ்வுலகின் படைப்புகள் அனைத்தும் இறைவனிலிருந்தே துவங்குகின்றன.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்

பேரறிவுடைய இறைவனது திருவடிகளைப் புகழ்ந்து வணங்காவிடில் படித்து அடைந்த அறிவால் என்ன பயன்?

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்

மலர்ந்த உள்ளத்தில் இறைவன் அமர்ந்திருக்கிறார். அந்த திருவடிகளைச் சரணடைந்தவர் நீடித்த நிலை வாழ்வு அடைவர்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல

இறைவனுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது. பாரபட்சம் இல்லாதவர். அவரது திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.. 

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

இறைவனது பண்புகளைப் புரிந்து அதினிமித்தம் அன்பு செலுத்துங்கள். அப்போது அறியாமையால் ஏற்படும் இன்பம், துன்பம் ஆகிய இரு உணர்வின் விளைவுகளும் பாதிப்பை ஏற்படுத்தாது.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார்

கண், செவி, நாசி, வாய் மற்றும் உடல் இவை மனதின் ஆசை உணர்வைத் தூண்டும் கருவிகள் ஆகும்.  

இறைவனுக்கு உண்மையான மனவுறுதியுடன் கீழ்ப்படிந்தவர் தீய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மேன்மையான நிலையை அடைவர்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

இறைவன் ஈடு இணையற்றவர். அவர் திருவடிகளைச் சரணடைந்து இடைவிடாமல் நினைப்பவருக்கு மனக்கவலை அரிக்காது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது

அறம் என்பது கடல்.  இறைவனின் திருவடி படகு. சரணடைந்தவர் அல்லாத மற்றவர்களால் இக்கடலைக் கடக்க முடியாது.

9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை

உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஐந்து உறுப்புகளால்  பயனில்லை. அவ்விதம் எட்டு குணங்களை உடைய இறைவனது திருவடிகளை வணங்காதவரின் அறிவும் பயனற்றது.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

இறைவனது திருவடியைச் சரணடைந்தவரே பிறவியாகிய சமுத்திரத்தை நீந்திக் கடக்க முடியும். அவர் துணையைச் சேராதவர் கடலில் மூழ்கி ஆழ்வர்.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

வெள்ளி, 22 மே, 2020

இமயத்தை வென்றவர்

அருணிமா சின்ஹா.
(Arunima Sinha)

வாழ்க்கை புதிரானது. சவால் நிறைந்தது. எதிர்பாரா தருணத்தில் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிகழ்வுகளைச் சந்திப்போம்.. நினைத்தும் கூடப் பார்க்காத இழப்புகள் வாழ்க்கையை முடக்கும். கோர விபத்துக்கள் வாழ்வைச் சிதைக்கும். அத்தகைய பேரிடர் சூழலில் மனம் சோர்ந்து போகாமல் துணிவுடன் எதிர்கொண்டு  மீள்பவர்கள் சாதனையாளர்களாக மிளிர்வர். அவர்கள் மனம் உடைந்து தடுமாறுபவர்க்கு வழிகாட்டும் ஆதர்ச சக்தியாகவும் மாறுவர்.

அருணிமா சின்ஹா, 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி  உத்திரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் பிறந்தார். சட்டம் பயின்றவர். தேசிய கைப்பந்து வீராங்கனை.

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் 12ம் தேதி CSIF பாதுகாப்புப் படையின் தேர்வில் கலந்து கொள்வதற்காகப் பத்மாவதி இரயிலில் லக்னௌலிருந்து டெல்லி நோக்கிப்  பயணப்பட்டார். அந்தப் பயணம் அவரது வாழ்க்கையையே தடம் மாற்றப் போகிறது என அப்போது அவர் அறியவில்லை.

அந்த துயரமான சம்பவம் ஓடும் இரயிலில் தீடிரென அரங்கேறியது. சில வழிப்பறிக்  கொள்ளையர்கள் அவரைத் தாக்கி கைப்பையையும், கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையையும் பறிக்க முயன்றனர்.

அந்த நிகழ்வை அவர் நினைவு கூறும்போது

"நான் முழு வலிமையுடன் அவர்களை எதிர்த்துப் போராடினேன். அவர்கள் என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். மிதிக்கப்பட்டு ஓடும் வண்டியிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன். அடுத்த இணைத் தண்டவாளத்தில் விழுந்தேன். என்னால் கொஞ்சம் கூட அசைய முடியவில்லை. அந்த எதிர் பாதையில் இரயில் வருகிறது. நான் எழுந்து தப்பிக்க முயன்றேன். என்னால் இயவில்லை. முழு பலத்துடன் புரண்டு விழுந்தேன்.  ஒரு நொடியில்  எதிர்புறம் வந்த இரயிலின் சக்கரங்கள் எனது இடது காலின் மேல் ஏறிச் சுற்றிச் சுழன்று சென்றது."




ஓர் தேசிய வீராங்கனைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நாடு கொதித்தது. கடும் கண்டனம் எழுந்தது. இந்திய விளையாட்டுத் துறை இந்த விபத்திற்குக் கருனை தொகையாக இருபத்து ஐந்தாயிரம் இழப்பீடு கொடுத்தது. பின்பு அந்த உதவித் தொகை இரண்டு இலட்சம் என உயர்த்தப்பட்டது.

அடுத்த சோதனை காவல் துறை வடிவில் வந்தது. இந்த விபத்தை ஒரு தற்கொலை முயற்சி எனக் காவல் துறைப் பதிவு செய்தது. அருணிமா இந்தப் பொய்க் குற்றச்சாட்டிற்கு எதிராகவும் போராடினார். இதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜந்து இலட்சம் இழப்பீடு வழங்கவும், உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்கவும், அரசுப்பணி அளிக்கவும் உத்தரவிட்டது.

2011ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு மாதம் சிகிச்சை தொடர்ந்தது. அவரது துண்டிக்கப்பட்ட இடது காலில்  கம்பியுடன் இணைக்கப்பட்ட செயற்கை கால் பொருத்தப்பட்டது. வலது காலின் முறிவு, முதுகு தண்டுவடத்தின் காயங்கள் குணப்படுத்தப்பட்டது.

அவரால் சுற்றி இருப்பவர்களின் பரிதாப பார்வையை எதிர் கொள்ள முடியவில்லை. எதுவும் தனித்துச் செய்ய இயலாத இயலாமை வாட்டியது. காலை இழந்த வேதனையைவிடப் பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்க்கதியான சூழல் மனதில் ஆழ்ந்த வலியை ஏற்படுத்தியது. அந்த கழிவிரக்கத்தைத் துடைத்து வீசிட விரும்பினார். மனதில் ஓர் தீர்மானம் உதித்தது. தனது சுயமதிப்பைக் காத்திட உறுதி பூண்டார். ஓர் மாபெரும் கனவு பிறந்தது. அது "ஒற்றைக் காலுடன் இமயத்தின் சிகரத்தை மிதிக்க வேண்டும்" எனும் தீர்க்கமான இலக்கு.

2011ம் ஆண்டிலேயே இந்தியாவின் மதிப்புமிக்க பெண் மலையேற்ற நிபுணர் பச்சேந்திரி பால் (Bachendri Pal) அவர்களைத் தொடர்பு கொண்டார். தனது கதையை விவரித்தார்.

பச்சேந்திர பாலின் மறுமொழி அற்புதமானது.

"என் அன்பு குழந்தை, இந்தச் சூழலிலும் ஒற்றைக் காலுடன் இமயத்தின் சிகரத்தைத் தொட்டுவிடத் தீர்மானித்து விட்டாய். நீ நிச்சயம் ஒருநாள் மலையில் ஏறுவாய். சிகரத்தைத் தொடுவாய். அது எந்த தேதியில் என்பதை மட்டும் அறியவே இந்த உலகம் காத்திருக்கிறது."


அருணிமா உத்தரகாசியில் உள்ள TSAF (Tata Steel Adventure Foundation) இல் பயிற்சி பெற இணைந்தார். செயற்கை காலுடன் கடும் பயிற்சி. விடா முயற்சி தொடர்ந்தது.  பலமுறை சறுக்கி விழுந்தார். மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்ட அனுபவங்கள் நேர்ந்தது. காயங்கள் ஏற்பட்டது. இந்தப்பயிற்சி காலம் கடுமையாக இருந்தது. ஆனால் எதுவும் அவரது மன உறுதியையும் தீர்மானத்தையும் அசைக்க முடியவில்லை.

2012ம் ஆண்டில் 6150 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த Island peak எனும் உயரத்தைத் தொட்டார். அதே ஆண்டிலேயே அருணிமா, சூசனுடன் (Susan Mahot) இணைந்து சேஷர் சங்கிரியா (Chaser Sangriya) எனும் 6,622 மீட்டர் உயரத்திலிருந்த மலைச் சிகரத்தைத் தொட்டார்.

2013ம் ஆண்டு எவரெஸ்ட்டை நோக்கிய அவரது சாகச பயணம் துவங்கியது. 17 மணி நேர நீண்ட பயணம். சிகரத்துக்கு அருகில் நெருங்கிய தருணத்தில் மீண்டும் சோதனை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை. உடன் பயணித்தவர் ஆபத்தைக் கூறி எச்சரித்தார். இப்போது மலையேற்றத்தை முடித்து திரும்புவோம். மீண்டும் மற்றொரு முறை முயலலாம் என ஆலோசனை கொடுத்தார். அருணிமா அதை ஒப்புக் கொள்ளவில்லை. மனவுறுதியுடன் அஞ்சாது முன்னேறினார். அடுத்த இரண்டு மணி நேரத்தில், மே மாதம் 21ம் தேதி காலை 10.55 மணியளவில் எவரெஸ்ட் அவரது காலின் கீழ் இருந்தது.


அந்த மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றிக் கூறும்போது,

"என் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சாதித்து விட்டேன். அதை முழு உலகத்துக்கும் கேட்கும்படி கத்த வேண்டும் போல இருந்தது".

ஒரு துணியில் "கடவுளுக்கு நன்றி" எனக் கைப்பட எழுதி அதைப் பனிப் பாறையில் பதித்தார். இந்தச் சாதனையை இறைவனுக்கும்  தனது வாழ்வின் குருவாக ஏற்றுக்கொண்ட சுவாமி விவேகானந்தருக்கும் அர்ப்பணித்தார்.

உலகின் உயரமான மலைகளிலும் அவரது சாகச பயணம் தொடர்ந்தது. ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ (Kilimanjaro), ஐரோப்பாவின் எல்பிருஸ் (Elbrus), ஆஸ்திரேலியாவின் கொஸ்கியஸ்கோ (Kosciuszko), அர்ஜெண்டினாவின் அக்கன்கஹுவா (Aconcagua), இந்தோனேஷியாவில் கர்டென்ஸ் (Carstensz Pyramid) கொடுமுடிகளைத் தொட்டார்.

2019ம் ஆண்டில் ஜனவரி முதல் தேதி அன்டார்டிகாவில் உள்ள வின்ஸன் (Mount Vinson) சிகரத்தையும் தொட்டார்.



2014ம் ஆண்டில் இவரது சுயசரிதை "Born again on the Mountain" (மலை உச்சியில் மறுபிறப்பு) வெளியானது.

2015ம் ஆண்டு பத்மஸ்ரீ  விருது வழங்கப்பட்டது. "Tenzing Norway Highext Mountaineering award" ம் அளித்துக் கவுரவிக்கப்பட்டார். 2016ம் ஆண்டில் Limca Book of Records அவரை "People of the Year" பட்டியலில் இனைத்தது. "Malala Award", "Yash Bharat Award" "Rani Laxmi Bai Award" என விருதுகள் அவரைத் தேடி வந்தன.


உ.பி அரசு "அருணிமாவின் கடின உழைப்பு, விடா முயற்சிக்கு முன் இமயமும் பணிந்தது" எனப் பாராட்டி ஊக்கத் தொகையாக  25 இலட்சம் ரூபாய் பரிசாக அளித்தது. பாராட்டு மழை குவிந்தது.

அருணிமாவின் தரிசனம் விரிவடைந்தது :

"நான் எனது கனவுகளை அடைந்து விட்டேன். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டு வாழும் ஏழை ஊனமுற்ற குழந்தைகளின் கனவுகளை நனவாக்க உழைக்க விரும்புகிறேன். அவர்களும் பரிதாபமான பார்வையிலிருந்து விடுபட்டு சுய மதிப்புடன் வாழவேண்டும்" .

அவர்களுக்காக "Shaheed Chandra Shekhar Vikalang Khel Acadamy" எனும் இலவச விளையாட்டுப் பயிற்சி அமைப்பை நிறுவினார். தனது பரிசு, சுய முன்னேற்ற ஊக்கமளிக்கும் கருத்தரங்குகளில் பேசுவதால் கிடைக்கும் வருமானம் என முழுவதையும் அதன் வளர்ச்சிக்காக அளித்தார்.

ஒரு விபத்தால் உடலை ஊனமாக்க முடியும். ஆனால் கனவை முடக்க முடியாது. அவரது ஆன்மாவின் உற்சாகத்தை எந்த எதிர்ப்புகளாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

வாழ்வை நொறுக்கிப் போடும் மன வலியிலிருந்து மீள்வதே ஓர் சாதனை. அத்துடன் அதே வித வலியை அனுபவிக்கும் துயருற்றவரின் கண்ணீரைத் துடைப்பதையும், அவர்கள் கனவை நனவாக்க உழைப்பது எனத் தனது வாழ்வை அர்ப்பணிப்பதும் மாபெரும் சாதனை.

உயர்ந்த சாதனைகள் வலிகளாலே அடையப்படுகிறது. சிறந்த வரலாறுகள் அர்ப்பணிப்பாலே எழுதப்படுகிறது.  அவை காலம் கடந்தும் பேசப்படுகிறது. நிலைத்தும் நிற்கிறது.

*******   *******   *******


Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

செவ்வாய், 19 மே, 2020

பரிவுடன் கூர்ந்துக் கேட்டல்

Empathetic Listening.



குழந்தைப் பருவத்திலிருந்தே "பேசுவதற்கு" (Speaking)  சொல்லித் தரப்படுகிறது. "எழுதுவதற்கு" (Writing) கற்கிறோம். "வாசிக்க" (Reading) பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் ஒருவர் பேசுவதை எப்படி"கவனித்துக் கேட்பது" (Listening) என்பதை முறையாக கற்பதில்லை.

கேட்பது ஒரு கலை. ஒரு கருத்தைக் கேட்பதன் மூலமும் புரிந்து கொள்கிறோம். சரியாகப் புரிந்து கொள்வது என்பது உணர்வுகள் சார்ந்தது.

ஒவ்வொரு உணர்வும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அலட்சியமாகக் கேட்பது தவறான புரிதலை ஏற்படுத்தும். மனதில் முன்முடிவுகளுடன் கேட்பது உண்மையை உணரவிடாமல் செய்துவிடும். சார்பு நிலையோடு கேட்பது பொய்யை உண்மையென நம்பவைத்து மோசம் போக்கும். பொறுப்பில்லாமல் கேட்பது காலத்தை வீணடிக்கும்.

தவறான புரிதல் தேவையற்ற சிக்கலை  உருவாக்கும். உறவைச் சீர்குலைக்கும். முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கும். முன்னேற்றத்தைத் தடுக்கும். மன அமைதியை இழக்கச் செய்யும்.

குறைவாகப் பேசி அதிகமாகக் கவனிப்பது வெற்றிக்கு உதவும். கேட்பதில் ஓர் உயர்நிலை தான் "பரிவுடன் கூர்ந்து கேட்பது". இந்தச் சிறிய கட்டுரை "பரிவுடன் கூர்ந்து கேட்டல்" பற்றியதொரு ஓர் எளிய அறிமுகம்.

இந்தச் சிந்தனைகள் மனதில் விருப்பங்களாகப் பதிய வேண்டும். வெறும் வாசிப்பு உதவாது. உடனே மறந்து விடும். இந்த பண்பைப் புரிந்து கொண்டு கடைப்பிடித்தால் வீட்டில், பணியிடத்தில், நட்பில், உறவுகளை மேம்படுத்திக்கொள்ள அது உதவும்.


I. பரிவுடன் கவனமாகக்  கேட்பது என்றால் என்ன? 


ஒருவர் பேசும்போது அவரது மன உணர்வு நிலையைக் கவனத்துடன் புரிந்து கொண்டு, உரையாடலை அக்கறையுடன், ஆதரவாகக் கேட்பதை "பரிவுடன் கூர்ந்து கேட்டல்" (Empathetic Listening) எனலாம். 

கரிசனையுடன் கேட்பதின் நோக்கம், பகிர்ந்து கொள்பவரை "குறைகூறுவது"' "விமர்சிப்பது", "ஆலோசனை சொல்வது" என்பதற்காக அல்ல. மாறாக "ஆதரவு தெரிவித்தல்", "ஊக்குவித்தல்", "தீர்வை காண உதவுதல்" எனும் அக்கறை மனப்பாங்கு ஆகும்.

உதாரணமாகப் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தனது சொந்த ஊருக்குச் செல்லும் முனைப்புடன் தவித்துப் பேசும்போது அவரின் மனநிலையிலிருந்து அதைக் கேட்பது பரிவுடன் கூர்ந்து கேட்டல் ஆகும். இந்த துயருக்குச் சூழலைக் குறை கூறுவது தீர்வல்ல. அவருக்குத் தேவை உதவி. ஆலோசனை அல்ல. நம்பிக்கை. விமர்சனத்தை விட நடவடிக்கை முக்கியமானது.



II.பரிவுடன் கூர்ந்து கேட்கும் திறனை மேம்படுத்த :


1.  கவனம் :

ஒருவர் பேசுவதை முழு கவனத்துடன் கேட்க வேண்டும். உடல் மட்டும் அமர்ந்திருக்கச் சிந்தனைகள் வேறு பக்கம் பறந்தால் பேசுபவர் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முடியாது. கவனச் சிதறல் இருக்கக் கூடாது. அக்கறையின்றி கேட்கக்கூடாது.

பதில் சொல்வதற்காகக் கேட்பது தவறு. உரையாடலில் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும். உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்காகக் கேட்க வேண்டும்.

2. பரிவு :

பேசுபவரின் உணர்வுகளை அக்கறையுடன் புரிந்து கொண்டு கேட்க வேண்டும். ஓர் துயரம் நிறைந்த சூழலில் பகிரப்படும் உணர்வுகளை அசிரத்தையாகக் கேட்பது என்பது தவறு. அது ஓர் அலட்சிய மனோபாவம்.

ஒவ்வொருவருக்கும் துயரங்கள் ஏற்படுத்தும் வலியுணர்வு ஒன்றே. காரணங்கள் வேறுபடலாம். வலியின் அளவும் மனநிலைக்கேற்ப மாறுபடும். ஆனால் வேதனை உணர்வு பொதுவானது.

ஒருவர்  அனுபவிக்கும் வேதனையான சூழல் நமக்குப் பரிச்சயம் இல்லாதிருக்கும். எனினும்  நாம் அனுபவித்த வேறு ஓர் துயரத்துடன் அதனுடன்  ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாகப்  புற்றுநோயின் வலியை நேரிடையாக அனுபவிக்காது இருக்கலாம். ஆனால்  அது நாம் மிக நேசித்த பிரியமானவரின் இழப்பின் வலிக்கு ஒப்பாக இருக்கலாம்.

சொல்பவரின் வலியை நாம் அனுபவித்த வேதனையோடு பொருத்திப் பார்த்துக் கேட்க வேண்டும். பரிவுடன் கேட்பதில் வலியை உணர்வது முக்கியம்.

3. ஞானம் : 

ஒருவர் தான் அனுபவிக்கும் துயரை நம்பிக்கை அடிப்படையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஓர் சரியான தீர்வை நமது புத்தி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தருவோம் என்று அதைச் சொல்கின்றார்.

ஞானம் என்பது சொல்பவரின் சிக்கலைப் பரிவுடன் முழுமையாகக் கேட்பது மட்டுமல்ல. அத்துடன் நிதர்சனத்தைப் புரிந்து கொள்வதுமாகும்.

உதாரணமாக ஒரு நபருக்கு வேலை பார்க்கும் பிரிவில் உடன் பணிபுரிபவருடன் வாக்குவாதம் வருகிறது. இதில் பரிவுடனும் கேட்க வேண்டும்.  ஆனால் அதே சமயம் மற்ற நபரின் கருத்தையும் கேட்க வேண்டும்.  இரு பக்கத்து விளக்கத்தையும் கேட்டுத்  தீர்வை காண முயல வேண்டும்.

4. நியாயம் தீர்க்கக் கூடாது :

சில கருத்துக்களில் பொதுவான உடன்பாடு இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஓர் அபிப்பிராயம் உண்டு. எனினும் மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்.  எதிர்த்துக் கூச்சலிட்டு அடக்கக்கூடாது. அவரைக் குற்றம் சொல்லித் தீர்ப்பளிக்கக் கூடாது. தான் சொல்வது மட்டுமே சரி என்பது ஓர் சுய நீதி. அது பெருமையின் வெளிப்பாடு. ஒருவேளை தான் நம்புவது சரியாக இருந்தாலும் அதை எதிர்ப்பவரும் புரிந்துகொள்ளக் கால அவகாசம் கொடுப்பது நல்லது.

கால ஓட்டத்தில் சிந்தனைகள் மாற்றமடையும். அனுபவங்கள் தெளிவைத் தரும். மாற்றுக் கருத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  இந்த பரிவு மனநிலை  உறவுகளில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தும். 

5. இரகசியங்களைப் பாதுகாத்தல் :

பரிவுடன் கேட்பதில் முக்கியமானது இரகசியத்தைப் பாதுகாத்தல். நம்பிக்கை அடிப்படையிலேயே உணர்வுப்பூர்வமாகத்  தனிப்பட்ட செயல்கள் பகிரப்படுகிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும்.

ஒருவர் பகிர்ந்த அந்தரங்க தகவலைப் பேச்சின் சுவாரஸ்யத்திற்காகப் பிறருடன் பேசக் கூடாது. ஒருவரோடு உள்ள நெருக்கத்தைக் காண்பிக்க அவர் தனிப்பட்ட விதத்தில் பகிர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது. தனிப்பட்ட ஆதாயத்திற்காக இரகசியமாகச் சொல்லப்பட்டதைப் பயன்படுத்தக் கூடாது.

ஒரு சிக்கலைத் தீர்க்க உதவும் என்றாலும் பகிர்ந்த நபரின் அனுமதியின்றி இரகசியமாகச் சொல்லப்பட்ட தகவல்களை ஒருபோதும் விவாதத்தில் சொல்லக்கூடாது.

6. பொறுமை :

அச்சத்தில், தவிப்பில், குழப்பத்தில், வெட்கத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தச் சரியான வார்த்தைகள் கிடைக்காது. அந்தரங்க  உணர்வுகளை  நெருங்கிய நட்பிடமும் கூட முழுமையாகப் பகிர்ந்து கொள்ளத்  தயக்கமும் தடுமாற்றம் வரும். எந்த அளவிற்கு நடந்ததைச் சொல்வது எனும் பயம் இருக்கும்.

இச் சூழலில் அந்தரங்க விஷயத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டக் கூடாது. சொல்லத் தயங்கும் அவரது வேதனையான மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். பொறுமையோடு அமைதி காக்க வேண்டும். அவர் பகிர்வது ஓர் தீர்வுக்காக, பொழுதுபோக்குக்காக அல்ல.

7. மறுமொழி :

பரிவுடன் கேட்டல் என்பதில் மறுமொழி மிக முக்கியமானது. நமது கருத்துக்களைச் சொல்ல அவசரம் காட்டக் கூடாது. முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவராக அபிப்ராயம் கேட்கும்வரை அமைதி காப்பது நல்லது. நாம் என்ன நினைக்கிறோம் என அவர் அறிய விரும்பினால் மட்டுமே ஆலோசனை சொல்ல வேண்டும். பல சமயங்களில் உணர்வுகளைக் கொட்டித் தீர்ப்பதற்காக மட்டுமே பகிரப்படுகிறது.

எப்போதும் தீர்வுகளைச் சொல்வதை விட அதற்கான வழிகளைக் காண்பிப்பது மிகச் சிறந்தது. முடிவுகளை அவர்களே எடுக்க உதவ வேண்டும். எந்தவொரு சிக்கலுக்கும் உடனடி முழுமையான தீர்வு கிடைக்காது. காலம் காயங்களை ஆற்றும். சில சூழலில் மறதி ஓர் மாமருந்து.



III.பரிவுடன் கூர்ந்து கேட்பதால் கிடைக்கும் பயன்கள்.


1. உறவுகள் மேம்படும் :

அக்கறையுடன் பேசுபவர்கள் எளிதில் அனைவரையும் கவர்ந்து கொள்வர். அவர்கள் மீதான நம்பிக்கை ஆழமானதாக இருக்கும். 

2. எச்சரிக்கை உணர்வு மிகும் :

பிறரது உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர் எவரையும் காயப்படுத்த மாட்டார்கள்.  உதாரணமாக அலுவலகத்தில் உடன் பணிபுரிபவரை ஒரு குறிப்பிட்ட வார்த்தை காயப்படுத்தும் என்றால் அதை மீண்டும் பயன்படுத்தாமல்  எச்சரிக்கையுடன் தவிர்ப்பர்.

3. திறன் மேம்படும் :

பரிவுடன் கேட்பவர் இருக்கும் இடம் நம்பிக்கை சூழ்ந்திருக்கும். புரிதல் மேம்பட்டுக் காணப்படும்.  முரண்கள் குறையும். துயரத்திலிருந்து உடன் எழுவர். குடும்ப உறவுகளில் ஆறுதலாக இருந்து வழி காட்டுவர். பணியிடத்தில் குழு மனப்பான்மை மிளிரும். பணிச் சுமையாக இருக்காது. உற்பத்தி மிகும். 

4. சிக்கலுக்கு மேம்படுத்தப்பட்ட தீர்வு :

நம்பிக்கை உணர்வு மிகுதியாக இருக்குமிடத்தில் ஒளிவு மறைவு குறையும். விஷயங்களை உள்ளபடியே வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வர். தவறுகளைச் சொல்வதற்குப் பயம் இருக்காது. தயங்காமல் பிரச்சினைக்குரிய காரியங்களைப் பட்டியலிடுவர். எவரையும் குற்றவாளியாக்கும் முயற்சி இருக்காது. இது சிக்கலை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும்.

குழு மனப்பான்மை மிளிர்வதால் பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் பல புதிய அணுகுமுறை வெளிப்படும். மேம்பட்ட தீர்வு கிடைக்கும்.

சுருக்கமாக, நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் பேசுவதைப் பரிவுடன் கேட்பது உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தும். நம்பிக்கையை அதிகரிக்கும். எதிர்ப்பு மனநிலையைத் தணிக்கும். பயம் அகலும். வெளிப்படையாக இருப்பர். உரிமையுடன் பழகுவர். நல்ல நேர்மையான ஆக்கப்பூர்வ சூழலை உருவாகும்.

பிறர் உணர்வுகளைக் கருத்தை மதித்துப் பரிவுடன் கவனமாகக் கேட்போம். மாற்றுக் கருத்து உடையவரிடமும் சண்டையிடாது அமைதியாக விலகி வாழக் கற்றுக் கொள்வோம்.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.