வெள்ளி, 29 மே, 2020

மன்னிப்பின் மாண்பு

 மீள்தல். 



[இந்தக் கட்டுரை Olivia Delong எழுதிய "How to forgive someone, Even when it feels impossible.  Forgiveness is something you do for yourself" எனும் ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தன் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டது.]

மன்னித்தல் நன்மையானது :



ஏமாற்றியவரை மன்னிக்க முடியுமா?
மன்னித்தல் என்றால் என்ன?
மன்னிப்பதால் மனதில் உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது? 
எது மன்னிப்பு?
எது  மன்னிப்பில்லை?
மன்னிப்பைச் சொல்லவேண்டுமா?

இக் கட்டுரை இது போன்ற சில கேள்விகளுக்கு எளிமையான விளக்கம் அளிக்கிறது.

ஏமாற்றுபவர் பல விதம்.

ஓர் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக நடித்து நம்பவைத்து ஏமாற்றுபவர் உண்டு. சுய இலாபத்துக்காக மோசடி செய்பவரைச் சந்தித்திருப்போம். ஆதாயத்திற்காக உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாகப் பொய் பேசுதல் இன்று சர்வசாதாரணம். தனது குறையை மறைப்பதற்காகப் பிறர் மீது பழி போடுதல் உறவுகளில், பணியிடத்தில் எதிர் கொள்கிறோம்.

இப்படிச் செய்பவர்களை மனதார மன்னிக்க முடியுமா?

மன்னிக்க வேண்டும். ஏனெனில் மன்னிப்பதால் அதிக நன்மை நிகழ்கிறது.

மன்னிப்பதால் மனம் மற்றும் உடல் இவற்றில் நிகழும் வேதியியல் மாற்றங்களை ஆழமாகப் புரிந்து கொண்டால் அதைப் பற்றி ஒரு புதிய பார்வை கிடைக்கும். அப்போது மன்னிப்பின் மாண்பை உணர்வோம்.

மன்னிப்பு : உடலும் - மனமும் :



கொஞ்சம் கவனமாகப் பார்ப்போம். ஏமாற்றப்பட்டது தெரிய வரும்போது மனதில் என்ன விதமான உணர்வுகள் ஏற்படுகிறது?

கோபம் கொந்தளிக்கும். அந்த எண்ணம் நினைவில் எழும் போதெல்லாம் மன அமைதி கெடும். மனப்பதற்றம் தொடரும். பழி வாங்கும் உணர்வு மேலிடும். தீமை செய்தவர்க்குத் தீங்கு நேரிட வேண்டுமென மனம் துடிக்கும். கவனம் சிதறும். தன்னிரக்கம், சுயபச்சாதாபம் மிகும். தனிமையை விரும்பும். இயல்பாகப் பணி செய்ய முடியாது.

இந்த கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை எண்ணங்கள் உடலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது?

இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத்தின் படபடப்பு கூடும். உடல் சோர்வாகும். நா வறளும். தலைவலி ஏற்படும். உணவு பிடிக்காது. தனிமையை விரும்பும். எதிலும் ஈடுபாடு இருக்காது. ஒரு வித வெறுமை மனதை ஆக்கிரமிக்கும். கண்ணீரும் சோகமும் தொடர்கதையாகும்.

இந்த மாய உணர்வுகளைச் சரியாகக் கையாளாவிட்டால் அவை மனதில், உடலில், நடத்தையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஏமாற்ற உணர்வுகளிலிருந்து மீளாவிடில் அது மனச் சோர்வு, உறக்கமின்மை, இதய நோய், பக்க வாதம், மூல நோய், சர்க்கரை வியாதி என உடல் உபாதையாக மாறும். நோயெதிர்ப்பு திறனை வெகுவாகக் குறைத்து விடும். சமூக கூட்டுறவை விட்டு விலகத் தூண்டும். பணித்திறனை இழக்கச் செய்யும்

மன்னிக்காத தன்மை மனம், உடல் இரண்டையும் கூடுதலாகப் பாதிக்கும்.


மன்னிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :




மன்னிப்பதால் மனதில், உடலில் நிகழும் வேதியியல் மாற்றங்களைத் தெரிந்து கொண்டால் மிக ஆச்சரியமாக இருக்கும். மாற்றங்களின் விளைவுகள் சில :
  • எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுதலை.
  • கோபம் நீங்கும். 
  • மனப் பதற்றம் நீங்கும்.
  • மன அழுத்தம் சீராகும்.
  • மனச் சோர்வு அகலும்.
  • மன அமைதி.
  • நல்ல உறக்கம்.
  • நிதர்சனம் மெல்லப் புரியும்.
  • மன வலிமை அதிகரிக்கும்.
  • எதிர்பார்ப்பு குறையும்.
  • சூழல் மாறும் எனும் புதிய நம்பிக்கை பிறக்கும். 
  • நன்றாக இருக்கிறேன் எனும் பாதுகாப்புணர்வு கிடைக்கும்.
  • முடக்கத்திலிருந்து விடுதலை.   
  • புதிய வாய்ப்புகளைத் தேடுதல்.. 
  • உண்மையான நட்பை அடையாளம் காணுதல்.
  • உடலில் உயர் இரத்த அழுத்தம் குறையும். 
  • இதயம் வலிமை பெறும். 
  • நோயெதிர்ப்பு திறன் கூடும்.   
மன்னிப்பதால் கிடைக்கும் இந்த நல் உணர்வுகளை நன்கு மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.

எது மன்னிப்பு? 



"இது எனக்கு நிகழ்ந்து விட்டது. இதை நான் பொறுமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்தச் சூழல் சகிக்க முடியாத வேதனை தான். எனினும் இதிலிருந்து விடுபட்டு எனது வாழ்வைத் தொடரப் போகிறேன். இதற்காக நான் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. இது ஏன் நிகழ்ந்தது எனும் காரண காரியங்களை நிதானமாகப் புரிந்து கொள்ள முயல்வேன். இது ஒரு வாழ்க்கைப் படிப்பினை. இவ்விதம் மீண்டும் நிகழாதவாறு எச்சரிக்கையாக இருப்பேன். ஒரு போதும் இவ்விதமாகப் பிறரை ஏமாற்றமாட்டேன். ஏனெனில் இதன் வலி எனக்குத் தெரியும். இந்த நிதர்சனத்தைப் புரிவது தான் எனது உடலுக்கும். மனதுக்கும் நல்லது. துரோகத்தை நினைக்கும்போது ஆவேசம் வருகிறது. அவர்களும் இவ்விதம்  வேதனை அனுபவிக்க வேண்டும் என மனம் துடிக்கிறது. ஆனால் தீய உணர்வுகள் ஒருபோதும் நன்மை தராது. மனதாலும் பிறர்க்குத் தீங்கு எண்ணுதல் கூடாது. கோபம், எரிச்சல், பகையுணர்வு முற்றிலும்  பயனற்றது. எனவே நான் மன்னிக்கிறேன்."

இவ்விதம் ஆழ்ந்த உண்மைகளைப் புரிந்த மனநிலையில் ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட தனிப்பட்ட அநீதியைத் திருப்பித் தாக்காது பொறுத்துக் கொள்வதே மன்னிப்பு.

எது மன்னிப்பில்லை?





தீங்கு நடந்தும் "எனக்கு ஒன்றும் ஆகவில்லை" என எதுவுமே நடக்காதது போலத் தீமை செய்தவரோடு மீண்டும் சகஜமாகப் பழகுதல் மன்னிப்பு இல்லை. தொடர்ந்து தவறுகள் செய்பவருடன் அனுசரித்துப் போவது மன்னிப்பு இல்லை

இவ்விதம் நடப்பது பெருந்தன்மை என்பது தவறான புரிதல். இத்தகைய "தாராள மனநிலை" தீமை செய்தவரைத் தொடர்ந்து தவறு செய்யும்படி ஊக்கப்படுத்தும்.

தீயவர் செய்த தவற்றைச் சுட்டிக் காண்பிக்க வேண்டும். அவர் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர் தமது தவற்றை உணர்ந்து மனம் வருந்தினால் மீண்டும் சேரலாம். அது ஒப்புரவாகுதல்.

ஆனால் தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்துபவருடன் தொடர்ந்து  சிநேகம் பாராட்டுவது மன்னிப்பல்ல. அது பொருளற்றது.

தெரிந்தும் திருந்த மறுப்பவரை  மாற்றவோ, புரிய வைக்கவோ கடும் முயற்சி எடுப்பது வீண் வேலை. அந்தச் சூழலில் அமைதியாக விலகி நிற்பது நல்லது. காலம் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் கற்றுக் கொடுக்கும்.

அன்பு செலுத்துங்கள். மன்னியுங்கள். ஆனால் தீயவர் நட்பு என்றும் வீழ்ச்சியை அளிக்கும். தீமையை விட்டு விலகியிருக்க வேண்டும்.

மன்னிப்பைச் சொல்ல வேண்டுமா?




மன்னித்தல் என்பது இறைவனுடன் ஆன்மா நிகழ்த்தும் உரையாடல்.

மன்னியுங்கள். உங்கள் பணியை நேர்மையாகத் தொடருங்கள். பொறுமையாகக் காத்திருங்கள். அவர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யுங்கள். அவர்களை மனதார வாழ்த்துங்கள். ஒரு நாள் தவறிழைத்தவர் உணர்வு அடைவர்

தாங்கள் செய்தது தவறு என்றே உணராதவரிடம் போய் மன்னித்துவிட்டேன் என்று சொல்வது பரிதாபம். திருந்த மறுப்பவரிடம் மன்னித்து விட்டேன் எனச் சொல்வது அர்த்தமற்றது.

ஏமாற்றியவரிடம் சென்று சொல்வதால் மன்னிப்பு முழுமையாவதில்லை. தவறு செய்தவர் அதை உணரும்போதே மன்னிப்பு பரிபூரணமாகிறது. அதுவே வாழ்வின் ஓர் அற்புதமான தருணம்.

உண்மை, பொய் இரண்டையும் மறைக்க முடியாது. அது ஓர் நாள் வெளியரங்கமாகும். அப்போது உங்களது மன்னிப்பின் மாண்பு வெளிப்படும்.

மன்னிப்பின் பாதை : 




மன்னித்தல் என்பது ஓர் தெய்வீக பண்பு. அதைக் கடைப்பிடிப்பது எளிதானதல்ல. நீடிய பொறுமை தேவை. மன்னிப்பை உறுதிப்படுத்த ஓர் வழி.

கடிதம் ஒன்றை எழுதுவோம். அதை யாருக்கும் காண்பிக்கத் தேவையில்லை. எதிர்பார்ப்புகளைப் பட்டியலிடுவோம். ஏமாற்றங்களைப் பதிவு செய்வோம். நமது குற்றங்களை ஆராய்வோம். செய்த சில தவறுகள் கண்ணீர் சிந்த வைக்கும். கண்ணீர் தீமையை அழிக்கும்.  இதயத்திலிருந்து எழும் எண்ணங்களை, உணர்வுகளை  அதில் கொட்டி விட வேண்டும். எதையும் மனதில் சுமக்க வேண்டாம். மறைக்கவும் வேண்டாம். எவை வலி ஏற்படுத்துகிறது? எதனால் வெகுண்டு எழுகிறோம்? எதை மறக்க முடியாது தவிக்கிறோம்?  திரும்பத் திரும்ப நினைவில் எழும்பி எவை வாட்டுகிறது? இவை ஒன்று விடாமல் எழுத வேண்டும். எழுதியதை மீண்டும் வாசித்துப் பார்த்தால் நம் கோப உணர்வை எவைத் தூண்டுகிறது எனப் புரியும்.

இப்போது காகிதத்தை எரித்து விடலாம். கோபத்தைத் தூண்டும் உணர்வு மீண்டும் எழுந்தால் அது நமக்கு முன்பே தெரியும் என மனதிடம் சொல்லுங்கள். மனம் சிறிது நேரத்தில் அமைதியாகிவிடும். புரிந்து கொள்ளப்பட்ட உணர்வுகளுக்கு வீரியம் அவ்வளவுதான்!.

மன்னிப்பும் காலமும் :


பயணத்தில் தவறுதலாக மிதித்து விட்டவரை விரைவாக மன்னித்து விட முடியும். ஆனால் ஓர் பாலியல் துன்புறுத்தலை அவ்வளவு எளிதாக மன்னித்து விட முடியாது. மனக் காயத்தின் ஆழத்திற்கேற்ப வலியும் இருக்கும்.

சில துரோகங்களைக் கஷ்டப்பட்டு மன்னித்து விடலாம். ஆனால் எளிதில் மறக்க முடியாது. ஆயினும் ஒருபோதும் பகையுணர்ச்சி வேண்டாம். பழி வாங்கும் உணர்வுக்கு இடம் கொடாது இருங்கள். அது மனதைக் காயப்படுத்தும். தீர்ப்பை அளிக்க வேண்டாம்.

சில கசப்பான நினைவுகள் மறைய காலம் பிடிக்கும். மன்னித்து விட்டாலும் மறக்க காலம் ஆகும். சில சமயம் மனதில் நம்மை மீறி ஆவேச கோப உணர்வுகள் எழும். ஏமாற்றுபவரைத் தண்டிக்கும் உணர்வு எழும். அது இயல்பானது. அதற்கு வருந்த வேண்டாம். உணர்வுகளால் மனதைக் காயப்படாது வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். காலம் ஒன்றே மாமருந்து.

ஏமாற்றியவரைத் தண்டிக்க இன்னும் ஓர்  சிறந்த வழி உள்ளது. தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டுங்கள். ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து காண்பிப்பதே அவர்களுக்கு அளிக்கும் சிறந்த தண்டனை.

இறுதியாக இறையருள் உதவியுடன் மன்னியுங்கள். மனதை ஒருமுகப்படுத்தி மன சஞ்சலங்களிலிருந்து மீண்டு வாருங்கள். அது மிகச் சிறந்த முடிவு.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge. 

திங்கள், 25 மே, 2020

1. கடவுள் வாழ்த்து

திருவடி சரணம்.

(அறத்துப்பால்  - 1. கடவுள் வாழ்த்து)



மையக் கருத்து : 

இறைவனது உயர்ந்த குணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே  ஞானம். அவரது தூய  பண்புகளை உணர்ந்து அன்புடன் பணிந்து வணங்க வேண்டும். அதுவே பக்தி. அவரது திருவடிகளைச் சரணடைய வேண்டும். அதுவே பயன் நிறைந்த வாழ்வு.  

கருத்து சுருக்கம் :

இறைவன் உலகம் அனைத்திற்கும் முதன்மையானவர். பேரறிவுடைய அவரைப் புரிந்து பணிந்து வணங்குவதே நல்லறிவு. மலர்ந்த உள்ளம் அவர் இருப்பிடம். அவருக்குப் பிடித்தவர், பிடிக்காதவர் எனும் பாரபட்சம் கிடையாது. அவர் ஈடு இணையற்றவர். 

இறைவன் திருவடிகளில் தஞ்சமடைந்தால் புகழ் நிறைந்த பெருவாழ்வு அமையும். பிறவித் துன்பம் நீங்கும். இன்ப, துன்ப உணர்வுகள் பாதிக்காது. தீய உணர்வுகளின் தூண்டுதலில் சிக்காமல் விலகிப் பாதுகாப்பாக வாழ முடியும். மனக்கவலை நீங்கும். வாழ்க்கையில் கரையேற முடியும். பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க முடியும்.

சிறப்புச் சொற்கள் :

வாலறிவன் - பேரறிவு உடையவர்.
மலர்மிசை - மலரின் கண். (மையம்)
இருள்சேர் - அறியாமை
ஆழி - கடல்
எண்குணத்தான் - எட்டு குணங்கள் :
1. அளவற்ற அறிவு, 
2. அளவற்ற இன்பம், 
3. அளவற்ற காட்சி, 
4. அளவற்ற வலிமை, 
5. உறவின்மை, 
6. பெயரின்மை, 
7. காலமின்மை, 
8. அழிவின்மை.

*******   *******   *******


1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

"அ" எனும் ஓசை ஒலித்தே அனைத்து முதல் எழுத்துக்களும் துவங்கும். அதுபோல இவ்வுலகின் படைப்புகள் அனைத்தும் இறைவனிலிருந்தே துவங்குகின்றன.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்

பேரறிவுடைய இறைவனது திருவடிகளைப் புகழ்ந்து வணங்காவிடில் படித்து அடைந்த அறிவால் என்ன பயன்?

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்

மலர்ந்த உள்ளத்தில் இறைவன் அமர்ந்திருக்கிறார். அந்த திருவடிகளைச் சரணடைந்தவர் நீடித்த நிலை வாழ்வு அடைவர்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல

இறைவனுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது. பாரபட்சம் இல்லாதவர். அவரது திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.. 

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

இறைவனது பண்புகளைப் புரிந்து அதினிமித்தம் அன்பு செலுத்துங்கள். அப்போது அறியாமையால் ஏற்படும் இன்பம், துன்பம் ஆகிய இரு உணர்வின் விளைவுகளும் பாதிப்பை ஏற்படுத்தாது.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார்

கண், செவி, நாசி, வாய் மற்றும் உடல் இவை மனதின் ஆசை உணர்வைத் தூண்டும் கருவிகள் ஆகும்.  

இறைவனுக்கு உண்மையான மனவுறுதியுடன் கீழ்ப்படிந்தவர் தீய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மேன்மையான நிலையை அடைவர்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

இறைவன் ஈடு இணையற்றவர். அவர் திருவடிகளைச் சரணடைந்து இடைவிடாமல் நினைப்பவருக்கு மனக்கவலை அரிக்காது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது

அறம் என்பது கடல்.  இறைவனின் திருவடி படகு. சரணடைந்தவர் அல்லாத மற்றவர்களால் இக்கடலைக் கடக்க முடியாது.

9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை

உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஐந்து உறுப்புகளால்  பயனில்லை. அவ்விதம் எட்டு குணங்களை உடைய இறைவனது திருவடிகளை வணங்காதவரின் அறிவும் பயனற்றது.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

இறைவனது திருவடியைச் சரணடைந்தவரே பிறவியாகிய சமுத்திரத்தை நீந்திக் கடக்க முடியும். அவர் துணையைச் சேராதவர் கடலில் மூழ்கி ஆழ்வர்.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

வெள்ளி, 22 மே, 2020

இமயத்தை வென்றவர்

அருணிமா சின்ஹா.
(Arunima Sinha)

வாழ்க்கை புதிரானது. சவால் நிறைந்தது. எதிர்பாரா தருணத்தில் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிகழ்வுகளைச் சந்திப்போம்.. நினைத்தும் கூடப் பார்க்காத இழப்புகள் வாழ்க்கையை முடக்கும். கோர விபத்துக்கள் வாழ்வைச் சிதைக்கும். அத்தகைய பேரிடர் சூழலில் மனம் சோர்ந்து போகாமல் துணிவுடன் எதிர்கொண்டு  மீள்பவர்கள் சாதனையாளர்களாக மிளிர்வர். அவர்கள் மனம் உடைந்து தடுமாறுபவர்க்கு வழிகாட்டும் ஆதர்ச சக்தியாகவும் மாறுவர்.

அருணிமா சின்ஹா, 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி  உத்திரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் பிறந்தார். சட்டம் பயின்றவர். தேசிய கைப்பந்து வீராங்கனை.

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் 12ம் தேதி CSIF பாதுகாப்புப் படையின் தேர்வில் கலந்து கொள்வதற்காகப் பத்மாவதி இரயிலில் லக்னௌலிருந்து டெல்லி நோக்கிப்  பயணப்பட்டார். அந்தப் பயணம் அவரது வாழ்க்கையையே தடம் மாற்றப் போகிறது என அப்போது அவர் அறியவில்லை.

அந்த துயரமான சம்பவம் ஓடும் இரயிலில் தீடிரென அரங்கேறியது. சில வழிப்பறிக்  கொள்ளையர்கள் அவரைத் தாக்கி கைப்பையையும், கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையையும் பறிக்க முயன்றனர்.

அந்த நிகழ்வை அவர் நினைவு கூறும்போது

"நான் முழு வலிமையுடன் அவர்களை எதிர்த்துப் போராடினேன். அவர்கள் என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். மிதிக்கப்பட்டு ஓடும் வண்டியிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன். அடுத்த இணைத் தண்டவாளத்தில் விழுந்தேன். என்னால் கொஞ்சம் கூட அசைய முடியவில்லை. அந்த எதிர் பாதையில் இரயில் வருகிறது. நான் எழுந்து தப்பிக்க முயன்றேன். என்னால் இயவில்லை. முழு பலத்துடன் புரண்டு விழுந்தேன்.  ஒரு நொடியில்  எதிர்புறம் வந்த இரயிலின் சக்கரங்கள் எனது இடது காலின் மேல் ஏறிச் சுற்றிச் சுழன்று சென்றது."




ஓர் தேசிய வீராங்கனைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நாடு கொதித்தது. கடும் கண்டனம் எழுந்தது. இந்திய விளையாட்டுத் துறை இந்த விபத்திற்குக் கருனை தொகையாக இருபத்து ஐந்தாயிரம் இழப்பீடு கொடுத்தது. பின்பு அந்த உதவித் தொகை இரண்டு இலட்சம் என உயர்த்தப்பட்டது.

அடுத்த சோதனை காவல் துறை வடிவில் வந்தது. இந்த விபத்தை ஒரு தற்கொலை முயற்சி எனக் காவல் துறைப் பதிவு செய்தது. அருணிமா இந்தப் பொய்க் குற்றச்சாட்டிற்கு எதிராகவும் போராடினார். இதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜந்து இலட்சம் இழப்பீடு வழங்கவும், உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்கவும், அரசுப்பணி அளிக்கவும் உத்தரவிட்டது.

2011ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு மாதம் சிகிச்சை தொடர்ந்தது. அவரது துண்டிக்கப்பட்ட இடது காலில்  கம்பியுடன் இணைக்கப்பட்ட செயற்கை கால் பொருத்தப்பட்டது. வலது காலின் முறிவு, முதுகு தண்டுவடத்தின் காயங்கள் குணப்படுத்தப்பட்டது.

அவரால் சுற்றி இருப்பவர்களின் பரிதாப பார்வையை எதிர் கொள்ள முடியவில்லை. எதுவும் தனித்துச் செய்ய இயலாத இயலாமை வாட்டியது. காலை இழந்த வேதனையைவிடப் பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்க்கதியான சூழல் மனதில் ஆழ்ந்த வலியை ஏற்படுத்தியது. அந்த கழிவிரக்கத்தைத் துடைத்து வீசிட விரும்பினார். மனதில் ஓர் தீர்மானம் உதித்தது. தனது சுயமதிப்பைக் காத்திட உறுதி பூண்டார். ஓர் மாபெரும் கனவு பிறந்தது. அது "ஒற்றைக் காலுடன் இமயத்தின் சிகரத்தை மிதிக்க வேண்டும்" எனும் தீர்க்கமான இலக்கு.

2011ம் ஆண்டிலேயே இந்தியாவின் மதிப்புமிக்க பெண் மலையேற்ற நிபுணர் பச்சேந்திரி பால் (Bachendri Pal) அவர்களைத் தொடர்பு கொண்டார். தனது கதையை விவரித்தார்.

பச்சேந்திர பாலின் மறுமொழி அற்புதமானது.

"என் அன்பு குழந்தை, இந்தச் சூழலிலும் ஒற்றைக் காலுடன் இமயத்தின் சிகரத்தைத் தொட்டுவிடத் தீர்மானித்து விட்டாய். நீ நிச்சயம் ஒருநாள் மலையில் ஏறுவாய். சிகரத்தைத் தொடுவாய். அது எந்த தேதியில் என்பதை மட்டும் அறியவே இந்த உலகம் காத்திருக்கிறது."


அருணிமா உத்தரகாசியில் உள்ள TSAF (Tata Steel Adventure Foundation) இல் பயிற்சி பெற இணைந்தார். செயற்கை காலுடன் கடும் பயிற்சி. விடா முயற்சி தொடர்ந்தது.  பலமுறை சறுக்கி விழுந்தார். மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்ட அனுபவங்கள் நேர்ந்தது. காயங்கள் ஏற்பட்டது. இந்தப்பயிற்சி காலம் கடுமையாக இருந்தது. ஆனால் எதுவும் அவரது மன உறுதியையும் தீர்மானத்தையும் அசைக்க முடியவில்லை.

2012ம் ஆண்டில் 6150 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த Island peak எனும் உயரத்தைத் தொட்டார். அதே ஆண்டிலேயே அருணிமா, சூசனுடன் (Susan Mahot) இணைந்து சேஷர் சங்கிரியா (Chaser Sangriya) எனும் 6,622 மீட்டர் உயரத்திலிருந்த மலைச் சிகரத்தைத் தொட்டார்.

2013ம் ஆண்டு எவரெஸ்ட்டை நோக்கிய அவரது சாகச பயணம் துவங்கியது. 17 மணி நேர நீண்ட பயணம். சிகரத்துக்கு அருகில் நெருங்கிய தருணத்தில் மீண்டும் சோதனை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை. உடன் பயணித்தவர் ஆபத்தைக் கூறி எச்சரித்தார். இப்போது மலையேற்றத்தை முடித்து திரும்புவோம். மீண்டும் மற்றொரு முறை முயலலாம் என ஆலோசனை கொடுத்தார். அருணிமா அதை ஒப்புக் கொள்ளவில்லை. மனவுறுதியுடன் அஞ்சாது முன்னேறினார். அடுத்த இரண்டு மணி நேரத்தில், மே மாதம் 21ம் தேதி காலை 10.55 மணியளவில் எவரெஸ்ட் அவரது காலின் கீழ் இருந்தது.


அந்த மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றிக் கூறும்போது,

"என் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சாதித்து விட்டேன். அதை முழு உலகத்துக்கும் கேட்கும்படி கத்த வேண்டும் போல இருந்தது".

ஒரு துணியில் "கடவுளுக்கு நன்றி" எனக் கைப்பட எழுதி அதைப் பனிப் பாறையில் பதித்தார். இந்தச் சாதனையை இறைவனுக்கும்  தனது வாழ்வின் குருவாக ஏற்றுக்கொண்ட சுவாமி விவேகானந்தருக்கும் அர்ப்பணித்தார்.

உலகின் உயரமான மலைகளிலும் அவரது சாகச பயணம் தொடர்ந்தது. ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ (Kilimanjaro), ஐரோப்பாவின் எல்பிருஸ் (Elbrus), ஆஸ்திரேலியாவின் கொஸ்கியஸ்கோ (Kosciuszko), அர்ஜெண்டினாவின் அக்கன்கஹுவா (Aconcagua), இந்தோனேஷியாவில் கர்டென்ஸ் (Carstensz Pyramid) கொடுமுடிகளைத் தொட்டார்.

2019ம் ஆண்டில் ஜனவரி முதல் தேதி அன்டார்டிகாவில் உள்ள வின்ஸன் (Mount Vinson) சிகரத்தையும் தொட்டார்.



2014ம் ஆண்டில் இவரது சுயசரிதை "Born again on the Mountain" (மலை உச்சியில் மறுபிறப்பு) வெளியானது.

2015ம் ஆண்டு பத்மஸ்ரீ  விருது வழங்கப்பட்டது. "Tenzing Norway Highext Mountaineering award" ம் அளித்துக் கவுரவிக்கப்பட்டார். 2016ம் ஆண்டில் Limca Book of Records அவரை "People of the Year" பட்டியலில் இனைத்தது. "Malala Award", "Yash Bharat Award" "Rani Laxmi Bai Award" என விருதுகள் அவரைத் தேடி வந்தன.


உ.பி அரசு "அருணிமாவின் கடின உழைப்பு, விடா முயற்சிக்கு முன் இமயமும் பணிந்தது" எனப் பாராட்டி ஊக்கத் தொகையாக  25 இலட்சம் ரூபாய் பரிசாக அளித்தது. பாராட்டு மழை குவிந்தது.

அருணிமாவின் தரிசனம் விரிவடைந்தது :

"நான் எனது கனவுகளை அடைந்து விட்டேன். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டு வாழும் ஏழை ஊனமுற்ற குழந்தைகளின் கனவுகளை நனவாக்க உழைக்க விரும்புகிறேன். அவர்களும் பரிதாபமான பார்வையிலிருந்து விடுபட்டு சுய மதிப்புடன் வாழவேண்டும்" .

அவர்களுக்காக "Shaheed Chandra Shekhar Vikalang Khel Acadamy" எனும் இலவச விளையாட்டுப் பயிற்சி அமைப்பை நிறுவினார். தனது பரிசு, சுய முன்னேற்ற ஊக்கமளிக்கும் கருத்தரங்குகளில் பேசுவதால் கிடைக்கும் வருமானம் என முழுவதையும் அதன் வளர்ச்சிக்காக அளித்தார்.

ஒரு விபத்தால் உடலை ஊனமாக்க முடியும். ஆனால் கனவை முடக்க முடியாது. அவரது ஆன்மாவின் உற்சாகத்தை எந்த எதிர்ப்புகளாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

வாழ்வை நொறுக்கிப் போடும் மன வலியிலிருந்து மீள்வதே ஓர் சாதனை. அத்துடன் அதே வித வலியை அனுபவிக்கும் துயருற்றவரின் கண்ணீரைத் துடைப்பதையும், அவர்கள் கனவை நனவாக்க உழைப்பது எனத் தனது வாழ்வை அர்ப்பணிப்பதும் மாபெரும் சாதனை.

உயர்ந்த சாதனைகள் வலிகளாலே அடையப்படுகிறது. சிறந்த வரலாறுகள் அர்ப்பணிப்பாலே எழுதப்படுகிறது.  அவை காலம் கடந்தும் பேசப்படுகிறது. நிலைத்தும் நிற்கிறது.

*******   *******   *******


Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

செவ்வாய், 19 மே, 2020

பரிவுடன் கூர்ந்துக் கேட்டல்

Empathetic Listening.



குழந்தைப் பருவத்திலிருந்தே "பேசுவதற்கு" (Speaking)  சொல்லித் தரப்படுகிறது. "எழுதுவதற்கு" (Writing) கற்கிறோம். "வாசிக்க" (Reading) பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் ஒருவர் பேசுவதை எப்படி"கவனித்துக் கேட்பது" (Listening) என்பதை முறையாக கற்பதில்லை.

கேட்பது ஒரு கலை. ஒரு கருத்தைக் கேட்பதன் மூலமும் புரிந்து கொள்கிறோம். சரியாகப் புரிந்து கொள்வது என்பது உணர்வுகள் சார்ந்தது.

ஒவ்வொரு உணர்வும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அலட்சியமாகக் கேட்பது தவறான புரிதலை ஏற்படுத்தும். மனதில் முன்முடிவுகளுடன் கேட்பது உண்மையை உணரவிடாமல் செய்துவிடும். சார்பு நிலையோடு கேட்பது பொய்யை உண்மையென நம்பவைத்து மோசம் போக்கும். பொறுப்பில்லாமல் கேட்பது காலத்தை வீணடிக்கும்.

தவறான புரிதல் தேவையற்ற சிக்கலை  உருவாக்கும். உறவைச் சீர்குலைக்கும். முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கும். முன்னேற்றத்தைத் தடுக்கும். மன அமைதியை இழக்கச் செய்யும்.

குறைவாகப் பேசி அதிகமாகக் கவனிப்பது வெற்றிக்கு உதவும். கேட்பதில் ஓர் உயர்நிலை தான் "பரிவுடன் கூர்ந்து கேட்பது". இந்தச் சிறிய கட்டுரை "பரிவுடன் கூர்ந்து கேட்டல்" பற்றியதொரு ஓர் எளிய அறிமுகம்.

இந்தச் சிந்தனைகள் மனதில் விருப்பங்களாகப் பதிய வேண்டும். வெறும் வாசிப்பு உதவாது. உடனே மறந்து விடும். இந்த பண்பைப் புரிந்து கொண்டு கடைப்பிடித்தால் வீட்டில், பணியிடத்தில், நட்பில், உறவுகளை மேம்படுத்திக்கொள்ள அது உதவும்.


I. பரிவுடன் கவனமாகக்  கேட்பது என்றால் என்ன? 


ஒருவர் பேசும்போது அவரது மன உணர்வு நிலையைக் கவனத்துடன் புரிந்து கொண்டு, உரையாடலை அக்கறையுடன், ஆதரவாகக் கேட்பதை "பரிவுடன் கூர்ந்து கேட்டல்" (Empathetic Listening) எனலாம். 

கரிசனையுடன் கேட்பதின் நோக்கம், பகிர்ந்து கொள்பவரை "குறைகூறுவது"' "விமர்சிப்பது", "ஆலோசனை சொல்வது" என்பதற்காக அல்ல. மாறாக "ஆதரவு தெரிவித்தல்", "ஊக்குவித்தல்", "தீர்வை காண உதவுதல்" எனும் அக்கறை மனப்பாங்கு ஆகும்.

உதாரணமாகப் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தனது சொந்த ஊருக்குச் செல்லும் முனைப்புடன் தவித்துப் பேசும்போது அவரின் மனநிலையிலிருந்து அதைக் கேட்பது பரிவுடன் கூர்ந்து கேட்டல் ஆகும். இந்த துயருக்குச் சூழலைக் குறை கூறுவது தீர்வல்ல. அவருக்குத் தேவை உதவி. ஆலோசனை அல்ல. நம்பிக்கை. விமர்சனத்தை விட நடவடிக்கை முக்கியமானது.



II.பரிவுடன் கூர்ந்து கேட்கும் திறனை மேம்படுத்த :


1.  கவனம் :

ஒருவர் பேசுவதை முழு கவனத்துடன் கேட்க வேண்டும். உடல் மட்டும் அமர்ந்திருக்கச் சிந்தனைகள் வேறு பக்கம் பறந்தால் பேசுபவர் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முடியாது. கவனச் சிதறல் இருக்கக் கூடாது. அக்கறையின்றி கேட்கக்கூடாது.

பதில் சொல்வதற்காகக் கேட்பது தவறு. உரையாடலில் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும். உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்காகக் கேட்க வேண்டும்.

2. பரிவு :

பேசுபவரின் உணர்வுகளை அக்கறையுடன் புரிந்து கொண்டு கேட்க வேண்டும். ஓர் துயரம் நிறைந்த சூழலில் பகிரப்படும் உணர்வுகளை அசிரத்தையாகக் கேட்பது என்பது தவறு. அது ஓர் அலட்சிய மனோபாவம்.

ஒவ்வொருவருக்கும் துயரங்கள் ஏற்படுத்தும் வலியுணர்வு ஒன்றே. காரணங்கள் வேறுபடலாம். வலியின் அளவும் மனநிலைக்கேற்ப மாறுபடும். ஆனால் வேதனை உணர்வு பொதுவானது.

ஒருவர்  அனுபவிக்கும் வேதனையான சூழல் நமக்குப் பரிச்சயம் இல்லாதிருக்கும். எனினும்  நாம் அனுபவித்த வேறு ஓர் துயரத்துடன் அதனுடன்  ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாகப்  புற்றுநோயின் வலியை நேரிடையாக அனுபவிக்காது இருக்கலாம். ஆனால்  அது நாம் மிக நேசித்த பிரியமானவரின் இழப்பின் வலிக்கு ஒப்பாக இருக்கலாம்.

சொல்பவரின் வலியை நாம் அனுபவித்த வேதனையோடு பொருத்திப் பார்த்துக் கேட்க வேண்டும். பரிவுடன் கேட்பதில் வலியை உணர்வது முக்கியம்.

3. ஞானம் : 

ஒருவர் தான் அனுபவிக்கும் துயரை நம்பிக்கை அடிப்படையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஓர் சரியான தீர்வை நமது புத்தி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தருவோம் என்று அதைச் சொல்கின்றார்.

ஞானம் என்பது சொல்பவரின் சிக்கலைப் பரிவுடன் முழுமையாகக் கேட்பது மட்டுமல்ல. அத்துடன் நிதர்சனத்தைப் புரிந்து கொள்வதுமாகும்.

உதாரணமாக ஒரு நபருக்கு வேலை பார்க்கும் பிரிவில் உடன் பணிபுரிபவருடன் வாக்குவாதம் வருகிறது. இதில் பரிவுடனும் கேட்க வேண்டும்.  ஆனால் அதே சமயம் மற்ற நபரின் கருத்தையும் கேட்க வேண்டும்.  இரு பக்கத்து விளக்கத்தையும் கேட்டுத்  தீர்வை காண முயல வேண்டும்.

4. நியாயம் தீர்க்கக் கூடாது :

சில கருத்துக்களில் பொதுவான உடன்பாடு இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஓர் அபிப்பிராயம் உண்டு. எனினும் மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்.  எதிர்த்துக் கூச்சலிட்டு அடக்கக்கூடாது. அவரைக் குற்றம் சொல்லித் தீர்ப்பளிக்கக் கூடாது. தான் சொல்வது மட்டுமே சரி என்பது ஓர் சுய நீதி. அது பெருமையின் வெளிப்பாடு. ஒருவேளை தான் நம்புவது சரியாக இருந்தாலும் அதை எதிர்ப்பவரும் புரிந்துகொள்ளக் கால அவகாசம் கொடுப்பது நல்லது.

கால ஓட்டத்தில் சிந்தனைகள் மாற்றமடையும். அனுபவங்கள் தெளிவைத் தரும். மாற்றுக் கருத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  இந்த பரிவு மனநிலை  உறவுகளில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தும். 

5. இரகசியங்களைப் பாதுகாத்தல் :

பரிவுடன் கேட்பதில் முக்கியமானது இரகசியத்தைப் பாதுகாத்தல். நம்பிக்கை அடிப்படையிலேயே உணர்வுப்பூர்வமாகத்  தனிப்பட்ட செயல்கள் பகிரப்படுகிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும்.

ஒருவர் பகிர்ந்த அந்தரங்க தகவலைப் பேச்சின் சுவாரஸ்யத்திற்காகப் பிறருடன் பேசக் கூடாது. ஒருவரோடு உள்ள நெருக்கத்தைக் காண்பிக்க அவர் தனிப்பட்ட விதத்தில் பகிர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது. தனிப்பட்ட ஆதாயத்திற்காக இரகசியமாகச் சொல்லப்பட்டதைப் பயன்படுத்தக் கூடாது.

ஒரு சிக்கலைத் தீர்க்க உதவும் என்றாலும் பகிர்ந்த நபரின் அனுமதியின்றி இரகசியமாகச் சொல்லப்பட்ட தகவல்களை ஒருபோதும் விவாதத்தில் சொல்லக்கூடாது.

6. பொறுமை :

அச்சத்தில், தவிப்பில், குழப்பத்தில், வெட்கத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தச் சரியான வார்த்தைகள் கிடைக்காது. அந்தரங்க  உணர்வுகளை  நெருங்கிய நட்பிடமும் கூட முழுமையாகப் பகிர்ந்து கொள்ளத்  தயக்கமும் தடுமாற்றம் வரும். எந்த அளவிற்கு நடந்ததைச் சொல்வது எனும் பயம் இருக்கும்.

இச் சூழலில் அந்தரங்க விஷயத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டக் கூடாது. சொல்லத் தயங்கும் அவரது வேதனையான மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். பொறுமையோடு அமைதி காக்க வேண்டும். அவர் பகிர்வது ஓர் தீர்வுக்காக, பொழுதுபோக்குக்காக அல்ல.

7. மறுமொழி :

பரிவுடன் கேட்டல் என்பதில் மறுமொழி மிக முக்கியமானது. நமது கருத்துக்களைச் சொல்ல அவசரம் காட்டக் கூடாது. முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவராக அபிப்ராயம் கேட்கும்வரை அமைதி காப்பது நல்லது. நாம் என்ன நினைக்கிறோம் என அவர் அறிய விரும்பினால் மட்டுமே ஆலோசனை சொல்ல வேண்டும். பல சமயங்களில் உணர்வுகளைக் கொட்டித் தீர்ப்பதற்காக மட்டுமே பகிரப்படுகிறது.

எப்போதும் தீர்வுகளைச் சொல்வதை விட அதற்கான வழிகளைக் காண்பிப்பது மிகச் சிறந்தது. முடிவுகளை அவர்களே எடுக்க உதவ வேண்டும். எந்தவொரு சிக்கலுக்கும் உடனடி முழுமையான தீர்வு கிடைக்காது. காலம் காயங்களை ஆற்றும். சில சூழலில் மறதி ஓர் மாமருந்து.



III.பரிவுடன் கூர்ந்து கேட்பதால் கிடைக்கும் பயன்கள்.


1. உறவுகள் மேம்படும் :

அக்கறையுடன் பேசுபவர்கள் எளிதில் அனைவரையும் கவர்ந்து கொள்வர். அவர்கள் மீதான நம்பிக்கை ஆழமானதாக இருக்கும். 

2. எச்சரிக்கை உணர்வு மிகும் :

பிறரது உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர் எவரையும் காயப்படுத்த மாட்டார்கள்.  உதாரணமாக அலுவலகத்தில் உடன் பணிபுரிபவரை ஒரு குறிப்பிட்ட வார்த்தை காயப்படுத்தும் என்றால் அதை மீண்டும் பயன்படுத்தாமல்  எச்சரிக்கையுடன் தவிர்ப்பர்.

3. திறன் மேம்படும் :

பரிவுடன் கேட்பவர் இருக்கும் இடம் நம்பிக்கை சூழ்ந்திருக்கும். புரிதல் மேம்பட்டுக் காணப்படும்.  முரண்கள் குறையும். துயரத்திலிருந்து உடன் எழுவர். குடும்ப உறவுகளில் ஆறுதலாக இருந்து வழி காட்டுவர். பணியிடத்தில் குழு மனப்பான்மை மிளிரும். பணிச் சுமையாக இருக்காது. உற்பத்தி மிகும். 

4. சிக்கலுக்கு மேம்படுத்தப்பட்ட தீர்வு :

நம்பிக்கை உணர்வு மிகுதியாக இருக்குமிடத்தில் ஒளிவு மறைவு குறையும். விஷயங்களை உள்ளபடியே வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வர். தவறுகளைச் சொல்வதற்குப் பயம் இருக்காது. தயங்காமல் பிரச்சினைக்குரிய காரியங்களைப் பட்டியலிடுவர். எவரையும் குற்றவாளியாக்கும் முயற்சி இருக்காது. இது சிக்கலை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும்.

குழு மனப்பான்மை மிளிர்வதால் பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் பல புதிய அணுகுமுறை வெளிப்படும். மேம்பட்ட தீர்வு கிடைக்கும்.

சுருக்கமாக, நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் பேசுவதைப் பரிவுடன் கேட்பது உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தும். நம்பிக்கையை அதிகரிக்கும். எதிர்ப்பு மனநிலையைத் தணிக்கும். பயம் அகலும். வெளிப்படையாக இருப்பர். உரிமையுடன் பழகுவர். நல்ல நேர்மையான ஆக்கப்பூர்வ சூழலை உருவாகும்.

பிறர் உணர்வுகளைக் கருத்தை மதித்துப் பரிவுடன் கவனமாகக் கேட்போம். மாற்றுக் கருத்து உடையவரிடமும் சண்டையிடாது அமைதியாக விலகி வாழக் கற்றுக் கொள்வோம்.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

வெள்ளி, 15 மே, 2020

புத்திசாலி

கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு 

(Christ's Parables   - 2)


ஒரு மனிதர் வீடு கட்டுவதற்கு மேடானதொரு நிலத்தைத் தெரிவு செய்தார். அந்த நிலம் ஒழுங்கற்று கரடு முரடாக இருந்தது. இடம் முழுவதும்  பெரிய  கற்பாறைகள். செல்வதற்கு நேர்த்தியான பாதை இல்லை. ஒற்றையடிப்பாதை தான் வழி. அதுவும் நெடுக முட்கள். இப்படிப்பட்டதொரு இடத்தை வாங்கியதற்காக அவரைச் சிலர் கேலி செய்தனர்.

"இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்தில் ஓர் வீட்டைக் கட்டுவது தேவையா?" என விமர்சித்தனர். அவரோ காது கேளாதவர் போல் நடந்து கொண்டார். பெரிய பாறைகளை உடைத்து சீர் செய்வது கடினமான வேலையாக இருந்தது. அவர் பயப்படவில்லை. கலங்கவில்லை. நல் நம்பிக்கையுடன் மனம் தளராது பொறுமையாக உழைத்தார். வேலை அதிக காலம் எடுத்தது. நிலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சமனானது. வீடும் மெதுவாக வளரத் துவங்கியது.

அவர் கிணறு ஒன்றை வெட்டத் தொடங்கினார்.  "இந்த பகுதியில் பொதுவாக நீர் கிடைக்காது; கிடைத்தாலும் அது வெகு ஆழத்தில் தான் இருக்கும்; அதுவும் சுவையாக இருக்காது" எனச் சிலர் அவநம்பிக்கையாகப் பேசினர்.

ஆனாலும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. கடும் பிரயாசத்துடன் கிணறு தோண்டப்பட்டது. ஆச்சரியமாகச் சிறிது ஆழத்திலேயே கிணற்றின் ஊற்றிலொன்றிலிருந்து தித்திப்பான நீர் சுரந்தது. வீட்டிற்கும், பாதைக்கும் தேவையான கற்களும் அதிலிருந்து கிடைத்தது. வெட்டி எடுக்கப்பட்ட கற்களால் பாதை அமைத்தார். இருபுறமும் மரங்கள் நட்டார். ஒவ்வொரு சமயத்திற்கு எதைச் செய்ய வேண்டும் எனும் புத்தியும், சரியான வழி நடத்துதலும் அவருக்குக் கிடைத்தது.

நம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி, தைரியம், கடின உழைப்பின் பலனாக அவரது அழகிய கனவு நிறைவேறியது. நீண்ட காலம் காத்திருந்தது நல்லதொரு முடிவைத் தந்தது. ஒரு பயனற்ற நிலம் அழகிய இல்லமாக மாறியது.

மற்றுமொரு மனிதரும் வீட்டைக் கட்ட. தொடங்கினார். அவர் ஆற்றின் கரையோரம் சமமாக இருந்த மணற்பாங்கான நிலத்தைத் தெரிவு செய்தார். அந்த இடத்தைச் சுற்றிலும் பச்சைப்பசேலென செழுமையாக இருந்தது. பார்ப்பதற்கு அழகாகச் சோலை போல இருந்தது. மிக அருகில் நீர் ஓடியது.

வீட்டின் அஸ்திபாரம் தோண்டுவதற்கும் இலகுவாக இருந்தது. வேலைகள் துரிதமாக நடந்தது . மிகக் குறுகிய காலத்தில் அதிக உழைப்பின்றி குறைந்த செலவில் வீடு கட்டி முடிக்கப்பட்டது.  முதல் மனிதரைப் போல அதிகம் சிரமப்படாமல் சுலபமாக வீட்டைக் கட்டி முடித்ததற்காக அநேகர் இவரைப் பாராட்டினர்.

சில வருடங்கள் உருண்டோடியது. மாரிக்காலம் வந்தது. ஓர் கோரப்புயல் அந்தப் பகுதியைத் தாக்கியது. சூறைக்காற்று வீசியது. பெருவெள்ளம் வீடுகளைச் சூழ்ந்தது.

மேடான கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீடு புயலை எதிர்த்து நின்றது. காற்றால் அசைக்கப்பட முடியவில்லை.  வெள்ளம் நெருங்க இயலவில்லை. புயல், காற்று, பெருவெள்ளத்திலிருந்து அந்த வீடு  பாதுகாக்கப்பட்டது.

ஆற்றின் கரையோரம் கட்டப்பட்ட வீட்டின் மீதும் கடும் சூறைக் காற்று வீசியது. பெரு வெள்ளம் மோதியது.  அதற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் சுவர்கள் இடிந்தன. அது இருந்த இடம் தெரியாதபடி மூழ்கி முற்றிலுமாக அழிந்தது.





அறம் சார்ந்த கருத்துக்களைப் பலர் ஆர்வமாகக் கேட்பார்கள். ஆனால் வெகு சிலர் மட்டுமே கைக்கொள்வர்.

உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் உள்ளத்தில் அறத்தின் பலன் எழுதப்பட்டிருக்கும். அவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வர். அதை வாழ்வில் நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பர்.

அறத்தைக் கடைப்பிடித்தால் துன்பம் வரும். ஆனால் அந்தத் துயரைப் பொறுத்துக் கொள்வர்.

பொறுமையோடு நல் நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக் கொள்வர். துயரங்கள் சீர் படுத்துகிறது என உணர்வர். குற்றங்கள் ஏற்படுத்தும் வலி புரியும். நல்ல தீர்மானத்தில் உறுதியாக நிலைத்திருந்து வாழ்வில் முன்னேறிச் செல்வர்.

சுலபமாக இருக்கும் என்பதற்காகக் குறுக்கு வழியாக முன்னேற விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்விளைவு உண்டு என்பது நன்கு அறிவர். எனவே தீமை செய்ய அஞ்சுவர்.

தவறுதலாகத் தீமையில் விழ நேரிட்டால் மனம் பதறுவர். திரும்பவும் நேர்மையின் பாதைக்கு வரும்வரை பதைபதைப்பு நீங்காது.

அவர்கள் வாழ்வில் புயல் வந்தாலும் நிலைகுலைய மாட்டார்கள். சூறைக் காற்று வீசினாலும் அசைந்து கொடுக்கமாட்டார்கள். வெள்ளம் சூழ்ந்தாலும் கரையேறிவிடுவார்.

இறை வார்த்தைகளைக் கேட்பவராக மட்டுமல்ல, அதன்படி செய்கிறவர்களே புத்தியுள்ள மனிதர். அவர் தனது வீட்டைக் கற்பாறையின்மேல் கட்டுகிற புத்தியுள்ள மனிதருக்கு ஒப்பாவர்.

புத்தியில்லாத மனிதரோ அதைக் கேட்டும் அதன்படி நடக்காதவர்கள். அவர்கள் தங்கள் வீட்டை மணலின் மீது கட்டுகிறார்கள்.

*******   *******   ******* 

Ref : 
St. Mathew :- 7:24 - 27 &  
St. Luke :- 6:47 - 49.

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.


புதன், 13 மே, 2020

நிழல் யுத்தம்

ஓயாத போர்.



காரிருளிலிருந்து
ஒளி உதித்த போது
நிழலும் உடனிருந்தது

நிழல் முன் செல்கிறது
நிழல் பின் தொடர்கிறது
நிழல் படர்கின்றது
தீப ஒளியினுள் கருஞ் சுடராக
நிழல் உள் உறைந்துள்ளது

பள்ளிப் பருவத்தில்
நிழல் முகத்தை
மிதிக்கத் துடித்து
எட்டி எட்டி நடைபோட்டு
ஏமாந்த தருணத்தில்
நிழல் நகைத்தது

திரையினின்றும்
அருவமாக அசைந்து
எழுந்த பிம்பங்கள்
கற்பனையில் உருப்பெற்று
மாயக் கனவுகளாக விரிந்து
மனதை முடக்கிய போது
நிழல் முறுவலித்தது

அரவமற்ற மெல்லிய
இருட்டின் நிழலில்
மதி மயங்கி
மறைந்திருந்து துய்த்த
கானல் இன்பங்களில்
களி கூர்ந்தபோது
நிழல் குதுகலித்தது

உள் ஒளி உதித்து
எண்ணங்களின் மீது
வெளிச்சம் பரவி
ஆன்மாவில் உணர்வுகள்
கிளர்ந்தெழுந்து
மனக் கண்கள் விழித்ததில்
நிழல் எரிச்சலானது

வெளிச்ச கீற்று
நினைவுகளில் படர
மறைந்து திளைத்த
அனுபவங்கள்
வெட்கமாகிக் கசந்து
கண்ணீரில் கரைய
நிழல் சினமடைந்தது

மனக்கண்கள் பிரகாசித்து
மறுரூபமடைந்த இதயத்திலிருந்து
ஊற்றெடுத்த
நன்றியுணர்வின்
வெம்மை தாங்காது
வீழ்த்துவேன் எனும்
சபதத்துடன் வெட்கி
நிழல் வெளியேறியது

நிஜமும் நிழலும்
பிரிவதுமில்லை
இணைவதுமில்லை
இடைவிடா யுத்தம்
தொடர்கிறது

உணர்வு வெளிச்சத்தின்
மீது நிழலால் வீசப்படும்
மாய வலையில்
மானுடத்தின்
கண்கள்
பார்வையிழக்கின்றன
செவிகள்
கேட்க மறுக்கின்றன
உள்ளம் கள்ளமாகிறது

உணர்ந்து தெளியும் வரை
பாடம் தொடர்கிறது
கால ஓட்டத்தில்
கற்பதும் மறப்பதும்
பதிவுமாக வாழ்க்கை
கடக்கிறது

உள் ஒளி மறைந்து
காரிருள் கவ்வும்போது
பல நிழலில் கரைகிறது
சில ஒளியில் சங்கமிக்கிறது

வெளிச்சம் உதிக்கையில்
நிழலின் மரணம்
ஆசைகளின் ஈர்ப்பில்
நிழலின் ஜனனம்

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

வியாழன், 7 மே, 2020

மார்கஸ் அரேலியஸ் : வாழ்வியல் சிந்தனைகள் - 2

ஆத்ம ஞானம்.



1. ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வத் தன்மையுடைய ஆன்மா ஒன்று உறைந்திருக்கிறது. அதற்குத் தீங்கு நேரிடாமல் சுத்தமாக வைத்துப் பாதுகாப்பது ஞானம். உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டு அறிவுள்ளவராக நடந்து கொள்வதென்பது அவரவர் சுதந்திரம். இறையச்சம், சத்தியம், நீதி, தெளிந்த புத்தி, தைரியம் இவற்றை விட ஆன்மாவிற்கு நன்மையும் ஆனந்தமும் அளிப்பது இவ்வுலகில் வேறொன்றுமில்லை.

2. வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறி மாறி நிகழும். இந்த சுக துக்க உணர்வுகளால் அலசலடிப்படாதவாறு மனதை அதனின் விலக்கி வைத்துப் பயிற்றுவிப்பது ஞானம்.

3. பயனற்ற சொற்களைப் பேசாதிருப்பது ஞானம். எண்ணங்களைச் சீர் செய்தால் சொல்லும், செயலும் சிறப்படையும். நம்முடைய வார்த்தைகளிலும் செயல்களிலும் பத்தில் ஒன்பது பங்கு யாருக்கும் வேண்டாதவை. தேவையற்ற பேச்சைத் தவிர்த்தால் கவலையும் மனக்கசப்பும் அகலும். காலமும் வீணாகாது.

4. ஒவ்வொருவர் உள்ளத்திலும் அறத்தைப் பற்றி நிற்கும் தெய்வாம்சம் ஒன்று இருக்கிறது. ஆகவே எவருக்கும் தீங்கு செய்யக் கூடாது. ஒருவரை மனதில் பகைத்து துவேஷம் செய்யும் எண்ணங்கள் தன்னிச்சையாகவே  வார்த்தையிலும் செயலிலும் பாவத்தைப் பிறப்பிக்கும். இந்த விழிப்புணர்வு ஞானம்.

5. மோகம், கபடம், சினம் போன்ற தீய உணர்ச்சிகளுக்கு ஆட்படாது மனதை நெறிப்படுத்துவது ஞானம். பிறர் விஷயத்தில் ஒருபோதும் பயனின்றி தலையிட வேண்டாம்.

6. மனதை அடக்கி, எண்ணங்களைக் காத்து, புலன்களால் இழுக்கப்படாமல் விலகிநின்று, தெய்வத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து உலகத்தின் நன்மையை நாடி வாழ்வதே ஞானம். 

7. தெய்வ பக்தி, நல் வாழ்க்கை, உண்மை அன்பு இவற்றை உடையவருடன் நெருங்கிப் பழகுவதும், பெரியவர்கள் எதை விரும்பினார்கள், எதை விட்டு விலகிச் செல்கிறார்கள் என்பதை நன்றாகக் கவனித்து அந்தப் பாதையில் செல்வதும் ஞானம்.

8. பிறர் அறியாமல் இரகசியமாகத் திரைக்குப் பின் மறைந்து வஞ்சகமாகத் திட்டமிட்டு அனுபவிக்க நினைக்கும் எந்த சுகமும் நன்மையைத் தராது எனும் தெளிந்த புத்தி ஞானம்.

9. ஒருவர் காரணமின்றி தீங்கு செய்தால் அவர் செய்த தீமைகளைத் திரும்பத் திரும்ப மனதில் எண்ணக்கூடாது. தீயவர் நம் மனதில் எதை உண்டாக்க விரும்புகிறாரோ அதற்கு இடமளிக்காமல் விலகி வாழ்வது ஞானம்.

10. விஷயானுபவங்களை வெறுக்க வேண்டியதில்லை. பற்றுதல் கொள்ளவும் தேவையில்லை. அவைகளினின்றும் மன ஈர்ப்பின்றி  ஒதுங்கிய அளவு மனிதர் விடுதலையாவர். விஷயானுபவங்களால் ஆன்மாவில் துயரம் நிகழ்வதில்லை. அதைக் குறித்த ஆசையும் எதிர்பார்ப்பும் நிறைந்த எண்ணங்களே துயரத்தைத் தருகின்றன.

11. இவ்வுலகத்தில் அடையக்கூடிய மேன்மை ஒன்றே. சத்தியமும் நடுநிலைமையுடன் வாழ்வதும், பொய்யரிடமும் அநீதி செய்பவரிடமும் எவ்விதமான வெறுப்பின்றியும் நடந்து கொள்வதும் ஞானம்.

12. எவர் பிறரிடம் நெறி தவறி நடக்கிறாரோ அவர் தனக்கே கேடு விளைவித்துக் கொள்கிறார். எவர் பிறருக்கு அநீதி செய்கிறாரோ, அவர் தன் சுபாவத்தைத் தீமையாக்கிக் கொண்டு தனக்கே அநீதி செய்து கொள்கிறார். 

13. ஆராய்ந்து உணர வேண்டியது ஞானம் இது : 

  • மனிதர் இறைவனை எவ்விதம் அணுக முடியும்? 
  • தன்னிலிருக்கும் எந்த அம்சம் தெய்வீகமானது? 
  • எந்தச் சூழலில் தெய்வீக உணர்வு மேலோங்குகிறது?

14. ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அறம் சார்ந்து, உண்மையும், எளிமையும், பெருந்தன்மை பொருந்திய முறையில் காலத்தை வீணடிக்காது செய்து முடிப்பது ஞானம். அதை ஜீவகாருண்யம், சுதந்திரம், நீதி, நியாயம் இவற்றைப் புறக்கணிக்காது செய்தல் முக்கியம்.

15. படைப்பின் அழகை உணர்ந்து அனுபவிக்கத் தெரிந்தவர்கள் எதிலும் குற்றம் குறை பார்ப்பதில்லை. ஒவ்வொரு படைப்பும் அதனியல்பில் அழகானது. பதமாக வெந்த சப்பாத்தியில் அங்கங்கே சில கருப்பு புள்ளிகள் கொண்டிருப்பதில் ஒரு தனித்துவ அழகு இருக்கிறது.  அதுவே நம்முடைய சுவை உணர்வைத் தூண்டுகிறது. இயற்கையைப் பற்றிய ஞானம் அடைந்தவர் மாசுபடாத பார்வையைச் செலுத்தி அழகை மட்டும் அனுபவிப்பர்.  இயற்கையின் படைப்பில் பயனற்றது என்று எதுவும் கிடையாது.

*******   *******   *******

குறிப்பு : பேரரசர் மார்கஸ் அரேலியஸ் :

மார்கஸ் அரேலியஸ் ரோமாபுரியில் அரச குடும்பத்தில் பிறந்தவர். அவர் கி.பி. 121 ஆம் ஆண்டு முதல் கி.பி.180 ஆம் ஆண்டு வாழ்ந்தார். மார்கஸ் அரேலியஸ் ரோம் பேரரசர் மட்டுமல்ல மிகச்சிறந்த தத்துவஞானியும் கூட.

மனம் மற்றும் எண்ணம் குறித்த இவரது போதனைகள் உலகப் புகழ்பெற்றவை. ரோமானியர் வரலாற்றில் இவரது ஆட்சி பொற்காலமாகக் கருதப்படுகிறது. ரோமப் பேரரசர்களில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவராகப் போற்றப்படுகிறார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றுப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

துணை நின்ற நூல் : மூதறிஞர் இராஜாஜி அவர்கள் எழுதிய "ஆத்ம சிந்தனைகள்" (வானதி பதிப்பகம்).

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.


சனி, 2 மே, 2020

37. கூடிப் பிரியேல்.

நல்ல நட்பில் நிலைத்திருங்கள்

(ஆத்திசூடி ககர வருக்கம்)



கூடிப் பிரியேல் : "நல்லவர்கள் என்று அறிந்து, உணர்ந்தவர்களின் நட்பில், "எப்போதும் நிலைத்திரு". "பிரிந்து போகாதே".

நல்ல நட்பு வாழ்க்கையை இனிமையாக்குகிறது. நல்ல நட்பு திகைத்துத் தடுமாறும்போது நம்பிக்கை அளிக்கிறது ; நல்ல நட்பு துயரத்தில் ஆறுதல் தருகிறது.

மனதின் காயங்களை ஆற்றுகிறது. தவறான பாதையில் செல்வதைத் தடுத்து நிறுத்துகிறது, முன்னேற்றத்திற்கான ஆலோசனையை வழங்குகிறது, வருத்தங்களில் உடனிருந்து வாடுகிறது.

நல்ல நட்பில் பொறாமையில்லை ; உயர்வில் மகிழ்ச்சியடையும், தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும். நிபந்தனையின்றி மன்னிக்கும். கால நேரம் பார்க்காது தேவையில் உடனிருக்கும்.

அனைத்தையும் நம்பும், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும். இரகசியங்களை வெளிப்படுத்தாது. மானம் காக்கும். முக மலர்ச்சியுடன் தன்னால் இயன்ற உதவி செய்யும்.

எனினும் நல்ல நட்பைப் பெறுவது எளிதன்று.

இன்றைய உலகில் தனது சுயநலத்திற்காக நண்பர்கள் போல ஒட்டிக் கொள்பவர்களே மிகுதி. பணத்திற்காக, பொருட்களுக்காக, தேவைகளுக்காக, சுயலாபத்திற்காக நட்பு பாராட்டுபவர்கள் மிகுந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம்.

கடினமான சூழல்களே நல்ல நட்பை அடையாளம் காட்டும். நல்ல நண்பர்கள் துயரத்தில் நம்முடன் இருந்து தோள் கொடுப்பர்.

நல்ல நட்பு உறுதியான நம்பிக்கை (Trust) என்னும் அஸ்திவாரம் மேல் கட்டப்படுகிறது.

ஒத்த உணர்வு நிலை இருப்பவர்கள் சிறந்த நண்பர்களாக நிலைத்திருக்க முடியும். பெரியாரும், இராஜாஜியும் நேரேதிர் கருத்துடையவர்கள். எனினும் எளிய மக்களின் சமூக முன்னேற்றம் எனும் ஒத்த உணர்ச்சி இருவரையும் இறுதிவரை நண்பர்களாக இனைத்து வைத்தது.

நல்ல நட்பு அமையாவிடினும் பரவாயில்லை; தீய நட்பில் விழாதவாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது உடனிருந்து கொல்லும்.

எவ்வளவு விலைக்கிரயமாயினும் அதைக் கொடுத்து, தீய நட்பை விட்டு விலக வேண்டும். சமூக ஊடகங்கள் வழியாக இனைந்து அந்த நட்பை உண்மையென நம்பித் தங்கள் வாழ்வை இழந்து தவிப்பவர் அநேகர்.

நல்ல நட்பு என்பது Virtual world இல் வாழ்வது அல்ல. சுக துக்கங்களில் உடனிருந்து பொறுப்புகளைச் சுமப்பது. கடினமான வாழ்க்கைச் சூழலில் தனது நேரத்தையும், பொருளையும்,கொடுத்து உடனிருந்து பாதுகாப்பதே உயர்ந்த நட்பு.

இனிக்க இனிக்கப் பேசுபவர்கள்  சிறந்த நண்பர்கள் அல்ல. பேச்சு அல்ல செயல்களே ஒரு மனிதனின் பண்பை வெளிப்படுத்துகிறது.

தீய மனிதர்களை அடையாளம் காண்பிப்பது அவர்கள் செயல்களே.

நம்மைப் பார்க்கும்போது புன்னகைத்து இனிதாகப் பேசி, நாம் இல்லாத இடத்தில் அவதூறாகப் பேசுபவர்கள் வஞ்சகர்கள்.

மகிழ்ந்திருக்கும்போது அல்லது துயரத்திலிருக்கும் போது உல்லாசமான பாவச் செயல்கள் செய்யும்படி தூண்டுபவர்கள் ஏமாற்றுப் பேர்வழி.

ஒரு காரியத்திற்காக இனிமையாகப் பழகி அந்த தேவை முடிந்தவுடன் கண்டும் காணாது செல்பவர்கள் காரியவாதிகள்; சுயநலமுடையவர்கள்.

நமது துயரமான தருணத்தில் போலியாக வருத்தத்தைக் காண்பித்து உள்ளுக்குள் மகிழ்பவர் பொறாமைக்காரர்கள்.

தான் சொல்வதைக் கேட்டால் மட்டுமே நட்பு பாராட்டுபவர்கள் வீம்புக்காரர்.

இனம், மொழி, மதம், சாதி இவற்றிற்காக மட்டும் நட்பு பாராட்டுபவர்கள் பெருமை உணர்வு மிக்கவர்கள்.



திருவள்ளுவர் உயர்ந்த கருத்துக்களைச் சுருக்கமாக ஆனால் ஆழ்ந்த பொருள் பொதிந்த வார்த்தைகளால் விளக்குபவர். ஒரு கருத்தை பத்து குறளில் வரையறுத்துவிடுவார்.

ஆனால் அவரே நட்பைக் குறித்து நேரிடையாக ஐந்து அதிகாரங்கள் எழுதியுள்ளாரெனில் இதன் முக்கியத்துவத்திற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

79. நட்பு,
80. நட்பு ஆராய்தல்,
81. பழமை,
82. தீ நட்பு,
83. கூடா நட்பு

இந்த ஐம்பது குறள்களும் நேரிடையாக நட்பின் இலக்கணத்தை வரையறை செய்கிறது.

அதில் ஓர் அற்புத கருத்தை ஆத்திசூடி ஒற்றை வாக்கியத்தில் சொல்கிறது : "நல்லவரோடு நட்பு பாராட்டி பின் பிரியாதே".

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.