வியாழன், 29 செப்டம்பர், 2022

இந்த கண்கள் மட்டும் உன்னைக் காணும்.

இந்த பூமியே பூவனம்.




வாஷிங்டன் DC: L'Enfant Plaza Metro Station, 12th Friday, January'2007- Morning 7:51. 

L'Enfant Plaza மெட்ரோ நிலையம், ஃபெடரல் வாஷிங்டனின் மையப் பகுதியில் உள்ளது. அது ஒரு குளிர்ந்த காலைப் பொழுது. மெட்ரோ நிலையத்தின் சுரங்கப்பாதை வாயிலில் நின்றபடி, ஒருவர் வயலினை இசைத்தார். சுமார் 43 நிமிடங்கள் ஆறு 'Bach Pieces' இசைக் குறிப்புகளை வாசித்தார். 

ஏறக்குறைய 1,100 பேர் சுரங்கப் பாதை வழியாகக் கடந்து செல்கின்றனர். பெரும்பாலோர் அவசரமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். அநேகர் நடுத்தர அளவிலான நிர்வாகப் பதவியில் இருப்பவர்கள்.

மூன்று நிமிடங்கள் கடந்தது. ஒரு நடுத்தர வயது பயணி இசைப்பதைக் கவனித்தார். நடை வேகத்தைச் சற்று குறைத்து, நின்று சில நிமிடங்கள் கேட்டார். உடனே தமது வேலையைத் தொடரும்படி அவசரமாக அவ்விடம் விட்டு நகர்ந்தார். 

ஒரு நிமிடத்திற்குப் பிறகு, வயலின் கலைஞருக்கு முதல் டாலர் கிடைத்தது. ஒரு பெண்மணி பணத்தை எறிந்துவிட்டு நிற்காமல் தொடர்ந்து நடந்தாள்.

சில நிமிடங்கள் கடந்தது. யாரோ ஒருவர் அவரது இசையைச் சுவரில் சாய்ந்தபடி கேட்டார். சட்டெனத் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மீண்டும் வேகமாக நடக்கத் தொடங்கினார். அவர் நிச்சயமாக வேலைக்குத் தாமதமாகச் செல்வார்.

ஒரு 5 வயது சிறுவன் இசையைக் கேட்டவுடன் ஆசையுடன் நின்றான். அவனது தாய் அவசரமாக அவனைத் தள்ளிக் கொண்டு விரைந்து சென்றார். அந்தக் குழந்தையோ ஆர்வமாக வயலின் கலைஞரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு நகர மறுத்தான். அந்த தாய் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு நகர்ந்தார். ஆனாலும் அந்தக் குழந்தை தொடர்ந்து தலையைத் திருப்பிப் பார்த்த வண்ணம் சென்றான்.

ஆச்சரியமாக, பல குழந்தைகளும் இதே விதமாகவே நடந்து கொண்டனர். விதிவிலக்கு இல்லாமல் அனைத்துப் பெற்றோர்களும், குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இழுத்துக் கொண்டு சென்றனர்.

இசைக் கலைஞர் இசைத்த அந்த 43 நிமிடத்தில், வெறும் 7 பேர் மட்டும் சிறிது நேரம் நின்றார்கள். 27 பேர் அவருக்குப் பணம் கொடுத்தனர், ஆனால் குழந்தைகள் தவிர அனைவரும் தொடர்ந்து தங்கள் வழக்கமான வேகத்தில் கடந்து சென்றனர். அவருக்கு $32 கிடைத்தது.

அவர் இசைத்து முடித்ததும் அந்த இடத்தில் மௌனம் ஆட்கொண்டது. யாரும் கவனிக்கவில்லை. யாரும் கைதட்டவில்லை. எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

அந்த நாளில் அங்கு வாசித்தவர், உலகின் தலைசிறந்த வயலின் இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜோசுவா பெல் (Joshua Bell). அவரை கடந்து சென்ற ஒருவரும் அதை அறியவில்லை. இதுவரை எழுதப்பட்ட இசைக் குறிப்புகளில் மிகவும் சிக்கலான ஒரு சிறந்த பகுதியை அன்று வாசித்தார். அதன் மதிப்பு பல மில்லியன் டாலர்கள் ஆகும்.

சுரங்கப்பாதையில் இசைப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு, பாஸ்டனில் உள்ள ஒரு அரங்கத்தில் ஜோசுவா பெல் அவர்களது இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இருக்கைக்கான நுழைவு சீட்டின்  சராசரி மதிப்பு $100.

இது சமூக பரிசோதனைக்காக நடத்தப்பட்ட ஒரு உண்மை நிகழ்ச்சி. 

மக்களின் அனுமானம் (Perception), விருப்பங்கள் (Desires/Taste) மற்றும் முன்னுரிமைகள் (Priorities) பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக Washington Post பத்திரிக்கை மூலமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சோதனையின் அவதானிப்புகள் (observations) பல கேள்விகளை எழுப்பியது. 

ஒவ்வொரு நாளும் நாமும் இதே விதமாகப் பயணிக்கிறோம். 

இது போல், ஒரு பொது இடத்தில், பொருத்தமற்ற நேரத்தில், நல்லதொரு இசையை இரசிக்க முடிகிறதா? 

அப்படி இரசிக்க முடிந்தால், அதை நின்று கவனித்துப் பாராட்ட முடிகிறதா? 

எதிர்பாராத சூழலில் வெளிப்படும் திறமையை  அங்கீகரிக்கிறோமா?

தெருக் கலைஞர்கள், பார்வையற்ற பாடகர்கள்  நிகழ்ச்சியை நின்று கேட்பது உண்டா? அல்லது வெட்கம் மற்றும் எரிச்சல் ஆகியவற்றின் கலவையான உணர்வுகளுடன் அவசரமாக ஒதுங்கிச் செல்கிறோமா? 

இயற்கை அழகை இரசிக்க நேரம் இருக்கிறதா?  அல்லது எது தடுக்கிறது? 

இது போன்ற தருணத்தில் நாம் செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு என்ன? 

பெரும்பாலோர் இது போன்ற நிகழ்வுகள் நேரத்தை வீணடிப்பதாக எரிச்சலாகின்றனர்.

சிலர் நாகரீகமாக இருப்பதாகக் கருதி பணத்தை வீசுகிறார்கள்.

முக்கியமாகப் பணம் சம்பாதிப்பதற்காக ஓடுவதால் அழகுணர்வு, இரசனை இவற்றை நாம் நிறைய இழந்து விட்டோம்.

இந்த சோதனையின் முடிவுகளிலிருந்து எழும் சாத்தியமான கேள்வி: 

உலகின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவரது இசையை, இதுவரை எழுதப்பட்ட இசை குறிப்புகளில் மிகச் சிறந்த ஒரு நுட்பமான குறிப்பை, மிக அழகான இசைக்கருவிகளில் ஒன்றின் வழியாக இசைத்தாலும் நமக்கு நின்று பொறுமையுடன் அதை இரசிக்க ஒரு தருணம் இல்லையென்றால், 

விரைந்து செல்லும் வாழ்க்கையில் இன்னும் எத்தனை அழகிய விஷயங்களைப் பார்க்க, இரசிக்க, அனுபவிக்கத் தவற விட்டு இழந்து நிற்கிறோம்?

கவிஞர். வைரமுத்துவின் இந்த பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. 

நிலா காய்கிறது,
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே..,
இந்த கண்கள் மட்டும் உன்னைக் காணும்.

இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களைத் தேடுங்கள்

இதே கருத்தை வலியுறுத்தி, W.H. Daves அவர்களால் எழுதப்பட்ட சிறு கவிதை: "The Leisure அதன்  மையப் பொருள்:

What is this life if, full of care, 
We have no time to stand and stare.

உண்மையில் குழந்தைகள் இயற்கைக்கு மிக நெருக்கமானவர்கள். 

இயற்கை அழகை ரசிக்க, சிறந்த கலைகளை வியந்து பார்க்கக் குழந்தை மனம் வேண்டும்.

To read the full story with video:

https://www.washingtonpost.com/lifestyle/magazine/pearls-before-breakfast-can-one-of-the-nations-great-musicians-cut-through-the-fog-of-a-dc-rush-hour-lets-find-out/2014/09/23/8a6d46da-4331-11e4-b47c-f5889e061e5f_story.html

படம் இணையத்திலிருந்து நன்றியுடன்:

சனி, 24 செப்டம்பர், 2022

மனதில் உறுதி வேண்டும்.

மனம் வலிமை அடைய உதவும் 

8 - பழக்கங்கள்

(Eight habits that help become mentally strong.) 



புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக வேலை செய்யும் சூழல் அடிக்கடி மாற்றம் பெறுகிறதுபல சமயங்களில் கஷ்டப்பட்டு உழைத்தாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிவதில்லை. உடன் பணிபுரிபவர்களுடன் உறவுகளைப் பேணுவதும் கடினமாக இருக்கிறது.

அத்துடன் அன்றாடக் குடும்பத் தேவைகள் பாரமாக அழுத்துகிறது. அனுதினம் பல எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்க்கை எளிமையாக இல்லை. அது ஒரு சவாலாக இருக்கிறது. பலருக்கும் இந்த சவாலைச் சந்திக்கத் தயக்கம். போட்டியை எதிர் கொள்ளப் பயம். தோல்வியைக் கையாள இயலாத நிலைஇது விரக்தியை ஏற்படுத்துகிறது.

இந்தச் சூழலை எதிர் கொள்ள மன வலிமை தேவை. வெற்றி பெறுவதற்கு நம் மீதும், நமது திறன்களின் மீதும் நம்பிக்கை வைத்து, இழந்த மன உறுதியை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம். பிறக்கும் போதே தைரியம், தன்னம்பிக்கை ஒட்டிக் கொண்டு யாரும் பிறப்பதில்லை. அதற்காக அர்ப்பணிப்புடன் நேரம் ஒதுக்கி முயற்சி செய்தால் இந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும்

இந்த கட்டுரை மனம் வலிமை பெற உதவும் 8  பண்புகளைக் குறிப்பிடுகிறது. 

குறிப்பாக நீங்கள் பணியிடத்தில் மனரீதியாக வலுவாகவும், சுயச்சார்பு உடையவராக்கவும் வளர இந்த பண்புகள் உதவலாம்.

1. சுய கட்டுப்பாடு அவசியம் -(Engage in self-discipline): 

வெற்றிகரமாகச் செயல் புரிவதற்கு ஓர் ஒழுங்கு முறையில் செயல் புரிவது அவசியம் (Organized). வெற்றிகரமான நபர்கள் தங்கள் வேலையைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள். அந்தப் பணியை முழுமையாக முடிக்கும் வரை அவர்கள் கவனம் சிதறாது (Concentration). எதையும் அலட்சியமாக அல்லது அரை குறையாகச் செய்ய மாட்டார்கள்.

அடுத்ததாக, பணியில் ஏற்படும் தோல்விக்கு மற்றவர்களைக் குறை கூறி தப்பிக்கக் கூடாது. பிறர் மீது எளிதாகப் புகார் கூறி சில காலம் ஓட்ட முடியும். ஆனால் அது நீண்ட காலத்திற்கு உதவாதுவாழ்க்கையில் முன்னேற விரும்பினால் செயலுக்கான விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் (Responsibility).

செய்ய வேண்டிய பணிகளில்எது முதலில் செய்ய வேண்டியது, பின்னர் எவை என வரிசைப் படுத்திப் பணி புரிவது அவசியம் (Priority).

செய்ய வேண்டிய பணியின் செயல் வழி முறைகளை முன் தயாரிப்பு செய்வது அவசியம் (Preparations). ஒழுங்கு முறையுடன் பணி புரிவதைக் கவனமாகத் தொடர்ந்து பின் பற்ற வேண்டும். அது இயல்பான  பழக்கமாக மாற வேண்டும்இதனால் செய்யும் வேலையில் எதிர்பாராத தவறுகள் நிகழாது.

இவை பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்க உதவும். ஒழுங்கு முறையுடன் பணி செய்யும் பண்பை நேரம் ஒதுக்கித் தொடர் முயற்சி செய்தால் வளர்த்துக் கொள்ள முடியும். 

2. பாதுகாப்பு  வளையிலிருந்து வெளியேறவும் - (Step out of your comfort zone): 

கப்பல் துறைமுகத்தில் நிற்பது பாதுகாப்பானது தான்ஆனால் அது  அதற்காகக் கட்டப்படவில்லை

நமக்குப் பாதுகாப்பானதாக உள்ள குழுவுடன் இருப்பதால் வசதியாக உணரலாம். ஆனால் அங்குதான் நமது திறன் மற்றும் வளர்ச்சிக்குத்  தடையைப் போடுகிறோம்.

இதன் விளைவாக நமக்குப் பழக்கமில்லாத  சூழ்நிலை அல்லது  ஒரு பணி கொடுக்கப் படும் போது அப்படிப்பட்ட திடீர் நிகழ்வை எதிர் கொள்ள முடியாமல் தவிக்க நேரிடுகிறது. மனதில் ஒரு பாரம் ஏற்படுகிறது. அதைக் கையாள முடியாமல் தோல்வி அடைய நேரிடுகிறது.

இதற்குத் தீர்வு, நம்மைப் பயமுறுத்தும் சிறிய விஷயங்களைச் செய்வது. அங்கிருந்து தொடங்கி மனதில் நம்பிக்கையை உருவாக்குவது.  

தனியாகப் பயணம் செய்யப் பயப்படுகிறீர்கள் என்றால் முதலில் சிறிய தொலைவு பயணம் மேற்கொள்ளவும். சக ஊழியர்களுடன் வெளிப்புறப் பணிகளுக்குச் செல்லுங்கள். அலுவலக பணி முறைகளை முயற்சி செய்து கற்றுக் கொள்ளுங்கள்

முக்கிய விஷயம் என்னவென்றால், அச்சங்களை மேற்கொள்வது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் எல்லாவற்றையும் செய்யத் துணிவு பெறுவீர்கள்.

3. தவறுகளை உணர்வது தவிர்க்கக் கற்பது - (Realize your mistakes and find ways to improve) 

வெற்றிகரமாக வளர உதவும் மற்றொரு பழக்கம்  தவறுகளைப் பகுப்பாய்வு செய்வதாகும்சில நேரங்களில் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாதுஆனால் அவற்றுக்கான நமது  எதிர்வினை தான் மிக முக்கியம். 

தவறுகளின் பின் விளைவுகளைக் கண்டு பயந்து ஓடி ஒளிவது அல்லது அதை மறைப்பது பலவீனத்தையே தரும். எந்த இடத்தில் தவறு செய்கிறோம் எனப் புரிந்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் அதே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்ய நேரிடும். இறுதியில் தன்னம்பிக்கையை இழப்போம்எனவே தவறு நிகழ்ந்த ஒவ்வொரு சூழ்நிலையையும் கவனமாக உங்கள் பார்வையிலிருந்து ஆராய்ந்து பாருங்கள்.

எதனால் தவறு நிகழ்கிறது, அது எங்கிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டறிய முயலவும். அதனால் அடுத்த முறை அதே போன்றதொரு சூழ்நிலையை எதிர் கொள்ளும் போது எப்படி செயல் புரிய வேண்டும் என அதிக நிச்சயமாகத் தெரியும். இது புத்தியுடன்  நடந்து கொள்ள உதவுகிறது.

4. ‘இல்லைஎன்று சொல்லிப் பழகுங்கள் - (Practice saying ‘NO’):

'இல்லை' என்று சொல்வது' எளிதானது போலத் தோன்றினாலும் சில சூழ்நிலைகளில் அது மிகக் கடினமானதுகுறிப்பாக உங்கள் மேலதிகாரியின் கருத்தை மறுப்பது எளிதானதல்ல. நீங்கள் புதிதாக பணியில் சேர்ந்தவர் அல்லது இளகிய மனம் படைத்தவராக இருந்தால் இல்லை என்று சொல்லத் தயங்குவீர். 

நீங்கள் எந்த வேலை செய்யச் சொன்னாலும் மறுக்கமாட்டீர்கள் எனும் உங்கள் இயலாமை விரைவில் எல்லோருக்கும் தெரிய வரும். இதன் விளைவாக, நீங்கள் செய்யத் தேவை இல்லாத பணிகள் உங்கள் மீது விழும். இது தேவையற்ற கடினமான சூழலில் உங்களைச் சிக்கித் தவிக்க வைக்கிறது. 

அதனால் மற்றவர்கள் உங்கள் நேரத்தையும், முயற்சியையும், ஆற்றலையும் பயன்படுத்தி அவர்களது தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதைக் காணலாம்.

ஒவ்வொரு முறையும் 'ஆம்' என்று சொல்வது மிகவும் ஆரோக்கியமற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்உங்களால் முடியாதவற்றை ‘முடியாது’என்று சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. நச்சு உறவுகளிலிருந்து விலகி ஓடுங்கள் - (Distant yourself from toxic relationships):

உறவுகளில் மிக மிகக் கடினமானது சுய நல விரும்பிகளுடன் பழகுவது. அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எவரையும் பலி கொடுக்க தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு நன்கு நடிக்கத் தெரியும். அவர்கள் விரும்பும் சூழலைச் சுலபமாக உருவாக்கி விடுவார்கள்மிகச் சுலபமாக  மற்றவர்கள் மீது பழி சுமத்தி விடுவார்கள். இவர்கள் நச்சுத் தன்மை உடையவர்கள். இவர்களுடன் பழகுவது பாம்புடன் பழகுவதற்குச் சமம்.

நச்சுத்தன்மையுள்ளவர்களால் உங்கள் ஆற்றலை அழித்து விட முடியும்நீங்கள் அறியாத வகையில் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை  நுட்பமாக அறிந்து கொள்வார்கள். பின்னர் அவர்கள் நினைப்பதை உணர்ச்சிகரமான வகையில் ஏமாற்றி அல்லது பயமுறுத்திச் சாதித்துக் கொள்வார்கள்

அதை நீங்கள் உணரும் போது மனம் உடைந்து விடும். அதைக் கண்டு உணராமல் இருந்தது உங்கள் தவறு. அதற்காக அவர்களைக் குறை கூற முடியாது. விழிப்புடன் இருப்பது நமது பொறுப்பு.

அதைப் போல நம்முடன் நீண்ட கால தொடர்பில் உள்ள சில நபர்கள் காலப் போக்கில் நமது "தவிர்க்க முடியாத பலவீனமாக" மாறி, நம்மைப் பயன்படுத்திக் கொள்ள விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள்

இத்தகைய நச்சு உறவுகள் ஏற்படுத்தும் பாதிப்பு கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கி விடும். பின்னர் அது நீண்ட கால துயரமாக ஆகி உங்கள் மனதில் ஆறா காயமாக மாறிவிடும். 

எனவே, உங்கள் மன அமைதிக்காக நட்பு/உறவுகளை மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியம்நீங்கள் அதைப் புறக்கணித்தால், காலப்போக்கில் சரி செய்ய முடியாத அளவு சேதம் ஏற்பட்டு விடும். 

உங்கள் நட்பு/ உறவு வட்டத்தைச் சுத்தம் செய்வதன் மூலம், உங்கள் ஆற்றலை மேம்படுத்த முடியும்உறவுகளை வைக்க வேண்டிய தூரத்தில் வைத்தால்நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை நீங்கள் விரும்பும் வகையில் செய்திட போதுமான சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்கும்

6. உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்ளவும். (Learn your strengths and weakness and try to play around with it.

புத்திசாலித்தனமான மனதை உடையவர்கள் வாழ்க்கை அவர்களை நோக்கி வீசும் எந்த சவால்களையும் சந்திக்க நன்கு தயாராக உள்ளனர்

ஏனெனில் அவர்களுக்கு தங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என்பது நன்கு தெரியும். அவற்றை தங்கள் நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.

"என்னை யாராலும் வெல்ல முடியாது" என்று நினைப்பது முட்டாள்தனம். அத்தகைய மனநிலை உங்களை ஒரு பெரும் வீழ்ச்சிக்கு (மனதளவில்) தயார்ப் படுத்துகிறது. வீழ்ந்த பின்னர் மனதை உடைவிலிருந்து மீட்டெடுப்பது எளிதானதல்ல.

உங்கள் பலவீனங்கள் எவை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். திரும்பத் திரும்பச் செய்யும் தவறுகள் அனைத்தும் ஆழ் மனதில் இன்பமாக  / இயலாமையாக உணர்வதால் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறதுஉங்கள் தோல்விகளைப் பகுப்பாய்வு செய்து குறை (weakness) எது என உணர்ந்தால் மட்டும் போதாதுஅதை ஏற்றுக் கொண்டு, சரி செய்யக் கற்றுக்கொண்டால் மட்டுமே சாதிக்க முடியும்.  

7. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள் - (Keep your emotions in check):

உணர்ச்சிவசப்படுவது இயல்பானது. கட்டுப்பாடு  மிக்கவராக இருப்பதற்காக, உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் மறைக்க வேண்டாம். உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள்சில சமயங்களில், அடக்கப்பட்ட உணர்வை வெளியிடுவது மனதிற்கு நிவாரணம் தருகிறது

மனதின் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கவும் உதவுகிறது. மேலும் மனம் வலிமை அடைகிறதுஉள்ளத்தின் உணர்ச்சிகளை வரம்பு மீறி அடக்கும் போது முடிவு செய்யும் திறன் பாதிக்கப்படுகிறது. எதிர்வினை உணர்ச்சியற்றதாக இருக்கக்கூடாது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் உங்களுக்கு எதிரிடையான செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். 

உண்மையில், மனரீதியாக வலிமையானவர்கள் மீண்டும் மீண்டும் எப்படி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மற்றவர்களை விட அதிக உணர்ச்சி வசப்படுவார்கள்

8. பெரிய சவால்களைப் பகுதிகளாகப் பிரிக்கவும் - (Break down challenges into parts) 

எப்பொழுதும் பெரிய திட்டப் பணிகள் மலைப்பாக இருக்கும். அதை முழுவதுமாகப் பார்ப்பது பயமுறுத்தலாம்

பெரும் பணிகளை முதலில் சிறு சிறு வேலையாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு சிறிய வேலைக்கும் நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்

அடைய வேண்டிய இலக்கை அடைவதற்குத் தேவைப்படும் கால அட்டவணைகள் உருவாக்க வேண்டும்ஒரு நேரத்தில் ஒரு பகுதியில் மட்டுமே கவனம் செலுத்தினால், நீங்கள் நீண்ட தூரம் செல்லலாம்

சிறிய வேலைக்கு ஒதுக்கப் பட்ட கால அளவில் அதை முடிப்பது எனும் திட்ட அளவில் மட்டும் கவனமாகச் செயல் புரியு வேண்டும்தீவிர முயற்சிகள், கடின உழைப்பு, நேர நிர்வாகம் செய்தால் படிப்படியாகச் சென்று இறுதி இலக்கை  அடைய முடியும்.  


Written based on the article influence with thanks: 8 habits that help become mentally strong written by Rachna : https://www.pixstory.com/story/habits-that-help-become-mentally-strong/139621

படம் இணையத்திலிருந்து நன்றியுடன் .


ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

44. சக்கர நெறி நில்

தர்மத்தை உறுதியாகக் கடைப்பிடி 

( ஆத்திசூடி - சகர வருக்கம்)


சக்கர நெறி நில்: இந்த வரிகளில் ஔவையார், சக்கரத்தை அறத்திற்கு உருவகமாகக் குறிப்பிடுகிறார். 

சக்கரத்தின் மைய அச்சு ஆரங்களை இணைக்கிறது. ஒவ்வொரு ஆரமும் மையத்துடன் நன்கு பொருந்தி இருக்க வேண்டும். அப்போது தான் சக்கரம் சிறப்பாகச் சுழலும்.

அது போல மனதின் மையமாக அறம் இருக்க வேண்டும். வாழ்வின் அனைத்து செயல்பாடுகளையும் அறம் இணைக்க வேண்டும். அப்போது வாழ்க்கை சக்கரம் மிகச் சிறப்பாக இயங்கும். 

நீதியின் பாதை:

இந்த உலகில் நாம் பயணிக்க இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று மிக நெருக்கமான பாதை. மற்றொன்று விசாலமான வழி.

நெருக்கமான பாதையில் பயணிப்பது என்றால் என்ன?

அது நம் மனம் போன போக்கில் வாழாமல் அறம் சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கை முறை. நமது விருப்பங்களை விட வேத நூல்களில் உள்ள கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்து நடப்பது முதன்மையானது. இதற்கு இறையருள் தேவை. 

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து மிகத் தெளிவாக, வேத நூல்களில் எழுதப்பட்டுள்ளது. அவைகளை அனுதினம் வாசிக்க வேண்டும். மனதில் பதிய வைக்க வேண்டும். இறை வேண்டுதல் செய்ய வேண்டும். அப்போது நம்மால் நீதியின் பாதையில் நடக்க இயலும்.

மனம் ஒரு நிலம்:

நல்ல மகசூல் பெற நிலம் நன்கு ஆழமாக உழப்பட வேண்டும். தேவையான உரம் இட வேண்டும். நல்ல தரமான விதைகள் விதைக்கப் பட வேண்டும். சரியான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். அந்த தோட்டம் பாதுகாக்கப் பட வேண்டும். 

வேத வார்த்தைகள் விதையைப் போன்றது. அதில் உயிர் இருக்கிறது. மனம் நிலத்தைப் போன்றது. மனதில் அறம் சார்ந்து கருத்துக்கள் பதியப் பட வேண்டும். மனம் நல்ல முறையில் பராமரிக்கப் பட வேண்டும். பாதுகாக்கப் பட வேண்டும். களைகள் முளைப்பதற்கு இடம் தரக் கூடாது.

அப்போது நற் பண்புகள் வாழ்வில் வெளிப்படும். நம்மைச் சுற்றி வாழ்பவர்க்கு நற்கனி தரும் மரம் போல இருப்போம். 

பொன் புடமிடப் பட வேண்டும்:

நீதியின் பாதையில் நடப்பது என்பது எளிதானதல்ல. பல துன்பங்களுக்கு ஆளாக வேண்டி வரும். அவமானம் சந்திக்க நேரிடும். தனிமைப் படுத்த படும் சூழல் உருவாகலாம். இவை அனைத்தும் நம்மைச் சுத்திகரிக்க நிகழ்பவை. அர்ப்பணிப்பு, விடா முயற்சியுடன் தொடர்ந்தால் சத்தியத்தின் பாதையில் நடப்பது சாத்தியமே.

பொன் நெருப்பில் புடமிடப்படுவது போல நமது கசடான பண்புகள் நீக்கி சுத்த தங்கம் போல மாற வாழ்வின் துயரங்கள் நமக்கு உதவுகிறது. 

ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தக் கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கையை  வாழ விரும்புவதில்லை. ஆதலால் இவ்வுலகில் அறம் சார்ந்து வாழ்பவர் எண்ணிக்கை எப்போதும் மிகச் சொற்பமாகவே இருக்கிறது. 

தங்கம், வைரம் போன்ற மதிப்பு மிக்கவை எளிதில் கிடைக்காது. அரிதாகக் கிடைப்பவையே இந்த உலகில் மிக மதிப்பு மிக்கதாகக் கருதப் படுகின்றது. ஆகவே சொல்லவோ எழுதவோ தேவையில்லை.  அறம் சார்ந்து வாழ்பவர் எப்போதும் மதிப்பு மிக்கவர்களாக மிக மேன்மையுடன் இருக்கின்றனர்.


சில தொடர்புடைய மேற்கோள்கள்:

மனதில் குற்றமான நோக்கமே இல்லாமல் செய்கின்ற நல்ல செயல்கள் தான் அறம். - திருக்குறள்.

அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளை  துணிந்து செய்வோம். - ஆபிரகாம் லிங்கன்.

குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும். - ஜான் டிரைடன்.

அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லாதீர். ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க. - லியோ டால்ஸ்டாய்.

அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. - பிரான்சிஸ் பேகன்.

ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது. - மாரிஸ் மாட்டர்லிங்க்.

எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. - ஜான் ரஸ்கின்.

அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும். -பாஸ்கல்.

தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம். - பித்தாகோரஸ் .

கடவுள் ஆன்மாவைப் புழுதியில் புதைத்திருப்பதெல்லாம் அதன் மூலம் தவற்றினூடே  உண்மைக்கும், குற்றத்தினூடே அறத்திற்கும், துன்பத்தினூடே இன்பத்திற்கும் வழி திறந்து செல்வதற்காகவேயாகும். - எங்கல்.

உலகின் கறை படியாமல் உனது நற்குணத்தால் ஆன்மாவை தூய்மையாக  காத்துக் கொள்ளவும். -பெய்லி.


படம் இணையத்திலிருந்து நன்றியுடன் .

Quotes are taken from with thanks:  https://ta.wikiquote.org/s/2ic