புதன், 19 ஏப்ரல், 2023

ஏழு ஜப்பானியக் கோட்பாடுகள்.

வாழ்வு மேம்பட..,


புதிய தரிசனங்களைக் கண்டடைய, மேம்பட்ட நிலையை அடைந்திட, உதவி செய்யும் ஏழு ஜப்பானியக் கோட்பாடுகள்.

1. Ikigai: வாழ்வின் நோக்கம்:

உங்கள் நோக்கம் என்ன?

''Ikigai'' எனும் ஜப்பானியச் சொல்லிற்கு, "நமது இருப்பிற்கான காரணம்" அல்லது "வாழ்க்கையில் நோக்கம்" எது; என ஆராய்ந்து பார்ப்பது என்று புரிந்து கொள்ளலாம். 

தினமும் காலையில் எழுந்தவுடன், இன்று என்ன செய்யப் போகிறோம் எனும் சரியான நோக்கத்தை அறிவது.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதைச் செய்வதில் சிறந்தவர், அதனால் இந்த உலகிற்கு என்ன பயன், அதன் வழியாக வருமானம் கிடைக்குமா என்பதன் கூட்டுச் சேர்க்கை இது.



உங்கள் ''இகிகாயை'' அடையாளம் காண்பதன் மூலம், நீங்கள் பயணிக்க வேண்டிய திசையை உங்களால் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

  • வாழ்க்கையில் உங்களுக்கான நோக்கத்தைக் கண்டறியவும்.
  • ஒவ்வொரு காலையிலும் நீங்கள் விழிப்பதற்கான சரியான காரணத்தை உறுதி செய்து கொள்ளவும். 
  • உங்கள் பலம், உணர்வுப்பூர்வமான ஈடுபாடு (Passion) இருக்கும் ஒரு பணியைத் தெரிவு செய்யவும்.
  • அது உலகத்தின் தேவைகளுக்கு உபயோகமாக இருக்க வேண்டும்.
  • அந்த பணி, வருமானத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்.
  • அப்போது வாழ்க்கை அர்த்தம் அடைகிறது.

2. Shikata ga nai: மாற்ற இயலாதவை:

''Shikata ga nai'' என்பதற்கு, "அதற்கு மேல் அதை ஒன்றும் செய்ய முடியாது" அல்லது "இதற்கு எந்த மாற்று வழியும் இல்லை" என்று பொருள்.

இது நம்மால் மாற்ற முடியாத துன்பங்களை எதிர்கொள்வது, அவற்றை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை வலியுறுத்துகிறது. 

ஆனால், இது பொறுப்புகளைத் துறந்து தப்பி ஓடுவது அல்ல. 

சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்வது. 

அத்துடன், அதை ஏற்றுக் கொண்டு, அச் சூழலைக் கடந்து, முன்னேறுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது.

  • உங்களால் மாற்றமுடியாத மனிதர்கள், விஷயங்களை விட்டு விடுங்கள்.
  • சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 
  • அதனால் குறையொன்றுமில்லை. வருத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை.
  • உங்களால் கட்டுப்படுத்தக் கூடியதைத் திறம்பட நிர்வகியுங்கள். 
  • உங்களால் எதைச் சிறப்பாக மாற்றி அமைக்க முடியுமோ, அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறுங்கள்.

3. Wabi-Sabi: குறைகளில் வசீகரம்:


இந்த கருத்து, முழுமை அற்றதில் உள்ள அழகியல் (beauty of imperfection), நிலையற்ற தன்மை (transience) மற்றும் இயற்கை உலகின் படைப்புகள், ஆகியவற்றை அவை இருக்கும் வண்ணமாகவே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை (attitude)  குறிப்பிடுகிறது.

இது, ஆபூரண (imperfect), முழுமையற்ற (incomplete) மற்றும் கடந்து செல்லும் நிலையற்றவற்றில்  (transience)  உள்ள அழகைக் கண்டறிவது.

வாழ்க்கையின் எளிமையான, அலங்காரமற்ற மற்றும் இயற்கையான கூறுகளை மதித்து, அவற்றைப் பாராட்ட ''வாபி-சபி'' நம்மை ஊக்குவிக்கிறது.


Wabi Sabi

  • அபூரணத்தில் அமைதியைக் கண்டறியவும்.
  • வாழ்க்கையில் எதுவுமே பரிபூரணமானதல்ல என்பதை உணருங்கள். இதில் நாம் அனைவரும் அடக்கம்.
  • எதுவும் நிலையற்றது; நிரந்தரமற்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • குறையற்ற தன்மை அடைய வேண்டும் எனப் பாடுபடுவதற்குப் பதிலாக, வாழ்க்கையைத் தனித்துவமாக்கும் குறைபாடுகளில் மகிழ்ச்சியைக் காணவும்.

4. Gaman: எதிர்வினை: 


"காமன்'' என்பது கடினமான சூழ்நிலைகளிலும் கூட விட்டுக்கொடுக்காமல் வலுவாக இருப்பது. 

சகிக்க முடியாத சூழலில், அதைப் பொறுமையுடன் கண்ணியத்தை விட்டுக் கொடுக்காமல் எதிர் கொள்வது என்றும் புரிந்து கொள்ளலாம். 

“Between stimulus and response there is a space. In that space is our power to choose our response. In our response lies our growth and our freedom."  - Viktor E. Frankl. (in his book Man's Search for Meaning).

"பிறர் தூண்டுதல் மற்றும் அதற்கு நாம் ஆற்றும் எதிர்வினை இவற்றிற்கு இடையே ஒரு சிறு கால இடைவெளி உள்ளது. அந்த நேரத்தில், நமது மிகச் சிறந்த பதிலைத் தேர்ந்தெடுப்பதுவே சக்தி. அந்தப் பதிலில் தான் நமது வளர்ச்சியும் சுதந்திரமும் இருக்கிறது." - Viktor E. Frankl.

இந்த கோட்பாடு, கஷ்டங்கள் அல்லது துன்பங்களை எதிர்கொள்வதில் சோர்வுறாது, விடாமுயற்சியுடன் தொடர வேண்டும் என கற்றுத் தருகிறது. 

அத்துடன் பின்னடைவை வலிமையாக எதிர் கொள்வது மற்றும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இதன் மூலம், உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், உங்களை வழி நடத்தும் மன வலிமை மற்றும் தைரிய உணர்வை வளர்த்துக் கொள்ளலாம்.
  • கடினமான சூழ்நிலைகளில், நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதைக் கவனித்து, தேவையெனில் கட்டுப்படுத்தவும்.
  • நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, பொறுமையுடனும் அணுகவும்.
  • உங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்கவும்.
  • வெட்கத்தை எதிர்கொண்டாலும், உணர்ச்சிவசப்படாமல், முதிர்ச்சியையும், சுயக்கட்டுப்பாட்டையும் உங்கள் நடத்தையில் வெளிப்படுத்தவும்.
  • நினைவில் கொள்ளுங்கள்; உங்கள் அணுகுமுறையையும், நீங்கள் பதில் சொல்லும் விதத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும்.
  • பொறுமை, மீண்டு எழும் உத்வேகம், புரிந்து கொள்ளும் திறன், இவற்றை எப்போதும் விட்டு விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. Oubaitori: தனித்துவம்:


இது ஒரு ஜப்பானிய பழமொழியாகும். வசந்த கால மரங்களில் பூக்கும் செர்ரி, பிளம், ஆப்ரிகாட் மற்றும் பீச் ஆகிய நான்கு மரங்களின் வேறுபட்ட தன்மையிலிருந்து உருவான கருத்தாக்கம். 

நீங்கள் ஒருபோதும் உங்களை வேறொருவருடன் ஒப்பிடக் கூடாது. அதற்கு அவசியம் இல்லை என்பது அதன் சாரம்சம். 

ஒவ்வொரு பூவும் அதன் சொந்த நேரத்தில் பூக்கும். அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. அதுபோல, ஒவ்வொரு நபரும் தனது சொந்த பாதையைத் தீர்மானித்து, உத்வேகம் பெற்று,
தமது பயணத்தைத் தொடர வேண்டும்.

  • உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். 
  • ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காலவரிசை மற்றும் தனித்துவமான பாதை உள்ளது.
  • மற்றவர்களுடன் ஒப்பிட்டு உங்களை அளவிட முயல்வதை விட, உங்கள் சொந்த முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி, உங்களது பாதையில் பயணிப்பது முக்கியம்.

6. Kaizen: தொடர் மேம்பாடு:


"கைசென்"  என்றால், "தொடர்ந்து முன்னேறுதல்" என்று பொருள்.

இது தனிப்பட்ட வளர்ச்சி முதல் அலுவலக செயல்பாடுகள் வரை, உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், நீங்கள் அடைய விரும்பும் நீண்ட கால முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், சிறு, சிறு மாற்றங்கள் அல்லது நிலையான மேம்பாடுகளைத் தொடர்ந்து செய்வதன் வழியாகச் சாதிக்க முடியும் எனும் கருத்தாக்கம்.
  • நீங்கள் மேம்படுத்த விரும்பும் பல பகுதிகளைக் கண்டறியவும்.
  • ஒரே நேரத்தில் அவற்றில் பெரிய மாற்றங்களை அடைய முயல்வதை விட, முக்கியமாக அடைய வேண்டிய ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
  • உங்கள் இலக்குகளைச் சிறிதாகவும், நிறைவேற்றக்கூடிய சிறு, சிறு செயல்களாகவும் பிரித்துக் கொள்ளுங்கள்.
  •  அவற்றில் தொடர்ந்து கவனமாக ஈடுபட்டு அச் செயல்களை முடியுங்கள். 
  • அடையும் வெற்றிகளைக் கொண்டாடி, அவற்றைத் தொடர் உந்துதலாகப்  பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் முன்னேற முயலுங்கள். 
  •  சிறிய மாற்றங்கள் கூட காலப்போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

7. Shu-Ha-Ri: கற்றுக்கொள் - பரிசோதித்து பார் - சிகரம் தொடு.

Shu-Ha-Ri என்பது தொழில், கல்வி மற்றும் தனிப்பட்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய தற்காப்புக் கலைக் கருத்தாகும். 

இது ஒரு நுட்பத்தை எவ்வாறு கற்றுக்கொள்வது, அதில் எவ்விதம் தேர்ச்சி அடைவது, அதன் உன்னத நிலையை அடையும் வழிமுறைகள் பற்றிய பல்வேறு  நிலைகளைக் குறிக்கிறது.

Shu-Ha-Ri மூலம், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வளர்க்கக் கூடும். அதே வேளையில் நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பான தேர்ச்சியும் பெறலாம். 

அந்த உன்னத ஞானத்தை அடைவதற்கு மூன்று அறிவு நிலைகள் உள்ளன. 

1.  Shu: Follow the Rules: விதிகளைப் பின்பற்றவும்:

முதல் நிலையில், ஒருவர் தனது சொந்த வழிமுறை அல்லது அணுகுமுறையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக, பாரம்பரியத்தைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும், மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர வேண்டும். 
  • இது ஒரு குருவின் போதனையைப் பின்பற்றுவதன் மூலம் அடிப்படை உபதேசங்களைக் கற்றுக்கொள்ளுதல். 
  • மகா குருக்களைப் பிரதிபலிப்பதும் இந்த கட்டத்தில் நிகழ்கிறது.
2. HA: Break the Rules: விதிகளை உடைக்கவும்:

இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட திறன் அல்லது துறையின் அடிப்படைகளை கற்று தேர்ச்சி பெறுவது. 

ஓர் உறுதியான அடித்தளத்தை பெற்றவுடன், புதிய அணுகுமுறைகள் மற்றும் மேம்படுத்தும் யோசனைகளை பரிசோதித்து ஆராயத் தொடங்குவது. 
  • குருவிடமிருந்து கற்று தேர்ச்சி பெறுதல்.
  • அதை  ஒருங்கிணைத்து பயிற்சி செய்தல்.
  • மேம்படுத்த புதிய வழி முறைகளை ஆராய்தல்.
3. RiTranscend the Rules: உங்கள் சொந்த விதிகளை உருவாக்கவும்:

இறுதியாக, நீங்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில், உங்களுடைய தனித்துவமான பாணி அல்லது அணுகுமுறையை உருவாக்குங்கள். 

இந்த நிலை, நீங்கள் கற்றதைப் பல வகைப்பட்ட மாணவர்களும், பயன் படுத்தும் விதமாக, புதிய யுக்தியை உருவாக்கும் திறனை மையமாகக் கொண்டுள்ளது.
  • மாணவர் தயாராக இருக்கும்போது ஆசிரியர் தோன்றுவார். மாணவர் உண்மையிலேயே ஆயத்தமாக இருக்கும் போது ஆசிரியர் மறைந்து விடுவார். -Tao Te Ching.

படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

புதன், 12 ஏப்ரல், 2023

மௌனம் நல்லது.


 

நம் சிந்தைகளின் நிறைவு வார்த்தைகளில் வெளிப்படுகிறது. பேசுவதைக் குறித்த சில நீதி மொழிகள்:

அளவுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.  

வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.

தம் நாவைக் காத்துக் கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்பவரே மெய்யறிவாளர், 

வாழ்க்கையில் சில கடினமான சூழல்களை தவிர்க்க முடியாது. நாம் மனம் திறந்து பேசும் படி நிர்ப்பந்திக்கப்படும் அத்தகைய தருணங்களை அடையாளம் காணவும், அதைக் கவனமாக எதிர் கொள்ளவும் உதவும் சில குறிப்புகள் உங்கள் பார்வைக்கு. 

1. குழப்பமான மனநிலையில்:

உங்களுக்குத் தெளிவாகச் சிந்திப்பதில் சிக்கல் இருக்கும்போது பேசாமல் இருப்பது நலம். 

குழப்பமான மன நிலைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். சோர்வாக இருக்கக் கூடும். வேறு ஒருவர் ஆதிக்கத்தின் நிர்ப்பந்தமாக இருக்கலாம். கோபம், கவலை, பதற்றம் போன்ற காரணமாகவும் இருக்கலாம்.

இவ்வித தெளிவற்ற குழப்பமான சூழ்நிலைகளில், மனதைத் திறந்து பேசுவதற்கு முன்பாக சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருப்பது நல்லது. அவ்வாறு செய்யவில்லை என்றால், ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டு பின்னர் அதற்காக வருத்தப்பட நேரிடும்.

உங்கள் யோசனைகள் முதிர்ச்சியடைய சில காலங்கள் எடுத்துக் கொண்டு, அதன் பின்னரும், உங்கள் கருத்து மாறாதிருந்தால் அவ்விதமாகவே பேசலாம், ஆனால் நீங்கள் உணர்ச்சி ரீதியாகவோ அல்லது வேறு வழிகளில் சமரசம் செய்ய நிர்ப்பந்திக்கப் படும் சூழலில் மௌனமே சிறந்த பதில்.

2. பிறரை புண்படுத்தும் சூழலில்:

உங்கள் வார்த்தைகள் பிறருக்குப் பயனுள்ளதாக இருப்பதைத் தாண்டி, அவரை புண்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருந்தால் பேசுவதைத் தவிர்க்கவும்.

சில சந்தர்ப்பங்களில் உண்மையைக் கூற வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. அப்போது அதில் சம்பந்தப்பட்ட நபர் வருத்தப்படாதவாறு பேச முடியாது தான். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எப்போதோ ஒரு முறை வெகு அரிதாகவே வருகின்றது.

ஆகவே, நீங்கள் பேச விரும்பும் வார்த்தைகள் பயனுள்ளதாக இருக்குமா அல்லது மற்றவரைப் புண்படுத்தும் வகையில் இருக்கப் போகிறதா எனப் பேசுவதற்கு முன்பாக சிந்தியுங்கள். ஒரு சந்திப்பு கசப்பான அனுபவத்தில் முடிவதை விட மௌனமாக இருப்பதே நலம்.

3. பொருந்தா சூழலில்:

உங்கள் கருத்து மதிப்பற்றதாக இருக்கும் இடத்தில், பொருத்தமில்லாமல் பேசாதீர். இதை ஒப்புக்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் எளிதல்ல. உங்கள் சுய மதிப்பு  ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இது மிகவும் முக்கியமானது.

ஒரு சூழ்நிலையைப் பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரியாதபோது, ​​அல்லது அதைக் குறித்து அறிந்த நிபுணர்கள் அவ்விடத்தில் சூழ இருக்கும்போது, ​​அல்லது உங்கள் கருத்து மற்றவர்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத போது, ​​அமைதியாக இருப்பது நல்லது. அதுவே புத்திசாலித்தனம்.

உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பற்ற இடத்தில் மௌனமே சிறந்த பதில்.

4. போதுமான சான்றுகள்  இல்லாத போது;

சில சந்தர்ப்பங்களில் நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி ஊகிக்கவும், பேசவும் நமக்குச் சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும், இதைக் கடைப்பிடிப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசும்போது அது நம்மையறியாது மற்றொரு நபருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, ஒரு நபரின் உடல் மற்றும் மன நலன் குறித்த உறுதியான தகவல்களை அறியாமல் அதைப் பற்றிப் பேசக்கூடாது. சில சூழல்களில் செவிவழிச் செய்திகள் உண்மையாக இருக்கலாம், ஆனாலும் நாம் கேட்ட  செவிவழி தகவல்கள், ஒரு பெரிய முடிவை மாற்றக் கூடியதாக இருக்குமானால், அதைக் குறித்துப் பேசாமல் இருப்பது நல்லது. 

உதாரணமாக, ஒரு நபர் தனக்கு உதவக்கூடிய மருந்தைப் பயன்படுத்தலாமா என்று பரிசீலித்து வருகிறார். அதே மருந்தைப் பயன்படுத்திய உங்கள் நண்பரின் நண்பரைப் பற்றிய சிகிச்சை குறித்து சில வதந்திகளை நீங்கள் கேட்டிருக்கலாம். அது வதந்தி அல்ல, உண்மைதான் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாது. இந்த வதந்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த மருந்துகளைப் பயன்படுத்தினால் சில பக்கவிளைவுகள் ஏற்படும் எனச் சொல்லாமல் இருப்பது நல்லது.

5. பேசாதே என்று அறிவுறுத்தப்படும்போது:

சில சூழல்களில் நாம் பேச வேண்டாம், அமைதியாக இரு எனக் கட்டுப்படுத்த படுவோம். அதனால் அவமதிக்கப் பட்டதை போல உணரக்கூடும். அது கோபத்தைத் தூண்டலாம். எனினும், அந்த மன தூண்டுதலைக் கட்டுப்படுத்தி, அதற்குப் பதிலாக ஏன் நம்மைப் பேசக்கூடாது எனச் சொல்கிறார்கள்? என ஆழ்ந்து சிந்திப்பது சிறந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கவனிப்பதும் மற்றும் நம்மை நாமே ஆராய்ந்து  கற்றுக்கொள்வதும் நல்லதாக இருக்கும்.

6. சொல்வதற்கு எதுவும் இல்லாத போது:

நாம் அனைவரும் எதையாவது ஒன்றைப் புதிதாகச் சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனாலும் அதற்காக, ஒரு அர்த்தமற்ற சிந்தனையை வலிந்து உருவாக்கிப் பேசக்கூடாது. 

சில தருணங்களில் உங்களிடம் சொல்ல எதுவும் இல்லாதிருக்கலாம். அதைச் சொல்வதற்கு வெட்கமாகக்  கூட இருக்கலாம். ஆனால் சொல்வதற்கு எதுவும் இல்லாதபோது, பேச வேண்டும் என்பதற்காக உளருவதை விட  அமைதி காப்பது சிறந்தது. அத்தகைய சூழலில் பிறர் கூறுவதைக் கவனமாகக் கேட்பதும், வேறு ஒருவர் சொல்லும் நல்ல கருத்தை ஆதரித்தும் பேசலாம். 

உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள், தவறுதலாகப் பேசி விட்டால், அவை மன்னிக்கப்படலாம், ஆனால் மறக்கப்படாது.  பல தருணங்களில் மௌனமாக இருப்பது எப்போதும் நமக்கு நன்மையைத் தரும். 

படம் இணையத்திலிருந்து நன்றியுடன்..