ஆன்மீகம் / பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் / பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 செப்டம்பர், 2019

கண்ணீர் துளிகள்

அழுகை - ஏழு நிலைகள்.




மனநிலையில் ஏற்படும் ஏழு விதமான பாதிப்புகளால் அழுகை ஏற்படுகிறது என மஜீத் இப்னு மைஸரா ரஹ்மத்துல்லாஹி அவர்கள் குறிப்பிடுகிறார்.

1. ஆனந்தம்
2. மன அழுத்தம், (புத்தி பேதலித்த நிலை)
3. வேதனை
4. திடுக்கிடும் அதிர்ச்சி சூழல்
5. நடிப்பு
6. போதையில் (தன்னிலை மறந்து)
7. இறை அச்சம், (பாவத்தைக் குறித்த மன வருத்தம்.)


மனம் வருந்தி இறையச்சத்தில் செய்யும் பிரார்த்தனை மிக வலிமை பெற்றது.

இறை வேண்டலில் சிந்தப்படும் கண்ணீர் நெருப்புக் கடலையும் அனைத்து விடும் தன்மை பெற்றது. 

இறைமைக்குப் பயந்து அழுது வடித்த கண்ணீர் பட்ட இடத்தை நரக நெருப்பு தீண்டாது.

"நீங்கள் பிரார்த்தனையில் சிந்தும் கண்ணீர் இறைவனின் கைகளில் உள்ள துருத்தியில் அல்லவோ வைக்கப்பட்டிருக்கிறது" என வேதம் சொல்கிறது.

மனம் உருகி இறையச்சத்தோடு கண்ணீர் சிந்திச் செய்யப்படும் வேண்டுதலின் பலனை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. 

நியாயத்தீர்ப்பு நாளில் இறையரசின் நிழலில் இளைப்பாறும் ஏழு நபர்களில் ஒருவர் நிச்சயமாக, "தனிமையிலிருந்து இறைவனை நினைத்துப் பயந்து கண்ணீர் வடித்தவராக வாழ்ந்தவராக இருந்திருப்பார்" என இறை நூலில் எழுதப்பட்டுள்ளது.

ஒரு இறையடியவரின் கண்களில் நோய் ஏற்பட்டிருந்தது.

அவரைப் பரிசோதித்த மருத்துவர், "இனிமேல் அழுது பிரார்த்தனை செய்வதில்லை என வாக்களித்தால் கண்கள் குணமடைந்துவிடும்" என்றார்.

அதற்கு "இறைமையை நினைத்து அழாத கண்களினால் எவ்வித நன்மையுமில்லையே" என அவர் பதிலுரைத்தார்.

"துயரப்படுகிறவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்."( Blessed are those who mourn, for they shall be comforted) எனும் இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தையின் மெய்ப் பொருளை யார் உணர்வார்?




வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மறு பிறப்பாளன்

மறு பிறப்பு.





"நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் கடவுளின் இறையரசில் இடம்பெற முடியாது” - இயேசு கிறிஸ்து.

ஒரு யூத சமய போதகர் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக  இரவில் இயேசுவை சந்திக்கிறார். அவரிடம் இயேசு கிறிஸ்து கூறியது தான் இந்த மாபெரும் உண்மை.

ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? 

ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் எப்படி நுழைய முடியும்? "ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாகப் பிறக்க முடியாதே” என அந்தப் போதகர் மறு உத்தரவு சொன்னார்.

அதற்கு இயேசு:

ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். "நீ மறுபடியும் பிறக்க வேண்டும்". 

"காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் இறைமையினால் மறுபடியும் பிறக்கிறான்” என்றார்.

மறுபடி பிறத்தல் என்பது குலப்பிறப்பால், சமய அடிப்படையில் நிகழ்வதல்ல.

எந்த ஒரு மனிதன் தனது இழிநிலையை உணர்ந்து, அந்த இழிநிலைக்குக் காரணமான அனைத்துச் செய்கைகளையும் விட்டு விலகி புது வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தீர்மானிக்கிறானோ அப்போது மறு பிறப்பாளானாக தனது பயணத்தை  துவக்குகிறான்.

தனது இழிநிலையை உணர்ந்து புத்தி தெளிதல் எனும் இந்த நிகழ்வு கடவுளின் அருளால் மாத்திரம் ஒரு மனிதனின் ஆன்மாவில் நிகழ்கிறது.

ஒவ்வொரு மனிதரும் வாழ்வின் கஷ்ட நேரத்தில் இவ்வித புத்தி தெளிவை லேசாக உணர்ந்தாலும், துன்பம் விலகிய உடன் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்கே திரும்பி விடுவர். காரணம் அந்தப் பழைய வாழ்க்கைத் தரும் இன்ப மயக்கம்.

இவ்விதம் இல்லாது துன்பம் நேரிடினும் தனது அர்ப்பணிப்பில் உறுதியாக வாழ்வைத் திட சங்கல்பம் கொண்டு தொடர்பவர்கள் மறு பிறப்பு அடைந்தவர்கள்.

சில குறிப்புகள்:


▪ ஆன்மா ஆசைப் பிணைப்பு என்ற ஒரு வகை உணர்வு பந்தத்தால் இவ்வுலகில் கட்டப்பட்டுள்ளது.

▪ அந்த ஆசைப் பிணைப்பில் இருந்து விடுபட்ட ஒருவன் இறை  நிலையை நோக்கிப் பயணிக்கிறான்.

▪ இருளடைந்த மேகங்களில் இருந்து வெளிவரும் நிலவைப் போல ஆசையில் இருந்து விடுபட்டவன்  ஞானத்தை புதையலைத் தேடுவது போலத் தேடி, நாடி தனது களங்கங்கள் அனைத்தையும் நீக்கி, தன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையுடன் வாழ்ந்திருப்பான்.

▪ ஆசையற்றவனாக இருக்கும் ஒருவன் ஒரு போதும் ஆன்மாவில் மரணம் அடைவதில்லை.  ஒழுக்கமும், தூய்மையை விரும்பும் மனோ நிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.

▪  புலன்களால் நுகரும் மணம், சுவை, பிறபொருட்கள் அளிக்கும் இன்பங்களில்   நாட்டம் இருக்காது.

▪ பாராட்டுக்கள், சாதனை மற்றும் புகழில் பற்று இருக்காது.

▪ அனைத்து உயிரினங்களின் வலி உணர்ந்து அவற்றைத் தனது சொந்த உறவைப் போல கருதி சிநேகமாக நடந்து கொள்வான்.

▪ அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும்  நிறுத்துகிறான்.

▪ எண்ணத்தாலும், வாக்காலும், செயலாலும் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் அன்பு செலுத்தி ஆதரிக்கிறான்.

▪ சடங்குகள் முக்கியமானது அல்ல அதன் பொருள் என்ன என்று உணர்ந்து கடைப்பிடிக்க கவனமாக இருப்பான்.

▪ வேதங்கள் அனைத்தையும் கற்று, சமய சடங்குகளை கடமையுணர்வுடன் நிறைவேற்றி, உபவாசம், விரதம் இருந்து, வேத தர்க்கங்கள்  அனைத்தையும் அறிவதால் மட்டுமே ஒருவன் மறுபிறப்பாளன் ஆகமாட்டான்.

▪ கருணை, அன்பு இவை இல்லாமல், ஆசை, பெருமை நிறைந்து இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தர்மங்களுடன்  கூடிய. பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே இறைமை நிலையை அடைந்துவிட முடியாது.

 ▪ எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் நடுநிலையில் பற்றறுத்து சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் போது அவன் இறைமை நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.

🔹 வைராக்கியம் நிறைந்த இறைப்பற்று,

🔸 சுயப் பற்றிலிருந்து விடுதலை,

🔹 இடைவிடாது உண்மையைத் தேடி விழைதல்,

🔸பொறுமையுடன் துன்பத்தில் அமைதி காத்தல்,

🔹 துன்பம் இழைப்பவரையும் மன்னித்தல்.

🔸 மனத் தாழ்மையாக இருத்தல்.

🔹 அனைத்து உயிர்களிடத்தும் இறைமையைக் காணுதல்

ஆகிய எழு குணங்களைக் கொண்டவர்கள் நிச்சயம் முழுமையடைவார்கள் அல்லது நிறைவடைவார்கள்.

வாழ்க்கை என்பது ஓர் அழகான வாய்ப்பு. அதன் பொருளையும் தனது படைப்பின் அவசியத்தையும் உணர்ந்து கொள்வதை விட ஒருவருக்கு மேலானது வேறு ஒன்றும் இல்லை. 

திங்கள், 8 மே, 2017

பிறவிப் பயன்

பிறவிப் பயன்.


ஆன்மீகத்தின் சாரம் :

  • வாழ்வின் முதன்மை நோக்கம் கடவுளை அறிதல், 

         அவரில் அன்பு கூருதல்.

  • தன்னை போல் அனைத்து உயிர்களையும் நேசித்தல்.


கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

கல்வியின் நோக்கமும் பயனும் கடவுளை உணர்ந்து வணங்குவதே.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான சொல் எது எனக் கேட்டால்  என் உடனடி பதில் "சிந்தனை "!

சுவாரஸ்யமான தேடல் நிறைந்த வார்த்தை சிந்தனை.

சிந்தனை எப்படி உருவாகிறது? எப்படிச் செயல்படுகிறது?
என்பதை அறியாமல் வாழ்வின் போக்கை கட்டுப்படுத்த இயலாது.

வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் மேல் நமக்கு எந்த வித அதிகாரமோ,
ஆளுமையோ இருக்காது.

நீர் வழி மிதந்து செல்லும் தக்கை போல் வாழ்க்கை பயணம் அமைந்திடும்!

மனிதர்களின் சிந்தனை பலவித உணர்வு நிலைகளால் கட்டுப்படுத்தப்பட்டு
வழிநடத்தப்படுகின்றன.

உணர்வுகள் அனுபவித்தல் மூலமாக மனதில் பதியப்படுகிறது.

அதாவது நமக்கு இன்பமும், திருப்தி அளிப்பவை நல்லது என்றும்
துன்பமும், அதிருப்தி அளிப்பவை தீமை என்றும் மனதில்
பதியப்படுகிறது.

இந்த நம்பிக்கை அடிப்படையிலேயே நாம் செயலாற்றுகிறோம்.

நமது நம்பிக்கை அனைத்தும் சரியானவையா?

இல்லை என்பது அனைவரும் அறிந்த பதில்.

வயதும், அனுபவங்களும் நம் தவறான நம்பிக்கைகளை
உணர்த்துகின்றன.

காலம் கடந்த உணர்வடைதல் பல தனிப்பட்ட இழப்புகளையும்,
நம்மைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு மன வேதனையையும், வருத்தத்தையும்,
துயரத்தையும் அளிக்கிறது.

அப்படியென்றால் சிந்தனையை நெறிப்படுத்த முடியுமா?

நிச்சயமாக முடியும்!

சிந்தனையைக் கட்டமைக்க பலவிதமான வழி முறைகள் போதிக்கப்படுகின்றன.

அவற்றுள் முதன்மையானது ஆன்மீகம்.

ஆன்மபோதம் நம்பிக்கையை, சிந்தனையை ஓழுங்கு படுத்த உதவுகின்றது.

ஆன்மசுத்தி விருப்பங்கள் - தேடல் - நம்பிக்கை - சிந்தனை - சொல் - செய்கை
எனப் பரிணமிக்கிறது.

பலவித வாழ்க்கை சூழலே ஆன்மீக தேடலின் துவக்கத்திற்குக் காரணமாகிறது.

பொதுவாக

🔸 துயரம்,
🔸 தவறுகளை உணர்ந்தோர் அதற்காக வருந்துதல்,
🔸 தனிமை உணர்வு ஏற்படுத்தும் அச்சம்,
🔸 மரணம் குறித்து பயம்,
🔸சமயம் சார்ந்த பற்றுதல்,
🔸 ஆன்மீக குழுக்கள் தொடர்பு,
🔸 சேவை செய்தல் ஏற்படும் ஆர்வம்,
🔸 செல்வம், வள வாழ்வு தொடர,
🔸 சமூக மேன்மை, மதிப்பை பெற்றிட,
🔸 குற்றவுணர்விலிருந்து விடுபடல்
🔸 தற்செயல் ஈடுபாடு

என ஏதோ ஓர் ஈர்ப்பு ஆன்மீகம் நோக்கித் தள்ளுகிறது.

இளம் வயதில் நம் பெற்றோரை நேசிப்பதற்கும், அவர்களுடைய முதிர்ந்த வயதில் நாம் அவர்கள் மேல் அன்புகூர்தலுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு?

ஆன்மீக தேடலும் அப்படித்தான்!

கடவுளின் மாசற்ற (Holy) , நிபந்தனையற்ற (Un Conditional) அன்பை உணரும்போது மட்டுமே உண்மையான ஆன்மீக தேடல் நம்முள் துவங்குகின்றது!

உண்மையான ஆன்மீக தேடல் சில பண்புகளை சிந்தனையில் உருவாக்கும்..

🔹 தவறுகளை உணர்தல், தவறுகளுக்காக வருந்துதல்.
🔹நல் எண்ணமுடையோர் தொடர்பை நாடுதல், அவர் கூட்டுறவு பேனுதல்,
🔹 மதமாச்சரியங்கள் கடந்து அனைத்துச் சமயங்களின் கருத்துக்களையும் மதித்தல்,
🔹 உண்மையின் மீது அளவு கடந்த நாட்டம்,
🔹பேசுவதில் கவனம், மௌனத்தில் பிரியம்,
🔹வாக்குறுதி, பொறுப்புணர்வு,
🔹மன உறுதி, தெளிந்த அறிவு,
🔹கற்றது கையளவு எனும் தெளிதல்,
🔹 உடல் நலம், மன நலம் பேணுதல்,
🔹 கோபம் நீக்கி அன்பு, அமைதி  விருப்பம்,
🔹 பெருமை அகன்று தாழ்மை,
🔹 பாரபட்சமின்றி நேசித்தல்,
🔹பிறர் குற்றம் பொறுத்தல், மன்னித்தல்
🔹எந்தச் சூழ்நிலையிலும் திருப்தி
🔹 தன்னை முன்னிறுத்த தயங்குதல்,

இத்தகைய மன மாற்றங்களை, குண நலன்களை  உண்மையான ஆன்மீக தேடலை நம்மில் உருவாக்கும்.

ஆன்மீக பாதையின் பயணிக்கும்போது     இடறல்கள் வரும். காமம், பெருமை, பொறாமை, கோபம், பேராசை உணர்வுகள் ஆழிப் பேரலை போல் நம்மை  தாக்கும்.

ஆன்மீக பயணம் சுலபமானதல்ல! கடினமானதும் அல்ல!!

நம் சுய பெலன் கொண்டு முயற்சித்தால் வழி தவறி விடுவோம்.

கடவுளின் அருளும், குருவின் துணையுடனும் நடந்தால் பாதையை கடப்பது மிகச் சுலபம்.
தூய்மை, உண்மை, எளிமை, அர்ப்பணம் இவற்றின் வழியே கடவுளிடம்
அன்பு கூறுவோம்.

கோள்இல் பொறியில் குணமிலவே ; எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

அருள், அறிவு, ஆற்றல் முதலிய எட்டு குணங்களை உடைய 
கடவுளைப்போற்றி வணங்கவே வழங்கப்பட்ட மனித உடலுறுப்புகள் 
அவ்வாறு செய்யாவிட்டால் அவற்றால் பயன் எதுவுமில்லை.