வியாழன், 12 அக்டோபர், 2023

விழுமங்கள்

விழுமங்கள் (Ethical Values).

அறம் சார்ந்த விழுமங்கள் எனக் கருதப்படுபவை சமரசம் செய்து கொள்ள முடியாத, விவாதிக்க முடியாத, மாறாத உண்மைகளாகும். அவைகள் நாம் நடந்து கொள்ளும் விதத்தைத் தீர்மானித்து, நம்மை இயக்கும் ஆற்றல் மிக்கவை.

அவை ஊக்கமளிப்பவையும் கூட. நாம் ஒரு செயலை செய்யும் விதம், நாம் நடந்து கொள்ளும் முறை ஆகியவற்றிற்கு நமது விழுமங்களே பொறுப்பு; அத்துடன் அவை நம்மைக் கட்டுப்படுத்துபவை - அதாவது அவை நாம் நடந்து கொள்ளும் விதத்திற்கு  எல்லைகளை வைக்கின்றன.

ஒரு தலைமை பொறுப்பை  நீண்ட காலத்திற்கு நிர்வகிக்கத் தேவையான, செயல்திறனுக்கு, அவர்களது நிலையான விழுமங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என இன்றைய தலைமைத்துவத்தைக் குறித்த இலக்கிய நிபுணத்துவ கட்டுரைகள் உணர்ந்து, அதில் அதிக கவனம் செலுத்துகின்றன.

''குற்றமற்ற வாழ்க்கையை வாழ விரும்புபவர்'' - ''எப்போதும் இதயத்திலிருந்து உண்மையைப் பேசுபவர்" என்கிற விழுமியம் உடையவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்த நடத்தை ஆய்வுகள் (Value - Driven based behavior's), சில தகவல்களை விவரிக்கிறது.

இவர்கள் தங்கள் இதயத்தில் சத்தியத்தின்  வலிமையை மதிப்பதால், அவர்களது வார்த்தைகள் உண்மையை வெளிப்படுத்துகின்றன.

அவர்கள் கருணையை மதிப்பதால், "தன்னை சுற்றி வாழ்பவருக்கு எதிராக எந்த சூழ்நிலையிலும் தவறு இழைப்பதில்லை".

அவர்கள் நேர்மையை மதிப்பதால், ''எத்தகைய இழப்பை எதிர் கொள்ள நேரிட்டாலும்'' தாங்கள் சொன்ன வார்த்தையின்படி நடக்கிறார்கள்.

அவர்கள் நீதியை மதிப்பதால் "அப்பாவிகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கு''  கைக்கூலி வாங்குவதில்லை.

இத்தகைய விழுமியங்களைப் பின்பற்றுவதால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

தெய்வீக அறம் சார்ந்த விழுமியங்களால் உந்தப்பட்டு வழி நடத்தப்படும் தலைவர்கள் இறைவனிடமிருந்து மகத்தான சக்தியைப் பெறுகிறார்கள். அவர்கள் "எந்த சூழ் நிலையிலும் மனதால் கலங்குவதில்லை". அவர்களைச் சுற்றி என்ன நிகழ்வுகள் நடந்தாலும், முழு நம்பிக்கையுடன் அவர்களால் வாழ முடிகிறது.

அவர்கள் மதிப்பு மிக்கவை எனக் கருதும் விழுமியங்கள், அறம் சார்ந்த கொள்கைகளால் வடிவமைக்கப்பட்டவை. ஆகவே அவர்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு அவைகள் வழி காட்டுகின்றன. இத்தகைய நம்பிக்கை உணர்ச்சிவசப்படாத ஒரு ஆன்மீக ஸ்திரத்தன்மையை அவர்களுக்குக் கொடுக்கும். அவ்விதம் இருந்தவர்கள் மிகச் சிறந்த தலைவர்களாக இருந்ததை உலக வரலாறும் உறுதிப்படுத்துகிறது. 

நீங்கள் இதைப் பற்றிச் சிந்திக்கும்போது, உங்களை ​​எந்த விதமான விழுமியங்கள் வழி நடத்துகின்றன?

உங்கள் சொந்த வாழ்க்கையை நீங்கள் ஆராயும்போது, ​​உங்கள் நடத்தைக்கு உந்துதலாக எத்தகைய மதிப்புகள் இருக்கின்றது?

நீங்கள் நடந்து கொள்ளும்விதம் சிறப்பாக இருக்க  எந்த விதமான விழுமியங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தெய்வீக அறம் சார்ந்த விழுமியங்களை முழுமையாக ஒருங்கிணைப்பதை உங்கள் இலக்காக ஆக்குங்கள். வாழ்வில் வெற்றி உறுதி.


படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

 

சனி, 10 ஜூன், 2023

மனமுதிர்ச்சி

 மனமுதிர்ச்சி ஏன் முக்கியம்?



மனமுதிர்ச்சி என்பது அடிப்படையில் மன வளர்ச்சி அல்லது ஞானத்தின் ஒரு நிலை. இது ஒரு மனிதரின் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக அவரது நடத்தை (behavior)  முதல் மற்றவர்களுடனான அவர்களது உறவு  (Relationships) வரை அனைத்திலும் பங்கு வகிக்கிறது.

மனமுதிர்ச்சி என்பது உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும், உங்கள் சுய மதிப்பை மேம்படுத்தவும், உங்கள் மனதைப் பயிற்றுவித்தல்.

மனமுதிர்ச்சி என்பது சிறிய விஷயங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கும் போது துவங்குகிறது.

ஊக்கம் மற்றும் சுய உதவி புத்தகங்களைப் படிப்பதால் மனமுதிர்ச்சி வருவதில்லை, மாறாக நிலைத் தன்மையையும் (Consistency), ஒழுக்கத்தையும் (Character), இடை விடாமல் பின்பற்றுவதால் நிகழ்கிறது.

மனமுதிர்ச்சி பெறும் போது, வாழ்க்கை மிகவும் நிலையானதாகவும், அதன் விளைவாகச் சிக்கல்களைக் கையாளுவது எளிதானதாகவும் மாறுகிறது.

மனமுதிர்ச்சியானது புத்திசாலித்தனமான நல்ல முடிவுகளை எடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. நிதானத்துடன் முடிவுகளை எடுக்க உதவுகிறது. அதன் மூலம் ஒட்டு மொத்தமான வாழ்க்கை அதிக ஸ்திரத்தன்மை அடைகிறது.

மனமுதிர்ச்சி அடைவதால், மோசமான உறவு முறிவுகள், குழப்பமான முடிவுகள், கொந்தளிப்பான மனநிலை மற்றும் கடுமையான வேலைப்பளு போன்ற வாழ்வின் சலசலப்புகள் முடிவடைகின்றன.

மனமுதிர்ச்சி என்பது வயதுடன் தொடர்புடையது அல்ல, மாறாக பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு எவ்விதம் பதிலளிக்க வேண்டும், எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படுகிறது.

மனமுதிர்ச்சி என்பது உங்கள் நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது திணிப்பதில்லை. நீங்கள் நினைப்பது போலவே, மற்ற எல்லோரும் நினைப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அதாவது, மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

மனமுதிர்ச்சி என்பது நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விட்டு விடுதல்.

மனமுதிர்ச்சி என்பது உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக, பிறரை வாதங்களில் வெற்றிபெற அனுமதித்தல்.

மனமுதிர்ச்சி என்பது மற்றவர்களின் விமரிசன கருத்தால் நீங்கள் பாதிக்கப் படுவதில்லை.

மனமுதிர்ச்சி என்பது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விட்டு விடுதல்.

மனமுதிர்ச்சி என்பது எதிரிகளை மன்னிப்பது மட்டுமல்ல, அவர்கள் இயல்பை மாற்ற விரும்பாது, இருப்பதைப் போலவே ஏற்றுக் கொண்டு நேசித்தல்.

மனமுதிர்ச்சி என்பது உங்கள் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும்படி யாரையும் வற்புறுத்துவதில்லை. மாறாக, அவரவர்களுக்கு விருப்பமானதைச் செய்ய அனுமதித்தல்.

மனமுதிர்ச்சி என்பது மற்றவர்களைத் திருத்துவதை விட்டுவிட்டு நம்மைத் திருத்திக்கொள்வது.

மனமுதிர்ச்சி என்பது வாழ்க்கையில் எவ்வித  இலட்சியம் இல்லாத குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களை மகிழ்விக்க இனி நீங்கள் முயல்வதில்லை.

மனமுதிர்ச்சி என்பது உங்களது இலக்குகளை அடையத் தடையாக உள்ள தற்காலிக சுகங்களைப் புறம் தள்ளுதல்.

மனமுதிர்ச்சி என்பது காரியங்கள் திட்டமிட்ட படி நடக்காத போதும் அமைதியாக இருக்க உங்கள் மனதைப் பயிற்றுவித்தல்.

மனமுதிர்ச்சி என்பது நான் பிறருடைய மகிழ்ச்சிக்குப் பொறுப்பல்ல என்பதை உணர்ந்து கொள்தல்.

மனமுதிர்ச்சி என்பது துயரங்கள் உங்களை அழிக்க அனுமதிப்பதில்லை. மாறாக அதன் வலியிலிருந்து உங்கள் வலிமையை உருவாக்குதல்.

மனமுதிர்ச்சி என்பது சரியான நேரத்துக்குக் காத்திருக்காமல் செயலில் ஈடுபடும் கலையில் நீங்கள் தேர்ச்சி பெறுதல்.

மனமுதிர்ச்சி என்பது வெற்றுச் செய்திகள், அரசியல், மலிவான இணையதள பொழுது போக்குகள், பிறரது அந்தரங்க நிகழ்வுகள், பயனற்ற சமூக உரையாடல்; இவை உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் முன்னேற விடாமல் திசைதிருப்பும் மிக மோசமான வஞ்சக வலை என்பதை உணரும் அளவுக்குப் புத்திசாலியாக இருத்தல்.

மனமுதிர்ச்சி என்பது உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எதையும் தனிப்பட்ட முறையில் எடுக்காமல் உங்கள் மனதைப் பயிற்றுவித்தல்.

உங்களைப் பற்றி யாருக்கும் அதிகமாகத் தெரியாதபோது, வாழ்க்கை இலகுவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது மனமுதிர்ச்சி.


படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

ஞாயிறு, 28 மே, 2023

மறுரூபம்.

 வாழ்க்கையை மேம்படுத்தி வடிவமைக்க உதவும்  20 - பழக்கங்கள்.


01. ஒவ்வொரு நாளையும் நன்றியுடன் தொடங்குங்கள்.

சிறிய விஷயங்களையும் நன்றியுடன் நினைவு கூறுங்கள். அதைப் பாராட்டுவதற்குச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். நேர்மறையான மனப்பாங்கோடு இந்த நாளை எதிர் கொள்ளவும்.

02. அனுதினம்: சுய-மதிப்பிடு பயிற்சி.

உங்கள் சாதனைகள், சவால்கள், மற்றும் கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள்; இவற்றை அனுதினம் ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். 

  • விழிப்புணர்வு, 
  • நீங்கள் நடக்க வேண்டிய பாதை,
  • உங்கள் வளர்ச்சிக்கு உத்வேகம் தரும் தரிசனம்                                                           
ஆகியவற்றை இது வளர்க்கிறது.

03.  கவனமாகக் கேட்கும் கலையில் நிபுணத்துவம் பெறுங்கள்.

மற்றவர்களது உள்ளக் கிடக்கை உண்மையாகவே உணரும் வகையில் கேளுங்கள். அவர்கள் வெளிப்படுத்தும் கோணத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இது தொடர்பை வளர்க்கிறது. ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. 

ஆகத் தொடர்புகொள்பவரின் "உண்மையான நோக்கம்" என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் கேளுங்கள்.

04. வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சவால்களை எதிர் கொள்ளுங்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். பின்னடைவுகளை எதிர்கொண்டாலும் விடாப்பிடியாகத் தொடருங்கள். நீங்கள் வலியை உணரவில்லை என்றால், வளரவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. சுய-பராமரிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.

உங்கள் மனம், உடல், ஆன்மா; இவற்றிற்குப் புத்துணர்வு அளிக்கும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இது மிக அவசியம்.

06. இணைய உலா: ஆரோக்கியம் - மனவளம் - கவனம் தேவை.

தொடுதிரை நேரத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும். இணையத்திற்கு வெளியே நிகழும் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளியுங்கள். 

உண்மையான வாழ்க்கை - இணைய உலகம்: இவ் இரண்டிற்கும் இடையே ஆரோக்கியமான சமநிலையைப் பராமரிக்கவும்.

07. வளமான வாழ்க்கை முறையை நோக்கி சிறிய அடிகளை எடுங்கள்.

உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுத் தேர்வு உங்கள் அனுதின இயல்பு வாழ்க்கை வழக்கமாக இருக்கட்டும். ஒரு நாளில் ஒரு முறையாவது!!!

08. மனவளப் பயிற்சி.

நிகழ்காலத் தருணத்தில் முழுமையாக இருங்கள். தீர்ப்பளிக்கும் மன நிலையிலிருந்து விடுபடுங்கள். அது தெளிவைக் கொண்டு வருகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. 

உங்கள் மனதில் ஓடும் கதைகளை உணர்ந்து கொள்ள விழிப்புடன் இருங்கள்.

09. தொடர்பு வலைப்பின்னலைப் பேணுங்கள்.

உங்கள் துறையில் உள்ள நிபுணர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குங்கள். நேரம் ஒதுக்கி உதவி வழங்கத் தயாராக இருங்கள். 

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: தொடர்பு வலைப்பின்னலது வருமானம் பேராசை அல்ல, பெருந்தன்மை.

10. வழிகாட்டுதலை நாடுங்கள்.

உங்களுக்கு முன் அதே பாதையில் நடந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

"வழிகாட்டி என்பவர், உங்களுக்குள் மறைந்திருக்கும் அதீத திறமை மற்றும் திறனை, நீங்கள் கண்டு உணர்வதை விட, மிகத் தெளிவாகக் காண்பவர்.  உங்களிடமிருந்து அதை வெளியே கொண்டு வர உதவுபவர்." - Bob Proctor.

11. அர்த்தமுள்ள உறவுகளை வளர்ப்பது அவசியம்.

உங்களது உயர்வை நாடும் நபர்களைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை வளப்படுத்த உதவும் உண்மையான தொடர்புகளை உருவாக்க முயலுங்கள். அதைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் முயற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். இவை முதலீடு.

12. நிதி வளர்ச்சி கவனம் தேவை.

செல்வத்தை உருவாக்குதல், பல வழிகளில் வருமானத்தை உருவாக்கும் வழிமுறைகள் கண்டறிதல் மற்றும் நிலையான முதலீடு செய்தல் ஆகியவற்றை கற்றுக் கொள்ளுங்கள்.

13. விமர்சன கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வளர்ச்சியை உயர்த்துவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும் சக ஊழியர்கள், வழிகாட்டிகள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து வரும் விமரிசன கருத்துக்களைக் கூர்ந்து கவனிக்க ஆர்வமாக இருக்கவும். 

நினைவில் கொள்ளுங்கள்: விமரிசன கருத்து என்பது வெற்றி வீரர்களின் காலை உணவு.

14. தொடர்ந்து கற்றல்: நேசியுங்கள்.

உங்கள் அறிவை விரிவுபடுத்தவும், புதிய திறன்களைப் பெறவும் வாய்ப்புகளைத் தேடுங்கள். இது உங்களை எந்த சூழலுக்கும் பொருத்தமானவராகவும், உகந்தவராகவும் வைத்திருக்க உதவுகிறது. 

குறிப்பு: கற்றலை நிறுத்தும் எவரும் தேக்கமடைந்து வளர்வதை நிறுத்துவர்.

15. நிபுணத்துவத்தை உள்ளடக்குங்கள்.
  • ஒரு வலுவான பணி நெறிமுறையைக் கடைப்பிடிக்கவும். 
  • திறம்படத் தொடர்பு கொள்ளவும். 
  • சிறந்த முடிவுகளை வழங்கவும்.
16. உங்கள் பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியே வாருங்கள்.

உங்கள் எல்லைகளைத் தாண்டி புதிய சவால்களை ஏற்றுக் கொள்ளும்போது தான் வளர்ச்சி ஏற்படும். உங்கள் பாதுகாப்பு மண்டலத்திலிருந்து வெளியே வராத வரை, உங்கள் வாழ்க்கையை, நீங்கள் ஒருபோதும் மேம்படுத்த முடியாது.

நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் பாதுகாப்பு மண்டலத்திற்கு வெளியே மாற்றம் தொடங்குகிறது.

17. அழகிய தருணங்களைத் தினசரி ஏட்டில் பதிவு செய்யுங்கள்.

பதிவுகள் மனதின் ரகசியங்களைத் திறந்து பார்க்க உதவுகிறது. சுய-மதிப்பிடு திறனை வளர்க்கிறது. தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நன்றி உணர்வை வெளிப்படுத்த உதவுகிறது. திறந்த மனநிலைக்கு வழிவகுக்கிறது. 

பதிவுகளைத் தொடர்ந்து எழுதிப் பயிற்சி செய்வது மிகச் சக்தி வாய்ந்தது.

18. சமூகத்திற்குத் திருப்பி தாருங்கள்.

தன்னார்வலர், வழிகாட்டி, உங்கள் இதயத்திற்கு நெருக்கமானவற்றை ஆதரித்தல்..,  ஏதோ ஒரு வகையில் நீங்கள் பெற்றதை இந்த சமூகத்திற்குத் திருப்பிக் கொடுங்கள்.

அன்புடன் செய்யும் சிறிய கருணை செயல்கள், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

19. முன்னேற்றத்தைக் கொண்டாடுங்கள்.

வளர்ச்சியைக் கொண்டாடுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், முன்னோக்கிச் செல்லும் ஒவ்வொரு அடியும் உங்கள் அர்ப்பணிப்புக்கும் வளர்ச்சிக்கும் சான்றாகும். தொடர்ந்து பயணியுங்கள்.

20. தனித்துவத்தை உருவாக்குங்கள்.

உங்கள் நிபுணத்துவத்தை மட்டுமல்ல, உங்கள் மதிப்புகளையும் வெளிப்படுத்தும் விதமாகத் தனித்துவமான அடையாளத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் துறையில் உங்களைத் தனித்து நிற்கச் செய்கிறது.


Article taken with thanks from: 
Mr. Subramanian Narayan
OD Consultant, 
Culture Change and Business Results through Trust Building®, 
Professional Speaker, Executive Coach and Voiceover artist.



படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

புதன், 19 ஏப்ரல், 2023

ஏழு ஜப்பானியக் கோட்பாடுகள்.

வாழ்வு மேம்பட..,


புதிய தரிசனங்களைக் கண்டடைய, மேம்பட்ட நிலையை அடைந்திட, உதவி செய்யும் ஏழு ஜப்பானியக் கோட்பாடுகள்.

1. Ikigai: வாழ்வின் நோக்கம்:

உங்கள் நோக்கம் என்ன?

''Ikigai'' எனும் ஜப்பானியச் சொல்லிற்கு, "நமது இருப்பிற்கான காரணம்" அல்லது "வாழ்க்கையில் நோக்கம்" எது; என ஆராய்ந்து பார்ப்பது என்று புரிந்து கொள்ளலாம். 

தினமும் காலையில் எழுந்தவுடன், இன்று என்ன செய்யப் போகிறோம் எனும் சரியான நோக்கத்தை அறிவது.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதைச் செய்வதில் சிறந்தவர், அதனால் இந்த உலகிற்கு என்ன பயன், அதன் வழியாக வருமானம் கிடைக்குமா என்பதன் கூட்டுச் சேர்க்கை இது.



உங்கள் ''இகிகாயை'' அடையாளம் காண்பதன் மூலம், நீங்கள் பயணிக்க வேண்டிய திசையை உங்களால் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

  • வாழ்க்கையில் உங்களுக்கான நோக்கத்தைக் கண்டறியவும்.
  • ஒவ்வொரு காலையிலும் நீங்கள் விழிப்பதற்கான சரியான காரணத்தை உறுதி செய்து கொள்ளவும். 
  • உங்கள் பலம், உணர்வுப்பூர்வமான ஈடுபாடு (Passion) இருக்கும் ஒரு பணியைத் தெரிவு செய்யவும்.
  • அது உலகத்தின் தேவைகளுக்கு உபயோகமாக இருக்க வேண்டும்.
  • அந்த பணி, வருமானத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்.
  • அப்போது வாழ்க்கை அர்த்தம் அடைகிறது.

2. Shikata ga nai: மாற்ற இயலாதவை:

''Shikata ga nai'' என்பதற்கு, "அதற்கு மேல் அதை ஒன்றும் செய்ய முடியாது" அல்லது "இதற்கு எந்த மாற்று வழியும் இல்லை" என்று பொருள்.

இது நம்மால் மாற்ற முடியாத துன்பங்களை எதிர்கொள்வது, அவற்றை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை வலியுறுத்துகிறது. 

ஆனால், இது பொறுப்புகளைத் துறந்து தப்பி ஓடுவது அல்ல. 

சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்வது. 

அத்துடன், அதை ஏற்றுக் கொண்டு, அச் சூழலைக் கடந்து, முன்னேறுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது.

  • உங்களால் மாற்றமுடியாத மனிதர்கள், விஷயங்களை விட்டு விடுங்கள்.
  • சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 
  • அதனால் குறையொன்றுமில்லை. வருத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை.
  • உங்களால் கட்டுப்படுத்தக் கூடியதைத் திறம்பட நிர்வகியுங்கள். 
  • உங்களால் எதைச் சிறப்பாக மாற்றி அமைக்க முடியுமோ, அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறுங்கள்.

3. Wabi-Sabi: குறைகளில் வசீகரம்:


இந்த கருத்து, முழுமை அற்றதில் உள்ள அழகியல் (beauty of imperfection), நிலையற்ற தன்மை (transience) மற்றும் இயற்கை உலகின் படைப்புகள், ஆகியவற்றை அவை இருக்கும் வண்ணமாகவே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை (attitude)  குறிப்பிடுகிறது.

இது, ஆபூரண (imperfect), முழுமையற்ற (incomplete) மற்றும் கடந்து செல்லும் நிலையற்றவற்றில்  (transience)  உள்ள அழகைக் கண்டறிவது.

வாழ்க்கையின் எளிமையான, அலங்காரமற்ற மற்றும் இயற்கையான கூறுகளை மதித்து, அவற்றைப் பாராட்ட ''வாபி-சபி'' நம்மை ஊக்குவிக்கிறது.


Wabi Sabi

  • அபூரணத்தில் அமைதியைக் கண்டறியவும்.
  • வாழ்க்கையில் எதுவுமே பரிபூரணமானதல்ல என்பதை உணருங்கள். இதில் நாம் அனைவரும் அடக்கம்.
  • எதுவும் நிலையற்றது; நிரந்தரமற்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • குறையற்ற தன்மை அடைய வேண்டும் எனப் பாடுபடுவதற்குப் பதிலாக, வாழ்க்கையைத் தனித்துவமாக்கும் குறைபாடுகளில் மகிழ்ச்சியைக் காணவும்.

4. Gaman: எதிர்வினை: 


"காமன்'' என்பது கடினமான சூழ்நிலைகளிலும் கூட விட்டுக்கொடுக்காமல் வலுவாக இருப்பது. 

சகிக்க முடியாத சூழலில், அதைப் பொறுமையுடன் கண்ணியத்தை விட்டுக் கொடுக்காமல் எதிர் கொள்வது என்றும் புரிந்து கொள்ளலாம். 

“Between stimulus and response there is a space. In that space is our power to choose our response. In our response lies our growth and our freedom."  - Viktor E. Frankl. (in his book Man's Search for Meaning).

"பிறர் தூண்டுதல் மற்றும் அதற்கு நாம் ஆற்றும் எதிர்வினை இவற்றிற்கு இடையே ஒரு சிறு கால இடைவெளி உள்ளது. அந்த நேரத்தில், நமது மிகச் சிறந்த பதிலைத் தேர்ந்தெடுப்பதுவே சக்தி. அந்தப் பதிலில் தான் நமது வளர்ச்சியும் சுதந்திரமும் இருக்கிறது." - Viktor E. Frankl.

இந்த கோட்பாடு, கஷ்டங்கள் அல்லது துன்பங்களை எதிர்கொள்வதில் சோர்வுறாது, விடாமுயற்சியுடன் தொடர வேண்டும் என கற்றுத் தருகிறது. 

அத்துடன் பின்னடைவை வலிமையாக எதிர் கொள்வது மற்றும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இதன் மூலம், உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், உங்களை வழி நடத்தும் மன வலிமை மற்றும் தைரிய உணர்வை வளர்த்துக் கொள்ளலாம்.
  • கடினமான சூழ்நிலைகளில், நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதைக் கவனித்து, தேவையெனில் கட்டுப்படுத்தவும்.
  • நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, பொறுமையுடனும் அணுகவும்.
  • உங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்கவும்.
  • வெட்கத்தை எதிர்கொண்டாலும், உணர்ச்சிவசப்படாமல், முதிர்ச்சியையும், சுயக்கட்டுப்பாட்டையும் உங்கள் நடத்தையில் வெளிப்படுத்தவும்.
  • நினைவில் கொள்ளுங்கள்; உங்கள் அணுகுமுறையையும், நீங்கள் பதில் சொல்லும் விதத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும்.
  • பொறுமை, மீண்டு எழும் உத்வேகம், புரிந்து கொள்ளும் திறன், இவற்றை எப்போதும் விட்டு விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. Oubaitori: தனித்துவம்:


இது ஒரு ஜப்பானிய பழமொழியாகும். வசந்த கால மரங்களில் பூக்கும் செர்ரி, பிளம், ஆப்ரிகாட் மற்றும் பீச் ஆகிய நான்கு மரங்களின் வேறுபட்ட தன்மையிலிருந்து உருவான கருத்தாக்கம். 

நீங்கள் ஒருபோதும் உங்களை வேறொருவருடன் ஒப்பிடக் கூடாது. அதற்கு அவசியம் இல்லை என்பது அதன் சாரம்சம். 

ஒவ்வொரு பூவும் அதன் சொந்த நேரத்தில் பூக்கும். அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. அதுபோல, ஒவ்வொரு நபரும் தனது சொந்த பாதையைத் தீர்மானித்து, உத்வேகம் பெற்று,
தமது பயணத்தைத் தொடர வேண்டும்.

  • உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். 
  • ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காலவரிசை மற்றும் தனித்துவமான பாதை உள்ளது.
  • மற்றவர்களுடன் ஒப்பிட்டு உங்களை அளவிட முயல்வதை விட, உங்கள் சொந்த முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி, உங்களது பாதையில் பயணிப்பது முக்கியம்.

6. Kaizen: தொடர் மேம்பாடு:


"கைசென்"  என்றால், "தொடர்ந்து முன்னேறுதல்" என்று பொருள்.

இது தனிப்பட்ட வளர்ச்சி முதல் அலுவலக செயல்பாடுகள் வரை, உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், நீங்கள் அடைய விரும்பும் நீண்ட கால முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், சிறு, சிறு மாற்றங்கள் அல்லது நிலையான மேம்பாடுகளைத் தொடர்ந்து செய்வதன் வழியாகச் சாதிக்க முடியும் எனும் கருத்தாக்கம்.
  • நீங்கள் மேம்படுத்த விரும்பும் பல பகுதிகளைக் கண்டறியவும்.
  • ஒரே நேரத்தில் அவற்றில் பெரிய மாற்றங்களை அடைய முயல்வதை விட, முக்கியமாக அடைய வேண்டிய ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
  • உங்கள் இலக்குகளைச் சிறிதாகவும், நிறைவேற்றக்கூடிய சிறு, சிறு செயல்களாகவும் பிரித்துக் கொள்ளுங்கள்.
  •  அவற்றில் தொடர்ந்து கவனமாக ஈடுபட்டு அச் செயல்களை முடியுங்கள். 
  • அடையும் வெற்றிகளைக் கொண்டாடி, அவற்றைத் தொடர் உந்துதலாகப்  பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் முன்னேற முயலுங்கள். 
  •  சிறிய மாற்றங்கள் கூட காலப்போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

7. Shu-Ha-Ri: கற்றுக்கொள் - பரிசோதித்து பார் - சிகரம் தொடு.

Shu-Ha-Ri என்பது தொழில், கல்வி மற்றும் தனிப்பட்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய தற்காப்புக் கலைக் கருத்தாகும். 

இது ஒரு நுட்பத்தை எவ்வாறு கற்றுக்கொள்வது, அதில் எவ்விதம் தேர்ச்சி அடைவது, அதன் உன்னத நிலையை அடையும் வழிமுறைகள் பற்றிய பல்வேறு  நிலைகளைக் குறிக்கிறது.

Shu-Ha-Ri மூலம், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வளர்க்கக் கூடும். அதே வேளையில் நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பான தேர்ச்சியும் பெறலாம். 

அந்த உன்னத ஞானத்தை அடைவதற்கு மூன்று அறிவு நிலைகள் உள்ளன. 

1.  Shu: Follow the Rules: விதிகளைப் பின்பற்றவும்:

முதல் நிலையில், ஒருவர் தனது சொந்த வழிமுறை அல்லது அணுகுமுறையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக, பாரம்பரியத்தைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும், மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர வேண்டும். 
  • இது ஒரு குருவின் போதனையைப் பின்பற்றுவதன் மூலம் அடிப்படை உபதேசங்களைக் கற்றுக்கொள்ளுதல். 
  • மகா குருக்களைப் பிரதிபலிப்பதும் இந்த கட்டத்தில் நிகழ்கிறது.
2. HA: Break the Rules: விதிகளை உடைக்கவும்:

இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட திறன் அல்லது துறையின் அடிப்படைகளை கற்று தேர்ச்சி பெறுவது. 

ஓர் உறுதியான அடித்தளத்தை பெற்றவுடன், புதிய அணுகுமுறைகள் மற்றும் மேம்படுத்தும் யோசனைகளை பரிசோதித்து ஆராயத் தொடங்குவது. 
  • குருவிடமிருந்து கற்று தேர்ச்சி பெறுதல்.
  • அதை  ஒருங்கிணைத்து பயிற்சி செய்தல்.
  • மேம்படுத்த புதிய வழி முறைகளை ஆராய்தல்.
3. RiTranscend the Rules: உங்கள் சொந்த விதிகளை உருவாக்கவும்:

இறுதியாக, நீங்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில், உங்களுடைய தனித்துவமான பாணி அல்லது அணுகுமுறையை உருவாக்குங்கள். 

இந்த நிலை, நீங்கள் கற்றதைப் பல வகைப்பட்ட மாணவர்களும், பயன் படுத்தும் விதமாக, புதிய யுக்தியை உருவாக்கும் திறனை மையமாகக் கொண்டுள்ளது.
  • மாணவர் தயாராக இருக்கும்போது ஆசிரியர் தோன்றுவார். மாணவர் உண்மையிலேயே ஆயத்தமாக இருக்கும் போது ஆசிரியர் மறைந்து விடுவார். -Tao Te Ching.

படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

புதன், 12 ஏப்ரல், 2023

மௌனம் நல்லது.


 

நம் சிந்தைகளின் நிறைவு வார்த்தைகளில் வெளிப்படுகிறது. பேசுவதைக் குறித்த சில நீதி மொழிகள்:

அளவுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.  

வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.

தம் நாவைக் காத்துக் கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்பவரே மெய்யறிவாளர், 

வாழ்க்கையில் சில கடினமான சூழல்களை தவிர்க்க முடியாது. நாம் மனம் திறந்து பேசும் படி நிர்ப்பந்திக்கப்படும் அத்தகைய தருணங்களை அடையாளம் காணவும், அதைக் கவனமாக எதிர் கொள்ளவும் உதவும் சில குறிப்புகள் உங்கள் பார்வைக்கு. 

1. குழப்பமான மனநிலையில்:

உங்களுக்குத் தெளிவாகச் சிந்திப்பதில் சிக்கல் இருக்கும்போது பேசாமல் இருப்பது நலம். 

குழப்பமான மன நிலைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். சோர்வாக இருக்கக் கூடும். வேறு ஒருவர் ஆதிக்கத்தின் நிர்ப்பந்தமாக இருக்கலாம். கோபம், கவலை, பதற்றம் போன்ற காரணமாகவும் இருக்கலாம்.

இவ்வித தெளிவற்ற குழப்பமான சூழ்நிலைகளில், மனதைத் திறந்து பேசுவதற்கு முன்பாக சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருப்பது நல்லது. அவ்வாறு செய்யவில்லை என்றால், ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டு பின்னர் அதற்காக வருத்தப்பட நேரிடும்.

உங்கள் யோசனைகள் முதிர்ச்சியடைய சில காலங்கள் எடுத்துக் கொண்டு, அதன் பின்னரும், உங்கள் கருத்து மாறாதிருந்தால் அவ்விதமாகவே பேசலாம், ஆனால் நீங்கள் உணர்ச்சி ரீதியாகவோ அல்லது வேறு வழிகளில் சமரசம் செய்ய நிர்ப்பந்திக்கப் படும் சூழலில் மௌனமே சிறந்த பதில்.

2. பிறரை புண்படுத்தும் சூழலில்:

உங்கள் வார்த்தைகள் பிறருக்குப் பயனுள்ளதாக இருப்பதைத் தாண்டி, அவரை புண்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருந்தால் பேசுவதைத் தவிர்க்கவும்.

சில சந்தர்ப்பங்களில் உண்மையைக் கூற வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. அப்போது அதில் சம்பந்தப்பட்ட நபர் வருத்தப்படாதவாறு பேச முடியாது தான். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எப்போதோ ஒரு முறை வெகு அரிதாகவே வருகின்றது.

ஆகவே, நீங்கள் பேச விரும்பும் வார்த்தைகள் பயனுள்ளதாக இருக்குமா அல்லது மற்றவரைப் புண்படுத்தும் வகையில் இருக்கப் போகிறதா எனப் பேசுவதற்கு முன்பாக சிந்தியுங்கள். ஒரு சந்திப்பு கசப்பான அனுபவத்தில் முடிவதை விட மௌனமாக இருப்பதே நலம்.

3. பொருந்தா சூழலில்:

உங்கள் கருத்து மதிப்பற்றதாக இருக்கும் இடத்தில், பொருத்தமில்லாமல் பேசாதீர். இதை ஒப்புக்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் எளிதல்ல. உங்கள் சுய மதிப்பு  ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இது மிகவும் முக்கியமானது.

ஒரு சூழ்நிலையைப் பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரியாதபோது, ​​அல்லது அதைக் குறித்து அறிந்த நிபுணர்கள் அவ்விடத்தில் சூழ இருக்கும்போது, ​​அல்லது உங்கள் கருத்து மற்றவர்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத போது, ​​அமைதியாக இருப்பது நல்லது. அதுவே புத்திசாலித்தனம்.

உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பற்ற இடத்தில் மௌனமே சிறந்த பதில்.

4. போதுமான சான்றுகள்  இல்லாத போது;

சில சந்தர்ப்பங்களில் நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி ஊகிக்கவும், பேசவும் நமக்குச் சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும், இதைக் கடைப்பிடிப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசும்போது அது நம்மையறியாது மற்றொரு நபருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, ஒரு நபரின் உடல் மற்றும் மன நலன் குறித்த உறுதியான தகவல்களை அறியாமல் அதைப் பற்றிப் பேசக்கூடாது. சில சூழல்களில் செவிவழிச் செய்திகள் உண்மையாக இருக்கலாம், ஆனாலும் நாம் கேட்ட  செவிவழி தகவல்கள், ஒரு பெரிய முடிவை மாற்றக் கூடியதாக இருக்குமானால், அதைக் குறித்துப் பேசாமல் இருப்பது நல்லது. 

உதாரணமாக, ஒரு நபர் தனக்கு உதவக்கூடிய மருந்தைப் பயன்படுத்தலாமா என்று பரிசீலித்து வருகிறார். அதே மருந்தைப் பயன்படுத்திய உங்கள் நண்பரின் நண்பரைப் பற்றிய சிகிச்சை குறித்து சில வதந்திகளை நீங்கள் கேட்டிருக்கலாம். அது வதந்தி அல்ல, உண்மைதான் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாது. இந்த வதந்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த மருந்துகளைப் பயன்படுத்தினால் சில பக்கவிளைவுகள் ஏற்படும் எனச் சொல்லாமல் இருப்பது நல்லது.

5. பேசாதே என்று அறிவுறுத்தப்படும்போது:

சில சூழல்களில் நாம் பேச வேண்டாம், அமைதியாக இரு எனக் கட்டுப்படுத்த படுவோம். அதனால் அவமதிக்கப் பட்டதை போல உணரக்கூடும். அது கோபத்தைத் தூண்டலாம். எனினும், அந்த மன தூண்டுதலைக் கட்டுப்படுத்தி, அதற்குப் பதிலாக ஏன் நம்மைப் பேசக்கூடாது எனச் சொல்கிறார்கள்? என ஆழ்ந்து சிந்திப்பது சிறந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கவனிப்பதும் மற்றும் நம்மை நாமே ஆராய்ந்து  கற்றுக்கொள்வதும் நல்லதாக இருக்கும்.

6. சொல்வதற்கு எதுவும் இல்லாத போது:

நாம் அனைவரும் எதையாவது ஒன்றைப் புதிதாகச் சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனாலும் அதற்காக, ஒரு அர்த்தமற்ற சிந்தனையை வலிந்து உருவாக்கிப் பேசக்கூடாது. 

சில தருணங்களில் உங்களிடம் சொல்ல எதுவும் இல்லாதிருக்கலாம். அதைச் சொல்வதற்கு வெட்கமாகக்  கூட இருக்கலாம். ஆனால் சொல்வதற்கு எதுவும் இல்லாதபோது, பேச வேண்டும் என்பதற்காக உளருவதை விட  அமைதி காப்பது சிறந்தது. அத்தகைய சூழலில் பிறர் கூறுவதைக் கவனமாகக் கேட்பதும், வேறு ஒருவர் சொல்லும் நல்ல கருத்தை ஆதரித்தும் பேசலாம். 

உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள், தவறுதலாகப் பேசி விட்டால், அவை மன்னிக்கப்படலாம், ஆனால் மறக்கப்படாது.  பல தருணங்களில் மௌனமாக இருப்பது எப்போதும் நமக்கு நன்மையைத் தரும். 

படம் இணையத்திலிருந்து நன்றியுடன்..