சனி, 18 ஆகஸ்ட், 2018

அகந்தை செய்யும் மாயம்.

🌺 அகந்தை செய்யும் மாயம். 



(Excerpts from the book of  "Cutting through Spiritual Materialism".)
by Chogyam Trungpa.

The problem is that ego can convert anything to its own use, even spirituality.


▪ நாம் எதிர்கொள்ளும் மனதின் எரிச்சல்களைத் தவிர்க்கவும், தன்னை பாதுகாப்பாகத்  வைத்துக் கொள்வதும் அகந்தையின் இயல்பான தன்மையாக இருக்கிறது.

▪ அகந்தையின் ஆளுகையால் மனம் புதிதாக எதையும் உள்வாங்கிக் கொள்ளமுடியாமல் தடுக்கப்படுகிறது.

▪ அகந்தை தன் அடையாளத்தை இழக்க நேரிடும் எந்த முயற்சியிலும் இறங்குவதில்லை.

▪ ‘சமயம்’ என்பதன் மூலம் தன் அடையாளத்தைக் காத்துக்கொள்ளலாம் என்று அகந்தை நினைப்பதால், அஃது அந்த வழியில்  பயணிக்கிறது.

▪ ஆன்மிகத் தேடல் என்பதை வீரதீரமான செயல்களை செய்வதன் வழியாகவே நிறைவேற்ற அகந்தை விரும்புகிறது.

▪ நமது தனித்துவத்தை இழந்துவிடாமல் இருப்பதற்கான  முயற்சிகளை செய்யவே மனதில் மறைந்திருக்கும் அகந்தை இடைவிடாமல் விழிப்புடன் போராடுகிறது.

▪ நாம் இதன்மூலம்  அகந்தை ஆன்மாவை விட்டு வெளியேறும் அனைத்து முயற்சிகளையும்  கட்டுப்படுத்துகிறோம்.

▪ இந்த மாதிரியான செயல்கள் நமக்கு ஆன்மிகப் பாதையில் பயணிப்பதைப் போன்ற ஒருவிதமான மாயத் தோற்றத்தை உருவாக்கும். ஆனால், உண்மையில் அப்போதும் நாம் போலியான நாமாக மட்டுமே இருக்கிறோம்.

▪ வாழ்க்கையின் யதார்த்தங்களை சந்திக்க நாம் பயப்படுகிறோம். எனவே அதிலிருந்து தப்பிப்பதற்காக அவற்றைக் கருத்தாக்கங்களாக வகைப்படுத்தவும், எளிதில் புரியாத பாசாங்குகளாகவும் மாற்றிடவும் அகந்தை விழைகிறது.

▪ நாம் வாழ்க்கையின் சூழ்நிலைகளை அதன் போக்கில் பார்க்கத் தயாராக இருக்க வேண்டும். அதை ஆன்மிகமாகவோ மறைபொருளாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை.

🔹உண்மையில் ஆன்மிகம் என்பது நமது நடத்தை, விழிப்பைக் கையாளும் அகந்தையின்  நிலைகளிலிருந்து விலகியிருப்பதே ஆகும்.

🔸இயல்பாக இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே ஆன்மீகம்.

🔹உண்மையான ஆன்மிகப் பயணத்தில் பயணிக்கும்போது நமது பாசாங்குத்தனத்தைப் பார்த்து நம்மால் சிரிக்கமுடியும். ஆனால், போலியாக அகந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தங்களது நகைச்சுவை உணர்வை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள்.

🔸 உண்மையான ஆன்மிகம் மிகவும் சாதாரணமானதும் கடினமானதுமாகும்.
அதில் நமது நம்பிக்கைகளை ஒப்படைத்துவிட்டு ஏமாற்றங்களுக்குப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்வது அறிவின் அடையாளமாகும். ஏனென்றால், அது நமது அகந்தை, கனவுகளின் இருப்பை நிராகரிக்கிறது.


(என். கௌரி அவர்கள் இந்து நாளிதழ் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.)

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

Salalah - அழகிய நகரம்.

Salalah  




சலாலா ஓமான் தேசத்தின் தெற்கில் அமைந்துள்ளது. மஸ்கட்டில் இருந்து ஏறக்குறைய 1100 கி.மி. தெற்கு நோக்கிப் பயணிக்க வேண்டும். ஏமன் தேசத்தின் அருகில் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். தற்போது அரசாளும் மன்னர் பிறந்த ஊர். ஒரு புறம் கடல் மற்ற மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கு.

சலாலாவின் சிறப்பு " kareef" எனும் சாரல் மழை தூவும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான வசந்த காலம்.

அரபு தேசத்தின் தகிக்கும் உஷ்ண காலத்தில் இந்தப் பகுதியில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையால் இது ஒரு பாலைவன சோலையாக, சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.

இது ஒரு சிறிய நகரம். ஊரைச் சுற்றி தென்னந்தோப்பு, வாழை மரம், பழத் தோட்டங்கள் என கேரள மாநிலத்தின் ஒரு கிராமத்தை நினைவு படுத்தும்.



சுற்றுலாத் தலமாக இருப்பதால் திரும்பிய திசை எல்லாம் உணவகங்கள் தான். மிகச் சிறந்த தென் இந்திய சைவ உணவகங்கள் உள்ளன. "Karref" இன் மூன்று மாதங்கள் முழுவதும் சாலை முழுவதும் சேறும் சகதியும் பூசப்பட்ட வாகனங்கள் அணிவகுப்பு தான்.

அந்த மூன்று மாதங்களும் மலையில் இருந்து வழியும் அருவிகள், சிற்றோடை, ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகள், பசுமையான மலைகள் எனக் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும்.



இங்கு விளையும் சாம்பிராணி வாசனைப் பிசின் மிகப் பிரசித்தமானது. இது மிகப் பழமையான ஒரு வியாபார ஸ்தலம்.  தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் archeological sites உள்ளது.

Khor Rorī எனும் இடத்தில் பழங்கால மக்கள் (BC 2 nd Century)   உபயோகம் செய்த மட் பாண்டம், குளியறை கல் தொட்டிகள், கல் அரவை இயந்திரம் எனப் பல பொருட்கள் அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.


அவர்கள் வாழ்ந்த இடங்கள் அதே விதத்தில் மிக அழகாகப் பராமரிக்கப்படுகின்றன.

Salalah வில் இந்து கோவில்கள், கிறித்தவ ஆலயங்கள் உண்டு.  எல்லாச் சமய நம்பிக்கை உடையவர்கள் தங்கள் மொழிகளிலேயே  வழிபாடு செய்ய அனுமதி உண்டு.


இங்கு யோபு என்னும் இறைத்தூதர் வாழ்ந்து மரித்தார் எனக் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய நம்பிக்கை உடையவர்கள் நம்புகிறார்கள். அவரது கல்லறை புனித இடமாக, வழிபாடு ஸ்தலமாக விளங்குகிறது.

ஓமான் தேசத்தின் முக்கிய துறைமுகங்களில் சலாலா துறைமுகம் ஒன்று.

மிக நவீனமான வசதிகள் உடைய அழகிய பன்னாட்டு விமான நிலையம் உண்டு. திருவனந்தபுரம், கொச்சின் நேரடி விமான சேவையும் உள்ளது.

2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதவி உயர்வு பெற்று இந்தப் பகுதிக்கு மாறுதல் ஆகி வந்தேன். இறைவன் அருளால் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்கள் வரை இங்குப் பணியாற்றவும் எனது பொறுப்பில் வழங்கப்பட்ட திட்டப்பணிகள் முடிக்கவும் கடவுள் உதவினார்.

நல்ல நண்பர்கள், ஆலயங்கள், சீதோஷ்ண நிலை, உணவகங்கள், தோப்புகள், தோட்டங்கள், சாரல் மழை என நமது ஊரில் வசிப்பது போலவே ஒரு தோற்றம்.

ஆஸ்திரேலியாவில் எனது மகனின் மேல்படிப்பு, மகள் பல் மருத்துவ படிப்பு, மகனின் திருமணம், புதிய பேத்தியின் வரவு, மகன் குடும்பமாக ஆஸ்திரேலியாவில் குடியேற்றம் என இந்தக் காலத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும்எனது மனதுக்கு மிக நெருக்கமானது.


வாழ்க்கை ஒரு நெடிய பயணம். அது மகிழ்வைத் தேடி ஓடும் பயணம் அல்ல.  அந்தப் பயணத்தில் அடையும் அனுபவங்களே துயரங்களும் மகிழ்ச்சியும்.

ஏமாற்றுபவர்கள் வழியாகத் தான் நல்ல நட்புகளின் அருமை புரிகிறது.

துயரமான இடங்களில் பணி புரியும் போது தான் சிறந்த இடங்களுக்கான வாசல்கள் திறக்கின்றன.

ஏழ்மையும் வறுமையில் வாழ்ந்த தருணங்கள் தான் பணத்தின் மதிப்பை கற்றுத் தந்தது.

தோல்விகளும் தனிமையும் தான் வெற்றியில் அடக்கத்தையும் பணிவையும் சொல்லித் தருகிறது.

தவறுகள் மன்னிக்கப்பட்ட போது தான் அன்பின் அர்த்தம் புரிகிறது.

உதவி செய்தும் மறக்கப்படும் போது தான் நமக்கு உதவியவர்களுக்கு நன்றி செலுத்தும் பண்பு வளர்கிறது.

புதிய இடம் நோக்கி தெற்கு எல்லையிலிருந்து வடக்கு எல்லை நோக்கி மீண்டும் அடுத்த பயணம்.

அதுவும் ஒரு சுற்றுலா தலமாகும்..

வாழ்க்கை என்பது நகர்தல். அதுவே சுவாரசியம்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மறு பிறப்பாளன்

மறு பிறப்பு.





"நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் கடவுளின் இறையரசில் இடம்பெற முடியாது” - இயேசு கிறிஸ்து.

ஒரு யூத சமய போதகர் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக  இரவில் இயேசுவை சந்திக்கிறார். அவரிடம் இயேசு கிறிஸ்து கூறியது தான் இந்த மாபெரும் உண்மை.

ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? 

ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் எப்படி நுழைய முடியும்? "ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாகப் பிறக்க முடியாதே” என அந்தப் போதகர் மறு உத்தரவு சொன்னார்.

அதற்கு இயேசு:

ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். "நீ மறுபடியும் பிறக்க வேண்டும்". 

"காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் இறைமையினால் மறுபடியும் பிறக்கிறான்” என்றார்.

மறுபடி பிறத்தல் என்பது குலப்பிறப்பால், சமய அடிப்படையில் நிகழ்வதல்ல.

எந்த ஒரு மனிதன் தனது இழிநிலையை உணர்ந்து, அந்த இழிநிலைக்குக் காரணமான அனைத்துச் செய்கைகளையும் விட்டு விலகி புது வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தீர்மானிக்கிறானோ அப்போது மறு பிறப்பாளானாக தனது பயணத்தை  துவக்குகிறான்.

தனது இழிநிலையை உணர்ந்து புத்தி தெளிதல் எனும் இந்த நிகழ்வு கடவுளின் அருளால் மாத்திரம் ஒரு மனிதனின் ஆன்மாவில் நிகழ்கிறது.

ஒவ்வொரு மனிதரும் வாழ்வின் கஷ்ட நேரத்தில் இவ்வித புத்தி தெளிவை லேசாக உணர்ந்தாலும், துன்பம் விலகிய உடன் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்கே திரும்பி விடுவர். காரணம் அந்தப் பழைய வாழ்க்கைத் தரும் இன்ப மயக்கம்.

இவ்விதம் இல்லாது துன்பம் நேரிடினும் தனது அர்ப்பணிப்பில் உறுதியாக வாழ்வைத் திட சங்கல்பம் கொண்டு தொடர்பவர்கள் மறு பிறப்பு அடைந்தவர்கள்.

சில குறிப்புகள்:


▪ ஆன்மா ஆசைப் பிணைப்பு என்ற ஒரு வகை உணர்வு பந்தத்தால் இவ்வுலகில் கட்டப்பட்டுள்ளது.

▪ அந்த ஆசைப் பிணைப்பில் இருந்து விடுபட்ட ஒருவன் இறை  நிலையை நோக்கிப் பயணிக்கிறான்.

▪ இருளடைந்த மேகங்களில் இருந்து வெளிவரும் நிலவைப் போல ஆசையில் இருந்து விடுபட்டவன்  ஞானத்தை புதையலைத் தேடுவது போலத் தேடி, நாடி தனது களங்கங்கள் அனைத்தையும் நீக்கி, தன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையுடன் வாழ்ந்திருப்பான்.

▪ ஆசையற்றவனாக இருக்கும் ஒருவன் ஒரு போதும் ஆன்மாவில் மரணம் அடைவதில்லை.  ஒழுக்கமும், தூய்மையை விரும்பும் மனோ நிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.

▪  புலன்களால் நுகரும் மணம், சுவை, பிறபொருட்கள் அளிக்கும் இன்பங்களில்   நாட்டம் இருக்காது.

▪ பாராட்டுக்கள், சாதனை மற்றும் புகழில் பற்று இருக்காது.

▪ அனைத்து உயிரினங்களின் வலி உணர்ந்து அவற்றைத் தனது சொந்த உறவைப் போல கருதி சிநேகமாக நடந்து கொள்வான்.

▪ அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும்  நிறுத்துகிறான்.

▪ எண்ணத்தாலும், வாக்காலும், செயலாலும் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் அன்பு செலுத்தி ஆதரிக்கிறான்.

▪ சடங்குகள் முக்கியமானது அல்ல அதன் பொருள் என்ன என்று உணர்ந்து கடைப்பிடிக்க கவனமாக இருப்பான்.

▪ வேதங்கள் அனைத்தையும் கற்று, சமய சடங்குகளை கடமையுணர்வுடன் நிறைவேற்றி, உபவாசம், விரதம் இருந்து, வேத தர்க்கங்கள்  அனைத்தையும் அறிவதால் மட்டுமே ஒருவன் மறுபிறப்பாளன் ஆகமாட்டான்.

▪ கருணை, அன்பு இவை இல்லாமல், ஆசை, பெருமை நிறைந்து இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தர்மங்களுடன்  கூடிய. பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே இறைமை நிலையை அடைந்துவிட முடியாது.

 ▪ எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் நடுநிலையில் பற்றறுத்து சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் போது அவன் இறைமை நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.

🔹 வைராக்கியம் நிறைந்த இறைப்பற்று,

🔸 சுயப் பற்றிலிருந்து விடுதலை,

🔹 இடைவிடாது உண்மையைத் தேடி விழைதல்,

🔸பொறுமையுடன் துன்பத்தில் அமைதி காத்தல்,

🔹 துன்பம் இழைப்பவரையும் மன்னித்தல்.

🔸 மனத் தாழ்மையாக இருத்தல்.

🔹 அனைத்து உயிர்களிடத்தும் இறைமையைக் காணுதல்

ஆகிய எழு குணங்களைக் கொண்டவர்கள் நிச்சயம் முழுமையடைவார்கள் அல்லது நிறைவடைவார்கள்.

வாழ்க்கை என்பது ஓர் அழகான வாய்ப்பு. அதன் பொருளையும் தனது படைப்பின் அவசியத்தையும் உணர்ந்து கொள்வதை விட ஒருவருக்கு மேலானது வேறு ஒன்றும் இல்லை.