வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மறு பிறப்பாளன்

மறு பிறப்பு.





"நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் கடவுளின் இறையரசில் இடம்பெற முடியாது” - இயேசு கிறிஸ்து.

ஒரு யூத சமய போதகர் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக  இரவில் இயேசுவை சந்திக்கிறார். அவரிடம் இயேசு கிறிஸ்து கூறியது தான் இந்த மாபெரும் உண்மை.

ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? 

ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் எப்படி நுழைய முடியும்? "ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாகப் பிறக்க முடியாதே” என அந்தப் போதகர் மறு உத்தரவு சொன்னார்.

அதற்கு இயேசு:

ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். "நீ மறுபடியும் பிறக்க வேண்டும்". 

"காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் இறைமையினால் மறுபடியும் பிறக்கிறான்” என்றார்.

மறுபடி பிறத்தல் என்பது குலப்பிறப்பால், சமய அடிப்படையில் நிகழ்வதல்ல.

எந்த ஒரு மனிதன் தனது இழிநிலையை உணர்ந்து, அந்த இழிநிலைக்குக் காரணமான அனைத்துச் செய்கைகளையும் விட்டு விலகி புது வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தீர்மானிக்கிறானோ அப்போது மறு பிறப்பாளானாக தனது பயணத்தை  துவக்குகிறான்.

தனது இழிநிலையை உணர்ந்து புத்தி தெளிதல் எனும் இந்த நிகழ்வு கடவுளின் அருளால் மாத்திரம் ஒரு மனிதனின் ஆன்மாவில் நிகழ்கிறது.

ஒவ்வொரு மனிதரும் வாழ்வின் கஷ்ட நேரத்தில் இவ்வித புத்தி தெளிவை லேசாக உணர்ந்தாலும், துன்பம் விலகிய உடன் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்கே திரும்பி விடுவர். காரணம் அந்தப் பழைய வாழ்க்கைத் தரும் இன்ப மயக்கம்.

இவ்விதம் இல்லாது துன்பம் நேரிடினும் தனது அர்ப்பணிப்பில் உறுதியாக வாழ்வைத் திட சங்கல்பம் கொண்டு தொடர்பவர்கள் மறு பிறப்பு அடைந்தவர்கள்.

சில குறிப்புகள்:


▪ ஆன்மா ஆசைப் பிணைப்பு என்ற ஒரு வகை உணர்வு பந்தத்தால் இவ்வுலகில் கட்டப்பட்டுள்ளது.

▪ அந்த ஆசைப் பிணைப்பில் இருந்து விடுபட்ட ஒருவன் இறை  நிலையை நோக்கிப் பயணிக்கிறான்.

▪ இருளடைந்த மேகங்களில் இருந்து வெளிவரும் நிலவைப் போல ஆசையில் இருந்து விடுபட்டவன்  ஞானத்தை புதையலைத் தேடுவது போலத் தேடி, நாடி தனது களங்கங்கள் அனைத்தையும் நீக்கி, தன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையுடன் வாழ்ந்திருப்பான்.

▪ ஆசையற்றவனாக இருக்கும் ஒருவன் ஒரு போதும் ஆன்மாவில் மரணம் அடைவதில்லை.  ஒழுக்கமும், தூய்மையை விரும்பும் மனோ நிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.

▪  புலன்களால் நுகரும் மணம், சுவை, பிறபொருட்கள் அளிக்கும் இன்பங்களில்   நாட்டம் இருக்காது.

▪ பாராட்டுக்கள், சாதனை மற்றும் புகழில் பற்று இருக்காது.

▪ அனைத்து உயிரினங்களின் வலி உணர்ந்து அவற்றைத் தனது சொந்த உறவைப் போல கருதி சிநேகமாக நடந்து கொள்வான்.

▪ அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும்  நிறுத்துகிறான்.

▪ எண்ணத்தாலும், வாக்காலும், செயலாலும் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் அன்பு செலுத்தி ஆதரிக்கிறான்.

▪ சடங்குகள் முக்கியமானது அல்ல அதன் பொருள் என்ன என்று உணர்ந்து கடைப்பிடிக்க கவனமாக இருப்பான்.

▪ வேதங்கள் அனைத்தையும் கற்று, சமய சடங்குகளை கடமையுணர்வுடன் நிறைவேற்றி, உபவாசம், விரதம் இருந்து, வேத தர்க்கங்கள்  அனைத்தையும் அறிவதால் மட்டுமே ஒருவன் மறுபிறப்பாளன் ஆகமாட்டான்.

▪ கருணை, அன்பு இவை இல்லாமல், ஆசை, பெருமை நிறைந்து இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தர்மங்களுடன்  கூடிய. பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே இறைமை நிலையை அடைந்துவிட முடியாது.

 ▪ எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் நடுநிலையில் பற்றறுத்து சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் போது அவன் இறைமை நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.

🔹 வைராக்கியம் நிறைந்த இறைப்பற்று,

🔸 சுயப் பற்றிலிருந்து விடுதலை,

🔹 இடைவிடாது உண்மையைத் தேடி விழைதல்,

🔸பொறுமையுடன் துன்பத்தில் அமைதி காத்தல்,

🔹 துன்பம் இழைப்பவரையும் மன்னித்தல்.

🔸 மனத் தாழ்மையாக இருத்தல்.

🔹 அனைத்து உயிர்களிடத்தும் இறைமையைக் காணுதல்

ஆகிய எழு குணங்களைக் கொண்டவர்கள் நிச்சயம் முழுமையடைவார்கள் அல்லது நிறைவடைவார்கள்.

வாழ்க்கை என்பது ஓர் அழகான வாய்ப்பு. அதன் பொருளையும் தனது படைப்பின் அவசியத்தையும் உணர்ந்து கொள்வதை விட ஒருவருக்கு மேலானது வேறு ஒன்றும் இல்லை. 

2 கருத்துகள்: