சனி, 29 ஏப்ரல், 2017

புத்துயிர்ப்பு by Leo Tolstoy.(1899) .

வாசிப்பனுபவம்:


 புத்துயிர்ப்பு by Leo Tolstoy.(1899) .


1996 ம் வருடத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எனது முதுநிலை பொறியியல் படித்துக்கொண்டிருந்த காலகட்டம். சிதம்பரத்தின் நடை பாதைளின் ஓரமாக உபயோகித்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிற்கும். மிகச்சிறந்த புத்தகங்களை அழகாக வரிசைப்படுத்தி வைத்திருப்பார்கள்.

புத்தகங்களுக்கான விதி ஒன்று உண்டு !!!

நாம் எந்தவொருப் பொருளைக் குறித்து தேடுதலும் ஆழ்ந்தவறிவும் அடைய விரும்புகிறோமோ, அக்கருத்துக்கள் அடங்கிய. நூல் எவ்வகையிலாவது நமது கரங்களை வந்தடையும்.

இது புத்தகங்களுக்கான விதி!!!

வாழ்வில் அதிகமான குற்றவுணர்வும், குழப்பமான மனநிலையும் அப்போது என் மனதை ஆட்டிப்படைத்த காலகட்டம்! வாழ்க்கையின் உண்மையான பொருள் என்ன என்பதே அப்போதைய தேடலாக இருந்தது. புத்தக வாசிப்பு தான் சுவாசம்.

அது சரி சிறந்த புத்தகங்கள் என்பதற்கு எது வரையறை?

Loui Sinter Johnson ன் மிகச் சிறந்த நூலான "உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள் " என்ற புத்தகத்தில், சிறந்த நூல்கள் பற்றிய சில குறிப்புகள் தருகிறார்.

🔸சிறந்த புத்தகங்கள் நமது விருப்பங்கள், எண்ணங்கள், வாழ்க்கை முறை,
உணவு, உடை வகைகள், நட்புணர்வு ஆகியவற்றில் சரியான புரிதல்களையும்,
அக்கறையுள்ள நேர்மறையான மாற்றங்களையும் பண்பாடு சார்ந்து ஏற்படுத்தும்.

🔹 சிறந்த புத்தகங்கள் எப்பொழுதும் அதைவிட மேலும் சிறந்த நூல்களை
கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தாகத்தை நமக்குள் உருவாக்கும்.

🔸 சிறந்த புத்தகங்களின் பக்கங்களை எளிதில் வாசித்துக் கடந்து விடமுடியாது. இரண்டு வாக்கியங்களிடையே மறைந்து இருக்கும் அதின் உட்கருத்து கண்டு உணரும் மட்டும் கண்களும், மனமும் நிலைக்குத்தீ நிற்கும்.

🔸 நகைச்சுவை, எள்ளல், கோபம், ஆற்றாமை, காதல், வீரம், ஞானம், அழுகை, கண்ணீர், அன்பு, கருணை, ஏக்கம், கையறுநிலை, இயலாமை என மனதில் அது ஏற்படுத்தும் உணர்ச்சிகளும் மாற்றங்களும் அளவிடமுடியாதவை.

அன்று சிதம்பரத்தில் நடைபாதை புத்தக கடையில் நான் வாங்கிய தமிழ் மொழிபெயர்ப்பு நூல் Leo Tolstoy's அவர்களின்  மிகச்சிறந்த நாவலான. புத்துயிர்ப்பு (Resurrection).

"அறம் சார்ந்த புத்தகத்தின் கருத்துக்களை நம்பி அதை நாம் ஏற்றுக் கொண்டு கடைப்பிடிக்கும் போது அந்த நூல் நமது வாழ்வின் பாதைகளையும், அதின் திசைகளையும் தீர்மானிக்கின்றது". 

வாழ்வில் நம்முடைய பல மதிப்பீடுகளை அது தலைகீழாக மாற்றுகிறது.

பொதுவாகப் புத்தகங்களை நாம் வாசிப்போம். ஆனால் சிறந்த நூல்கள் நம்மை வாசிக்கும்.

கண்ணாடியில் முகம் பார்ப்பது போல நமது மன உணர்வுகளையும், விருப்பங்களையும் சிறந்த புத்தகங்கள் நமக்கு துல்லிமாகஅடையாளம் காட்டும்.

புத்துயிர்ப்பு கதையின் உள்ளடக்கம்


தன் சொந்த சுயநலம், சமூகத்தின் அநீதிகள் இந்த இரண்டு மனநிலைகளுக்கு  இடையில் சிக்கி தவிக்கும் / போராடும் -                       
ஒரு மனிதன் வாழ்க்கை கதை தான் புத்துயிர்ப்பு. 

Leo Tolstoy அவர்கள் தன் முதிர்ந்த வயதில் எழுதிய மிகப்பெரிய நாவல்.

நெக்லுதொவ் (Nehkludev ) சக நீதிபதிகளுடன் விசாரணை மன்றத்தில் அமர்ந்திருக்கிறார். அன்றைய விசாரணை ஒருவிபச்சார விடுதியில் நடந்த கொலை வழக்கு பற்றியது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் அங்கே பிடிபட்ட விபச்சாரி.

குற்றவாளியைக் கண்டதும் நெக்லுதொவ் திடுக்கிடுகிறார். அவரது நினைவுகள் பின்னோக்கி பயணிக்கிறது.

நெக்லுதொவ் தன் இளம் வயதில் விடுமுறைக்காக தன் அத்தை வசிக்கும் எஸ்டேடட்டுக்கு செல்கிறார். அங்கு வீட்டில் பணிபுரியும் மாஸ்லாவோ (Maslova) எனும் இளம் அழகு நங்கையை  சந்திக்கிறார். மாசறுவற்ற அவ் இளம்பெண் இவரது காதல் வலையில் சிக்குகிறாள். மயங்கிய அப்பெண்ணுடன் உறவு கொண்டு சில நாட்கள் வாழ்ந்து, எவ்விதகுற்றவுணர்வும் இன்றி போலி வாக்குறுதிகளை அளித்து விட்டு அவ்விடம் விட்டுக் கடந்து செல்கின்றார்.

மாஸ்லாவோ கர்ப்பமாகின்றார். தூற்றப்படுகின்றார். வீட்டு வேலை செய்யும் ஏழைப்பெண் ஒரு பண்ணை முதலாளியைத்  திருமணம் செய்வது என்பது
கூடாத காரியம் என உறவினர்கள் கூறுகின்றனர்.

கருவைக் கலைத்துவிட ஆலோசனை தருகிறார்கள். மாஸ்லா ஏற்கமறுக்கிறார். நெக்லுதொவ் வார்த்தைகளை குழந்தைபோல் நம்பி அவரைத் தேடி பட்டணம் செல்கிறாள். ஏமாற்றப்பட்டதை உணருகிறாள். குழந்தை பிறந்து மரிக்கிறது. விபச்சார விடுதியில் இனைகிறாள். மனசாட்சியை மறக்கடிக்கக் குடிப்பழக்கமும் தொடங்குகிறது.

இன்று ஒரு கொலைக்  குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் தன் முன்னாள் காதலன்  முன், தன் வாழ்வை பாழ் படுத்தியவனே நீதிபதியாக அமர்ந்திருக்கிறான் என அறியாது குற்றவாளி கூண்டில் நிற்கிறாள்.

இளைய வயதில் எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றியவன் தற்போது முதிர்வயதில்  மனசாட்சியால் கடிந்து கொள்ளப்பட்டு பிராயச்சித்தம் தேடுவதுதான் இக்கதையின் பயணம். 

விபச்சாரம், போதையினால் தன்னையே மறக்கடித்து வாழும் பெண்
மனதை உயிர்ப்படையச் செய்வதும், 

அந்த நெடிய பிராயச்சித்தப் பயணத்தில் நெக்லுதொவ் புத்துயிர் அடைவதும்தான்  புத்துயிர்ப்பு.

மறுபடியும் புதிதாய் பிறத்தல்!

இது ஒரு உலகப்புகழ் பெற்ற Leo Tolstoy அவர்களின் ஓர் Classical படைப்பு !!!

கதையின்  பயணத்தில் Maslov எழுப்பும் ஒரு கேள்வி நம்மை உலுக்கிவிடும்!!!

At the young, You had your pleasures from me in this world, and now you want to get your salvation through me in the world to come? 

21 வருடங்கள் கடந்து  இந்தப் படைப்பு குறித்து நினைக்கையில் எவ்வளவு தூரம் என் சிந்தனைகளில், நம்பிக்கைகளில் என்னைறியாலேயே அது ஒரு தாக்கத்தையும், மாற்றத்தையும் எற்ப்படுத்தி என்னை உயர்ந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது என்பதை உணரமுடிகிறது.

இந்தப் பகிர்வு ஒருவித நன்றியறிதலே..,

வாழ்வின் திசைகளை மாற்றும் வலிமை வார்த்தைகளுக்கு உண்டு!!!

7 கருத்துகள்:

  1. அனைத்தும் உண்மை...

    சுவாசிப்பு இருக்கும் வரை வாசிப்பு...

    நம் பதிவுகள் கூட நம்மை நெறிப்படுத்தும்...

    பதிலளிநீக்கு
  2. லியோ டால்ஸ்டாய், ஒரு அறிவு ஜீவி... ஞானி..அவரின் ஒரு படைப்பு உங்கள் மனதில் கடந்த 20 வருடங்களாக ஊறி, ஒரு நல் முத்தாக உருவாகி, உங்களையும் அறிவு ஜீவி ஆக்கியுள்ளது! நீங்கள் ஞானி ஆகவும் எங்களையும் அவ்வாறே பயிற்றுவிக்கவும் ஆண்டவன் அருள் புரியட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி ரவி! நானும் என்னை ஒரு மாணவனாகவே உணர்கிறேன்.

      நீக்கு
  3. நமது தேடல் தீவிரம் அடையும்போது அதற்கேற்ற புத்தகங்கள் எங்கெங்கிருந்தோ நம்மை வந்தடையும் என்பது எனது அனுபவமும் கூட.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  4. உங்கள் அனுபவ பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியர்கள் கல்வி வரலாற்றை கற்பதன் அவசியம் யாது

    பதிலளிநீக்கு