சனி, 12 நவம்பர், 2022

47. சீர்மை மறவேல்.

 நல்ல குணங்களைக் காத்துக் கொள்.


Good Character is not formed in a week or a month. It is created by little, a day by day. Protracted and patient effort is needed to develop good character. - Heraclitus of Ephesus.

நல்ல குணம் ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் உருவாகுவது இல்லை. இது சிறிது சிறிதாக, நாளுக்கு நாள் வளர்க்கப்படுகிறது. நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ள நீண்ட மற்றும் பொறுமையான முயற்சி தேவை.

சீர்மை - வார்த்தை விளக்கம்:

சீர்மை எனும் வார்த்தைக்கு, ஒழுங்கமைப்பு (In order), சிறப்பு (excellence), புகழ் (reputation), நன்னடத்தை (Good behavior) எனப் பல அர்த்தங்கள் உள்ளது. 

''சீர்மை மறவேல்'' என்பதற்குப் புகழுக்குக் காரணமான சிறப்பைத் தரும் நல்ல குணங்களை மறந்து விடாதே எனப் பொருள் கொள்ளலாம்.

சீர் என்பதற்கு தராசு எனும் அர்த்தமும் உண்டு. சீர்மை என்றால் தராசுமுள் போன்ற நடுவுநிலைமை.  ஆக ''சீர்மை மறவேல்'' என்பதற்கு ''நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, நடுவுநிலைமை தவறாமல் வாழ்வதற்கு மறந்து விடக்கூடாது'' என்பது மற்றுமொரு விளக்கம். 

நற்குணங்களை எளிதாக உருவாக்கிட முடியாது. அதை அமைதியாக அடைந்து விடவும் இயலாது. 

மனதில் உயர்ந்த இலட்சியம், சிறந்த குறிக்கோள் இவற்றை அடைய விட்டுக் கொடுக்காமல் போராடும் போது பல துயர சம்பவங்களை எதிர் கொள்ள நேரிடும். அந்த வேதனை அளிக்கும் சூழல் வலிகள் மிகுந்த அனுபவத்தைத் தரும். பெற்ற, கற்ற அனுபவங்கள் மனதை வலிமையாக்குகிறது. அந்த வலிமை பெற்ற மனதிலிருந்து நல்ல குணங்கள் பிறக்கின்றன.

ஒருவர் இயல்பான நிலையில் செய்யும் செயல்கள் வழியாக அவரது உண்மையான குணத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.  

நல்ல பண்புகள் உடையவர்கள் பணம், அதிகாரம் இவற்றால் மயங்கிச் சூழலுக்குத் தக்கவாறு மாற மாட்டார்கள். இழிவான ஆதாயத்திற்காகத் தவறான செயல்களைச் செய்ய மாட்டார்கள். 

திறமைகள் மூலமாக உயர்ந்த இடத்தை அடைய முடியும். ஆனால் அந்த உயர்ந்த நிலையைத் தக்க வைக்க நல்ல குணம் அவசியம். 

குறளிருந்து சில கடைப் பிடிக்க வேண்டிய நல்ல குணங்கள் மற்றும் விட்டு விலக வேண்டிய தீய குணங்களை அறிந்து கொள்வோம்.

இறையச்சம்:

சிறு வயதில் அப்பாவிற்குப் பயப்படுவோம். அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிவோம். அது தண்டனைக்கு அஞ்சுவதால் ஏற்படுவது. 

ஆனால் நாம் முதிர்ச்சி பெறும் போது தந்தையின் வார்த்தையை மிகக் கவனமாக மதித்துக் கேட்டு நடப்போம். நம்மீது அவருக்கு உள்ள உண்மையான அக்கறையை நாம் உணர்ந்து கொண்டதால் அந்த மாற்றம் நிகழ்கிறது.

அது போல, இறையச்சத்தால் நல்ல செயல்களைச் செய்கிறோம். கடவுளுக்குப் பயப்படுவதே நல்ல குணங்கள் நம்மில் உருவாகத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. நற் பண்புகள் நமக்குள் உருவாகின்றது. 

அவை நம் வாழ்வில் தரும் உயர்வு, மன நிறைவு, ஞானம், மேன்மை இவற்றால் இறைவனுக்கு நம் மீது உள்ள அன்பை உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஆக நற்பண்பு மிக்கவர் இறைவனுக்கு அஞ்சி அல்ல, அவரது பெருமையை, மேன்மையை உணர்ந்து இறை வார்த்தைக்குக் கீழ்ப் படிந்து நடக்கின்றனர். 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் அவை பயனற்றவையாகும். 

அது போல எட்டுக் குணங்களை உடைய ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்ட இறைவனின் திருவடிகளை வணங்கி நடக்காதவனின் தலையும் (அறிவும்) பயனற்றதாகும். 

அறம் செய்:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

நன்மை எது, தீமை எது என்பதை ஆராய்ந்து உணர்ந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொள்பவர்களே பெருமைக்குரியவர்கள்.

மனதில் தூய்மை:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

ஒருவன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் அதுவே. மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை.

பழி பாவத்திற்குப் பயப்படு:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 

பொருள் சேர்க்கும் போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து அனைவருடன் அதைப் பகிர்ந்து செலவு செய்யும்  பண்புடையவர் வாழ்க்கை களங்கமற்றது (குறைவற்றது). 

கடமையை செய்:

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் இருக்கச் செய்தலேயாகும்.

வீரத்துடன் செயல்புரி:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது எனும் உண்மை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள். 

விருந்தினரை உபசரி:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.  

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு உபசரிக்கின்றவருடைய வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்.

பயனுடைய சொற்களைப் பேசு:

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

நல்ல பண்பு உடையவர் பயனில்லாத சொற்களைப் பேசுவாரெனில், அவருடைய மேன்மை அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

நன்றி மறவாது இரு:

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பை ஏழேல் பிறவிகளிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் பெரியோர்.

நடுநிலை தவறாதே:

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி

தன்னைச் சமமாகச் செய்து கொண்டு, பின்பு பொருளைச்‌ சீர்‌ தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல்‌ அமைந்து, ஒரு பக்கமாகச்‌ சாயாமல்‌ நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்‌.

அடக்கத்துடன் இரு:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின் 

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப ஒருவர் நல்வழியில் அடக்கமாக வாழ்ந்தால், அவரது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவருக்குப் பெருமையைக் கொடுக்கும். 

ஒழுக்கம் உயிரினும் பெரிது:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். 

ஒழுக்கமே எப்போதும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

பிறன் மனைவியை விரும்பாதே:

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை விரும்பிச் செல்பவனிடமிருந்து நீங்காது.

தீமையைப் பொறுத்துக் கொள்:

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்றைய ஒரு நாள் மட்டுமே இன்பம். அந்த தீமையைப் பொறுத்தவருக்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

பொறாமைப் படாதே:

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

ஒருவர் எவரிடமும் பொறாமை கொள்ளாத  பெருந்தன்மை பெற்றால், அவருக்கு அதைவிடச் சிறந்த சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.

பிறர் பொருளை விரும்பாதே:

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

பிறர் பொருளை விரும்பி அதனைக் கவர்ந்து கொண்டு ஒருவன் வளம் பெற விரும்பினால் அது நலம் தருவதாக இருக்காது. அதனால் பிறர் பொருளை விரும்பக் கூடாது.

முதுகுக்குப் பின் இகழ்ந்து பேசாதே:

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்

ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சிணியம் இல்லாமல் நேரில் கடுமையாகப் பேசினாலும் பேசலாம். அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் பேசக் கூடாது.

தீங்கு தரும் செயலை மறந்தும் நினைக்காதே:

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

தீய செயல்களால் தீமையே விளையும். ஆகவே தீயச் செயல்களை நெருப்பைக் காட்டிலும் கொடுமையானவை எனப் பயந்து அவற்றை விட்டு விலகி வாழ வேண்டும்.

பகிர்ந்து கொடு:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

ஏழைகளின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

இரக்கம். (அருள்):

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

அருளால் வரும் செல்வமே எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாகும். அதைத் தவிர்த்த பொருளால் வாங்கப்படும் செல்வங்கள் இழிந்த மனிதரிடமும் உள்ளன.

புலால் மறுத்தல்:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
பொருளல்ல தவ்வூன் தினல்

இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே. ஒரு உயிரைக் கொலை செய்தல் இரக்கம் இல்லாத தன்மை. அதன் இறைச்சியைத் தின்பது அறம் இல்லாதது.

தவம் - தியானம் - இறை வேண்டல்:

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருப்பது ஆகிய இவையே தவம் என்பதன் இலக்கணம். 

ஏமாற்றக் கூடாது:

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட கொடியவர் எவரும் இல்லை.

திருடாதே:

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.  

திருடுவதால் சேர்க்கப்படும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி, முன் உள்ளதையும் சேர்த்து ஒன்றுமில்லாமல் அழித்துவிடும்.

உண்மை பேசு:

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. 

பொய் சொல்லாமல் ஒருவர் உண்மையைப் பேசி நன்மையையே செய்து வாழ்ந்தால் அவர் வேறு  அறங்களைச் செய்யத் தேவை இல்லை.

சினம் அழிவு - கோபப் படாதே:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

ஒருவர் துன்பம் நேராமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமானால், கோபத்தை அடக்கி ஆள வேண்டும் இல்லையேல் அக்கோபம், அவனையே அழித்துவிடும்.

மன்னிப்பு:

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். 

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே ஆகும்.

துன்பம் தரும் செயல்களைச் செய்யாதே:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

எங்கும், எப்போதும் துயரத்தைத் தரும் தீயச் செயல்களை மனம் அறிந்து சிறிதளவும் செய்யக்கூடாது. அதுவே சிறந்த அறம்.

கொலை செய்யாதே:

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. 

அறங்களின் வரிசையில் உயிர்களைக் கொல்லாமல் இருப்பது ஒப்பற்றது. முதன்மையானது. அதற்கடுத்து பின் வருவது உண்மை பேசுவது.

மெய்ப் பொருள் விரும்பு:

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். 

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாத மனம் உண்மையை விரும்பி தேடுவோர்க்கே உண்டாகும்‌. 


Character is not something that you buy; it is not a commodity that can be bartered for; it is not a quality suited for only the rich and famous; rather, character is built upon the foundational commitment of love, honesty, and compassion for others - Byron R. Pulsifer.

குணம் என்பது கடையில் வாங்கக் கூடிய ஓர் பொருள் இல்லை. ஒரு பொருளைக் கொடுத்து மாற்றாக இதைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இது ஒரு பண்டமும் இல்லை.

பணக்காரர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும் மட்டுமே இதைப் பெறக் கூடிய தகுதியும் தரமும் வாய்ந்தவர்கள் கிடையாது; 

மாறாக, பிறர் மீது நேர்மை, இரக்கம் மற்றும் அன்புடன் வாழ வேண்டும் எனும் அர்ப்பணிப்பு மிக்க  மனம் என்கிற அஸ்திவாரம் மீது குணங்கள் கட்டப்படுகின்றது - பைரன் ஆர். பல்சிஃபர்


படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்..,

2 கருத்துகள்:

  1. அருமை மாமா சீர்மை என்பது என்பது பெற்றோர்களின் வளர்ப்பு மற்றும் அவர்கள் வளர்கிற சூழல் அவர்களை உருவாக்குகிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மை தான். குடும்ப சூழலும் பண்புகள் உருவாக்கத்தில் உறுதுணையாக இருக்கின்றது. நன்றி.

      நீக்கு