சனி, 19 நவம்பர், 2022

48. சுளிக்கச் சொல்லேல்.

கேட்பவர் முகம் மலர பேசுவோம்.



சுளிக்கச் சொல்லேல்: 

- மற்றவர்கள் முகம் கோணும்படியான சொற்களைப் பேசக்கூடாது. 

- பிறர் மனம் நோகப் பேசாதே.

- கேட்பவருக்கு கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.

- சிலரது பேச்சைக் கேட்கும் போது கோபம் வரும். சிலர் செய்யும் செயல்கள் வெறுப்பைத் தரும். அப்போது எழும் எரிச்சல் தரும் உணர்வால் நாம் முகத்தைச் சுளித்துக் கொள்வது உண்டு. அவ்வாறு பிறர் முகம் சுளிக்கும் விதமாக நாம் எந்தச் சொல்லையும் பேசக்கூடாது. அப்படிப் பட்ட செயலைச் செய்யவும் கூடாது.

வார்த்தைகள் மனதைக் கிழிக்கும்:

சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தைச்  செய்தித்தாளில் வாசித்தேன். அது மனதைக் கலங்க வைத்தது. தனது சகாக்களால் அவர்கள் அவமதிக்கப்பட்டார்கள். ஆடைகள் நீக்கப்பட்டது. திகிலூட்டும் கேலிக்குரிய செயல்களைச் செய்திட வற்புறுத்தப்பட்டனர். இது மிகக் கொடூரமானது. துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற கொடூரமான மற்றும் வெறுக்கத்தக்க, முகம் சுளிக்கச் செய்திடும் பல செய்திகளை அனுதினம் வாசிக்க நேரிடுகிறது. பார்க்கவும் நேரிடுகிறது. 

ஒருவரைக் கேலி செய்வது எளிது. வார்த்தைகளால் காயப்படுத்துவது எளிது. ஆழ்ந்த  சிந்தனை இல்லாமல் சமூக வலைத் தளங்களில் ஒரு கருத்தை இடுகையிடுவது மிகவும் எளிதானது. ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப சில வினாடிகள் மட்டுமே போதுமானது. ஆனால் அந்த செய்தியினால் பாதிக்கப்படுபவரது உள்ளத்தில் ஏற்படுத்தும் ஆறாத காயத்தை ஆற்றுப்படுத்துவது, அவரை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

வார்த்தைகள் கொல்லும். வார்த்தைகள் உருவாக்கவும் செய்யும். ஒருவரை உடல் ரீதியாக அடித்துக் காயப்படுத்துவது மட்டுமே தீங்கு விளைவிக்கக் கூடியவை என மட்டுப்படுத்தி விடக் கூடாது. அவற்றை விடக் கேலியாகப் பேசப்படும் சில வார்த்தைகள் ஒருவரது சுயமரியாதையை ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் செய்துவிடும். அவை மனதில் ஏற்படுத்தும் காயம் பல ஆண்டுகள் கூட நீடிக்கும். அவை நினைவில் எழும்பும் பொழுதெல்லாம் அவருக்கு அது தீராத வலியை ஏற்படுத்தும்.

வார்த்தைகள் அழிவதில்லை:

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை போல காயப்படுத்தும் வார்த்தைகள் சொன்ன பிறகு அல்லது மனதை நோகடிக்கும் ஒரு செய்தியை அனுப்பிய பிறகு அதை ஒரு போதும் திரும்பப் பெற முடியாது. அதைப் பெறுபவரின் எண்ணங்களிலும், மனதிலும், நினைவிலும் தொடர்ந்து ஆறாத ரணமாக அழியாமல் அந்த செய்தி நிலைத்து நிற்கும். ஆகவே அலட்சியமாகப் பேசக் கூடாது. உதாசீனப்படுத்திப் பேசவும் கூடாது. நகைச்சுவையாகக் கூட யாரையாவது பார்த்துக் கிண்டலான கருத்துக்களைச் சொல்வதற்கு முன்பாக நிறுத்தி நிதானமாக யோசித்துப் பேசுங்கள்.  

மன்னிப்பின் மாண்பு:

ஒருவேளை பிறர் மனதை வருத்தப்படுத்தும் வார்த்தைகளைப் பேசியிருந்தால், நம்மால் செய்யக்கூடிய சிறந்த விஷயம் அதற்காக மன்னிப்பு கேட்பது. அதற்குத் தைரியம் தேவை. மன்னிப்பைக் கேட்பதற்குக் கடினமாக இருக்கலாம். 

ஆனால் நாம் காயப்படுத்தியவர்களைச் சீர் செய்ய வேண்டியது நமது கடமை. அதுபோல மீண்டும் பேசாதபடி கவனமாக இருக்க வேண்டும். மேலும் அந்த மாதிரியான வார்த்தைகள் நம்மிடமிருந்து வெளிவராத அளவுக்கு மனம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நல் வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்:

ஒருபோதும் பிறரைப் புண்படுத்தக்கூடிய வார்த்தைகளைப் பேசாதீர்கள். ஒருவர் பாதுகாப்பற்றதாக அல்லது ஒதுக்கப்பட்டதாக உணரக்கூடிய சூழலை உருவாக்காதீர். 

எந்த சூழ்நிலையிலும் தீங்கு விளைவிக்கும் வார்த்தைகளைச் சொல்லவோ, அனுப்பவோ கூடாது. அது சரியானதல்ல.

ஒருவரைக் காயப்படுத்துவதற்கு எதிரானது என்ன? 
மகிழ்ச்சி அளிப்பது. 

விமர்சிப்பதற்கு எதிரானது என்ன? 
ஊக்கமளிப்பது. 

இது நம் வார்த்தைகளில் பிரதிபலிக்க வேண்டும். 

எதிர்மறையான வார்த்தைகளால் கிழித்தெறிபவராக இருப்பதற்குப் பதிலாக நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசுங்கள். ஒருவரது வாழ்க்கையை அழிப்பதற்கல்ல, கட்டப்படுவதற்கு உதவ வேண்டும். 

ஒருவருக்கொருவர் கருணை காட்ட வேண்டும். ஆசிர்வதிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாம் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தலாம். முன்மாதிரியாக இருங்கள். 

எதிர்வினைகளில் கவனம் செலுத்துங்கள்:

மற்றவர்களின் நடத்தைக்குப் பதிலாக உங்களிடமிருந்து வெளிப்படும் எதிர்வினைகளில் கவனம் செலுத்துங்கள். பிறரது எதிர்வினைகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் உங்களுடைய பதில்களைக்  கவனிக்கவும் (observe), மாற்றவும் (Change), மேம்படுத்தவும் (improve) கற்றுக் கொள்ள முடியும்.

எந்த உணர்வு கேலி பேசுவதற்குத் தூண்டுகிறது எனக் கவனியுங்கள். எந்த சூழல்களில் கிண்டலான நடத்தைகள் வெளிப்படுகிறது எனக் கவனியுங்கள். 

மக்கள் உங்களை மோசமாக நடத்தும்போது, ​​உங்களை அவமரியாதை செய்யும்போது அல்லது உங்களுக்கு எதிராக வசைபாடும்போது உங்கள் உடனடி எதிர்வினையைக் கவனியுங்கள்.

இத்தகைய சூழல்களில் பதில் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபடுவதற்குப் பதிலாக, பின்வாங்கவும் (Withdraw), பிரதிபலிக்கவும் (Reflect), பகுப்பாய்வு (Analyzes) செய்யவும் மற்றும் சிந்தனை மிக்க அடுத்த படியை எடுப்பதற்கும் முயலவும்.

கடந்த காலத்தில் உங்கள் நியாயமான கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைந்த தருணத்தில் உங்களைப் புண்படுத்தியவர்கள் எப்படி உங்களை நடத்தினார்கள் என்பதை நினைவு கூறுங்கள். அப்போது நீங்கள் அடைந்த வேதனை, அவமானம், துயரம் இவற்றை மறக்க வேண்டாம். இப்போது நீங்கள் பிறரை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். ஒரு போதும் பதிலுக்குப் பதில் செய்யாதீர்கள்.

விட்டுக்கொடுங்கள்:

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்குக் கலந்து கொள்வதற்குச் சிறப்பு அழைப்பு கிடைத்தது. எனது காரை நிறுத்த சென்ற போது ஒரு குறிப்பிட்ட பகுதியில்  நிறுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. சற்று வெகு தொலைவில் நிறுத்திவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல வேண்டும் என கூறினார். உடனடியாக எழுந்த உணர்வு கோபம். நமது இயல்பான முதல் புரிதல் என்னவென்றால், காரை வெகு தூரத்திலிருந்த இடத்தில் நிறுத்தச் சொல்வது என்பது மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதாக உணர்வது தான். அப்படி ஒரு பெரிய காட்சியை சுயம் மனத்திரையில் உருவாக்குகிறது.

இப்போது என் எதிர்வினை சண்டையிடுவது, வாகன நிறுத்துமிட விதி முறைமைகளை அவருக்கு எதிராகச் சுட்டிக்காட்டுவது அல்லது மேலாளரிடம் புகார் சொல்வது. 

ஆனால் இவற்றுள் எந்த எதிர்வினையும் செய்யாது அந்த நபரைக் கவனித்தேன். அந்த நபர் ஒரு தன்னார்வ பேட்ஜ் அணிந்திருந்ததைப் பார்த்தேன். அவரது முகத்தில் பெருமிதத்துடன் அதிக ஈடுபாட்டுடன் செயல் புரிவதையும் பார்க்க முடிந்தது. எனது இயல்புநிலை எதிர்வினை நடத்தையைச் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதற்குப் பதிலாக நேர்மறையான புரிதலைத் தேர்ந்தெடுத்தேன். 

அவர் இந்த  வெற்றிகரமான நிகழ்வுக்கு தன்னால் இயன்றதைச் செய்கிறார். இந்த நபர் செய்வது தவறாக இருந்தாலும் சரி, அநியாயமாக இருந்தாலும் சரி, அவருடைய மன அழுத்தத்தைக் கொஞ்சம் குறைத்து அவருக்கு இந்த நாளை இனிமையான நாளாக மாற்ற என்னால் உதவ முடியும். மற்றவர்களுக்குச் சேவை செய்ய தங்களால் இயன்றவரை முயற்சிக்கும் ஒருவருடன் வாதிடுவதை, வார்த்தைகளால் காயப்படுத்தாது என்னால் தவிர்க்க முடியும். அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் வாகனத்தை நிறுத்தினேன். அவர் மிக மகிழ்வுடன் தனது பணியைத் தொடர்ந்தார். இந்த எதிர்வினை இப்போது நினைத்தாலும் மகிழ்வைத் தருகிறது.

அன்பின் ஒளியைப் பரப்புங்கள்:

நாம் மற்றவர்களை எப்படி நடத்துவது என்பது நமது கையில் உள்ளது. அது சவாலான மனிதர்களாக இருக்கலாம். அல்லது கசப்பான இருள் சூழ்ந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவராக இருக்கலாம்.  நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு நம் வசம் உள்ளது என்பதை மறக்கக்கூடாது.

கொடுமை, துஷ்பிரயோகம், மோசமான நடத்தை போன்ற இருள் சூழ்ந்த நிலையில், பெற்றவர்களது கவனக்குறைவோடு வளரும் குழந்தைகளுக்குப் பிறருக்குத் தீங்கு விளைவிப்பது மற்றும் எதிர்மறையான பழக்கங்களைப் பின் பற்றுவது இயல்பாக இருக்கும். பொதுவாக இவர்களுக்கு  மற்றவர்களைத் துன்புறுத்துவது அல்லது மோசமாகப் பழிவாங்குவதைக் குறித்த குற்றவுணர்வு  இருக்காது. 

இவர்களையும் இருளிலிருந்து வெளியே கொண்டு வர முடியும். அன்பைத் தேர்ந்தெடுத்து, இரக்கம் மற்றும் புரிதலின் ஒளியைப் பரப்புவதன் மூலம் ஓர் மாற்றத்தை உருவாக்க முடியும்.

உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் வலியைக் குணப்படுத்தும் கருவியாக நீங்கள் இருக்க முடியும். நீங்கள் புண்படுத்தப்பட்ட பிறகும் மன்னிப்பு, புரிதல், அன்பு மற்றும் இரக்கம் சாத்தியம் என்பதை உங்களைக் காயப்படுத்தியவர்களுக்கும் காண்பிக்க முடியும்.

அவ்வாறு செய்வதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மகிழ்ச்சி நிறைந்த, நம்பிக்கை அளிக்கும் இடமாக மாற்ற முடியும்.

விட்டு விலகுங்கள்:

எனினும் சில மனிதர்கள் இயல்பிலேயே மிக மிகக் கொடுமையானவர்கள். நியாயமற்ற முறையில் செயல் புரிபவர்கள். அதீத எதிர்மறை இயல்பு கொண்டவர்கள். பிறரைக் காயப்படுத்தி அதில் இன்பம் அடைபவர்கள். கடும் சுயநலவாதிகள். இத்தகைய நபர்களை விட்டு விலகி வாழுங்கள். இவர்கள் உங்களது மன அமைதியைச் சீர் குலைத்து விடுவார்கள்.  இவர்களது சகவாசம் உடலில் தீராத நோயை உருவாக்கிவிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக