சனி, 2 நவம்பர், 2019

நம்பிக்கை அளிக்கும் புதுவாழ்வு.

ஆற்றுப்படுத்தல். 




Dr.இளவரசன், MS அறுவை சிகிச்சை மருத்துவர். Khasab அரசு மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவ பிரிவில் பணி செய்கிறார். அவரது துணைவி Dr.புஷ்லதா MBBS., DDVL தோல் சிகிச்சை மருத்துவர். சென்னையில் பணி செய்கிறார்.

Khasab, (Oman) இல் வைத்து, மருத்துவத் துறையில் பணி செய்பவர்களுக்காக,  ஒரு ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடத்தினார்கள்.

தலைப்பு : "Make witnessing in the work place ".

நோயாளிகளின் மனதில் நிகழும் ஆக்கப்பூர்வமான நம்பிக்கை, சிகிச்சையில் எவ்விதம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது முக்கியக் கருப்பொருள். அதில் மருத்துவர், செவிலியர், உதவியாளர்கள் எத்தகைய பங்களிப்பை அளிக்க முடியும் என்பது விரிவாக விளக்கப்பட்டது.

அவரின் நெருங்கிய நண்பர் ஆதலால் இதில் நானும் பங்கு பெற்றேன். இன்றைய சூழலில் இதயநோய், புற்றுநோய்,  சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம்  போன்ற பேரிழப்பை ஏற்படுத்தும் நோய்கள் மலிந்து விட்டன. பெரும் விபத்தால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களும் உண்டு.

இந்தக் கருத்தரங்கத்தில் பகிரப்பட்ட சிலப் பொதுவான குறிப்புகள் நமக்கும் உதவும். நம் உறவுகள், நட்பு வட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோய்மை உடையவரது மனநிலை உணர இவை உதவும்.

இதைப் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களை நாம் எவ்விதம் அணுக வேண்டும் எனக் கற்றுக்கொள்ள முடியும்.

நம்பிக்கை : (Faith) 

Why is faith important in the healthcare?

கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர் சந்திக்கும் முக்கிய சவால் நம்பிக்கையிழப்பு ஆகும்.

மன நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளது நோய் எதிர்ப்புத் திறன் பல மடங்கு சிறப்பாக முன்னேற்றம் அடைவது சமீபத்திய அறிவியல் பூர்வமான  முறையான ஆய்வுகள் மூலம்  நிரூபணம் ஆகியுள்ளது. இறை நம்பிக்கையும் நோயுடன் போராட உதவுகிறது.

எனவே நோயாளிகள் நம்பிக்கையிழக்க வைக்கும் காரணிகளைக் கண்டறிந்து அதை நீக்குவதன் வழியாக அவர்கள் விரைவாகக் குணமடைய உதவ முடியும்.  எனவே இது சிகிச்சையின் ஒரு பகுதியாக அளிக்கப்பட வேண்டும்.

நோய் வாய்ப்பட்டவர் மனதை அமைதி இழக்கச் செய்யும் மூன்று முக்கிய தடைகள் இவை :

1. உணர்வுப்பூர்வமான தடை (Emotional Barrier)
2. அறிவுப் பூர்வமான தடை (Intellectual Barrier)
3. முடிவெடுக்க முடியாத தடை (Volition Barrier)

உணர்வுப்பூர்வமான தடை :


கொடிய நோய் அல்லது விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதில் எழும் முதல் கேள்வி : "எனக்கு ஏன் இது நிகழ்ந்தது?" என்பதாகும்.

சில கேள்விகளுக்குக் காலம் தான் பதில் சொல்லும். சில கேள்விகளுக்கு விடை கிடைக்காது. ஏன் நிகழ்ந்தது என்பதைவிட அதிலிருந்து எப்படி மீள்வது என நோயாளரின் மனதைத் திசை திருப்ப வேண்டும்.

அடுத்து, நோயாளர் மனதில் எழும்  சிக்கல் : சுயபச்சாதாபம்.  தன் இருப்பை சங்கடமாக உணர்தல். தன்னை பயனற்றவராக உணர்தல். இத்தகைய எதிர்மறை உணர்வுகள் நோயெதிர்ப்பு திறனைக் கடுமையாகப் பாதிக்கும். இத்தகைய மனநிலையின் உச்சக்கட்டமாக அவர்கள் தற்கொலைக்கும் முயல்வர். வெறுப்பும், கோபமும், இயலாமையும், வார்த்தைகளிலும் செயலிலும் வெளிப்படும்.

இதற்கு ஒரே மருந்து அன்பு செலுத்துதல். அத்துடன் பொறுமையும் அவசியம். அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும். அவர்கள் மதிப்பு மிக்கவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் உயிருடன் வாழ்வது குடும்பத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனும் உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அறிவுப்பூர்வமான தடை :


அறியாமை, தவறான புரிதல், தவறான கருத்துக்களில் ஏற்படும் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் குழப்ப மனநிலை, நோயாளர் மன அமைதியைக் குலைக்கும். 

சமூக ஊடகம், நட்பு வட்டம், விளம்பரம் மூலமாக அறியப்படும் மருத்துவ குறிப்புகள் முழுமையானதல்ல. ஒவ்வொரு நோயாளருக்கும் தரப்படும் சிகிச்சைமுறை மற்றும் மருந்துகளின் வீர்யத்தன்மை வித்தியாசமானது. அதன் எதிர் விளைவுகளும் வேறுபடும். அது ஒவ்வொரு நோயாளருக்கும் மாறுபடும். நோயாளரின் தவறான புரிதல் சிகிச்சையைப் பாதிக்கும்.

இன்று பல தரப்பட்ட போலி சிகிச்சை முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த தவறான சிகிச்சைமுறை நம்பி அறியாமையால் பணத்தையும், நேரத்தையும் மக்கள் இழக்கின்றனர். குறிப்பாகப் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு முறையான சிகிச்சை சரியான சமயத்தில் முழுமையாக எடுக்காவிட்டால் உயிரிழப்பைத் தடுக்க முடியாது.

குழப்ப மனநிலை உடையவர்கள் சிகிச்சையை முழுமையாக எடுக்காது பாதியிலேயே நிறுத்த முயல்வர். பக்க விளைவுகளைக் குறித்த தவறான நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

இவர்களுக்குப் பொறுமையுடன் முழு உண்மைகளையும் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்பிக்கைகளை மதிப்புடன் கேட்க வேண்டும்.  உண்மையாக இருந்தாலும் நமது கருத்துக்களை வற்புறுத்தக் கூடாது. அவர்களது தவறான நம்பிக்கைகளைக் கேலி செய்யக் கூடாது. பொறுமையுடனும், கனிவுடனும், அதைக் கவனமுடன் அணுக வேண்டும். அவர்கள் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் அவசியம். 

முடிவெடுப்பதில் தடை :

நோயாளர் தன்னிச்சையாகத் தீர்மானிக்க இயலாத மனநிலையில் இருப்பார். இந்த வித சிகிச்சை எடுக்கலாமா? அல்லது  வேண்டாமா? எனும் குழப்ப மனநிலை இருக்கும்.

சில சிகிச்சை ஏற்படுத்தும் பக்க விளைவுகள் சமூகத்தை எப்படி எதிர்கொள்வது எனும் தடுமாற்றத்தைத் தரும். சிகிச்சை எடுப்பதால் பல மாதங்கள் வேலைக்குச் செல்லமுடியாத சூழல் பயமுறுத்தும். பணத்தேவைகள் சிகிச்சை எடுப்பதைத் தள்ளிப் போடக் கட்டாயப்படுத்தும். சில சமயம் நிரந்தரமாக வேலைக்கு செல்லவே முடியாத கட்டாய ஓய்வு தேவைப்படும். 

நோயாளருக்குச் சிகிச்சையின் அவசியத்தை உண்மையைத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். வேலைக்குச் செல்வதை விட உயிருடன் இருப்பது முக்கியம் என்பது புரிய வைக்கப் பட வேண்டும்.

புற்றுநோய் போன்ற சிகிச்சையில் ஏற்படும் முடி உதிர்தல் போன்ற பக்க விளைவுகள் நிரந்தரமல்ல என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். சமூக பெருமையை விட குடும்பத்திற்கு அவர்கள் வாழ்க்கை  மதிப்புமிக்கது என்பதை உணர்த்த வேண்டும்.

பணியாளர்களாக நம்பிக்கையை அவர்கள் மனதில் தினமும் விதைத்தல் வேண்டும். மனத் தடைகளைக் களைய வேண்டும். ஆக்கப் பூர்வமான சூழலை உருவாக்க வேண்டும். உடன்பாட்டுச் சிந்தனைகளைப் பேச வேண்டும். மன தைரியத்தை உருவாக்க வேண்டும். நமது பேச்சு, புன்னகை நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும்.

உடல் நலம் தேறிச் சென்றவர்கள் பற்றிய கதைகளைப் பகிர வேண்டும். ஒரு Faith tag line தினசரி சொல்வது நல்லது.


மருத்துவம் சேவை :


ஆலயம், கோவில், மசூதி ஒரு குறிப்பிட்ட நேரம் தான் திறந்திருக்கும். மருத்துவமனை கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. மருத்துவமனையில் நுழையும் நோயாளர் வேதனை, வலி, கலக்கம் சூழ நுழைகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை, ஆறுதல் மற்றும் சுகமாக்க உழைப்பது ஊழியர்கள் பொறுப்பு.

நம்மைத் தேடி ஒருவர் வருவது தற்செயல் நிகழ்வு அல்ல. அவர்களுக்கு நான் எவ்விதம் உதவியாக இருக்க முடியும் என்பதே நமது எண்ணமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையாளராக மாற வேண்டும். நோயாளர் தனது வாழ்வின் பயணத்தில் அடுத்த நிலைக்கு நம்பிக்கையுடன் முன்னேற தோள் கொடுங்கள். 

ஆலயம், மசூதி, கோவில் போல மருத்துவமனையும் புது வாழ்க்கை தரும் ஒரு நம்பிக்கை ஸ்தலம்.


6 கருத்துகள்:

  1. ஏற்றகாலத்தில் வெளிவரும் அற்புதமான குறிப்புகள் அடங்கிய பதிவு.!

    மேலும் தங்களின் எழுத்துநடை வசீகரம் . தேவையான தகவல்களை அடுக்கிக் கொண்டே செல்வது மேலும் சிறப்பு..!

    அவநம்பிக்கையை சந்தேகத்தை களைந்து நம்பிக்கையோடு எடுத்துக்கொள்ளும் மருத்துவம் கூடுதல் பலனைத் தரும் என்பதை இதன் மூலம் அறியலாம் என நினைக்கிறேன்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நம்பிக்கையும் ஒரு மிகச் சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.

      இக் கூடுகை மருத்துவ பணியாளர்களுக்கானது. அவர்கள் இந்த நம்பிக்கையைச் சிகிச்சை பெறுபவர் மனதில், எவ்வகைகளில் ஏற்படுத்தி உதவ முடியும் என்பதைப் பல வழி முறைகள் வழியாக கற்றுக் கொடுத்தனர்.

      நமது உறவுகள், நட்பு வட்டத்தில் சிகிச்சை பெறுபவருக்கு நாமும் நம்பிக்கை அளிப்பவராக உதவ இப் பதிவு உதவக் கூடும்.

      உங்கள் பாராட்டு இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் எனும் உற்சாகம் தருகிறது. மிக்க நன்றி.

      நீக்கு
  2. மிக அவசியமான கருத்தரங்கு. பகிரப்பட்ட குறிப்புகளைச் சிறப்பாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. இதில் குறிப்பிட்ட மூன்றையுமே அனுபவித்திருக்கிறேன்.

    நல்ல விரிவான விளக்கம்.

    ராஜன்.சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலி மிகுந்த பாதை அது. இனி அவை நினைவுகள் மட்டுமே. எல்லாம் நன்மைக்கே Sir.

      நீக்கு