புதன், 30 அக்டோபர், 2019

மார்கஸ் அரேலியஸ் : வாழ்வியல் சிந்தனைகள் - 1.

மனம்.

பேரரசர் மார்கஸ் அரேலியஸ்.
(கி.பி. 121 - கி.பி. 180)

மனதை உறுதிப்படுத்து :


  • எந்தப் பொருள்களைப் பற்றி நீ இடைவிடாமல் சிந்திக்கிறாயோ, அவற்றின் தன்மையை உன் மனம் அடைகிறது. சாயத்தில் தோயும் துணியைப்போல், உள்ளத்திலுள்ள எண்ணங்களில் தோய்ந்த ஆத்மா நிறம் மாறும்.
  • தத்துவங்கள் தம் வழியே நேராகச் செல்லும். அதன் போக்கை நம் இஷ்டப்படி மாற்றமுடியாது. இதனால்தான் தரும வாழ்வுக்கு நேர்மை என்பது பெயர்.
  • மற்றவர்கள் உள்ளத்தில் என்ன நடைபெறுகிறது? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எதைத் திட்டமிடுகிறார்கள்? என்று யோசித்துக் கொண்டு இருந்தால் மனதில் கவலையும் துக்கமுமே வரும். உள்ளத்தைச் சுத்தமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்வதே சுகம்.
  • அரண்மனை வாழ்க்கையிலும்கூட ஒருவன் உண்மை வாழ்வு வாழ முடியும்.
  • எந்தப் பொருளாலும் ஆன்மா பாதிப்படைவதில்லை. ஆன்மாவைத் தீண்ட ஒரு பொருளாலும் முடியாது. ஆன்மா சுதந்திரமாகத் தனது முடிவுகளை அதுவே எடுக்கும். அது தன்னைத் தானே வழி நடத்தும். ஆனால் பொருள்களைப் பற்றியும், நிகழ்ச்சிகளைப் பற்றியும் உள்ளத்தில் நாம் எவ்விதம் எண்ணம் கொள்கிறோமோ, அதுதான் ஆன்மாவைப் பாதிக்கும்.
  • நன்மை செய்வதும், இடர்களைப் பொறுப்பதும் மனிதரின் கடமை. இடையூறுகள் உள்ளத்தின் சக்தியையாவது சுபாவத்தையாவது பாதிக்கக்கூடாது.
  • இன்பமும் துன்பமும் மனத்துக்குள் உள்வசத்திலேயே இருக்கின்றன. புறத்தில் ஒன்றுமில்லை. உள்ளத்தின் எண்ணங்களே அவைகளுக்குக் காரணம்.
  • இவ்வுலகில் அடையக்கூடிய மேன்மை ஒன்றே. சத்தியமும் நடுநிலைமையும் கொண்டு வாழ்வதும், பொய்யரிடமும், அநீதி செய்பவரிடமும், வெறுப்பின்றி அன்புடன் நடந்து கொள்வதுமே.
  • நாம் இடங்கொடுக்காமல், விருப்பப்படாமல் எந்த ஒரு விஷயமும் மனதில் நுழைய முடியாது.


  • மனதின் சுத்தம் என்பது எது?

தீடிரென ஒருவர், "நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? " என்று கேட்டால் "இது என் மனதிலுள்ள எண்ணம்" என்று எளிதில் சொல்லும் படி மனம் இருக்க வேண்டும்.

பிறரிடம் சொல்ல இயலாத தவறான எண்ணங்கள் மனதில் உதிக்காமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். 

எந்தக் காலத்திலும் உள்ளத்தில் இருப்பதைப் பலர் அறிய வெளிப்பட்டாலும், அதில் வெட்கப் படக்கூடியது எதுவும் இல்லாதபடி மனதை வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி மனதைப் பழக்கப் படுத்திக் கொண்டு நன்மையே நாடி வரும் மனிதன், தன் சரீரத்தில் குடி கொண்டிருக்கும் கடவுளின் உண்மை அடியவர் ஆவான்.

அப்போது மனதுக்குள் குடியிருக்கும் இறையம்சமான ஆன்மாவை, எந்த இன்பமும் மாசுபடுத்தாமலும், எந்த துன்பமும் துயர் படுத்த விடாமலும் இறைவன் காப்பார். 

இவ்விதம் மனம் உறுதிப்பட்டவன் பிறர் சொல், செயல், எண்ணம் என்னவென்று கவலைப்படாமல் தன் கடமையை மட்டும் கருதி வாழ்வான்.

*******   *******   *******   *******   *******

பேரரசர் மார்கஸ் அரேலியஸ் :

மார்கஸ் அரேலியஸ் ரோமாபுரியில் அரச குடும்பத்தில் பிறந்தவர். அவர் கி.பி. 121 ஆம் ஆண்டு முதல் கி.பி.180 ஆம் ஆண்டு வாழ்ந்தார். மார்கஸ் அரேலியஸ் ரோம் பேரரசர் மட்டுமல்ல மிகச்சிறந்த தத்துவஞானியும் கூட.

மனம் மற்றும் எண்ணம் குறித்த இவரது போதனைகள் உலகப் புகழ்பெற்றவை. ரோமானியர் வரலாற்றில் இவரது ஆட்சி பொற்காலமாகக் கருதப்படுகிறது. ரோமப் பேரரசர்களில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவராகப் போற்றப்படுகிறார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றுப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  

தமிழில் மூதறிஞர் ராஜாஜியால்  "ஆத்ம சிந்தனைகள்'  என்ற பெயரிலும், திரு. பொ.திரிகூடசுந்தரத்தால் "இதய உணர்ச்சி' என்கிற பெயரிலும், திரு. என்.ஸ்ரீநிவாசன் அவர்களால் "மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்" என்கிற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன.

6 கருத்துகள்:

  1. என் செயல்கள், என் எண்ணங்கள்
    வெளியே அறியப்பட்டால், நான் வெட்கப்படும்படி இருக்கக்கூடாது.

    அருமையான பதிவு.

    ராஜன்.சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூய மனதிற்கு இன்றியமையாத குணத்தை மிகச் சரியாகக் குறிப்பிட்டு விட்டீர்கள். "நாணம் என்பது இறைவனின் கொடை" என்பது நபிகளின் மொழி. பயத்தினால் அல்ல வெட்க உணர்வினால் தவறு செய்ய அஞ்சுவதே உயர்குடி என்பது வள்ளுவம். மிக்க நன்றி Sir.

      நீக்கு
  2. மனம் சார்ந்த வாழ்வியல் சிந்தனைகளின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு