ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

44. சக்கர நெறி நில்

தர்மத்தை உறுதியாகக் கடைப்பிடி 

( ஆத்திசூடி - சகர வருக்கம்)


சக்கர நெறி நில்: இந்த வரிகளில் ஔவையார், சக்கரத்தை அறத்திற்கு உருவகமாகக் குறிப்பிடுகிறார். 

சக்கரத்தின் மைய அச்சு ஆரங்களை இணைக்கிறது. ஒவ்வொரு ஆரமும் மையத்துடன் நன்கு பொருந்தி இருக்க வேண்டும். அப்போது தான் சக்கரம் சிறப்பாகச் சுழலும்.

அது போல மனதின் மையமாக அறம் இருக்க வேண்டும். வாழ்வின் அனைத்து செயல்பாடுகளையும் அறம் இணைக்க வேண்டும். அப்போது வாழ்க்கை சக்கரம் மிகச் சிறப்பாக இயங்கும். 

நீதியின் பாதை:

இந்த உலகில் நாம் பயணிக்க இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று மிக நெருக்கமான பாதை. மற்றொன்று விசாலமான வழி.

நெருக்கமான பாதையில் பயணிப்பது என்றால் என்ன?

அது நம் மனம் போன போக்கில் வாழாமல் அறம் சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கை முறை. நமது விருப்பங்களை விட வேத நூல்களில் உள்ள கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்து நடப்பது முதன்மையானது. இதற்கு இறையருள் தேவை. 

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து மிகத் தெளிவாக, வேத நூல்களில் எழுதப்பட்டுள்ளது. அவைகளை அனுதினம் வாசிக்க வேண்டும். மனதில் பதிய வைக்க வேண்டும். இறை வேண்டுதல் செய்ய வேண்டும். அப்போது நம்மால் நீதியின் பாதையில் நடக்க இயலும்.

மனம் ஒரு நிலம்:

நல்ல மகசூல் பெற நிலம் நன்கு ஆழமாக உழப்பட வேண்டும். தேவையான உரம் இட வேண்டும். நல்ல தரமான விதைகள் விதைக்கப் பட வேண்டும். சரியான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். அந்த தோட்டம் பாதுகாக்கப் பட வேண்டும். 

வேத வார்த்தைகள் விதையைப் போன்றது. அதில் உயிர் இருக்கிறது. மனம் நிலத்தைப் போன்றது. மனதில் அறம் சார்ந்து கருத்துக்கள் பதியப் பட வேண்டும். மனம் நல்ல முறையில் பராமரிக்கப் பட வேண்டும். பாதுகாக்கப் பட வேண்டும். களைகள் முளைப்பதற்கு இடம் தரக் கூடாது.

அப்போது நற் பண்புகள் வாழ்வில் வெளிப்படும். நம்மைச் சுற்றி வாழ்பவர்க்கு நற்கனி தரும் மரம் போல இருப்போம். 

பொன் புடமிடப் பட வேண்டும்:

நீதியின் பாதையில் நடப்பது என்பது எளிதானதல்ல. பல துன்பங்களுக்கு ஆளாக வேண்டி வரும். அவமானம் சந்திக்க நேரிடும். தனிமைப் படுத்த படும் சூழல் உருவாகலாம். இவை அனைத்தும் நம்மைச் சுத்திகரிக்க நிகழ்பவை. அர்ப்பணிப்பு, விடா முயற்சியுடன் தொடர்ந்தால் சத்தியத்தின் பாதையில் நடப்பது சாத்தியமே.

பொன் நெருப்பில் புடமிடப்படுவது போல நமது கசடான பண்புகள் நீக்கி சுத்த தங்கம் போல மாற வாழ்வின் துயரங்கள் நமக்கு உதவுகிறது. 

ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தக் கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கையை  வாழ விரும்புவதில்லை. ஆதலால் இவ்வுலகில் அறம் சார்ந்து வாழ்பவர் எண்ணிக்கை எப்போதும் மிகச் சொற்பமாகவே இருக்கிறது. 

தங்கம், வைரம் போன்ற மதிப்பு மிக்கவை எளிதில் கிடைக்காது. அரிதாகக் கிடைப்பவையே இந்த உலகில் மிக மதிப்பு மிக்கதாகக் கருதப் படுகின்றது. ஆகவே சொல்லவோ எழுதவோ தேவையில்லை.  அறம் சார்ந்து வாழ்பவர் எப்போதும் மதிப்பு மிக்கவர்களாக மிக மேன்மையுடன் இருக்கின்றனர்.


சில தொடர்புடைய மேற்கோள்கள்:

மனதில் குற்றமான நோக்கமே இல்லாமல் செய்கின்ற நல்ல செயல்கள் தான் அறம். - திருக்குறள்.

அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளை  துணிந்து செய்வோம். - ஆபிரகாம் லிங்கன்.

குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும். - ஜான் டிரைடன்.

அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லாதீர். ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க. - லியோ டால்ஸ்டாய்.

அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. - பிரான்சிஸ் பேகன்.

ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது. - மாரிஸ் மாட்டர்லிங்க்.

எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. - ஜான் ரஸ்கின்.

அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும். -பாஸ்கல்.

தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம். - பித்தாகோரஸ் .

கடவுள் ஆன்மாவைப் புழுதியில் புதைத்திருப்பதெல்லாம் அதன் மூலம் தவற்றினூடே  உண்மைக்கும், குற்றத்தினூடே அறத்திற்கும், துன்பத்தினூடே இன்பத்திற்கும் வழி திறந்து செல்வதற்காகவேயாகும். - எங்கல்.

உலகின் கறை படியாமல் உனது நற்குணத்தால் ஆன்மாவை தூய்மையாக  காத்துக் கொள்ளவும். -பெய்லி.


படம் இணையத்திலிருந்து நன்றியுடன் .

Quotes are taken from with thanks:  https://ta.wikiquote.org/s/2ic

2 கருத்துகள்:

  1. உண்மை அறம் என்பது நன்னெறி தானே? அதைப் பின்பற்ற நமது சுயநலங்கள் தடுக்கும், அதை வெற்றி கண்டு அறத்தை பின்பற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு