வெள்ளி, 12 மே, 2017

திசை காட்டும் பயணங்கள்.

திசை காட்டும் பயணங்கள்.

"A Wise man travels to discover himself "

- James Russell Lowell.


வாழ்க்கையின் புரிதல்கள், அறிவு அடைதல், மனத்திடம் இவற்றைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது  நான்கு சுவர்களைக் கடந்து,  அனுபவங்கள் வழியாகத் தொடங்குகிறது.

பொதுவாகப் பயணங்கள் உற்சாகத்தை, உத்வேகத்தை, புதிய அறிமுகங்களை, சிந்தனை மாற்றங்களை, புரிதல்களை, இனிமையான நினைவுகளை அள்ளிக் கொடுக்கிறது. 

பயணங்கள் மாத்திரமே அறிவை விசாலப் படுத்தி விடுமா?

நிச்சயமாக இல்லை! 

மாறாகக் குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்து அதன் எல்லையைக் கூட தாண்டாது பயனுடைய வாழ்வு வாழ்ந்தவர், வாழ்பவர் பலர் உண்டு. 

பல தேசங்கள் சுற்றி வெறுமையான வாழ்வை வாழ்ந்தவர்களும் உண்டு.

உல்லாச பயணங்கள் குதூகலத்தை நிச்சயம் அளிக்கும். ஆனால் அறிவை விசாலமாக்கும் என உறுதிப்படக் கூற முடியாது. 

தேடல், கற்றுக்கொள்ளும் ஆர்வம், புதிய சிந்தனை எற்று கொள்ளும் மன விருப்பம், வாழ்வைப் பயனுடையதாக வாழ வேண்டும் என்கிற மனவுறுதி உள்ளவர்கள் பயணிக்கும் போது அந்தப் பயண அனுபவங்கள் வாழ்வின்         
திசைகாட்டியாக அமையும்.

1996  தொடங்கி 2003 ம் ஆண்டு  வரை இடைப்பட்ட காலம் எனது வாழ்வில் உன்னமான வருடங்கள்!

ஒரு சமய சமூக மேம்பாடு நிறுவனத்தில் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணி புரியும் வாய்ப்பு பெற்றேன். இந்தியாவின் 19 மாநிலங்களில் மிகவும் பின்தங்கிய   அடர்ந்த காடுகளின் உட்  பகுதியில் வாழும் பழங்குடியினர் மக்கள் மத்தியில் முன்னேற்றப் பணிகள் செய்தோம். அவற்றுள் கல்வி, மருத்துவம், தொழில் பயிற்றுவிப்பு பணிகள் முக்கியமானவை.

கல்விகூட கட்டிடம், மருத்துவமனை, மாணவர்  விடுதிகள், தொழிற் பயிற்சி மையம், ஆலயங்கள், குடியிருப்புகள் எனப் பல திட்டப் பணிகள் உருவாக்குதல் மற்றும் கண்காணிப்பது எனது பொறுப்பு.


பல நாட்கள் பயணங்களே வாழ்க்கையாக இருந்தது. பல சுற்றுலா தளங்கள், மலை வாசஸ்தலங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க  அரண்மனைகள், திருக்கோவில்கள், நீர்த் தேக்கங்கள், எழில் நிறைந்த பூங்காவனங்கள், மாமனிதர்களின்  நினைவு இடங்கள், எனக் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் போது சில குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வந்ததைத் பொக்கிஷமாக கருதுகிறேன்.


இதில் நான் பெற்ற நன்மைகளின் அடிப்படையில் சிறந்த சில பயணங்களை குறித்துப்  பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

வருடத்திற்கு ஒரு முறையாவது இப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்லுவது வாழ்க்கையை  அர்த்தமுள்ளதாக்கும்!


1. எளிய மனிதர்கள் வாழும் இடங்கள்.


கருணை இல்லம், ஆதரவற்றோர் மையம், முதியோர் இல்லம் போன்றவற்றிற்கு பண உதவி செய்வது நல்லது. அத்துடன் வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு நாளை இவர்களுடன் செலவிடுவது மாபெரும் பாக்கியம். 

மதுரை மற்றும் கொல்கத்தாவில் அமைந்துள்ள Missionaries of charities நடத்தும் Home for dying patients இல் செலவிட்ட தருணங்கள் மறக்கவே முடியாது. 

இப்படிப்பட்ட இடங்கள் வாழ்க்கையின் உண்மையான பொருளை நம் கண்முன் நிறுத்தும். 

அற்பமான காரியங்களுக்காக நாம் போடும் வேஷங்கள், சுயநலம், ஏமாற்றுதல் இவற்றிலிருந்து நம்மை விடுவித்து உண்மையின் பாதையில் நடக்கத் தூண்டும்.

இப்பொழுதும் குழந்தைகளின் பிறந்த நாட்களில், விசேஷமான தினங்களில் அருகில் உள்ள இல்லங்களுக்குச் செல்ல தவறுவது இல்லை.

2. மாமனிதர்கள் வாழ்ந்த இடங்கள்.


எந்த எதிர்பார்ப்பும் இன்றி பிரதிபலன் பாராது தன்னையே சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்து வாழ்ந்தோர் நம் மண்ணில் பலர்.

அன்பும், கருணையும், எளிமையும், உண்மையாய் வாழ்ந்த அடியவர்கள் இந்திய தேசம் முழுமையும் காணலாம்.

அவர்களுடைய நினைவிடங்கள் சென்று வருவது நமது வாழ்வைப் பயனுள்ள வாழ்வாக வாழ வேண்டும் என்கிற உந்துதலைத் தரும். 

பஞ்சாப்   மாநிலம்   நாவன்ஷகர் அருகில் அமைந்துள்ள   மாவீரன்  பகத்சிங் நினைவிடத்தில் அவர் கைப்பட எழுதிய குறிப்பேடு தாள்கள் பார்வையிட்டது   இன்றும் கண் முன்பு நிழலாடுகிறது.

உங்களைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியலிடுங்கள். அவர்கள் நினைவிடங்களுக்கு சென்று வாருங்கள். வாழ்விற்கு புது அர்த்தம் பிறக்கும்.

3. புனிதமாகக் கருதப்படும் இடங்கள்.


புனிதமாகக் கருதப்படும் இடங்கள் சென்று வருதல் மனதின் எதிர்மறை எண்ணங்களை மாற்றும். மன அமைதியைத் தரும். நமது தவறுகளை உணர்த்தும். மனச் சோர்வுகள் நீங்கி  புதிய நம்பிக்கை பிறக்கும். சரியான முடிவுகளை எடுக்க நம்மை வழி நடத்தும்.

எனது வாழ்வில் முக்கியமானதாக நான் கருதுபவற்றை முடிவெடுக்கும் முன்பாக குறிப்பிட்ட சில ஸ்தலங்களுக்கு தனித்துச் செல்வது வழக்கம். மனிதர்கள் முன்பாக மண்டியிடுவதைப் பார்க்கையிலும் கடவுளின் முன்னிலையில் அமர்ந்திருப்பது சாலச் சிறந்தது.

வாழ்க்கை  என்பது ஒரு வகையில் நகர்தலே! 

நமது வாழ்வின் இறுதி இடத்தின் இலக்கு (Final place of destination) பற்றிய சரிதானா புரிதல் ஏற்படும்போதும், அதுவே நம் மனதின் திட சங்கல்பமாக அர்ப்பணிக்கப் படும்போது :
நாம் பயணிக்கும் பாதைகளின் திசைகள் சரியான பாதையினை நோக்கி நம்மை வழி நடத்தும்.

“Travel is fatal to prejudice, bigotry, and narrow-mindedness, and many of our people need it sorely on these accounts. Broad, wholesome, charitable views of men and things cannot be acquired by vegetating in one little corner of the earth all one's lifetime.

       - Mark Twain.                

6 கருத்துகள்:

  1. நண்பரூக்கு அருமையான உளவியல் பதிவு மனதை தொட்டுச்சென்றது

    பல விடயங்களில் நாமிருவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருப்போம் என்று நினைக்கின்றேன்

    என்னை பலருக்கும் பிடிக்காது தங்களது பாதை நான் செல்லும் பாதை போன்றே இருப்பதைக் கண்டு உள்ளம் மகிழ்கிறேன்

    நன்றி சந்திக்கலாம் பதிவுகளின் வழியே - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது கருத்துரைக்கு நன்றி நண்பரே!

      ஒரு நல்ல மேற்கோள் நினைவிற்கு வருகிறது!

      "It is impossible to satisfy all the persons at one time, Moreover it is also not possible to satisfy one person at all the times"!

      நீக்கு
  2. Super, i always tell the schools also take the students to such places. I got the different experience of our freedom movement after my visit to andhaman prison

    பதிலளிநீக்கு