செவ்வாய், 19 மே, 2020

பரிவுடன் கூர்ந்துக் கேட்டல்

Empathetic Listening.



குழந்தைப் பருவத்திலிருந்தே "பேசுவதற்கு" (Speaking)  சொல்லித் தரப்படுகிறது. "எழுதுவதற்கு" (Writing) கற்கிறோம். "வாசிக்க" (Reading) பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் ஒருவர் பேசுவதை எப்படி"கவனித்துக் கேட்பது" (Listening) என்பதை முறையாக கற்பதில்லை.

கேட்பது ஒரு கலை. ஒரு கருத்தைக் கேட்பதன் மூலமும் புரிந்து கொள்கிறோம். சரியாகப் புரிந்து கொள்வது என்பது உணர்வுகள் சார்ந்தது.

ஒவ்வொரு உணர்வும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அலட்சியமாகக் கேட்பது தவறான புரிதலை ஏற்படுத்தும். மனதில் முன்முடிவுகளுடன் கேட்பது உண்மையை உணரவிடாமல் செய்துவிடும். சார்பு நிலையோடு கேட்பது பொய்யை உண்மையென நம்பவைத்து மோசம் போக்கும். பொறுப்பில்லாமல் கேட்பது காலத்தை வீணடிக்கும்.

தவறான புரிதல் தேவையற்ற சிக்கலை  உருவாக்கும். உறவைச் சீர்குலைக்கும். முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கும். முன்னேற்றத்தைத் தடுக்கும். மன அமைதியை இழக்கச் செய்யும்.

குறைவாகப் பேசி அதிகமாகக் கவனிப்பது வெற்றிக்கு உதவும். கேட்பதில் ஓர் உயர்நிலை தான் "பரிவுடன் கூர்ந்து கேட்பது". இந்தச் சிறிய கட்டுரை "பரிவுடன் கூர்ந்து கேட்டல்" பற்றியதொரு ஓர் எளிய அறிமுகம்.

இந்தச் சிந்தனைகள் மனதில் விருப்பங்களாகப் பதிய வேண்டும். வெறும் வாசிப்பு உதவாது. உடனே மறந்து விடும். இந்த பண்பைப் புரிந்து கொண்டு கடைப்பிடித்தால் வீட்டில், பணியிடத்தில், நட்பில், உறவுகளை மேம்படுத்திக்கொள்ள அது உதவும்.


I. பரிவுடன் கவனமாகக்  கேட்பது என்றால் என்ன? 


ஒருவர் பேசும்போது அவரது மன உணர்வு நிலையைக் கவனத்துடன் புரிந்து கொண்டு, உரையாடலை அக்கறையுடன், ஆதரவாகக் கேட்பதை "பரிவுடன் கூர்ந்து கேட்டல்" (Empathetic Listening) எனலாம். 

கரிசனையுடன் கேட்பதின் நோக்கம், பகிர்ந்து கொள்பவரை "குறைகூறுவது"' "விமர்சிப்பது", "ஆலோசனை சொல்வது" என்பதற்காக அல்ல. மாறாக "ஆதரவு தெரிவித்தல்", "ஊக்குவித்தல்", "தீர்வை காண உதவுதல்" எனும் அக்கறை மனப்பாங்கு ஆகும்.

உதாரணமாகப் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தனது சொந்த ஊருக்குச் செல்லும் முனைப்புடன் தவித்துப் பேசும்போது அவரின் மனநிலையிலிருந்து அதைக் கேட்பது பரிவுடன் கூர்ந்து கேட்டல் ஆகும். இந்த துயருக்குச் சூழலைக் குறை கூறுவது தீர்வல்ல. அவருக்குத் தேவை உதவி. ஆலோசனை அல்ல. நம்பிக்கை. விமர்சனத்தை விட நடவடிக்கை முக்கியமானது.



II.பரிவுடன் கூர்ந்து கேட்கும் திறனை மேம்படுத்த :


1.  கவனம் :

ஒருவர் பேசுவதை முழு கவனத்துடன் கேட்க வேண்டும். உடல் மட்டும் அமர்ந்திருக்கச் சிந்தனைகள் வேறு பக்கம் பறந்தால் பேசுபவர் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முடியாது. கவனச் சிதறல் இருக்கக் கூடாது. அக்கறையின்றி கேட்கக்கூடாது.

பதில் சொல்வதற்காகக் கேட்பது தவறு. உரையாடலில் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும். உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்காகக் கேட்க வேண்டும்.

2. பரிவு :

பேசுபவரின் உணர்வுகளை அக்கறையுடன் புரிந்து கொண்டு கேட்க வேண்டும். ஓர் துயரம் நிறைந்த சூழலில் பகிரப்படும் உணர்வுகளை அசிரத்தையாகக் கேட்பது என்பது தவறு. அது ஓர் அலட்சிய மனோபாவம்.

ஒவ்வொருவருக்கும் துயரங்கள் ஏற்படுத்தும் வலியுணர்வு ஒன்றே. காரணங்கள் வேறுபடலாம். வலியின் அளவும் மனநிலைக்கேற்ப மாறுபடும். ஆனால் வேதனை உணர்வு பொதுவானது.

ஒருவர்  அனுபவிக்கும் வேதனையான சூழல் நமக்குப் பரிச்சயம் இல்லாதிருக்கும். எனினும்  நாம் அனுபவித்த வேறு ஓர் துயரத்துடன் அதனுடன்  ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாகப்  புற்றுநோயின் வலியை நேரிடையாக அனுபவிக்காது இருக்கலாம். ஆனால்  அது நாம் மிக நேசித்த பிரியமானவரின் இழப்பின் வலிக்கு ஒப்பாக இருக்கலாம்.

சொல்பவரின் வலியை நாம் அனுபவித்த வேதனையோடு பொருத்திப் பார்த்துக் கேட்க வேண்டும். பரிவுடன் கேட்பதில் வலியை உணர்வது முக்கியம்.

3. ஞானம் : 

ஒருவர் தான் அனுபவிக்கும் துயரை நம்பிக்கை அடிப்படையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஓர் சரியான தீர்வை நமது புத்தி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தருவோம் என்று அதைச் சொல்கின்றார்.

ஞானம் என்பது சொல்பவரின் சிக்கலைப் பரிவுடன் முழுமையாகக் கேட்பது மட்டுமல்ல. அத்துடன் நிதர்சனத்தைப் புரிந்து கொள்வதுமாகும்.

உதாரணமாக ஒரு நபருக்கு வேலை பார்க்கும் பிரிவில் உடன் பணிபுரிபவருடன் வாக்குவாதம் வருகிறது. இதில் பரிவுடனும் கேட்க வேண்டும்.  ஆனால் அதே சமயம் மற்ற நபரின் கருத்தையும் கேட்க வேண்டும்.  இரு பக்கத்து விளக்கத்தையும் கேட்டுத்  தீர்வை காண முயல வேண்டும்.

4. நியாயம் தீர்க்கக் கூடாது :

சில கருத்துக்களில் பொதுவான உடன்பாடு இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஓர் அபிப்பிராயம் உண்டு. எனினும் மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்.  எதிர்த்துக் கூச்சலிட்டு அடக்கக்கூடாது. அவரைக் குற்றம் சொல்லித் தீர்ப்பளிக்கக் கூடாது. தான் சொல்வது மட்டுமே சரி என்பது ஓர் சுய நீதி. அது பெருமையின் வெளிப்பாடு. ஒருவேளை தான் நம்புவது சரியாக இருந்தாலும் அதை எதிர்ப்பவரும் புரிந்துகொள்ளக் கால அவகாசம் கொடுப்பது நல்லது.

கால ஓட்டத்தில் சிந்தனைகள் மாற்றமடையும். அனுபவங்கள் தெளிவைத் தரும். மாற்றுக் கருத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  இந்த பரிவு மனநிலை  உறவுகளில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தும். 

5. இரகசியங்களைப் பாதுகாத்தல் :

பரிவுடன் கேட்பதில் முக்கியமானது இரகசியத்தைப் பாதுகாத்தல். நம்பிக்கை அடிப்படையிலேயே உணர்வுப்பூர்வமாகத்  தனிப்பட்ட செயல்கள் பகிரப்படுகிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும்.

ஒருவர் பகிர்ந்த அந்தரங்க தகவலைப் பேச்சின் சுவாரஸ்யத்திற்காகப் பிறருடன் பேசக் கூடாது. ஒருவரோடு உள்ள நெருக்கத்தைக் காண்பிக்க அவர் தனிப்பட்ட விதத்தில் பகிர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது. தனிப்பட்ட ஆதாயத்திற்காக இரகசியமாகச் சொல்லப்பட்டதைப் பயன்படுத்தக் கூடாது.

ஒரு சிக்கலைத் தீர்க்க உதவும் என்றாலும் பகிர்ந்த நபரின் அனுமதியின்றி இரகசியமாகச் சொல்லப்பட்ட தகவல்களை ஒருபோதும் விவாதத்தில் சொல்லக்கூடாது.

6. பொறுமை :

அச்சத்தில், தவிப்பில், குழப்பத்தில், வெட்கத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தச் சரியான வார்த்தைகள் கிடைக்காது. அந்தரங்க  உணர்வுகளை  நெருங்கிய நட்பிடமும் கூட முழுமையாகப் பகிர்ந்து கொள்ளத்  தயக்கமும் தடுமாற்றம் வரும். எந்த அளவிற்கு நடந்ததைச் சொல்வது எனும் பயம் இருக்கும்.

இச் சூழலில் அந்தரங்க விஷயத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டக் கூடாது. சொல்லத் தயங்கும் அவரது வேதனையான மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். பொறுமையோடு அமைதி காக்க வேண்டும். அவர் பகிர்வது ஓர் தீர்வுக்காக, பொழுதுபோக்குக்காக அல்ல.

7. மறுமொழி :

பரிவுடன் கேட்டல் என்பதில் மறுமொழி மிக முக்கியமானது. நமது கருத்துக்களைச் சொல்ல அவசரம் காட்டக் கூடாது. முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவராக அபிப்ராயம் கேட்கும்வரை அமைதி காப்பது நல்லது. நாம் என்ன நினைக்கிறோம் என அவர் அறிய விரும்பினால் மட்டுமே ஆலோசனை சொல்ல வேண்டும். பல சமயங்களில் உணர்வுகளைக் கொட்டித் தீர்ப்பதற்காக மட்டுமே பகிரப்படுகிறது.

எப்போதும் தீர்வுகளைச் சொல்வதை விட அதற்கான வழிகளைக் காண்பிப்பது மிகச் சிறந்தது. முடிவுகளை அவர்களே எடுக்க உதவ வேண்டும். எந்தவொரு சிக்கலுக்கும் உடனடி முழுமையான தீர்வு கிடைக்காது. காலம் காயங்களை ஆற்றும். சில சூழலில் மறதி ஓர் மாமருந்து.



III.பரிவுடன் கூர்ந்து கேட்பதால் கிடைக்கும் பயன்கள்.


1. உறவுகள் மேம்படும் :

அக்கறையுடன் பேசுபவர்கள் எளிதில் அனைவரையும் கவர்ந்து கொள்வர். அவர்கள் மீதான நம்பிக்கை ஆழமானதாக இருக்கும். 

2. எச்சரிக்கை உணர்வு மிகும் :

பிறரது உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர் எவரையும் காயப்படுத்த மாட்டார்கள்.  உதாரணமாக அலுவலகத்தில் உடன் பணிபுரிபவரை ஒரு குறிப்பிட்ட வார்த்தை காயப்படுத்தும் என்றால் அதை மீண்டும் பயன்படுத்தாமல்  எச்சரிக்கையுடன் தவிர்ப்பர்.

3. திறன் மேம்படும் :

பரிவுடன் கேட்பவர் இருக்கும் இடம் நம்பிக்கை சூழ்ந்திருக்கும். புரிதல் மேம்பட்டுக் காணப்படும்.  முரண்கள் குறையும். துயரத்திலிருந்து உடன் எழுவர். குடும்ப உறவுகளில் ஆறுதலாக இருந்து வழி காட்டுவர். பணியிடத்தில் குழு மனப்பான்மை மிளிரும். பணிச் சுமையாக இருக்காது. உற்பத்தி மிகும். 

4. சிக்கலுக்கு மேம்படுத்தப்பட்ட தீர்வு :

நம்பிக்கை உணர்வு மிகுதியாக இருக்குமிடத்தில் ஒளிவு மறைவு குறையும். விஷயங்களை உள்ளபடியே வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வர். தவறுகளைச் சொல்வதற்குப் பயம் இருக்காது. தயங்காமல் பிரச்சினைக்குரிய காரியங்களைப் பட்டியலிடுவர். எவரையும் குற்றவாளியாக்கும் முயற்சி இருக்காது. இது சிக்கலை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும்.

குழு மனப்பான்மை மிளிர்வதால் பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் பல புதிய அணுகுமுறை வெளிப்படும். மேம்பட்ட தீர்வு கிடைக்கும்.

சுருக்கமாக, நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் பேசுவதைப் பரிவுடன் கேட்பது உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தும். நம்பிக்கையை அதிகரிக்கும். எதிர்ப்பு மனநிலையைத் தணிக்கும். பயம் அகலும். வெளிப்படையாக இருப்பர். உரிமையுடன் பழகுவர். நல்ல நேர்மையான ஆக்கப்பூர்வ சூழலை உருவாகும்.

பிறர் உணர்வுகளைக் கருத்தை மதித்துப் பரிவுடன் கவனமாகக் கேட்போம். மாற்றுக் கருத்து உடையவரிடமும் சண்டையிடாது அமைதியாக விலகி வாழக் கற்றுக் கொள்வோம்.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

12 கருத்துகள்:

  1. நமஸ்காரம். மிக அழகாக விளக்கி உள்ளீர்கள். நன்றி. வேத காலங்களில் இருந்து கடைபிடித்து வந்த வழக்கம் பழக்கம் படிப்பு முறை sravanam (சிரவணம் என்று தமிழில்). அன்புடன் எதை செய்தாலும் (பக்தியுடன்) அது நிறைவாகவே இருக்கும். வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. தற்காலத்தில் மிகவும் அவசியமானது.. நன்றி..

    பதிலளிநீக்கு

  3. ஒவ்வொரு உணர்வும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அலட்சியமாகக் கேட்பது தவறான புரிதலை ஏற்படுத்தும். மனதில் முன்முடிவுகளுடன் கேட்பது உண்மையை உணரவிடாமல் செய்துவிடும். சார்பு நிலையோடு கேட்பது பொய்யை உண்மையென நம்பவைத்து மோசம் போக்கும். பொறுப்பில்லாமல் கேட்பது காலத்தை வீணடிக்கும்.

    தவறான புரிதல் தேவையற்ற சிக்கலை உருவாக்கும். உறவைச் சீர்குலைக்கும். முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கும். முன்னேற்றத்தைத் தடுக்கும். மன அமைதியை இழக்கச் செய்யும்.


    சுருக்கமாக, நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் பேசுவதைப் பரிவுடன் கேட்பது உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தும். நம்பிக்கையை அதிகரிக்கும். எதிர்ப்பு மனநிலையைத் தணிக்கும். பயம் அகலும். வெளிப்படையாக இருப்பர். உரிமையுடன் பழகுவர். நல்ல நேர்மையான ஆக்கப்பூர்வ சூழலை உருவாகும்.

    🙏நன்றி பாண்டியன் 🙂

    பதிலளிநீக்கு
  4. Anbum porimaiyum irunthal nam matravar nilai unarthu ketpom.Arumaiyana pagirvu.

    பதிலளிநீக்கு

  5. கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
    ஒற்கத்தின் ஊற்றாம் துணை,என்ற குறளுக்கு ஏற்ப ,கேட்பது பற்றி மிக விளக்கமாக எளிதாக புரிய வைத்ததற்கு நன்றி.பொறுமையும் பக்குவமும் இருந்தால் கேட்பது திறன்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான குறள். நல்ல சிந்தனைகள் மனத்தளர்ச்சியில் ஊன்று கோல். சில நூல்களில் படித்துப் புரிந்தவற்றைத் தொகுத்து தந்துள்ளேன். மிக்க நன்றி செந்தில்.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பாகவும் தெளிவாகவும் சொல்லியுள்ளீர்கள். ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

    பதிலளிநீக்கு