புதன், 10 ஆகஸ்ட், 2022

42 கோதாட் டொழி

 கபட நாடகம் ஆடுவதை நிறுத்து. 

(ஆத்திசூடி - ககரவர்க்கம்) 



'கோதாட்  டொழி ' என்கிறது ஔவையாரின் ஆத்திசூடி. 

இதன் வேர்ச்சொல் ' கோதல்'. அதன் பொருள் கேடு விளைவித்தல் அல்லது ஏமாற்றுதல்.

கோது என்பது "பிறரைத் துன்பப் படுத்தும் பேச்சு" என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். 

கோதாட் டொழி என்பதை "Cease to play a sinful play"- கபட நாடகம் ஆடுவதை நிறுத்து என்கிறது அகராதி. (A Dictionary of The Tamil And English Languages, Volume-1 By Johann Peter Rottler)

ஆக "தந்திரமாகப் பேசி பிறரை ஏமாற்றும் கபட ஆட்டத்தை ஆடாதே" என இதனைப் பொருள் கொள்ள முடியும். 

'கோதாட்டம்' என்பதை "பித்தலாட்டம்" எனவும் விளக்கக் கூடும். 

பித்தல் என்பது முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ஏமாற்றுவது. ஒன்றை  வேறொன்றாகக் காண்பித்து ஏமாற்றுவது பித்தலாட்டம். 

இச்சொல் பித்தலாடகம் என்பதின் திரிபாகும். பித்தலை + ஆடகம் = பித்தலாடகம். 

"ஆடகம்" என்பது "ஹாடகம்" எனும் சமஸ்கிருத மொழியின் திரிபு; இதன் பொருள் பொன் என்பதாகும். ஆகவே "பித்தலாடகம்" என்பதற்கு "பித்தளையைப் பொன் என ஏமாற்றுதல்" என்றாகி பிறகு அது, எல்லாவித ஏமாற்றுதலுக்கும் குறிப்பிடப்படும் ஓர் சொல்லாக மாறிப் போனது. 

"ஏமாற்றிவிட்டுப் போதல்" என்பதைச் சென்னையில் "கோதா கொடுத்தல்" எனக் கூறுவார்.

கோத்துவிடுதல், கோத்துவாங்குதல், கோத்தல் என்பவை இதன் தொடர்புடைய பிற சொற்கள். 

கோதாட்டு ஒழி: கபட நாடகம் ஆடுவதை நிறுத்து.


பின் குறிப்பு:

நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என ஆத்திசூடி கற்றுத் தருவதை நமது நினைவூட்டலுக்காகத் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது. 

1. ஔவியம் பேசேல்: ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.

2. கண்டொன்று சொல்லேல்: பார்க்காததைத் பார்த்தது போலப் பேசாதே. (பொய்ச் சாட்சி சொல்லாதே).

3. ஞயம்பட உரை: கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

4. வஞ்சகம் பேசேல்: உண்மைக்குப் புறம்பான கவர்ச்சிகரமான சொற்களைப் பேசி ஏமாற்றாதே.

5. கோதாட்டு ஒழி: கபட நாடகம் ஆடுவதை நிறுத்து.

6. சித்திரம் பேசேல்: பொய்யான வார்த்தைகளை உண்மை போலப் பேசாதே.

7. சுளிக்கச் சொல்லேல்: கேட்பவருக்குக் கோபமும் அருவெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.

8. சையெனத் திரியேல்: பெரியோர்கள் "ச்சீ" என வெறுக்கும் படி வீணாய் பேசித் திரியாதே.

9. சொற்சோர்வு படேல்: பிறருடன் பேசும் பொழுது நம்பிக்கை இழக்கச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே.

10. தெய்வம் இகழேல்: இறைவனை இகழ்ந்து பேசாதே.

11. நொய்ய உரையேல்: அற்பமான வார்த்தைகளைப் பேசாதே.

12. பழிப்பன பகரேல்: பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களைப் பேசாதே.

13. பிழைபடச் சொல்லேல்: குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.

14. மிகைபடச் சொல்லேல்: சாதாரணமான விஷயத்தை உயர்ந்த வார்த்தைகளால் மிகைப் படுத்திப் பேசாதே.

15. மேன்மக்கள் சொற்கேள்: நல்லொழுக்கம் உடைய சான்றோர்கள் சொல்வதைக் கேட்டு நட.

16. மொழிவது அறமொழி: சொல்லுவதைச் சந்தேகமின்றி தெளிவாகத் திருத்தமுடன் பேசு.

17. வல்லமை பேசேல்: உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பெருமையாகப் பேசாதே.

18. வாதுமுற் கூறேல்: பெரியோர்கள் முன்பாக முரண் பட்டு வாதிடாதே.

19. வெட்டெனப் பேசேல்: யாருடனும் கத்தி வெட்டு போலக் கடினமாகப் பேசாதே.

20. ஓரஞ் சொல்லேல்: ஒரு சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.

இவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பேசும் போது நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். கவனமாகப் பேசுவது மிகவும் நல்லது.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக