சனி, 27 ஆகஸ்ட், 2022

43. கௌவை அகற்று

 பழிச்சொல் பேசி துன்பம் செய்யாதே.

(ஆத்திசூடி - ககரவர்க்கம்) 

கௌவை என்பது ஊரார் வம்புப் பேசி பழித்து தூற்றிப் பேசுவதைக் குறிக்கும். 

பொதுவாக, இது இளம் காதலரது களவு ஒழுக்கம் பற்றி ஊர்மக்கள் கழ்ச்சியுடன் பேசுவதைக் குறிப்பதாகும்.

காதலனும் காதலியும் ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டு அதில் மூழ்கி இருக்கும் போது அவர்களது நாணம் அகன்று விடும்.  தங்களை மற்றவர்கள் பார்க்கிறார்களே எனும் கூச்ச உணர்வும் விலகிவிடும். தாங்கள் செய்வது பிறருக்குத் தெரியாது எனும் மன மயக்கத்திற்கு ஆளாவார்கள்.

அப்படி வெட்கம் துறந்தவர்களாக தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாது மதி மயங்கிச் செய்யும் செயல்களைப் பற்றி ஊரார் வம்பு பேசுவது கௌவை. 

உதாரணமாக "கௌவை" எனும் சொல் பயன்படுத்தப்பட்ட ஒரு சில திருக்குறள் பாடல்கள்:

குறள்:

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

பொருள்:

ஊரார் வம்பு பேசி தூற்றுவதால் தான் எங்கள் காதல் வளர்கிறது; இல்லையேல் இக் காதல் கொடி வளம் இழந்து வாடிப்போய் விடும்.

குறள்:

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

பொருள்:

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த இந்த காதல் நோய், ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும், அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.

குறள்:

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

பொருள்:

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.

குறள்:

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.

பொருள்:

நான் விரும்பியபடி ஊரார் எங்கள் காதலைப் பற்றி அவதூறாகப் பேசி தூற்றுகின்றனர். ஆதலால் இனி என் காதலரும் நான் விரும்பியவாறு என்னைத் திருமணம் செய்வார்.  

கௌவை அகற்று:

கௌவை அகற்று எனும் ஔவையார்  வரிகளை,  பழிச்சொல் பேசி துன்பம் செய்யாதே. அதை வாழ்விலிருந்து நீக்கிவிடு என்று புரிந்து கொள்ளலாம்.

பழிச்சொல் பேசப்படுகிற விதமாகக் காதல் வயப்பட்டு மதி மயங்கி துன்பப் படாதே என்பது எனக்கு மிக நெருக்கமாக உள்ளது.

எனினும் இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.

வீண் வம்பு பேசாதே:

பொது வெளியில் ஒருவரது மதிப்பைக் களங்கப்படுத்தும் விதமாக ஒருபோதும் பேசக் கூடாது. எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அனுமானித்துப் பேசுவதும் குற்றம்.  உண்மையை அறியாது அவசரப்பட்டுப் பேசுவது முடிவில் நமக்கே வெட்கத்தை ஏற்படுத்தும்

பலர் ஆர்வமுடன் கேட்பதால் தான் புறணி பேசும் வழக்கம் வளருகிறது.  

தாங்கள் தனிப்பட்ட வாழ்வில் அதே தவற்றைச்  செய்பவர்கள் தான் பெரும்பாலும் புறணி பேசுகிறார்கள். வீண் பேச்சுப் பேசுபவர்களின்  பேச்சை விருப்பமுடன் கேட்டால், நாம் இல்லாத போது நம்மைப் பற்றியும் அவர்கள் கட்டாயம் பழி பேசுவார்கள்.

ஒருவரில்லாத சமயம், அவரைப்பற்றிக் குறை சொல்லி பேச்சு வந்தால், உடனடியாக அவரில்லாத போது அவரைப்பற்றிப் பேசுவது முறையாகாது எனப் பேச்சைத் திசை மாற்றம் செய்வது நல்லது.

தொடர்பான சில சிந்தைகள்:

திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன் திருடனைப் போல் மோசமானவன்.  அவதூறுகளைக் காது கொடுத்துக் கேட்பவனும் அப்படித்தான். (செஸ்டர் பீல்டு)

மற்றவர்களைப் பற்றிய அவதூறுகளுக்கு நான் சிறிது கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவைகள் பொய்யாக இருந்தால் மற்றவர்களால் நான் சுலபமாக ஏமாற்றப்பட்டவனாக ஆகி விடுவேன். அவைகள் மெய்யாக இருந்தால் உபயோகமற்றவர்களை வெறுக்க ஆரம்பித்து என் வாழ்க்கையை நரகமாக மாற்றிக் கொள்ள வேண்டியதிருக்கும் (மான்டெஸ்கியூ).

அவதூறு, கடல்களையும், மலைகளையும்,
பாலைவனங்களையும் எளிதில் தாண்டிச் செல்லும் (கோல்டன்).

மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் அவதூறு பேசுவதற்காக வாயைத் திறந்தால், உடனே உன் காதை அடைத்துக் கொள் (குவாரல்ஸ்).

என்னைப்பற்றி தவறாக எண்ணும்படி செய்ய முயன்றதற்காக அவதூ
ற்றுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அது என்னை அதிக எச்சரிக்கையாய் இருக்கும்படி செய்தது. அத்துடன் அது என் செயல்களிலும் அதிக கவனமாய் இருக்கும்படி செய்துள்ளது (ஜான்ஸன்).


Picture Courtesy: 

Hudson Christie - The New York Times

https://www.google.com/amp/s/www.nytimes.com/2015/12/20/books/review/the-novels-evil-tongue.amp.html

2 கருத்துகள்: