சனி, 16 டிசம்பர், 2017

ஒப்புர வொழுகு :

🌸 ஒப்புரவு ஒழுகு.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்.)


ஒப்புர வொழுகு :

ஒருவருக்கொருவர்  உதவியாக ஒத்தாசை செய்து வாழ். 

சமூக வாழ்வில் இன்பமாக வாழ ஒவ்வொரு மனிதரும் மற்றவருடைய உதவியின்றி வாழ முடியாது.

வாழ்வு சிறக்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் பிறருக்குத் தன்னால் இயன்ற உதவி செய்து வாழ வேண்டும்.

இவ்வாறு ஒருவர்க்கொருவர் உதவும் பண்புதான் ஒப்புரவு என்று பொருள்படும்.

ஒப்புரவு என்னுஞ் சொல்லின் பொருளைக் கூர்ந்து கவனித்தால்
"தன்னைப் போலப் பிறரையும் நேசி" என்ற உயர்ந்த தத்துவத்தை
அது தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது.

வாழ்வு, செல்வம், இன்பம் முதலிய நலங்களைத் தான் எவ்வாறு நுகர எண்ணுகிறாரோ அவ்வாறே பிறரும் அவற்றை நுகர வேண்டும் என்று
ஒப்ப நோக்கி வாழ்வது தான் ஒப்புரவு.

விட்டுக் கொடுத்தல், அமைதி காத்தல், பெரியோர் சொல் மதித்தல்,
தீய செயல்கள் என அறுதியிட்டு குற்றமாக வரையறுக்கப்பட்ட செயல்களை விலக்குதல் ஆகிய குணமுடையோரை அனைவரும் நேசிப்பர்.

சுயநலவாதி, தன் காரியம் முடிந்தவுடன் கண்டும் காணாது செல்பவர், முன்கோபி, பொய் சொல்லி ஏமாற்றுபவர், கோள் சொல்லுபவர், பரிகாசப் பேச்சு பேசுபவர், தீய நடத்தை உடையவர், குடிப் பழக்கம் உடையவர், பிறரை நடித்து வஞ்சகம் செய்பவர் போன்ற அற்ப குணமுடையவர் வாழ்வின் இறுதியில் இகழ்ச்சி அடைவதோடு இல்லாமல் எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகுவர்.

கடைசிக் காலத்தில் அவரைச் சுற்றி தீய மனிதர்களே உடன் இருப்பர்.

உண்மையாக வாழ்பவரை, மாசற்ற அன்புடையவரை இந்த உலகம் நேசிக்கும். அவர் குலம் தழைக்கும்.

இந்த உண்மையை மனதில் பதியவைத்து, துன்பம் நீக்கவல்ல பெரியோர் துணையைப் பெறுதல் ஒருவருக்கு சிறந்தச் செல்வமும் வலிமையாகும்.

இவ்வுலக வாழ்வில் அமைதியாக வாழ்ந்து கடமைகளை சரியாக நிறைவேற்ற அத்தகைய சான்றோர் உடன் ஒப்புரவாகி வாழ்வதே நற்பேறு.

2 கருத்துகள்: