திங்கள், 11 டிசம்பர், 2017

ஈவது விலக்கேல்

🌸 ஈவது விலக்கேல். 

(ஆத்திசூடி - உயிர் வருக்கம் )


இதன் எளிமையான பொருள் : 
ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பதை தடுக்காதே. 

ஒருவர் பிறர்க்கு தருமம் வழங்க முற்படும்போது, அந்த கொடை எதுவாக 
இருப்பினும் இடையில் நுழைந்து அந்த உதவியைத் தடுத்து நிறுத்திவிடாதீர்கள்
என்பது இதன் விளக்கம். 


ஒரு சிலர் தர்ம உபகாரம் செய்வதை  ஏன் தடுக்கின்றார்கள்?


முதலாவது உதவி பெறுபவர் ஆதாயத்துக்காக நடித்து 
ஏமாற்றுகிறாரோ எனும் சந்தேகம்  காரணமாக இருக்கலாம். 

மற்றது உதவி பெறுபவர் மேல் உள்ள பகையுணர்வு, வெறுப்பின் 
காரணமாக உதவியைத் தடுக்க முற்படலாம். 

பொறாமையினிமித்தம் கூட, ஒருவர் உதவியைப் பெற இயலாத 
வண்ணம் செயல்படுபவர்கள் உண்டு. 

ஆனால் இங்குச் சொல்லப்படும் அறம் சார்ந்த கருத்து : 
ஒருவர் மற்றொருவருக்குக் செய்ய விரும்பும் உதவி அது பொருளாகவோ அல்லது பணமாகவோ எதுவாக இருந்தாலும் அதை ஒரு போதும் தடுக்காதே. 


இருவித பாவங்கள் :


தர்மச்செயலை தடுத்து இடையூறு செய்வது இரண்டுவித பாவங்களைப் 
பிறப்பிக்கிறது.

முதலாவது தர்மம் அளிப்பவர் அந்தக் கொடையினிமித்தம் பெற வேண்டிய 
புண்ணியங்களைத் தடை செய்கிறது.

இரண்டாவது உதவி பெறுபவர் அடைய வேண்டிய நன்மைகள் அவருக்குக் 
கிடைக்காமல் போகிறது.

எந்தச் சூழலிலும் மறந்தும் இந்தத் தீங்கு செய்யக்கூடாது. 

ஒருவன் எவ்வளவு முயன்றாலும் தன் நிழல் தன்னைத் தொடர்வதைத் 
தடுக்க முடியாது. அதுபோல இந்த  தீச் செயல் விடாமல் அவனைப் 
பின்தொடர்ந்து வரும். 

ஏழையர்க்கு உதவி செய்து, அதனால் புகழ் அடைவதே உயிர் வாழ்தலின் 
பயனாகும். 

2 கருத்துகள்: