வியாழன், 22 ஆகஸ்ட், 2019

இறைவன் குருவாகி

திருவாசகம் - இறைவன் குருவாகி வந்து அருளுதல்.




36. வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
37. பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
38. மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
39. எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
40. அஞ்ஞானத் தன்னை யகல்விக்கும் நல்லறிவே


பதப் பொருள்:


இயமானன் - ஆன்மாவாக
விமலா - மாசற்றவன்
பொய்யாவின - நிலையற்றப் பொருள்

சாரம்:


இறைவன் தீயின் சுடரைப் போல் நின்று பாவத்தைச் சுட்டெரிப்பவன். குளிர்ந்த நீராக இருந்து ஆன்மாவை நல்வழி நடத்தும் தூய்மையானவன். 

நிலையற்றப் பொருட்கள் (உறவுகள்) ஏற்படுத்தும் பற்றுதலை என்னை விட்டு ஒழியும்படி, குருவாக எழுந்தருளியவன்.

மெய்யுணர்வு வடிவமாக விளங்குகின்ற உண்மை ஜோதி.

எவ்வகையான அறிவும் இல்லாத எனக்கு ஆனந்தத்தை அருள்பவர்.

ஒளி பிரகாசித்தால் இருள் அகலுவது போல், எனது அறியாமை நீக்குகின்ற நல்ல ஞானத்தின் உறைவிடம்.

இவ்விதம் ஆன்மாவில் ஒளியாகச் சுடர்விடும் இறைமை, 

குருவாக எழுந்தருளி நல்லறிவு புகட்டுவதாகவும், 

தன்னையோ அறிவற்றவராகத் தாழ்த்தியும்,  

மாணிக்க வாசகர் இப்பாடலில் மனமுருகி வேண்டுதல் செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக