வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

இயற்கையின் விதி

நல் வாழ்க்கைக்கான அடிப்படை விதி.





இயற்கையின் விதி :

ஒரு செயலைச் செய்ய ஆசைப்படும் போதே அது நல்லதா அல்லது கெட்டதா என்பது மனதுக்குத் தெரியும்.

இந்த இயல்பான எச்சரிக்கை உணர்வு  பிறக்கும்போதே ஒவ்வொரு உயிரிலும் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளது.

இதுவே இயற்கையின் விதி.

இதை 

மன சான்று (Conscience), 

(அல்லது)

தார்மீக மதிப்பு (Moral Values), 

(அல்லது)

அடிப்படை  உணர்வு (Common Sense) எனப்படுகிறது.

மனம் செயல்படும் விதம் :


மனசாட்சியின் குரலைத் தெளிவாகக் கேட்கக் கூடுமா?


மனக் காட்சியில் நாம் நடக்க வேண்டிய பாதை தெளிவாகத் தெரியுமா?

உயிரில் ஒளிந்திருக்கும் மன சாட்சியை எப்படிப் புரிந்து கொள்வது?

இந்தக் கேள்விகளுக்கு மனம் எப்படி செயல் புரிகிறது எனப் புரிந்து கொள்வது அவசியம்.

மனம் பல வித உணர்வுகளால் இயக்கப்படுகின்றன.

விருப்பங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துகின்றன.

அனுபோகம் விருப்பங்களைத் தீர்மானிக்கின்றன.

அனுபவங்களிலிருந்து அனுபோகம் அடைகிறோம்.


உதாரணமாக :


ஒரு பழத்தைச் சுவைக்கிறோம். அது அனுபவம்.

அதன் சுவை மகிழ்ச்சி அளிக்கிறது. அது அனுபோகம்.

இப்போது மறுமுறை பயணத்தின் போது அந்தப் பழத்தைக் காண நேரிட்டால் பசி இல்லை என்றாலும் வாங்கி சுவைக்கத் தூண்டப்படுகிறோம். அந்த அனுபோகம் விருப்பமாக ஆழ் மனதில் பதிந்து விட்டது.

இப்போது தேவையற்றது எனத் தெரிந்தாலும் வாங்கிச் சுவைக்கத் தூண்டுகிறது.

இது போல் பெருமை, பணம், அதிகாரம், பாலியல் விருப்பங்கள், மனதை மயக்கும் பொருட்கள் தரும் அனுபவம் இச்சையுணர்வாக (Strong Desires) மாறும் போது அவை ஆழ் மனதில் தீவிர விருப்பங்களாகப் (Addictions) பதிந்து விடும்.

இதில் எதாவது ஒரு  உணர்வு மனதை அதிதீவிரமாக ஆட்கொண்டு செயல்களைக் கட்டுப்படுத்தும்.

இங்கு தான் மனதில்  எழுதப்பட்டுள்ள இயற்கை விதிக்கும், உணர்வுகளுக்கும் இடையில் போராட்டம் தொடங்குகிறது.

நமது விருப்பங்கள் மனதில் எழுதப்பட்டுள்ள இயற்கை விதிக்கு முரணாகச் செய்ய முற்படும்போது அச்சம், கவலை, பதற்றம் மனதில் தொற்றிக் கொள்ளும்.

இந்த மன சாட்சியின் எச்சரிக்கை உணர்வே அறிவு. அதற்கு கீழ்ப்படிந்து நடந்தால் அதுவே புத்தி.

எனினும் உணர்வுகள் லேசுப்பட்டவை அல்ல. அவை வலிமையானவை. அறிவு சொல்வதைக் கேட்காது. புத்திமதியை அலட்சியம் செய்யும்.

உணர்வை வெல்ல அறிவை வலிமையாக்க வேண்டும்.

அறிவை வலிமையாக்குவது தெய்வீக அன்பு.

தெய்வீக அன்பு :


இயற்கை விதியின் படி வாழ விரும்பினால் மனம் தெய்வீக அன்பினால் நிரப்பப்பட வேண்டும்.

மனித உணர்வுகளில் மிக உயர்ந்ததும், மிக மிக ஆழ்ந்த பொருளையுடைய உணர்வு தெய்வீக அன்பு ஆகும். 

அது நிபந்தனையற்றது.

தாய், தந்தை அன்பிலும் மேலானது.

எந்தவித பிரதிபலனையும் எதிர் பார்க்காதது.

பிறரை மகிழ்ச்சியடையச் செய்வதில் ஆனந்தம் அடையும்.

சத்தியத்தில் சந்தோஷப்படும்.

எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும்.

பெருமை, புகழ்ச்சியை விரும்பாது.

மனதை தெய்வீக எண்ணங்களால் நிறைத்தல்,  வேதங்களைத் தியானித்தல், அறிவை உணர்தல், அந்த அறிவில் நிலைத்திருக்கத் தொடர்ந்து வைராக்கியமாகப் போராடுதல் ஆகியவை தெய்வீக அன்பில் நிலைத்திருக்க உதவும் வழிமுறைகள்.

இறையன்பின் அடிப்படை :


"உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல் பிறனிடத்தில் அன்பு கூறுவாயாக" 

எனும் சிந்தையே இறையன்பின் தொடக்கப் புள்ளி.

"எனக்கு எந்த செயல்கள் எல்லாம்  வலியையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறதோ அச் செயல்களை நான் பிற உயிர்களுக்குச் செய்தல் கூடாது" 

"நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்."

"தீங்கும் நன்றும் பிறர் தர வாரா"

போன்ற தங்க வாக்கிய கட்டளைகள் (Golden Rules) இயற்கை விதியின் வார்த்தை வடிவங்கள்.

இந்த சிந்தனையின்  தொடர்ச்சியே அறம், ஒழுக்கம், வாழ்க்கை நெறிகள் போன்ற கோட்பாடுகள்.

இயற்கை விதியின்  அடிப்படை :


1. இயற்கையை நேசித்தல் (Love of Nature)

2. உண்மை (Truth)

எனும் இரு பண்புகளே நல்வாழ்க்கைக்கு அடிப்படை நெறி. 

இந்த இரு அறங்களையும் திருக்குறள் இவ்விதம் கூறுகிறது.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்ம்மை நன்று.

(பொருள் : ஆராய்ந்து பார்த்தால், எல்லா உயிர்களையும் நேசித்தல் ஒப்பற்ற அறமாகும். உண்மை பேசுவது இரண்டாவது அறமாகக் கருதப்படும்.)


தெய்வீக அன்பில் மனம் கீழ்ப்படிந்து வளரும் போது அது வாழ்க்கைப் பண்புகளில் குணங்களாக வெளிப்படும்.

மன சாட்சி பேசும்.

நடக்க வேண்டிய பாதை தெளிவாகத் தெரியும்.

விட்டு விலக வேண்டியது புரியும்.

மனம் எத்தனைத் துயரைச் சந்தித்தாலும் கலங்காது.

எதற்காகப் படைக்கப்பட்டோமோ அந்த இலக்கையும் அடைய முடியும்.

மாறாக விருப்பங்களின் இச்சைக்கு மனம் அடிமையாகி விட்டால் தெய்வீக உணர்வு போய் விடும். புத்தி மயங்கும். அறிவீனமாக செயல்பட வைக்கும். அப்போது

கண்கள் இருந்தாலும் காண முடியாது.

செவிகள் இருப்பினும் மனசாட்சியின் சப்தம் கேட்காது.

உணர்வு இருந்தாலும் உண்மை புரியாது.


தெய்வீக அன்பிற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்வதே நல்வாழ்வின் அடிப்படை விதி. 



8 கருத்துகள்:

  1. உண்மை தான்.
    மனசாட்சி அறிவுக்கு பல நேரங்களில் கட்டுப்படுவதில்லை.

    இறைவனையே
    அன்பால், நடத்தையால், நேர்மையால்
    என் அருகே எப்போதும் நிற்க ஆசைப்பட வைக்கவேண்டும் என்பதே என் நோக்கம்.


    ராஜன்.சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் Sir.

      நல் அறிவுக்கும் தீய உணர்வுக்கும் எப்போதும் போராட்டம் தான்.

      நல்ல ஆசை.

      மிக்க நன்றி Sir.

      நீக்கு
  2. விருப்பங்களின் இச்சைக்கு மனம் அடிமையாகி விட்டால் தெய்வீக உணர்வு போய் விடும். புத்தி மயங்கும். அறிவீனமாக செயல்பட வைக்கும். அப்போது

    கண்கள் இருந்தாலும் காண முடியாது.

    செவிகள் இருப்பினும் மனசாட்சியின் சப்தம் கேட்காது.

    உணர்வு இருந்தாலும் உண்மை புரியாது.


    தெய்வீக அன்பிற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்வதே நல்வாழ்வின் அடிப்படை விதி

    🖕மருக்க முடியாத உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமரவேல்.

      நீக்கு