ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

ஒற்றை மரம்

ஒற்றை மரம்.






அந்தி சாயும் நேரம் 
நீண்ட நடை

வழியிலிருந்தது
எனது ஒற்றை மரம்

பாலை நிலத்திலும் 
சளைக்காது போராடிக்
கிளை பரப்பி நிற்கிறது

அந்த மரத்தோடு 
நான் பேசுவேன்
அது என்னுடன் 
பேசியது இல்லை.

ஒருவேளை பேசியிருக்கக் கூடும்.
எனக்குப் புரிந்திருக்காது.

அதை நேசத்துடன் தொட்டுச்  
சுற்றும் முற்றும் பார்த்து 
மென்மையாகத் தடவி
அவசர அவசரமாக 
முத்தமிட்டு 
வேகமாகக் கடந்து 
அருகிலிருந்த 
இருக்கையில் 
அமர்ந்தேன்

மனதில் 
குறுகுறுப்பு 
தொற்றிக் கொள்ளவே
மெல்லத் திரும்பிப் பார்த்தேன்

அதன் இலைகள்  
மெலிதாக அசைந்தது.

அது என்னைப்  
பார்த்து மெலிதாக
புன்முறுவலித்தது 
போலத் தோன்றியது

தாயின் மடி
தந்தையின் ஆறுதல் சொல் 
மனைவியின் அரவணைப்பு 
பிள்ளைகளின் வாழ்த்து
தோழியின் உரையாடல்
தரும் அத்தனை 
மகிழ் நிறை
உணர்வுகளையும்
தருகிறது
அந்த ஒற்றை மரம்



Salalah during Khareef

மரங்கள் எனக்கு எப்போதும் உற்ற தோழர்கள். 

Salalah வில் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் (2014 - 2018) வசித்தேன்.

ஸலாலா குன்றுகள் சூழ்ந்த பசுமையானதொரு பள்ளத்தாக்கு.

அங்குச் சாலையில் மற்றும் நடைபாதையின் இருபுறங்களிலும் நிறைய மரங்கள் வைத்து மிக நேர்த்தியாகப் பராமரிப்பார்கள்.

எனது தினசரி நடைப்பயிற்சி முடிந்து திரும்பும் இடத்தில் மூன்று மரங்கள் மிக நெருக்கமாக இருக்கும்.

அந்த இடத்தை அடைந்தவுடன் மனதில் தோன்றும் அமைதி அலாதியானது.





Veeranam house


அப்பா, அம்மா இருவரும் தோட்டப் பிரியர்கள். இருவரும் அரசு ஊழியர்கள். 1991 ஆம் ஆண்டு அப்பா அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு சொந்த கிராமத்திற்குத் திரும்பினார்கள்.

அப்போது இந்த இடம் கருவேல் முட்புதராக இருந்தது. இடத்துக்கு உள்ளே நுழைவதே கடினமாக இருந்தது. அத்தனை முட்புதர்களும் வெட்டி சீரமைப்பு பணி துவங்கியது.






வீடு கட்டத் துவங்கும் முன்பாகவே மரம், செடி, கொடிகள் நடத் துவங்கி விட்டனர். இன்று இந்த இடம் அழகிய சோலை.





இப்போதும் அவர்கள் வெளியூர் சென்றாலும் உடனே திரும்ப வேண்டும் எனத் துடிப்பார்கள்.

அவர்கள் கவலை எல்லாம் மரம், செடி, கொடி, கோழி...,




நடை பாதை இருபுறமும் மரம், பூஞ்செடிகள்.

நள்ளிரவிலும் விழித்திருந்து தாமிரபரணி நீர் பாய்ச்சுவார்கள். 

ஒவ்வொரு மரமும், பழச் செடிகளும், பூஞ் செடிகளும் அவர்களுக்காகவே வாழ்கின்றன. 

இப்போதும் கிராமத்திற்குச் சென்று திரும்பும் போது அத்தனைப் புத்துணர்ச்சி.

அது உயிர்ப்பு நிறைந்த இடம்.


8 கருத்துகள்:

  1. மரங்களுக்கும், இலைகளுக்கும்.....

    காற்று பிடிக்கும்
    மழை பிடிக்கும்
    வெயில் பிடிக்கும்
    பறவைகள் பிடிக்கும்
    பல நேரங்களில் அதற்கு தனிமை கூட பிடிக்கும் போது....
    தன்னை நேசிக்கும் ஒரு மனிதனை அதற்கு பிடிக்காமல் போய்விடுமா என்ன....!
    அந்த அன்பின்
    வெளிப்பாடுதான்
    'புன்னகை'


    ராஜன்.சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரத்துக்கு எது பிடிக்கும் எனும் சிந்தனை நல்லதொரு பார்வை.

      கருத்துரைக்கு மிக்க நன்றி சார்.

      நீக்கு
  2. மிக அருமையான கவிதை.

    செடி, கொடி, மரங்களைத் தோழர்களாகவும் குழந்தைகளாகவும் பாவித்து வளர்க்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். அப்படியான உணர்வுகளைப் பற்றிய என் சிறுகதை ஒன்றின் இணைப்பை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்: ‘இதுவும் கடந்து போகும்’.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது உணர்வுப் பூர்வமான எழுத்தில் சிறந்த சிறுகதை. முன்பு நான் வாசித்துக் கருத்திட்டிருந்தாலும் மீண்டும் முழுவதுமாக வாசித்தேன்.

      இனைப்பை இங்குப் பகிர்ந்தமைக்கு நன்றி மேடம்.

      எனது முதல் முயற்சியை நீங்களே கவிதை என்று சொல்லிவிட்டீர்கள். அதுவே போதும்.:) நன்றி.

      நீக்கு
    2. கவிதை முயற்சிகள் தொடரட்டுமாக.

      நீக்கு
    3. நிச்சயம் முயற்சிக்கிறேன். மிக்க நன்றி மேடம்.

      நீக்கு